Skip to main content

தமிழகத்திற்கான 'ராஜஸ்தான் ஆபரேஷன்'! சிக்கப்போகும் திமுக, அதிமுக விஜபிக்கள்!!! கழகங்களை கதிகலக்கும் டெல்லி ஸ்கெட்ச்!

Published on 14/08/2020 | Edited on 14/08/2020
admk

 

 

ஆபரேஷன் ராஜஸ்தானை தமிழகத்தில் தொடங்கியிருக்கிறது பாஜக தலைமை. ராஜஸ்தான் மாநிலத்தில் அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசை வீழ்த்துவதற்கு சச்சின் பைலட்டை பாஜக களம் இறக்கியது. சச்சின் பைலட்டிடம் 32 எம்.எல்.ஏ.க்களை கொண்டு வா என உத்தரவிட்டது. அவரால் 20 எம்.எல்.ஏ.க்களுக்கு மேல் இழுக்க முடியவில்லை. ஆனாலும் சச்சின் பைலட் ஒரு முதலமைச்சர் வேட்பாளர் என்ற அடிப்படையில் பாஜக அவரை இயக்குகிறது. அசோக் கெலாட் ஒரு பலவீனமான தலைவர் என்கிற இமேஜை பாஜக நிறுவியிருக்கிறது. கர்நாடகாவில் இதுபோன்ற ஒரு ஆபரேஷன் ஆறு மாதத்திற்கு பிறகு பலன் அளித்தது. அதுபோல பாஜக ராஜஸ்தானில் ஒரு விளையாட்டை ஆடிக்கொண்டிருக்கிறது. அதே ஆட்டம் தமிழகத்திலும் தொடங்கியுள்ளது என்கிறார்கள் டெல்லி பாஜக தலைவர்கள். 

 

பாஜகவின் தேசிய தலைவரான ஜே.பி.நட்டா தன்னை ஒரு பலம் மிக்க தலைவராக முன்னிறுத்தி, அமித்ஷாவிற்கு அடுத்தபடியாக கட்சியை வளர்ப்பதில் கவனம் செலுத்துகிறார். அவருக்கு தமிழகத்தின்மீது எப்போதும் ஒரு கண் உண்டு. அவர் முதலில் வீழ்த்தியது சசிகலா புஷ்பா என்கிற அ.தி.மு.க. உறுப்பினரைதான். அவரை தமிழக பாஜக தலைவர்கள் மதிக்கவில்லை என்றாலும் ஜே.பி.நட்டாவின் ஆதரவில் அவருக்கு வேண்டப்பட்ட காரியங்கள் டெல்லியில் நடந்தேறி வருகின்றன.

 

முருகனை பாஜக தலைவராக்கியதும் ஜே.பி. நட்டாதான். அந்த முருகனிடம்தான் தமிழகத்திற்கான ராஜஸ்தான் ஆபரேஷனை ஒப்படைத்திருக்கிறார் என்கிற பாஜக தலைவர்கள். இந்த ராஜஸ்தான் ஆபரேஷனின் பலம் மற்றும் பலவீனங்களை பற்றி ஜே.பி.நட்டா, முருகனுக்கு கொடுத்த கட்டளைகளையும் விவரிக்கிறார்கள்.

 

ராஜஸ்தானில் அசோக் கெலாட்டை பலவீனப்படுத்தியதைப்போல தமிழகத்தில் மு.க.ஸ்டாலினை பலவீனப்படுத்த வேண்டும். மு.க.ஸ்டாலின் அவரது மகன் உதயநிதிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். அதனால், அடுத்த பத்து வருடத்தில் ஸ்டாலினுக்கு போட்டியாக முதல்வர் வேட்பாளராக வரத் தகுதியுள்ள கனிமொழி அதிருப்தியில் இருக்கிறார்.

 

 

dmk

 

கனிமொழியின் அதிருப்தியை பயன்படுத்தி திமுகவை பலவீனப்படுத்த வேண்டும். ராஜஸ்தானைப் போலவே ஒரு வெயிட் அண்டு கேம் விளையாடி திமுக அதிகாரத்தில் வருவதை தடுக்க வேண்டும். அதற்காக திமுகவில் உள்ள அதிருப்தியாளர்களை ஒருங்கிணைத்து அவர்களை பாஜகவிற்கு கொண்டுவர வேண்டும். அந்த வகையில்தான் வி.பி.துரைசாமி, கு.க.செல்வம் போன்றவர்கள் பாஜகவிற்கு அழைத்து வரப்பட்டார்கள். மேலும் ஜெகத்ரட்சகன், டி.ஆர்.பாலு, ஆ.ராசா போன்றவர்களை வளைக்க காய் நகர்த்தப்படுகிறது.

