Skip to main content

பாஜக - அதிமுக கூட்டணி முறிவுக்கு இதுவே முக்கிய காரணம் - இராஜகம்பீரன் விளக்கம்

Published on 28/09/2023 | Edited on 28/09/2023

 

  Raja Gambeeran | EPS | Annamalai | Modi | ADMK | BJP

 

அ.தி.மு.க.- பாஜக உடனான கூட்டணியை சமீபத்தில் முறித்துக் கொண்டதைப் பற்றியும் மற்றும் பல அரசியல் நிகழ்வுகள் குறித்தும் ஆவணப்பட இயக்குநரும், திரைப்பட விமர்சகருமான இராஜாகம்பீரன் தனது கருத்துகளை பகிர்ந்து கொள்கிறார்.

 

அ.தி.மு.க. என்பது திராவிட இயக்கத்தின் தொடர்ச்சியாகத் தான் பார்க்கிறேன். ஏனென்றால், தி.மு.க.விற்கு இருக்கும் அனைத்து கொள்கைகளும் இவர்களுக்கும் இருக்கிறது. ஏன், கலைஞர் அமைச்சரவையில் வாய்ப்பு கிடைக்காத நாவலர் நெடுஞ்செழியன், காளிமுத்து, ராஜாராம் போன்ற ஆளுமைகள் எம்.ஜி.ஆரின் பின் சென்றனர். ஆக, அ.தி.மு.க.வும் பெரிய ஆளுமைகள் கொண்ட கட்சியாக இருந்து பின் கழுதை தேய்ந்து  கட்டெறும்பான நிலைக்கு வந்துவிட்டனர். 

 

இதன் தொடர்ச்சியாக, ஜெயலலிதா போன்றோர் கட்சியின் கொள்கைகளை நீர்த்துப் போகச் செய்தாலும் காலத்தின் கட்டாயத்தில் சில திராவிடக் கருத்துகளை, இட ஒதுக்கீடு விசயங்களை தூக்கிப்பிடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. உதாரணத்திற்கு, சென்னை முஸ்லிம் மாநாட்டில் அவர் பேசுகையில், " நான் ஒரு வரலாற்றுத் தவறை செய்துவிட்டேன்... இனி வாழ்நாளிலே பா.ஜ.க.வுடன் கூட்டணி வைக்கப் போவதில்லை" என தனது வழக்கத்தை மீறி பகிரங்கமாக பேசினார். இந்தளவுக்கு பா.ஜ.க.வை அ.தி.மு.க. விரட்டியுள்ளது. தற்போது கொள்ளைப் புறத்தில் இருந்து வந்து பதவி ஏற்றதால்,  அமலாக்கத் துறைக்கு பயந்தனர். ஆனால், இன்றைக்கு எது நடந்தாலும் எதிர்கொள்வோம் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதற்கு, தொகுதிப் பங்கீடும், அ.தி.மு.க.விற்கு வேண்டாத சில கட்சிகளுக்கு பா.ஜ.க. எம்.பி. சீட்கள் கேட்டது தான் காரணம். மாறாக, இதனை அண்ணாவை விமர்சித்த பிரச்சனையாக மாற்றுகிறார்கள். 

 

கொள்கையும் கோட்பாடும் அ.தி.மு.க.வினர்களுக்கு இருந்ததில்லை. எனவே, இரட்டை இலையையும், தங்களின் சொத்துகளை பாதுகாக்கவும் அஞ்சுகின்றனர். ஒருவேளை மக்களவை தேர்தலில் பா.ஜ.க.கேட்கும் இடத்தை கொடுத்தால், இதே நிலை சரிக்கு சமமாக சட்டமன்ற தேர்தலிலும் வரும் என்று தான் யோசிக்கிறது. அண்ணாமலை நினைக்கிறார், மோடியை பிரதமராக அ.தி.மு.க.ஏற்க வேண்டும் ஆனால், எடப்பாடி முதல்வர் என அவர் ஏற்கவில்லை. 

