Skip to main content

''ராகுல் காந்தியுடன் நான்...'' - ஒரு மாற்றுத்திறனாளியின் மறக்க முடியாத அனுபவம்!#1

Published on 07/03/2021 | Edited on 07/03/2021

 

கட்டுரையாளர் :அண்ணாமலை

 

With Rahul Gandhi I .. The Unforgettable Experience #1

 

கனவுகள் மெய்ப்படும்போது மகிழ்ச்சி. சில நேரங்களில் காணும் கனவை விட நிஜத்தில் அதிகமாக அடைந்துவிடும் போது ஏற்படும் உணர்வை விவரிக்க வார்த்தைகள் தேடுவது மிகக் கடினம். கோவையைச் சேர்ந்த எம்பிஏ பட்டதாரியான என்னுடைய பெயர் அண்ணாமலை. மாற்றுத்திறனாளியாகிய எனக்கு அப்படிப்பட்ட எண்ணமே வராத அளவுக்கு பலரின் அன்பால் சூழப்பட்டவன். பி.காம் படித்து, அதன்பிறகு எம்பிஏ படித்து, கல்லூரியில்வேலைக்கு சேர்ந்தது வரை அனைத்திலும் உள்ளது தாய் தந்தையின் பெரும்பங்கு. குடும்பத்தில் எந்த அரசியல் பின்புலமும் இல்லாவிட்டாலும்இயற்கையாகவே அரசியலில் ஆர்வம்.

 

எந்தவிதமான அப்பாயிண்ட்மெண்ட்டும் இல்லாமல், யாருடைய பரிந்துரையும் இல்லாமல் காங்கிரஸ் கட்சியின் உச்சபட்ச தலைவரான ராகுல் காந்தியை சந்திக்க ஒருவன் கோவையிலிருந்து கிளம்பி திருநெல்வேலி செல்லும் காட்சியைக் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா? அப்படித்தான் நான் சென்றேன். காங்கிரஸ் கட்சிக்கு மட்டுமல்லாமல் இந்தியாவுக்கே நம்பிக்கையாக விளங்கிக் கொண்டிருக்கிற தலைவர் ராகுல் காந்தி மீதான என்னுடைய காதலுக்கு வயது ஐந்து. ஒருமுறை வெளிநாட்டில் ஒரு நேரடி விவாதத்தில் மக்கள் கேள்விக்கு ராகுல் பதில் சொல்லிக்கொண்டிருந்தார். அப்போது ஒருவர் காங்கிரஸ் கட்சி பற்றி கடுமையாக விமர்சனம் செய்துவிட்டு "உங்களுக்கும் பாஜகவுக்கும் என்ன வித்தியாசம்?" என்பது போன்ற கேள்வியைக் கேட்டார். அதற்கு எந்த சலனமும் இல்லாமல் ராகுல் சொன்னார் "நீங்கள் என் முன் அமர்ந்து இப்படி எங்களை விமர்சித்து நேரடியாகக் கேள்வி கேட்க முடிகிறது. நரேந்திர மோடியிடம் இதுபோல் உங்களால் கேட்க முடியாது. அதுதான் காங்கிரசுக்கும் பாஜகவுக்கும் உள்ள வித்தியாசம்" என்று. அந்த நிமிடம் முடிவு செய்தேன் இவர்தான் இந்தியாவுக்கான தலைவர் என்று.

 

ராகுல் அவர்களைப் பார்க்க வேண்டும் என்பது பல வருடக் கனவு. அதிலும் கடந்த 4 ஆண்டுகளாக அவர் எங்கு சென்றாலும், என்ன பேசினாலும் ஒன்றையும் விடாமல் பின்தொடரும் ரசிகனாகவே மாறிப்போனேன். இத்தனைக்கும் நான் காங்கிரஸ் கட்சியில் இல்லை. ஆனால் பாஜக முன்னெடுக்கும் வெறுப்பு அரசியலை அன்பினால் வீழ்த்தக் கூடிய ஒரே மனிதர் ராகுல் காந்தி தான் என்பது என்னுடைய அசைக்க முடியாத நம்பிக்கை. தேர்தல் பரப்புரைக்காக அவர் தமிழகத்திற்கு அடிக்கடி வரத் தொடங்கியவுடன் அவரைப் பார்க்க வேண்டும் என்கிற ஆவலும் அதிகமானது. நான் இருக்கும் கோவைப் பகுதிக்கு அவர் வந்தபோது அவரை சந்திக்க நான் எடுத்த முயற்சி வெற்றி பெறவில்லை. 'இதெல்லாம் நடக்காத காரியம்' என்று மனம் ஒருபுறம் மட்டம் தட்டினாலும் 'முயற்சி செய்' என்று இன்னொரு புறம் ஒரு உந்துதல். போராடியே பழக்கப்பட்ட
வாழ்க்கை அல்லவா?

