Skip to main content

“நீங்க எங்க வீட்டுப் பொண்ணு!” - கத்தார் தமிழர்களின் அன்பில் திளைத்த கோமதி!

Published on 27/04/2019 | Edited on 27/04/2019

நம் நாட்டில் எந்தத் திறமையாளராக இருந்தாலும், தானே முட்டிமோதி வெற்றி கண்ட பிறகே உலக வெளிச்சத்தை அடையமுடியும் என்கிற சூழல் இருக்கிறது. அதற்கு சமீபத்திய உதாரணம் தடகள வீராங்கனை கோமதி மாரிமுத்து. 

 

Gomathi


 


கத்தார் நாட்டில் தோஹாவில் நடைபெற்ற 23-ஆவது ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், மகளிர் 800-மீட்டர் ஓட்டப்பந்தயப் பிரிவில் தங்கம் வென்றிருக்கிறார் கோமதி மாரிமுத்து. இதுவரை இந்தியாவில் இப்படியொரு சாதனையை யாரும் நிகழ்த்தி இருக்காத நிலையில், 30 வயது கோமதி பல்வேறு இன்னல்களைக் கடந்து இந்த புகழை இந்தியாவிற்குப் பெற்றுத் தந்திருக்கிறார். இருந்தபோதிலும், இந்தியாவைச் சேர்ந்த போட்டியாளர்களோ, மற்ற யாருமோ ஓடிச்சென்று வெற்றி எல்லையைத் தொட்டிருக்கும் கோமதியிடம் கைக்குலுக்கவோ, கட்டியணைக்கவோ, கொண்டாடித் தீர்க்கவோ களத்திற்குச் செல்லவில்லை என்பது வருத்தத்திற்குரிய ஒன்று.
 

ஆனால், கத்தார் வாழ் தமிழர்கள் கோமதியை அவ்வளவு தனிமையில் விட்டு விடவில்லை. கோமதி தங்கியிருந்த ஓட்டலில் அவரை வரவேற்பதற்காகவே ஒரு தனிஅறை புக் செய்து காத்திருந்திருந்தது பலரையும் வியப்படையச் செய்தது. அவர்களைக் கண்டு ஆச்சர்யத்தில் ஆழ்ந்துவிட்ட கோமதி, கண்கலங்கி நின்றிருக்கிறார். கத்தாருக்கான இந்தியத் தூதர் பி.குமரன் தங்கம் வென்ற கோமதி, கேரளாவைச் சேர்ந்த சித்ரா ஆகியோருக்கு பரிசு வழங்கி கவுரவித்தார்.
 

Gomathi
கோமதிக்கு பரிசு வழங்கும் இந்திய தூதர் பி.குமரன்


ரஜினி மக்கள் மன்றத்தின் சார்பில் தங்கக் காசு ஒன்றை கோமதிக்கு பரிசாகத் தந்திருக்கிறார்கள். அங்கே வாழும் தமிழர்கள் சிலர் இந்திய நிர்வாகிகளின் அனுமதி பெற்று கோமதியைத் தங்கள் வீட்டிற்கு அழைத்துச்சென்று சொந்த மகளைப் போல கவனித்து விருந்துவைத்து உபசரித்திருக்கின்றனர். சிலர் கொடுத்த அன்பளிப்புகள் மட்டுமே 30 கிலோ அளவுக்கு, அன்பின் சுமையாக நிறைந்திருக்கிறது. கோமதியின் பொருளாதாரச் சூழலை அறிந்துகொண்டும், மேலும் பல சாதனைகளை அவர் படைக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் பலர் அவரது வங்கிக் கணக்கைக் கேட்டபோது, பெருந்தன்மையாக மறுத்திருக்கிறார் கோமதி. தமிழகத்திலும் பலர் அவருக்கு உதவ முன்வருகிறார்கள்.
 

இந்தியா திரும்பிய கோமதி தமிழகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது, பயிற்சிக் காலங்களில் தான் அனுபவித்த துயரங்களை உருக்கமாக பகிர்ந்து கொண்டார். “சாப்பாட்டுகே வழியில்லாம ரொம்ப கஷ்டப்பட்ட நாட்களில்கூட பயிற்சியைக் கைவிடத் தோணாது. இருந்தும் ரெண்டு வருஷம் வறுமையின் காரணமா பயிற்சி எடுக்க முடியாம போச்சு. ஒருவேளை நல்ல பயிற்சி எடுத்திருந்தா இதைவிட நல்ல ரெக்கார்டு வச்சிருப்பேன். இந்த நேரத்துல என் கடவுளா நினைக்கிற அப்பா என்கூட இல்லாதது வருத்தமா இருக்கு. மாட்டுக்கு வைச்சிருக்க சாப்பாட்டைச் சாப்பிட்டு, என் பயிற்சிக்காக நல்ல சாப்பாடு போட்டாரு என் அப்பா” என கண்கலங்கினார். 
 

