Skip to main content

"தமிழ்நாடு பற்றி ராகுல்காந்தி சொன்ன அந்த வார்த்தை; பிரதமரின் இந்த நாடகத்துக்கு அதுதான் காரணம்..." - காந்தராஜ் பேட்டி

Published on 23/11/2022 | Edited on 23/11/2022

 

ரகத

 

கடந்த வாரம் வாரணாசியில் பிரதமர், இளையராஜா உள்ளிட்டவர்கள் பங்கேற்ற காசி தமிழ்ச் சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழை வளர்க்க பாஜக எடுத்த அடுத்தகட்ட முயற்சி என்று பாஜக தலைவர்கள் பலரும் இதுதொடர்பாக சிலாகித்து வருகிறார்கள். ஆனால் தமிழக முதல்வர் உள்ளிட்ட யாரும் இல்லாத நிலையில் இது தமிழை வளர்க்க நடத்தப்பட்ட விழாவா இல்லை பாஜக அரசியல் செய்ய வேண்டும் என்ற காரணத்துக்காக நடத்தப்பட்ட விழாவா என்ற கேள்வியைத் தமிழ் அறிஞர்கள் பலரும் எழுப்பி வருகிறார்கள். இந்நிலையில் இதுதொடர்பாக அரசியல் விமர்சகர் மருத்துவர் காந்தராஜ் அவர்களிடம் நாம் கேள்வியை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, 

 

உ.பி-யில் காசி தமிழ்ச் சங்கமம் என்ற நிகழ்ச்சி பிரதமர் தலைமையில் மிகப் பிரபலமாக நடைபெற்றது. இதில் பேசிய பிரதமர் தமிழ் இந்தியாவில் நீண்டகாலம் பேசிவருகின்ற மொழி, அனைவரும் தமிழைக் கற்க முயல வேண்டும், எதிர்காலத்தில் தமிழை வளர்க்க தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார். பிரதமரின் இந்தப் பேச்சை எப்படிப் பார்க்கிறீர்கள்?

 

தமிழை வளர்க்க நடத்தப்பட்டதாகக் கூறப்படும் இந்த விழாவில் யார் யார் எல்லாம் கலந்துகொண்டார்கள். பிரதமர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரா, உ.பி முதல்வர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரா? இளையராஜா தமிழர்தான். இவருக்கும் தமிழுக்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது. திருவாசகம் பாடினாரே என்றால் அதெல்லாம் இப்போது அவருக்கு ஞாபகமாவது இருக்கிறதா என்று தெரியவில்லை. இவ்வளவு பெரிய தமிழ்ச் சமூகத்திலிருந்து நான்கு பேர் கூட தமிழ்நாட்டிலிருந்து வரவில்லையே ஏன்? இவர்கள் தமிழை எதற்காக வளர்க்கிறேன், வளர்க்கிறேன் எனக் கூக்குரல் இடுகிறார்கள் என்பது நாம் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான செய்தியாக இருக்கிறது.

 

கொஞ்ச நாளைக்கு முன்னாடி நாடாளுமன்றத்தில் பேசிய ராகுல்காந்தி தமிழ்நாட்டில் எந்த குட்டிக்கரணம் போட்டாலும் உங்களால் வெற்றிபெற முடியாது என்று பாஜகவை பார்த்துக் கூறினார். இது அமித்ஷா மற்றும் மோடியின் பார்வைக்குச் சென்றதை அடுத்து அவர்கள் தமிழ்நாடு மீது தனிக்கவனம் செலுத்தி வருகிறார்கள். அதன் ஒரு கட்டமாக மாதம் ஒருமுறை தமிழகம் வந்து ஆங்காங்கே விழாக்களில் பங்கெடுத்து தமிழ் உலகில் சிறந்த மொழி, மூத்த மொழின்னு கூறிவிட்டு ஒரு திருக்குறளை சொல்லிவிட்டு போறாங்க. நாங்களும் தமிழை காப்பாத்துறோம்ன்னு தற்போது இவர்கள் காசி தமிழ்ச் சங்கமம்னு நிகழ்ச்சி நடத்துறாங்க.

 

ஆனால் அதிலேயும் பாருங்க தமிழ்ச் சங்கமம் என்ற பெயரில் தமிழ் மட்டும்தான் தமிழ், சங்கமம் கூட வட மொழிதான். இந்த லட்சணத்தில்தான் இவர்கள் தமிழை வளர்க்கிறார்கள். தமிழை வளர்க்கப் போகிறேன், தமிழை வளர்க்கப் போகிறேன் என்று சொல்கிறார்களே எப்படி என்று இதுவரை ஏதேனும் கூறியிருக்கிறார்களா? அறிவியல் பூர்வமாகத் தமிழை வளர்ப்பேன் என்கிறார்களா இல்லை ஆன்மீக ரீதியாகத் தமிழை வளர்ப்பது பற்றிப் பேசுகிறார்களா என்று எதுவுமே இவர்கள் கூறுவது இல்லையே. அதைத்தானே நாம் தொடர்ந்து கேட்டு வருகிறோம்.