 

மீண்டும் ஒருமுறை தமிழகத்தின் தென்மாவட்டங்களுக்கு அவர் வருகிறார் என்று தெரிந்தவுடன் எந்தவித குழப்பமும் இல்லாமல் நான் எடுத்த முடிவு "நாம் திருநெல்வேலி செல்வோம்" என்பது. ராகுல் அவர்கள் தூத்துக்குடிக்கு வந்து இறங்கியவுடன் அம்மாவை அழைத்துக்கொண்டு திருநெல்வேலி புறப்பட்டோம், அன்று இரவு அவர் திருநெல்வேலியில் தங்குகிறார் என்று தெரிந்ததால். ஏதோ பக்கத்து வீட்டு அண்ணனைப் பார்க்கச் செல்வது போல நேரடியாக அவர் தங்கவிருக்கும் ஓட்டலுக்குச் சென்று "ராகுல்ஜியைப் பார்க்க வேண்டும்" என்று போய் நின்றதை இப்போது நினைத்துப் பார்த்தால் சிரிப்பாக இருக்கிறது. ஓட்டலுக்கு உள்ளே செல்லக் கூட அனுமதியில்லை. "அப்பாயிண்ட்மெண்ட் இருக்கிறதா? யாராவது சீட்டில் எழுதிக் கொடுத்திருக்கிறார்களா?" என்று போலீசார் கேட்கிறார்கள். எங்களிடம் எதுவும் இல்லை. காரிலிருந்து இறங்கி வீல்சேரில் அமர்ந்து ஓட்டலுக்கு முன் சென்று நின்று கொண்டோம். இசட் பிளஸ் பாதுகாப்பில் இருக்கும் ராகுல் காந்தியின் உயரம் என்ன என்பதை உணர்ந்துகொண்ட தருணம் அது. எந்த வகையிலும் வாய்ப்பில்லை என்றுதெரிந்த பின்னும் அவர் என்னை ஒருமுறை பார்த்துவிட்டால் நிச்சயம் என்னோடு புகைப்படம் எடுத்துக்கொள்வார் என்கிற நம்பிக்கை.

 

With Rahul Gandhi I .. The Unforgettable Experience #1

 

இரவு சுமார் எட்டரை மணி. திருநெல்வேலியில் பொதுக்கூட்டத்தை முடித்துக் கொண்டு ராகுல் அவர்கள் ஓட்டலுக்கு வரும் நேரம் நெருங்கிவிட்டது. காவல்துறையினர் உச்சகட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர். அந்தத் தெருவில் எந்த வாகனமும், மனிதர்களும் நடமாட முடியாத நிலை. "கான்வாய் இங்கே வந்து விட்டது அங்கே வந்து விட்டது" என்று வாக்கி டாக்கி மூலம் தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் வந்துகொண்டிருக்கிறது. இதற்கு நடுவில் எங்கள் மீது காவல்துறையினர் ஒரு கண் வைத்தபடி இருந்தனர். எந்தவித முன் அனுமதியும் இன்றி ராகுல் காந்தியைப் பார்க்க வேண்டும் என்று கோவையில் இருந்து ஒருவன் வந்து நின்றால் சந்தேகம் வராமல் இருக்குமா? சிஐடி முதல் அத்தனை பேரும் எங்களது முழுத் தகவல்களையும் விசாரித்தபடியே இருந்தனர். சுமார் 9 மணியளவில் ராகுல் அவர்களின் கார் மிகப்பெரிய படை சூழ ஓட்டலுக்குள் நுழைந்தது. முன் சீட்டில் சிரித்தபடியே அமர்ந்திருந்த அந்த நபரைப் பார்த்த பிறகு "இவரோடு ஒரு நிமிடமாவது உரையாடி விட மாட்டோமா" என்கிற ஏக்கம் மேலோங்கியது. நிச்சயமாக முடியும் என்கிற வைராக்கியமும் அதிகமானது.