 

முதல்வர் வேட்பாளரை தேர்வு செய்யும் அளவிற்கு பா.ஜ.க. வலிமையுடன் இருக்கிறதா? ஆதரவாளர்கள் உள்ளனரா? வாக்கு வங்கி உண்டா? என்றும் பார்க்க வேண்டும். அதிலும், சமீபத்தில் சென்ற நடைப்பயணம் ஒரு சொகுசு பயணம் தான். அவர்களை அரசியல் கட்சி என்று கூட தமிழக மக்கள் ஏற்கவில்லை. தற்போது, இ.ந்.தி.யா. கூட்டணி மத்தியில் வலிமை பெற்றுவருவதால், இனி பா.ஜ.க.வை தூக்கி சுமக்க வேண்டாம் என்று அ.தி.மு.க. முடிவெடுத்துள்ளது. தொடர்ந்து, மக்கள் மத்தியிலும் அண்ணாமலைக்கு செல்வாக்கு இல்லை என்பதும் அவர்களின் அரசியல் நீர்த்துப்போய்விட்டது என்பதாலும் கூட்டணியை அ.தி.மு.க. முறித்துள்ளது. எனவே, தான் இந்தியா விடுதலை பெற்றதைப் போல, செப்டம்பர் 25ம் தேதியை அ.தி.மு.க. கொண்டாடுகிறது. தொண்டர்களும் இதனைத் தான் விரும்பினார்கள். அவர்கள் பாஜகவை சுமக்க விரும்பியதில்லை. மேலும், எடப்பாடி அவர்களும் தனது வாழ்க்கையில் இது போன்று ஒரு வரலாற்று முடிவை எடுத்து வைத்துள்ளார். 

 

அண்ணா என்ற ஆளுமையை அடிப்படையாக வைத்து வளர்ந்தது தான் அ.தி.மு.க. எச்.ராஜா வா இக்கட்சியை தோற்றுவித்தார். பாஜக எப்படி பாபர் மசூதியை உடைத்தார்களோ, அதேபோல் அதிமுகவை உடைத்தனர். மறுபடியும் அவர்களே சேர்க்கிறேன் என்று சொல்கிறார்கள். இந்த நிலையில் அ.தி.மு.க. விலகியது, கட்சியை காப்பாற்றும் நல்ல முடிவாக பார்க்கிறேன். அதேசமயம், எப்படி சசிகலா காலில் விழுந்து முதல்வராகி, பின்னர் அவரையே அரசியலில் நுழையவிடாமல் செய்தாரோ, பா.ஜ.க.வையும் தமிழ்நாட்டில் இருந்து நீக்குவார். 

 

வட மாநிலங்களில் நிகழ்த்துவது போல மதக் கலவரங்கள் எதுவும் தமிழகத்தில் நடைபெறுவதில்லை. இதை உணர்ந்த அண்ணாமலையால் எந்த முன்னேற்றத்தையும் தமிழகத்தில் செய்ய இயலவில்லை. அதனால், தான் பாஜகவை இங்கு எப்பொழுதும் நோட்டாவிற்கு கீழே வைத்துள்ளனர். எனவே, அ.தி.மு.க. செய்த பாவங்களை கழுவும் வாய்ப்பாக இந்த முறிவை பார்க்க வேண்டும். இதன் கூட்டணி கட்சிகளும் இவர்களுடன் தான் தேர்தலை சந்திப்பார்கள். ஏனென்றால், அ.தி.மு.க. இன்றளவும் கொள்கை இல்லை என்றாலும் தனக்கான வாங்குவங்கியை வைத்துள்ளது. 

 

அ.தி.மு.க.- பாஜக கூட்டணி இல்லை என்றதால் திருமாவளவன் தி.மு.க.வில் இருந்து மாறிவிடுவார் என்றில்லை. ஏனென்றால், திருமாவளவன் வெறும் தேர்தல் அரசியலை செய்பவர் அல்ல. அவர் கொள்கை சார்ந்து அரசியல் செய்பவர். ஏன், இன்றைக்கு தமிழ்நாட்டில் இருக்கும் சில தலித் தலைவர்கள் விலைபோன பிறகும். பொன் ராதாகிருஷ்ணன் போன்றோர் திருமாவளவனை பாஜகவில் இணையச் சொல்லி ராஜ்ய சபா, மத்தியில் பதவியும் தருவதாக பேசினர். ஆனால், இதையெல்லாம் மீறி, சாதி, சனாதன எதிர்ப்பில் உறுதியாக இருக்கிறேன் என்றவர் திருமாவளவன். 