 

கடந்த பாராளுமன்ற தேர்தலில் பத்துக்கும் மேற்பட்ட சதவீத வாக்குகளை வாங்கி காங்கிரஸ் கட்சி திமுக, அதிமுக ஆகியவற்றிற்கு அடுத்தப்படியாக மூன்றாவது பெரிய கட்சி என்கிற இமேஜை பெற்றது. வருகிற சட்டமன்ற தேர்தலில் அந்த இடத்தை பெற பாஜக முயற்சிக்கிறது. அதற்காக அதிமுக கூட்டணியில் அதிக இடங்களை எதிர்பார்க்கிறது. அந்த பேரத்தில் அதிமுக கவிழ்த்துவிடும் என்கிற சிந்தனையும் இந்த ஆபரேஷன் ராஜஸ்தானில் இருக்கிறது. அதற்காக திமுக பிரமுகர்களைப் போலவே, அதிமுக விஜபிக்களை வளைக்க பாஜக திட்டமிட்டுள்ளது.

 

பாஜகவின் இந்த வலையில் அதிமுக அமைச்சர் ஒருவர் வீழ்ந்துவிட்டார், அவர் ராஜேந்திரபாலாஜி. அவருக்கு அடுத்தடுத்த நகர்வுகளில் ராஜ்ய சபா எம்.பி., மத்திய அமைச்சர் என ஆசை வார்த்தை காட்டப்படுகிறது. விரைவில் அவர் பாஜகவில் சங்கமமாவார் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ராஜேந்திர பாலாஜியோடு ஆர்.எஸ்.எஸ்.ஸில் இருந்து பாஜகவுக்கு வந்த அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், ரஜினியோடு தொடர்பு வைத்துள்ள அதிமுக அமைச்சர்கள் என ஒரு படையையே அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு கொண்டுவர திட்டமிட்டு காய் நகர்த்திக்கொண்டிருக்கிறார் ஜே.பி.நட்டா.

 

இவையெல்லாம் இன்னமும் ஆரம்பகட்ட நிலையிலேயேதான் இருக்கிறது. பாஜகவின் இந்த ஆபரேஷன் ராஜஸ்தான் வெற்றி பெறுவதற்காக ஒரு பெரிய வலையை வீசி அதில் சிக்கப்போகும் திமுக, அதிமுக விஜபிக்களை எதிர்நோக்கி பாஜக காத்திருக்கிறது என்கிறார்கள் டெல்லி பாஜக தலைவர்கள்.

 

 

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

“மக்களுக்காக குரல் கொடுப்பேன்” - தி.மு.க. வேட்பாளர் அருண் நேரு உறுதி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
DMK candidate Arun Nehru promised to speak on behalf of the people

பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் ஊராட்சியில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக  வேட்பாளர் அருண் நேரு பெரம்பலூர் ஒன்றியத்தில் எளம்பலூர் கிராமத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திமுக வேட்பாளர் அருண் நேருவை ஆதரித்து போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பொதுமக்கள் மத்தியில் ஆதரவு திரட்டினார்.

அப்போது வேட்பாளர் அருண் நேரு பேசியதாவது;- பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதியில் கடந்த கால எம்.பி.க்கள் பல பேரை பார்த்திருப்பீர்கள். நிச்சயமாக நான் வெற்றி பெற்று அவர்களுக்கு வித்தியாசமாக பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து கொடுப்பேன். மேலும் காவிரி  பெரம்பலூர் பகுதி குடிநீர் இன்னும் முழுமை அடையாமல் உள்ளது. நான் வெற்றி பெற்றவுடன் பெரம்பலூர் பகுதியில் உள்ள அனைத்து ஊர்களுக்கும் காவிரி குடிநீர் கிடைக்க ஆவண செய்வேன். இந்தப் பகுதியில் சின்ன வெங்காயம் மற்றும் முத்துச்சோளம் ஆகிய பயிர்களை விவசாயம் செய்து உரிய விலை மற்றும் வெங்காயம் பதப்படுத்தும் கிடங்கு இல்லாமல் பெரும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதனை உடனே சரி செய்ய ஆவண செய்வேன் என்றார்.

பிரச்சாரத்தின் போது தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர், பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் ஜெகதீசன், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன், கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன், பெரம்பலூர் மாவட்ட துணைச் செயலாளர் டி.சி. பாஸ்கர், மாநில செயற்குழு உறுப்பினர் வக்கீல் ராஜேந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் ஜெயசீலன், பெரம்பலூர் திமுக ஒன்றிய செயலாளர் ராஜ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் டி.ஆர். சிவசங்கர், ஓவியர் முகுந்தன், முன்னாள் பெரம்பலூர் சேர்மன் ராஜாராம், வேப்பந்தட்டை ஒன்றிய சேர்மன் ராமலிங்கம், துணை சேர்மன் ரெங்கராஜ், எளம்பலூர் ஊராட்சி மன்றத் தலைவர் சித்ராதேவி குமார், காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினர் வாக்கு சேகரிப்பின் போது உடன் சென்றனர்.

பெரம்பலூர் வட்டம் எளம்பலூர், செங்குணம், அருமடல் கவுல் பாளையம், நெடுவாசல் எறைய சமுத்திரம், கல்பாடி, சிறுவாச்சூர் ஆகிய ஊர்களில் தொடர்ந்து பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அருண் நேரு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.