 

அந்த நிமிடத்தில் இருந்து தொடங்கியது என்னுடைய சத்தியாகிரகம். ராகுல் காந்தியின் வாகனத்திற்குப் பின்னால் அடுத்தடுத்து பல தலைவர்கள் வந்து இறங்கினர். திருநாவுக்கரசர் தொடங்கி தனுஷ்கோடி ஆதித்தன் அவர்கள் வரை அந்த வழியாகச் சென்ற அனைவரிடமும் என்னுடைய முழு விவரத்தைக் கூறி ராகுல் அவர்கள் எனக்கு மிக விருப்பமான தலைவர் என்பதைக் கூறி அவரிடம் புகைப்படம் எடுக்க ஒரே ஒரு வாய்ப்பு வாங்கித் தருமாறு கேட்டேன். அனைவரும் உள்ளே சென்று சொல்லுவதாக சொல்லிவிட்டுச் சென்றனர். பகல் முழுவதும் பரப்புரையில் ஈடுபட்டு களைப்பாக இருக்கும் ராகுல் அவர்களை அப்போது சந்திப்பது இயலாத காரியம் என்பதே நிதர்சனம். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த பத்திரிகையாளர் தியாகச் செம்மல் அவர்களை அடையாளம் கண்டுகொண்டு அவரிடம் சென்று என்னைப் பற்றியும் என்னுடைய நோக்கம் பற்றியும் எடுத்துக் கூறினேன். உடனடியாக அவர் தன்னுடன் வந்திருந்த திருநெல்வேலி செய்தியாளர் சுடலைகுமார் அவர்களிடம் என்னைப் பற்றியும், நான் ராகுல் அவர்களை சந்திப்பதற்காக 5 மணி நேரமாக ஓட்டலுக்கு வெளியே காத்திருப்பது பற்றியும் ராகுல் அவர்களை மென்ஷன் செய்து ட்விட்டரில் ஒரு ட்வீட் போடச் சொன்னார். அவரும் உடனடியாக என்னுடைய புகைப்படத்தோடு ட்வீட் செய்தார். பத்தாவது நிமிடம் ராகுல் அவர்களின் உதவியாளரிடமிருந்து அழைப்பு வந்தது. "நாளை காலை 8 மணிக்கு உங்களுக்கு அப்பாயின்ட்மெண்ட்" என்கிற செய்தியும் வந்தது.

 

மறுநாள் காலையில் 7.20-க்கெல்லாம் ஓட்டல் அமைந்துள்ள பகுதிக்குச் சென்று அதே போல் வெளியே நின்று கொண்டோம். பல்வேறு போராட்டங்களுக்குப் பிறகு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த திரு. மகேந்திரன் அவர்களிடமிருந்து "உள்ளே அழைக்கிறார்கள்" என்கிற அழைப்பு வந்தது. திரு. மகேந்திரன் அவர்களிடம் அதற்கு முன்பே நான் ராகுல் அவர்களை சந்திப்பதற்கு உதவுமாறு கேட்டிருந்தேன். இந்த முறை அவர் எனக்கு உதவினார். உள்ளே சென்று ராகுல் அவர்களின் கார் நிற்கும் பகுதிக்கு அருகில் நின்றோம். அதற்குள் காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவர்கள் பலர் ஓட்டலுக்குள் வரத் தொடங்கினர். தொலைக்காட்சியில் மட்டுமே பார்த்த முகங்களை முதல் முறையாக நேரில் பார்த்தேன். என்னுடைய கனவுக்கான தருணம் நெருங்கிவிட்டதை உணர்ந்தேன். அவரது அறையில் இருந்து வெளியே வந்த ராகுல் காந்தி நேராகக் காரில் ஏறுவார் என்று அனைவரும் எதிர்பார்த்தபோது வீல்சேரில் அமர்ந்திருந்த என்னைக் கண்டவுடன் நேராக என்னிடம் வந்துவிட்டார். ஒட்டுமொத்த கேமராக்களும் எங்களைப் படமெடுக்க ஆரம்பித்தன. என்னுடைய நலம் விசாரித்த அவரை நானும் நலம் விசாரித்துவிட்டு "உங்களைப் பார்க்க வேண்டும் என்பது என்னுடைய 5 வருடக் கனவு. நேற்று இந்த இடத்தில் உங்களை சந்திப்பதற்காக 5 மணி நேரம் காத்திருந்து விட்டு சந்திக்க முடியாமல் திரும்பினேன். உங்களிடம் பகிர்ந்துகொள்ள என்னிடம் நிறைய செய்திகள் இருக்கிறது. உங்களோடு நான் பயணம் செய்ய முடியுமா?" என்றேன். அதற்கு ராகுல் அவர்கள் "இவர் நம்மோடு பயணம் செய்ய விரும்புகிறார்" என்று அவர் அருகில் நின்ற அதிகாரியிடம் கூறினார். பின்பு அவரே "இப்போது நான் பரப்புரையின் இடையில் இருப்பதால் பயணம் செய்வது கடினம். ஆனால் நிச்சயமாக அதற்கு ஒரு ஏற்பாடு செய்கிறேன்" என்று கூறிவிட்டு, என்னுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு, கல்லூரி நிகழ்ச்சிக்கு நேரமாகி விட்டதால் கிளம்பினார்.  