 

பக்தர் சிலர் பாதயாத்திரை போவதையும், பரதேசிகள் சிலர் யாத்திரை போவதையும் கண்டுள்ளோம். எனவே, தனகென்று சொந்த புத்தி, சுய புத்தி இல்லாமல். அரசியலில் எந்த ஒரு முகாந்தரமும் தெரியாமல் தமிழ்நாட்டின் சூழலை உணராமல் தான் அண்ணாமலை இருக்கிறார். மக்கள் இவரை புறக்கணிக்கவும் தயாராக உள்ளனர். இவரால், ஒரு கவுன்சிலர் தேர்தலில் கூட வெற்றி பெற முடியாது. ஆனால், இவர்கள் செந்தில் பாலாஜியை கைது செய்து அந்தப் பகுதியில் செல்வாக்கு பெறமுடியும் என தப்புக் கணக்கு போட்டுள்ளனர். பாஜகவிற்கு தமிழக அரசியலில் நிகழ்காலமும், கடந்த காலமும், எதிர்காலமும் இல்லை. மேலும், தமிழ்நாடு பாஜகவின் மதவெறிக்கு ஒரு போதும் இடமளிக்காது. அண்ணாமலை தேர்தல் பொறுப்பேற்ற கர்நாடகாவில் எப்படி வீழ்ந்தார்களோ, அதே போல தமிழ்நாட்டில் புதைகுழியில் செல்ல இடம் தேடுகின்றது இந்த பாதயாத்திரை.

 

முழு பேட்டியை வீடியோவாக கீழே உள்ள லிங்க்கில் காணலாம்...

 

 

 

கடக்கும் முன் கவனிங்க...

கடக்கும் முன் கவனிங்க...

விரிவான அலசல் கட்டுரைகள்

சார்ந்த செய்திகள்

சார்ந்த செய்திகள்

Next Story

மிக்ஜாம் புயல் பாதிப்பு - பிரதமர் மோடி ஆறுதல்

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

 Migjam storm damage- Prime Minister Modi consoles

 

மிக்ஜாம் புயல் காரணமாக மூன்றாவது நாளாக பெய்த மழைநீர் இன்றும் சென்னையில் சில இடங்களில் தேங்கி நிற்கிறது. குறிப்பாக அசோக் நகர், அரும்பாக்கம், வேளச்சேரி, பெருங்குடி, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் தேங்கியுள்ள நீரை அகற்ற வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பல இடங்களில் பால் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படையினர் 450 பேர் 18 குழுக்களாக பிரிந்து பல்வேறு இடங்களில் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

இந்நிலையில் புயலால் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு மற்றும் ஆந்திர மக்களுக்கு பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் வலைதள பதிவில், 'மிக்ஜாம் சூறாவளியால், குறிப்பாக தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் புதுச்சேரியில் தங்கள் அன்புக்குரியவர்களை இழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது இரங்கல்கள். இந்தப் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ பேரிடர் மீட்புப்படையினர் அயராது உழைத்து வருகின்றனர். நிலைமை முழுமையாக சீராகும் வரை தங்கள் பணி தொடரும்' என தெரிவித்துள்ளார்.

 

ஏற்கனவே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இடைக்கால நிவாரணமாக 5060 கோடி ரூபாய் நிதி கேட்டு பிரதமர் கடித்தும் எழுதியுள்ளதும், 'புயல் பாதிப்புகளில் இருந்து இன்னும் சென்னை மீளாத நிலையில், ஒன்றிய அரசின் உயர்கல்வித்துறை நடத்தும் யூஜிசி - நெட் தேர்வுகள் பல மையங்களில் நடக்கிறது. தேர்வு தேதியை மாற்றி சென்னை மாணவர்களுக்கு நியாயம் வழங்குங்கள்' என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடசன் வலியுறுத்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்

Next Story

‘அ.தி.மு.க.வில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும்’ - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு

Published on 06/12/2023 | Edited on 06/12/2023

 

Chennai High Court verdict on Sasikala's removal from ADMK will go away

 

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக இரண்டாகப் பிரிந்த நேரத்தில், சசிகலா சொத்துக் குவிப்பு வழக்கில் சிறை சென்றார். அதன்பின் ஓபிஎஸ் அணியும், எடப்பாடி பழனிசாமி அணியும் ஒன்று சேர்ந்தது. அதிமுக பொதுச் செயலாளராக இருந்த சசிகலாவின் பதவியைப் பறித்ததோடு, 2017 ஆம் ஆண்டு செப்டம்பரில் நடந்த பொதுக்குழுவில் அதிமுகவிலிருந்து சசிகலா மற்றும் தினகரனை நீக்கினர். அதேபோல் அதிமுகவில் பொதுச் செயலாளர் என்ற பதவியே நீக்கப்பட்டு ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற பதவிகள் புதியதாகக் கொண்டுவரப்பட்டது. தற்பொழுது ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் எடப்பாடி வசம் அதிமுக சென்றுள்ளது.

