Skip to main content

அதிமுகவில் இபிஎஸ் இடத்தில் ரஜினி!நெருக்கடியில் எடப்பாடி! 

Published on 10/06/2019 | Edited on 10/06/2019

எடப்பாடி தனது வீட்டில் நடத்திய எம்.எல்.ஏ.க்கள் மா.செ.க்கள் கூட்டம் முடிந்தபிறகு, எம்.எல்.ஏ.க்களை மட்டும் அழைத்து தனியாக பேசினார். ""நாம் இந்த முறை அமைத்த கூட்டணி சரியில்லை. பாராளுமன்றத் தேர்தலும் சட்டமன்றத் தேர்தலும் சேர்ந்தது... நடந்த தேர்தலில் பாராளுமன்றத் தொகுதியில் நமக்கு எதிராக வாக்களித்த மக்கள் சட்டமன்ற இடைத்தேர்தலில் நம்மை வெற்றிபெற வைத்தார்கள். இதே சூழ்நிலை 2021-ல் வரும் சட்டமன்றத் தேர்தலின் போது இருக்காது. அப்பொழுது கூட்டணிகள் மாறும், முடிவுகளும் மாறும். அம்மாவால் உருவாக்கப்பட்ட இந்த அரசுக்கு இன்னும் ஒன்றரையாண்டு காலம் ஆயுசு இருக்கிறது. இந்த அரசு நீடிப்பது உங்களுக்கும் நன்மை பயக்கும். உங்களுக்கு வேண்டியதை செய்கிறேன். தி.மு.க.வின் சதி வேலைக்கு யாரும் பலியாகிவிடாதீர்கள்'' என உருக்கமாக பேசி ஒவ்வொரு எம்.எல்.ஏ.வுக்கும் வைட்டமின் "ப'வை வெயிட்டாக கொடுத்திருக்கிறார்.

 

admk



அந்த கூட்டத்திற்கு வராத 15 எம்.எல்.ஏ.க்களிடம் இதே போல் உருக்கமாக பேசி வைட்டமின் "ப'வை அவர்களது வீட்டிற்கே அனுப்பி வைத்திருக்கிறார். அந்த "ப'வின் எதிரொலியாக தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. ஒருவர் "நான் என்றென்றும் இரட்டை இலைதான்' என அறிக்கையே வெளியிட்டார். இப்படி எடப்பாடி தடுப்பு வேலைகளில் ஈடுபட்டுக் கொண்டிருப்பதை பா.ஜ.க. விரும்பவில்லை. ஆடிட்டர் மூலம் ஓ.பி.எஸ்.சை அழைத்து பேச வைத்தது.

 

ops son



காயிதே மில்லத் சமாதியில் அஞ்சலி செலுத்திய ஓ.பி.எஸ்., அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மற்றும் அவருடன் மதுரை பகுதியைச் சேர்ந்த நான்கு எம்.எல்.ஏ.க்கள், காஞ்சிபுரம் மா.செ.வான வாலாஜாபாத் கணேசன், தொழிற்சங்க நிர்வாகிகள் என தமிழகம் முழுவதுமிருந்து திரட்டப்பட்ட 50 பேருடன் தனது மகன் ரவீந்திரநாத் எம்.பி.யுடன் சேர்ந்து ஜெ.வின் சமாதி நோக்கி பயணமானார். "ஏற்கனவே இதே ஆடிட்டரின் அறிவுரையின் பேரில்தான் ஜெ.வின் சமாதியில் சசிகலா குடும்பத்துக்கு எதிராக தர்மயுத்தம் தொடங்கினேன்' என சொன்னார் ஓ.பி.எஸ்.