 

With Rahul Gandhi I .. The Unforgettable Experience #1

 

இதற்கு நடுவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கரூர் எம்.பி ஜோதிமணி அவர்கள் என்னைப் பாராட்டி நீண்ட நேரம் என்னிடமும், என்னுடைய அம்மாவிடமும் பேசினார். ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்கிற எந்தவித ஆடம்பரமும் இல்லாமல், ஈகோவும் இல்லாமல் அவர் பழகிய விதம் கண்டு மிகவும் ஆச்சரியப்பட்டேன். எந்த முன் அனுமதியும் இன்றி கோவையில் இருந்து வந்து ராகுல் அவர்களுடன் புகைப்படம் எடுத்து விட்டோம், சில நிமிடங்கள் பேசிவிட்டோம் என்கிற மனநிறைவில் திருநெல்வேலியில் இருந்து கிளம்ப ஆயத்தமானோம். ஒரு உணவகத்தில் காலை உணவை முடித்துவிட்டு ஊருக்குக் கிளம்பத் தயாராக இருந்தபோது திரு. மகேந்திரன் அவர்களிடமிருந்து அழைப்பு வந்தது. "நேராக ஆலங்குளம் பகுதியில் உள்ள ஒரு கல்யாண மண்டபத்திற்கு சென்று விடுங்கள். இன்று மதியம் 1.30 மணிக்கு ராகுல் காந்தி அவர்கள் மதிய உணவுக்காக அங்கு வரும்போது உங்களை மீண்டும் சந்திக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்" என்றார். அந்த நிமிடத்தில் என்னுடைய மனநிலை எப்படி இருந்திருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். "உங்களோடு சில நிமிடங்கள் பேச வேண்டும்" என்று காலையில் நான் சொன்னதை நினைவில் வைத்துக்கொண்டு என்னை மதியம் வரச் சொல்லியிருக்கிறார் என்றால் ராகுல்காந்தி எவ்வளவு பெரிய மனிதராக இருக்க வேண்டும்?

 

ராகுல் எதற்காக எங்களை அந்த கல்யாணமண்டபத்திற்கு வரச்சொன்னார், என்ன பேசினார் என அடுத்தப் பகுதியில் வாசியுங்கள்...

 

''நாளை முதல் நடக்கமுடியாது என்று சொன்னால்...'' மனம்விட்டு பேசிய ராகுல் #2

 

Next Story

“யாத்திரைக்கு எதிராக பொய் பிரச்சாரங்கள் பரப்பப்பட்டன” - ராகுல் காந்தி 

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
“False campaigns are rampant on against Yatra” – Rahul Gandhi

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை கடந்த ஜனவரி 16 ஆம் தேதி மணிப்பூரில் துவங்கினார். இந்த யாத்திரை மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் வழியாக நடைபெற்றது. இதனையடுத்து மும்பை தாதரில் உள்ள அம்பேத்கர் நினைவிடமான சைத்ய பூமியில் இன்று (17.03.2024) நிறைவு செய்யப்பட்டது. இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த நிறைவு விழாவில் காங்கிரஸ் கட்சியின் அழைப்பின் பேரில் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். அதன்படி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினும் இந்த நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

இதனையொட்டி ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் இந்தியா கூட்டணியின் மற்ற தலைவர்கள் மும்பை சிவாஜி பூங்காவில் உள்ள பாலாசாகேப் தாக்கரேவுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும் சத்ரபதி சிவாஜியின் நினைவிடத்திலும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில், “உத்தரப் பிரதேசத்தில் மார்ச் 20 முதல் வேட்புமனு தாக்கல் செய்யும் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது, இதன் காரணமாக நான் பாரத் ஜோடோ நியாய யாத்திரையின் நிறைவு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாது” என்று கூறப்பட்டிருந்தது.