 

இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் இந்தியாவில் உள்ள 130 கோடி மக்களும் தமிழை வளர்க்கப் பாடுபட வேண்டும் என்று கூறியுள்ளதாக நிறையப் பேர் பேசுகிறார்கள். அவருக்கு மிக்க நன்றி, ஆனால் அதை அவர் சொல்லியவாறு நடைமுறைப்படுத்த வேண்டும். நாடாளுமன்றத்தில் தமிழில் பேசலாம், மொழிபெயர்ப்புக்கு ஆவண செய்யலாம், தமிழை இந்தியா முழுவதும் நடைபெறும் தேர்வுகளில் பயன்படுத்தலாம் என அறிவித்து அதை உறுதிப்படுத்த வேண்டும். அதைவிட்டுவிட்டு வெறும் வாயில் முழம் போடக்கூடாது. ஆனால் அவர்கள் வாயில் மட்டுமே தமிழை வளர்ப்பார்கள் என்று அனைவருக்கும் தெரியும். ஏனென்றால் அவர்கள் வாயை வைத்துத்தான் இன்றைக்கு இந்த இடத்திற்கே வந்துள்ளார்கள்.


 

Next Story

“2019ல் நம்பிக்கையோடு வந்தேன், 2024ல்...” - பிரதமர் மோடி

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
 PM Modi campaign and says he came with confidence in 2019 at assam

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளான தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரபடுத்தி வருகின்றன.

அந்த வகையில், மொத்தம் 14 தொகுதிகளைக் கொண்ட அசாம் மாநிலத்தில் 3 கட்டங்களாகத் தேர்தல் நடைபெற இருக்கிறது. அதன்படி, முதற்கட்ட தேர்தலானது வரும் ஏப்ரல் 19ஆம் தேதியும், இரண்டாம் கட்டத் தேர்தலானது ஏப்ரல் 26ஆம் தேதியும், மூன்றாம் கட்டத் தேர்தலானது மே 7ஆம் தேதியும் நடைபெற உள்ளது. நாடு முழுவதும் உள்ள சில தொகுதிகளில் நடைபெறும் முதற்கட்ட தேர்தல் நாளை மறுநாள் (19-04-24) நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்திலும், வாக்கு சேகரிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், அசாம் மாநிலத்தின் நல்பாரி மாவட்டத்தில் பா.ஜ.க சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் இன்று(17-04-24) நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசினார். அதில் அவர், “இன்று நாடு முழுவதும் மோடியின் உத்தரவாதம் நடந்து கொண்டிருக்கிறது. மோடியின் உத்தரவாதத்திற்கு வடகிழக்கு பகுதியே சாட்சி.

70 வயதுக்கு மேற்பட்ட முதியோர்கள் அனைவருக்கும் ஆயுஷ்மான் யோஜனா திட்டத்தின் கீழ் 5 லட்சம் ரூபாய் வரை இலவச சிகிச்சை வசதிகள் வழங்கப்படும் என்று உத்தரவாதம் அளித்தேன். அவர்களின் சிகிச்சையை எந்தவித பாரபட்சமும் இல்லாமல் பார்த்துக்கொள்வேன். பி.எம். கிஷான் யோஜனா திட்டத்தின் கீழ் இங்குள்ள விவசாயிகள் ரூ.1000க்கு மேல் பெற்றுள்ளனர். இப்போது, ​​பாஜக இந்தத் திட்டத்தைத் தொடர்வதாக அறிவித்துள்ளது, இதன் மூலம் அசாமின் விவசாயிகளுக்கு எந்தவித பாகுபாடும் இல்லாமல் உதவி மற்றும் அதிகாரம் அளிக்கிறது.

2014ஆம் ஆண்டில் எதிர்பார்ப்புடன் மக்களைச் சந்திக்க வந்தேன். 2019ஆம் ஆண்டில் நம்பிக்கையோடு வந்தேன். தற்போது 2024ல் உத்தரவாதத்தோடு வந்திருக்கிறோம். நாட்டின் ஒவ்வொரு குடிமகனையும் அணுகி அவர்களுக்குத் தகுதியான வசதிகளை வழங்கத் தேசிய ஜனநாயகக் கூட்டணி முடிவு செய்துள்ளது. அடுத்த 5 ஆண்டுகளில் ஏழைகளுக்கு மேலும் 3 கோடி புதிய வீடுகள் கட்டித் தரப்படும். பாகுபாடின்றி அனைவருக்கும் அவை கிடைக்கும்” என்று கூறினார்.