 

ops



அ.தி.மு.க.வின் தேர்தல் தோல்விக்குப் பிறகு நிர்வாகிகள் யாருமே எட்டிப் பார்க்காத ஜெ.வின் சமாதிக்கு இ.பி.எஸ். துணையில்லாமல் ஏன் ஓ.பி.எஸ். போனார் என்கிற விவாதம் எழுந்தது. அந்த நேரத்தில்தான் "இந்தியைப் போலவே தமிழையும் மற்ற மாநில மக்கள் படிக்க ஏற்பாடு செய்ய வேண்டும்' என பிரதமர் மோடிக்கு ட்விட்டரில் கோரிக்கை வைத்தார் இ.பி.எஸ். மும்மொழித் திட்டத்துக்கு ஆதரவான அந்தக் கருத்தை திடீரென நீக்கினார். அமைச்சர் ஜெயக்குமார் மூலம், "அ.தி.மு.க. இந்தி திணிப்புக்கு ஆதரவாக இருக்காது' என பேட்டியும் கொடுக்க வைத்தார் எடப்பாடி. ஓ.பி.எஸ்.சின் ஜெ. சமாதி விஜயம் எடப்பாடிக்கு மத்திய பா.ஜ.க. கொடுத்த பதிலாகவே பார்க்கப்பட்டது என்கிறார்கள் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள்.
 

ops



ஜெ.வின் சமாதி விசிட் முடிந்ததும் ஓ.பி.எஸ். நேராக சென்றது,. உடல்நலம் சரியில்லாமல் இருந்து மருத்துவமனையிலிருந்து திரும்பிய மதுசூதனன் வீட்டிற்குதான். மதுசூதனன்தான் இரட்டை இலையை ஓ.பி.எஸ்.-இ.பி.எஸ். அணிக்கு வழங்கிய வழக்கின் மனுதாரர். மதுவுக்கு வயதாகிவிட்டது. நீங்கள் அவைத் தலைவராகுங்கள். எடப்பாடி பொதுச் செயலாளராகட்டும் என எடப்பாடி தரப்பில் சில காலமாக பேச்சு இருந்து வந்தது. அதே மதுசூதனன் தனக்கு ஆதரவாக வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மறுபடியும் வழக்கு போட்டால் மத்தியில் உள்ள பா.ஜ.க. ஆதரவுடன் இரட்டை இலை முடக்கப்படும் ஆபத்தும் இருக்கிறது. இதில் எதை மதுசூதனன் செய்ய வேண்டும் என அவரை நேரில் சந்தித்த ஓ.பி.எஸ். நினைக்கிறார் என்கிற விவாதமும் அ.தி.மு.க.வில் வேகமாக எழுந்தது.


பா.ஜ.க.விடமிருந்து விலகி நிற்க நினைக்கும் இ.பி.எஸ்., சசிகலாவுடன் இணைந்தால் இரட்டை இலை முடக்கப்படும், கட்சி உடைந்துவிடும். ஆட்சியும் கவிழும் என பா.ஜ.க. எச்சரிக்க விரும்புகிறது. அதனால்தான் ஓ.பி.எஸ். மதுசூதனனை சந்தித்து பேசினார் என்கிற விளக்கமும் அ.தி.மு.க. வட்டாரங்களில் எதிரொலிக்கிறது. மொத்தத்தில் தமிழகத்தில் பா.ஜ.க. அ.தி.மு.க.வை உடைத்து கபளீகரம் செய்துவிட்டு, அ.தி.மு.க. இடத்தில் தன்னை நிலைநிறுத்த விரும்புகிறது. அதற்காக ஜெ.வின் மரண காலம் தொடங்கி தொடர்ச்சியாக காய்களை நகர்த்தி வருகிறது. அந்த காய் நகர்த்தலில் முக்கியமானவர் ஓ.பி.எஸ். அவரை வைத்து தர்மயுத்தத்தை தொடங்கியது. அதை இ.பி.எஸ்.சுடன் இணைத்தது. தேர்தல் நேரத்துக்கு பிறகு மறுபடியும் தர்மயுத்தத்தை ஓ.பி.எஸ். மூலம் தொடங்கிவிட்டது.