“False campaigns are rampant on against Yatra” – Rahul Gandhi

இந்நிலையில் இந்த பொதுக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசுகையில், “யாத்திரையின் போது அனைத்து தரப்பு மக்களின் பிரச்சனைகளையும் அறிந்து கொண்டேன். இந்த யாத்திரை பயணத்தில் பார்த்த அனைத்தையும் ஒரே மேடையில் பேசிவிட முடியாது. இந்த யாத்திரையை முடக்க மத்திய அரசு சார்பில் அனைத்து துறைகளும் முடுக்கி விடப்பட்டன. இந்த யாத்திரைக்கு எதிராக சமூக ஊடகங்களில் பொய் பிரச்சாரங்கள் பரப்பப்பட்டன. நாம் ஒரு அரசியல் கட்சிகளுக்கு எதிராகத்தான் போராடுகிறோம் என்கிறார்கள். அது உண்மை அல்ல. இந்து தர்மத்தில் அதிகார மையம் என்ற வார்த்தை உண்டு. நாங்கள் அதற்கு எதிராகத் தான் போராடுகிறோம். அது என்ன அதிகார மையம் என்பது தான் கேள்வி. மணிப்பூரில் மோதலை ஏற்படுத்தியது அந்த அதிகார மையம் தான். அதுதான் நம் நாட்டையும் சீர் குலைக்க முயற்சிக்கிறது. பா.ஜ.க.வால் இந்தியாவில் எந்தவொரு இடத்திலும் சர்வதேச விமான நிலையம் அமைக்க முடியவில்லை. ஆனால் ஒரு திருமணத்துக்காக பத்தே நாட்களில் சர்வதேச விமான நிலையத்தை உருவாக்கினார்கள்” எனப் பேசினார்.

முன்னதாக இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகையில், “இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை வெற்றிகரமாக நிறைவு செய்த ராகுல் காந்திக்கு எனது வாழ்த்துகள். மும்பையை அடைந்துள்ள இந்தியா கூட்டணி விரைவில் டெல்லியை அடையும். நாடாளுமன்ற மக்களவை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டாலும், அவர் உச்சநீதிமன்றம் வரை சென்று வென்றார். மக்களை பிரித்தாளும் பா.ஜ.க.வை விரைவில் ஆட்சியில் இருந்து அகற்றுவோம். பா.ஜ.க.வின் பிரித்தாளும் சூழ்ச்சி, பொய் பிரச்சாரம் ஆகியவற்றை இந்தியா கூட்டணி விரைவில் முறியடிக்கும்.

“False campaigns are rampant on against Yatra” – Rahul Gandhi

இந்தியா கூட்டணியால் அச்சமடைந்துள்ள பிரதமர் மோடி, இந்த கூட்டணிக்கு எதிராக அவதூறு பிரச்சாரம் செய்தார். தேர்தல் பத்திரங்கள் மூலம் பா.ஜ.க.வின் ஊழல் முகம் அம்பலமாகியுள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் மட்டும் பா.ஜ.க. ரூ. 8 ஆயிரத்து 250 கோடியை குவித்துள்ளது. இந்தியா கூட்டணியின் ஒரே இலக்கு பா.ஜ.க.வை தோற்கடிப்பது தான். பா.ஜ.க.வினால் இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் உள்ளது” எனத் தெரிவித்திருந்தார். 

Next Story

கண்ணீர் மல்க ஆதங்கப்பட்ட பட்டியலின பெண்; ராகுல் காந்தி செய்த நெகிழ்ச்சி சம்பவம்!

Published on 13/03/2024 | Edited on 13/03/2024
Rahul Gandhi's resilience incident for Tearful Scheduled Women

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 7 ஆம் தேதி, 'இந்திய ஒற்றுமைப் பயணம்' என்ற நடைப்பயணத்தை கன்னியாகுமரியிலிருந்து தொடங்கி ஸ்ரீநகர் வரை 3,750 கிலோமீட்டர் கடந்து முடித்தார். இதனைத் தொடர்ந்து, இந்திய ஒற்றுமைப் பயணத்தில் இரண்டாம் கட்ட பயணத்திற்கு ‘பாரத் நீதி யாத்திரை’ எனப் பெயரிடப்பட்டு, கடந்த 14ம் தேதி மணிப்பூரில் இருந்து துவங்கினார். இந்த நடைப்பயணம் மார்ச் 20 வரை மேற்கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. மணிப்பூரில் துவங்கிய இந்தப் பயணம் மும்பையில் முடிகிறது. 