Next Story

“பிரதமர் மோடி முதலில் கண்ணாடியில் தன்னை பார்க்க வேண்டும்” - மம்தா கடும் தாக்கு

Published on 17/04/2024 | Edited on 17/04/2024
Mamata says PM Modi should look at himself in the mirror

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. ஏழு கட்டங்களாக நாடு முழுவதும் நடைபெறும் இந்த மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்தத் தேர்தலை எதிர்கொள்ள நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகளான தி.மு.க, அதிமுக, காங்கிரஸ், பா.ஜ.க, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்கள் தேர்தல் பிரச்சாரங்களைத் தீவிரபடுத்தி வருகின்றன.

அந்த வகையில், 42 மக்களவைத் தொகுதிகள் கொண்ட மேற்கு வங்க மாநிலத்தில், ஏப்ரல் 19, 26 மற்றும் மே 7, 13, 20, 25 மற்றும் ஜூன் 1 ஆகிய தேதிகளில் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. மேலும், பகவான்கோலா மற்றும் பாராநகர் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் மே 7 மற்றும் ஜூன் 1 அன்று இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.

இதற்கிடையில், இந்தியா கூட்டணியில் இடம்பெற்றுள்ள, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ், 42 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது. இது காங்கிரஸ் தரப்பினரிடம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. மேலும், தொகுதி பங்கீடு தொடர்பாக திரிணாமுல் காங்கிரஸுடன் தொடர்ந்து  பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறிய காங்கிரஸ் கட்சிக்கும் மேலும் அதிருப்தி ஏற்படுத்தும் வகையில், திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் 42 வேட்பாளர்களை மம்தா பானர்ஜி அதிரடியாக அறிவித்தார்.

இந்த நிலையில், மக்களவைத் தேர்தல் தேதிகளைத் தேர்தல் ஆணையம் அறிவித்ததால், நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. மேற்கு வங்கத்தில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் - இடதுசாரிகள் கூட்டணி, பா.ஜ.க மற்றும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிகளிடையே மும்முனை போட்டி நிலவுகிறது.

இந்நிலையில், மேற்கு வங்க மாநிலம், ஜல்பைகுரி மாவட்டத்தில் உள்ள மொயினகுரி பகுதியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும், மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி பேசுகையில், “ஊழல் புகார்களை விசாரிக்க பா.ஜ.க அரசு, 300 மத்தியக் குழுக்களை மேற்கு வங்காளத்துக்கு அனுப்பியது. ஆனால் அவர்கள் எதையும் கண்டுபிடிக்கவில்லை. இப்போது, ​​பிரதமர் மோடி வங்காள மக்களுக்குப் பதில் சொல்ல வேண்டும். ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தில் மேற்கு வங்காளத்துக்கு வரவேண்டிய நிதி என்ன ஆனது? ஏழை மக்கள் இத்திட்டத்தின் கீழ் பணிபுரிந்தனர். ஆனால் ஊதியம் வழங்கப்படவில்லை. மேற்கு வங்காளத்தில் நடத்தப்பட்ட விசாரணைகள் குறித்த ஒரு வெள்ளை அறிக்கையை மத்திய அரசு வெளியிட வேண்டும்.

திரிணாமுல் காங்கிரஸ் ஊழல் கட்சி என்று பிரதமர் கூறுகிறார். அவர் முதலில் கண்ணாடி முன்பு நின்று தன்னைப் பார்க்க வேண்டும். அவரது கட்சி கொள்ளையர்களால் நிரம்பியுள்ளது. பா.ஜ.க, மேற்கு வங்காளத்துக்கு எதிரான கட்சி. குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை மேற்கு வங்கத்தில் அனுமதிக்க மாட்டோம். திரிணாமுல் காங்கிரஸ் மட்டுமே வங்காளத்தில் பா.ஜ.கவை எதிர்த்துப் போராடுகிறது. மற்ற இரண்டு எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள், பா.ஜ.கவுடன் இணைந்து செயல்படுகின்றன. நாங்கள் தேசிய அளவில் இந்தியா கூட்டணியில் இருக்கிறோம். ஆனால் வங்காளத்தில் மாநில நலனுக்காகத் தனித்து நிற்கிறோம். நாட்டைக் காப்பாற்ற திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற வேண்டும்” என்று கூறினார்.