 

அதனைத் தொடர்ந்து, ‘அதிமுக பொதுச்செயலாளர் பதவியிலிருந்து தன்னை நீக்கிய பொதுக்குழு தீர்மானங்களை ரத்து செய்ய வேண்டும்; பொதுச்செயலாளர் இல்லாமல் நடந்த பொதுக்குழு மற்றும் பதவி நீக்கம் செல்லாது.’ என சசிகலா சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். ‘அதிமுகவிலிருந்து சசிகலாவை நீக்கியது செல்லும்' என நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து சசிகலாவின் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் சென்னை உரிமையியல் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து சசிகலா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். இந்த மேல்முறையீட்டு வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பிரமணியன், என்.செந்தில்குமார் ஆகியோர் கொண்ட டிவிசன் பெஞ்சில் கடந்த நவம்பர் மாதம் 2ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.

 

அப்போது சசிகலா தரப்பில் கூறியதாவது, “அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளாக இருந்த ஓ.பன்னீர்செல்வம், மதுசூதனன் முன்மொழிந்து, எடப்பாடி பழனிசாமி வழிமொழிந்து பொதுச் செயலாளர் ஆன சசிகலாவை பதவியில் இருந்து நீக்கியது செல்லாது. இது தொடர்பான நடைமுறையே சட்ட விரோதமானது. கட்சியில் இருந்து சசிகலாவை நீக்கவோ அல்லது கட்சி விதிகளில் மாற்றம் செய்யவோ அதிகாரம் இல்லை என்று தெரிவித்தது. இதை தொடர்ந்து, நீதிபதிக்கும், சசிகலா தரப்புக்கும் காரசார வாதம் நடைபெற்றது.  

 

இதனை தொடர்ந்து, இது தொடர்பான வழக்கு கடந்த நவம்பர் மாதம் 3ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வாதிட்ட வழக்கறிஞர் அரவிந்த் பாண்டியன், “ கடந்த 2017ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் இடைக்கால பொதுச் செயலாளர் பதவி நீக்கப்பட்டு, ஒருங்கிணைப்பாளர்களாக ஓபிஎஸ்ஸும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் தற்போது வரை தொடர்கிறார்கள். அதனால்,  இடைக்கால பொதுச் செயலாளராக இருந்த சசிகலாவை நீக்கியது செல்லும்” என்று கூறினார். 

 

அதே போல், அதிமுக மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில், “பொதுக்குழு கூட்டங்கள் கட்சி விதிகளுக்கு உட்பட்டே நடத்தப்பட்டது. அந்த கூட்டங்கள் செல்லும் என்பதை உச்சநீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் அங்கீகரித்து உள்ளது. அதிமுக பொதுக்குழுவுக்கே உச்சபட்ச அதிகாரம் உள்ளது. பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் அடிப்படையிலேயே சசிகலா கட்சியில் இருந்தும், பொதுச் செயலாளர் பதவியில் இருந்தும் நீக்கப்பட்டார்” என்று வாதிடப்பட்டது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து கடந்த மாதம் உத்தரவிட்டனர். 

 

இந்த நிலையில், இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதிகள் நேற்று (05-12-23) பிறப்பித்தனர். அதில், வி.கே.சசிகலா தொடர்ந்திருந்த இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாகவும், சிவில் கோர்ட் உத்தரவை உறுதி செய்வதாகவும் தீர்ப்பளித்தனர். மேலும், அந்த தீர்ப்பில், “அ.தி.மு.க.வில் பொதுக்குழு உச்சபட்ச அதிகாரம் படைத்த அமைப்பு என்பதால் அதில் நிறைவேற்றப்பட்ட முடிவுகளுக்கு எதிராக தொடரப்பட்டுள்ள இந்த வழக்கு ஏற்புடையதல்ல. எனவே, மனுதாரரான சசிகலாவை கட்சியில் இருந்து நீக்கி நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செல்லும்” என்று நீதிபதிகள் தீர்ப்பளித்தனர். 

 

 

விரிவான அலசல் கட்டுரைகள்