“என்னைப் போல பயிற்சிக்காக உதவி கிடைக்காம பலர் இருக்காங்க. பலர் விளையாட்டையே விட்டுட்டு போயிட்டாங்க. இனிமேல் அப்படி நடந்துவிடக் கூடாது. எனக்கு உதவி கெடைக்கலேன்னாலும் பரவாயில்ல. என்னைப்போல திறமையுள்ள பலருக்கும் தமிழக அரசு உதவி செய்தால், நிறைய சாதனைகள் படைக்க முடியும். இந்திய அரசு கூட இந்தப் போட்டிக்காக எனக்கு உதவல. இனிமே உதவி கெடைக்காட்டியும் பரவாயில்ல. கடுமையா பயிற்சி எடுத்து ஒலிம்பிக் மெடல் அடிக்கிறதுதான் என்னோட லட்சியம்” என்று உறுதியாகக் கூறுகிறார் தங்க மங்கை கோமதி மாரிமுத்து. 
 

விடாப்பிடியான தன்னம்பிக்கையும், வறுமையிலும் ஜெயித்துவிட வேண்டும் என்ற உறுதியும் மட்டுமே கோமதியை உலகமே கொண்டாடும் இடத்திற்குக் கொண்டு சென்றிருக்கிறது. மத்திய, மாநில அரசுகள் தோள் கொடுத்திருந்தால் அதை இன்னும் சுலபமாக்கி இருக்கலாம். 
 

Next Story

'தண்ணிக்காக நாங்க எங்கே போவோம்'-காலி குடத்துடன் மக்கள் போராட்டம்

Published on 21/04/2024 | Edited on 21/04/2024
'Where shall we go for water'-people protest with empty jugs

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் பகுதியில் குடிநீர் வராததால் பொதுமக்கள் காலி குடங்களுடன் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் வேப்பூர் ஒன்றியத்தில் உள்ள கீரனூர் கிராம மக்கள் இரண்டு வருடமாகவே தண்ணீர் வரவில்லை என குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். 'கடந்த ஆறு மாதமாக தண்ணீர் இல்லாமல் அவதிப்படுவதாகவும் தெரிவித்தனர். ஒரு குடும்பத்திற்கு இரண்டு குடம் தண்ணீர் மட்டும் தான் கிடைக்கிறது. எங்கள் ஊரில் மின்சார வசதி இல்லை, ரோடு வசதி இல்லை இது தொடர்பாக பஞ்சாயத்தில் உள்ளவர்கள் எந்த நடவடிக்கையும் எடுக்க மாட்டேன் என்கிறார்கள். நாங்கள் என்ன செய்வது. தண்ணிக்காக நாங்கள் எங்கே போவோம்' என காலி  குடங்களுடன் சாலையில் நின்றபடி தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

Next Story

'தேர்தலை புறக்கணிக்கிறோம்'-போராட்டத்தில் இறங்கிய கிராம மக்கள்

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
'We are boycotting the election'-Village people on strike

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி, முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழகத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கனவே அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அதே சமயம் தமிழக அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிரச்சாரங்களைத் தொடங்கியுள்ளன.

இந்நிலையில்  சிதம்பரம் அருகே தேர்தலைப் புறக்கணிப்பதாக கிராம மக்கள் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டம், புவனகிரி வட்டம், தீர்த்தாம்பாளையம் கிராமத்தில் 6500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வாழ்ந்து வருகின்றனர். தீர்த்தாம்பாளையத்தில் இருந்து பு.முட்லூர் வந்து சேர 3 கிலோ மீட்டர் தொலைவு தூரம் உள்ளது. இதனால் விழுப்புரம்-நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலை நான்கு வழிச்சாலை பணி நடைபெற்று வருகிறது. இதனால் சுமார் 300 ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வந்த பொதுமக்களின் சாலையை மறித்து, மாற்றி அமைத்து மேலும் 1.6 கிலோ மீட்டர் அதிகரித்து 4.6 கிலோ மீட்டர் தூரத்தில் மாற்றுப் பாதையை அமைத்து தருவதால் ஊர் பொதுமக்கள் அடைகிறார்கள். எனவே தீர்த்தாம் பாளையம் பகுதியில் சுரங்க பாதை (சப்வே) அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து பேராடி வருகின்றனர்.

இந்நிலையில் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததைக் கண்டித்தும், செவிமடுக்காத அரசியல்வாதிகளையும், அவர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தலையும் முற்றிலும் புறக்கணிப்பதாக அறிவித்து பதாகைகள் வைத்துள்ளனர். மேலும் ஞாயிற்றுக்கிழமை அன்று கிராம மக்கள் பதாகை மற்றும் கருப்பு கொடியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.