இந்த ஆடுபுலி ஆட்டங்கள் 2021-ல் நடைபெறும் சட்டமன்றத் தேர்தல் வரை நடைபெறும். 2021 தேர்தலில் ரஜினியை பா.ஜ.க. ஹீரோவாக களமிறக்கும். ரஜினியின் தளபதிகளாக ஓ.பி.எஸ். தலைமையில் இயங்கும் அ.தி.மு.க.வினர் இருப்பார்கள். ரஜினியின் வாக்குகளும் அ.தி.மு.க. வாக்குகளும் சேர்ந்தால் தி.மு.க.வுக்கு சவாலாக வரும். அதற்குள் ஊழல் புகார் நிறைந்த இ.பி.எஸ். வகையறாக்களை ஒரு கை பார்த்து விடுவது, முழுக்க அ.தி.மு.க.வில் ஓ.பி.எஸ்.சின் கையை ஓங்க வைப்பதுதான் பா.ஜ.க.வின் பிளான். இதற்காகவே ஆடிட்டர் ஒருபக்கம் ஓ.பி.எஸ்.சையும் மறுபக்கம் ரஜினியையும் சமமாக கையிலெடுக்க நினைக்கிறார் என்கிறார்கள் பா.ஜ.க.வைச் சேர்ந்தவர்கள். அதிகபட்சம் ஆட்சியை காப்பாற்றுவதும், ஒருவேளை 2021 தேர்தல் முடிவு அ.தி.மு.க. வுக்கு தோல்வி என வந்தால் 2024 வரை மத்தியில் ஆட்சி செய்யும் பா.ஜ.க. உதவியுடன் தப்பித்துக் கொள்வதை தவிர எடப்பாடிக்கு வேறு வாய்ப்புகள் இல்லை என கணக்கிடுகிறார்கள் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள்.

  rajini



ஓ.பி.எஸ்.சின் அசைவுகளில் பா.ஜ.க. வின் கை இருக்கிறது. அதை எதிர்த்தால் எடப்பாடியை குறிவைத்து மத்திய அரசின் ரெய்டுகள் பாயும். அது மட்டுமல்ல எடப்பாடியை கொடநாடு கொலை வழக்கில் சிக்க வைத்து, கைது வரையிலான நெருக்கடி உருவாகும். ஏனென்றால் எடப்பாடி மீது கொடநாடு கொலைகள் தொடர்பாக புகார் கூறிய மாத்யூ சாமுவேல்தான் மம்தா பானர்ஜிக்கு எதிரான சாரதா சிட்பண்ட் வில்லங்கத்தை கண்டு பிடித்தவர். அவர்தான் மேற்கு வங்கத்தில் பா.ஜ.க. அடைந்த வெற்றிக்கான சூத்ரதாரிகளில் ஒருவர் என ஒரு அதிர்ச்சித் தகவலையும் பகிர்கிறார்கள் ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள்.
 

Next Story

'எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும்' -தமிழிசை பேட்டி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

nn


'ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மக்கள் மிகவும் வரவேற்றார்கள்' எனப் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''இந்தத் தேர்தலில் இன்னும் வாக்கு எண்ணிக்கை சதவீதம் அதிகரித்திருக்க வேண்டும். இதற்கு பல காரணங்கள் சொல்கிறார்கள். நேற்றைய தினம் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் கோபால்சாமி சொல்லும்போது ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும். சென்னை போன்ற இடங்களில் அப்பொழுதுதான் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள். சில பேர் இரண்டு வாக்குகள் வைத்திருக்கிறார்கள். கிராமத்திலும் போய் வாக்களிக்கிறார்கள். அது ஒரே இடத்தில் இருந்தால் சென்னையில் வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்று சொல்கிறார்கள்.