பல்வேறு மாநிலங்கள் வழியாக ராகுல் காந்தியின் யாத்திரை தற்போது மத்திய பிரதேசத்திற்கு நுழைந்துள்ளது. மத்திய பிரதேசம் மாநிலம், புந்தேல்கண்டி பகுதிக்கு சென்ற ராகுல் காந்தி, அங்குள்ள பட்டியலின பெண்களிடம் உரையாடினார். அது தொடர்பான வீடியோவை ராகுல் காந்தி பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில், பட்டியலின பெண் ஒருவர், ‘எங்கள் பிரச்சனைகளை நீங்கள் தான் தீர்க்க வேண்டும். செருப்பு அணிந்து நாங்கள் கிராமத்திற்கு நுழைந்தால் எங்களை கெட்ட சகுணம் என கூறுவார்கள். செருப்பு அணிந்து ஏன் எங்கள் கிராமத்திற்குள் நுழைகிறீர்கள்? என கேட்பார்கள். தண்ணீர் இறைக்க கிணற்றுக்குள் சென்றால், மணிக்கணக்கில் காத்திருக்கச் சொல்வார்கள். தூரமாகச் சென்று உட்காரு என துரத்துவார்கள். எங்களை தண்ணீர் கூட எடுக்க விடாமல் தடுக்கிறார்கள்’ என்று கூறிய உடனே, ‘யார் உங்களை இப்படிச் செய்கிறார்கள்?’ என ராகுல் காந்தி அவரிடம் கேள்வி கேட்டார். அதற்கு பதிலளித்த அந்த பெண், ‘உயர்சாதியைச் சேர்ந்த மக்கள்தான். பிராமணர்கள், தாக்கூர், அகிர் சமூகத்தினர். எங்கு சென்றாலும் எங்களை தடுப்பார்கள். 

Rahul Gandhi's resilience incident for Tearful Scheduled Women

திருமணத்திற்கு அழைப்பார்கள். ஆனால், குப்பை தொட்டி அருகே எங்களை அமரச் சொல்வார்கள். இல்லையென்றால், கால்வாய் அருகே அமர வைப்பார்கள். சேரில் அமர்ந்து சாப்பிட்டால் எங்களை அங்கிருந்து விரட்டி அடிப்பார்கள். எப்படி நாங்கள் சாப்பிடுவது?. எங்கள் இதயம் முழுவதும் துக்கம் தான் நிறைந்துள்ளது. இந்த வலிகளை எல்லாம் நாங்கள் தாங்கிக்கொண்டோம். ஆனால், எங்கள் குழந்தைகளால் தாங்க முடியாது. எல்லா திசைகளிலும் எங்களுக்கு பிரச்சனை உள்ளது. இது சுதந்திர நாடு எனச் சொல்கிறார்கள். ஆனால், இன்னும் நாங்கள் மோசமான நிலையில் தான் உள்ளோம். அனைத்து வகையிலும், மிகவும் சோகமான வாழ்க்கையை வாழ்ந்து வருகிறோம். நீங்கள் என்னை செருப்பு அணிய அனுமதித்தால் அதை அணிவேன். இல்லையென்றால் கையிலேயே வைத்திருக்கிறேன்’ என்ற கூறி தனது செருப்பை கையிலேயே வைத்திருந்தார்.

Rahul Gandhi's resilience incident for Tearful Scheduled Women

உடனடியாக ராகுல் காந்தி, அந்த பெண் கையில் வைத்துக்கொண்டிருந்த செருப்பை வாங்கி, ‘நீங்கள் அணிந்துக்கொள்ளுங்கள்’ என்று கூறி அந்த பெண்ணுக்கு செருப்பை போட்டுவிட்டார். இதனை கண்ட அங்கிருந்த மற்ற பெண்கள், கைகளை தட்டி வரவேற்றனர். இச்சம்பவம் பலரையும் நெகிழ்ச்சியடைய செய்திருக்கிறது.