எது எப்படி இருந்தாலும் மக்கள் அதிகமாக வாக்களிக்க வரவேண்டும். வாக்களிக்க வந்தவர்களுக்கு மிக்க நன்றி. ஏனென்றால் அதிகாலையில் வயதானவர்கள், முடியாதவர்கள் கூட வந்து வாக்களித்தார்கள். அவர்களை நான் தலை வணங்குகிறேன். எல்லா இடங்களிலும் நிச்சயமாக ஒரு மாற்றம் ஏற்படும். பாரதிய ஜனதா கட்சிக்கு நல்ல வாய்ப்பு இருக்கிறது. வடசென்னை பகுதியாக இருக்கட்டும், தென் சென்னை, மத்திய சென்னை, தமிழகம் முழுவதும் குறிப்பாக தென் சென்னையில் நான் போட்டியிட்ட இடத்தில் மக்கள் மிகுந்த அன்பையும் ஆதரவையும் அளித்தார்கள், என்னை உணர்ச்சி வயப்படும் அளவிற்கு, நெகிழ்ச்சி அடைய வைக்கும் அளவிற்கு எல்லோரும் என்னிடம் அன்பு பாராட்டினார்கள். ஒரு ஆளுநராக இருந்து அக்காவாக வந்திருப்பதை மிகவும் வரவேற்றார்கள்''என்றார்.

Next Story

மோடியின் சர்ச்சை பேச்சு; பரப்படும் மன்மோகன் சிங்கின் விடியோ - தகிக்கும் தேர்தல் களம்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Congress accuses BJP of misrepresenting Manmohan Singh's video and spreading it

ராஜஸ்தானில் மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் தேசத்தின் செல்வத்தை இந்துக்களிடமிருந்து முஸ்லீம்களுக்கு கொடுத்துவிடுவார்கள் எனக் கூறி வெறுப்பு பிரச்சாரம் செய்தார். அதற்கு நாடு முழுவதம் கடும் கண்டனம் எழுந்து வருகிறது. சர்வாதிகாரியின் உண்மை முகம் வெளிவந்துள்ளதாக எதிர்க்கட்சிகள் கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பகுதியில் நடந்த பரப்புரைக் கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, '‘காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோது,​ ​தேசத்தின் செல்வத்தில் இஸ்லாமியர்களுக்கு முதல் உரிமை உண்டு என்று சொன்னார்கள். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள். நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்ததை ஊடுருவியவர்களுக்கு கொடுக்கப் போகிறீர்களா?’ என்றார். இதில், இஸ்லாமியர்களைப் பிரதமர் மோடி ஊடுருவல்காரர்கள் என்றும், அதிக குழந்தைகளைப் பெற்றவர்கள் எனவும் சித்தரித்து பேசியிருந்தார்.

தொடர்ந்து பேசிய மோடி, ''பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தை கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, இஸ்லாமியர்களுக்கே செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள், சகோதரிகளின் தாலியைக்கூட விட்டுவைக்காது. எனக் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி இருந்தார். இந்திய அரசியல் வரலாற்றில் எந்தவொரு பிரதமரும், இவ்வளவு தரம் தாழ்ந்து பேசியது கிடையாது என்றும், முதல் பிரதமாராக மோடி வெறுப்பு பிரச்சாரம் செய்து வரலாற்றில் இடம் பிடித்துள்ளார் எனக் கடும் கண்டனங்கள் எழுந்து வந்தது.

தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருக்கும் நேரத்தில் நாட்டின் பிரதமர் வெறுப்பு பிரச்சாரம் செய்து இருப்பதால் மோடியைத் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. இதனிடையே, காங்கிரஸ் சார்பில் பிரதமர் மோடி வெறுப்பு பிரச்சாரத்திற்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், தன்னாட்சியாக செயல்படும் இந்திய தேர்தல் ஆணையம் பிரதமர் வெறுப்பு பேச்சு தொடர்பாக கருத்து தெரிவிக்க மறுத்து விட்டது. இதற்கு முன்பு உத்தரப் பிரதேசத்தின் சஹரன்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை முஸ்லிம் லீக் என்று முத்திரை குத்தி வெறுப்பு பிரச்சாரம் செய்தார். ஆனால், இந்திய தேர்தல் ஆணையம் அதற்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அதன் நீட்சியாக பிரதமர் மோடி தொடர்ந்து இஸ்லாமியர்களை குறிவைத்து வெறுப்பு பிரச்சாரம் செய்து வரும் நிலையல், தமிழக முதல்வர் ஸ்டாலின் பிரதமரின் அப்பட்டமான வெறுப்புப் பேச்சுக்கு காது கேளாத வகையில், இந்திய தேர்தல் ஆணையம் வெட்கமின்றி நடுநிலைமையைக் கூட கைவிட்டுள்ளதாக குற்றம் சாற்றியுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, சர்வாதிகாரியின் உண்மை முகம் மீண்டும் நாட்டின் முன் வெளிவந்துள்ளதாக சாடியுள்ளார். 

ஆனால், பிரதமர் மோடியின் வெறுப்பு பேச்சை நியாப்படுத்தும் பாஜகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், பிரதமர் மன்மோகன் சிங் பேசும் பழைய வீடியோவை கட் செய்து சமூக வலைத்தளங்களில் பரப்பி வருகின்றனர். இதனால், மன்மோகன் சிங் உண்மையில் பேசியது குறித்து காங்கிரஸ் தரப்பில் விளக்கம் தரப்பட்டுள்ளது. அதில்,  கடந்த 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற நிகழ்வொன்றில் பேசும் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங், தேசத்தின் பல்வேறு வளர்ச்சிகள் சார்ந்த முன்னுரிமைகளை விளக்குகிறார். “பட்டியல் மற்றும் பழங்குடி வகுப்பினர், ஓபிசி பிரிவினர், சிறுபான்மையினர், பெண்கள், குழந்தைகள், குறிப்பாக, முஸ்லிம் சிறுபான்மையினர் வளர்ச்சியின் பலன்களில் சமமாகப் பங்குபெறும் வகையில், புதுமையான திட்டங்களை வகுக்க வேண்டும். வளங்கள் மீதான முதல் உரிமையை அவர்கள் பெற்றிருக்க வேண்டும். நாட்டின் வளங்களில் மத்திய அரசுக்கு எண்ணற்ற பிற பொறுப்புகள் உள்ளன. அது நாட்டு மக்கள் அனைவருக்கும் சென்று சேரவேண்டும். என மன்மோகன் சிங் பேசியுள்ளார்.

அப்போதே அவரது பேச்சு பொதுவெளியில் வேறாக புரிந்துகொள்ளப்பட்டதால் பிரதமர் அலுவலகத்தில் இருந்து விளக்கமும் கொடுத்ததாக சொல்லப்படுப்படுகிறது. ஆனால், பாஜகவினர், 'குறிப்பாக முஸ்லிம் மக்கள்' என  மன்மோகன் சிங் பேசுவதை மட்டும் கட் செய்து சமூக வலைத்தளங்களில் வெறுப்பு பிரச்சாரம் செய்து வருவதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றச்சாட்டுகின்றனர். நாட்டில் 10 ஆண்டுகளாக ஆட்சி செய்யும் பாஜக ஆட்சிகால சாதனைகளைக் கூற முடியாமல் 18 வருடங்களுக்கு முன் நடந்த சம்பவத்தை திரித்து வெறுப்பு பிரச்சாரம் செய்வதாக கண்டனம் எழுந்து வருகிறது. பிரதமர் மோடி உண்மைக்கு மாறான தகவலைத் தந்துள்ளார் எனவும், காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் மோடி பேசியது எதையும் கூறவில்லை என்றும் அக்கட்சித் தலைவர்கள் விளக்கம் அளித்துவருகின்றனர். ஆனால், இதனிடையே உத்திரபிரதேசத்திற்கு தேர்தல் பரப்புரைக்கு சென்ற மோடி இஸ்லாமியர்களுக்கு ஆதரவாக பேசியுள்ளார். முன்னதாக நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், இடத்திற்கு இடம் பிரதமர் மோடி மாற்றி பேசி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது