Skip to main content

கனவு மெய்ப்படும்.. இந்தி பள்ளி பாடபுத்தகத்தில் தமிழ் மாணவியின் சாதனை!  

Published on 06/07/2022 | Edited on 06/07/2022

 

Puthukottai college student Jayalakashmi's Lesson

 

புதுக்கோட்டை மாவட்டம், ஆதனக்கோட்டை கிராமத்தைச் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவி ஜெயலெட்சுமி. இவர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இணைய வழி போட்டித் தேர்வு மூலம் நாசாவுக்கு செல்ல தேர்வாகி இருந்தார். ஆனால், அமெரிக்கா செல்ல பணமில்லை. இதையறிந்து ஏழை மாணவிக்கு உதவ முன்வந்த பலரும் உதவிக்கரம் நீட்டினார்கள். அதே போல கிராமலாயா என்ற தொண்டு நிறுவனமும் மாணவிக்கு உதவிகள் செய்ய முன்வந்த போது தனக்கு போதிய உதவிகள் கிடைத்துவிட்டதாக ஜெயலெட்சுமி சொல்ல, அப்படியானால் உங்கள் வீட்டில் கழிவறை இருக்கா இல்லை என்றால் கிராமாலாயா கட்டித்தரும் என்றனர். 

 

இதைக் கேட்ட பள்ளி மாணவி ஜெயலெட்சுமி, “என் வீட்டில் மட்டுமல்ல எங்க ஊரிலேயே யார் வீட்டிலேயும் கழிவறை இல்லை. அதனால் என்னைப் போன்ற பெண் குழந்தைகள் ரொம்பவே அவதிப்படுகிறோம். 2 கி.மீ தள்ளி இருக்கிற குளத்துக்கு போறதுக்குள்ள டாஸ்மாக் கடைகளை கடந்து போகனும். இதுக்கு பயந்தே விடியறதுக்குள்ள போகனும் அப்பவும் அச்சமாக இருக்கும். விடிஞ்ச பிறகு 'வயசுப் பொண்ணுங்க வலியோட கஷ்டப்படுறாங்க' அதனால எங்க ஊருக்கு எல்லாருக்கும் கழிவறை கட்டித் தரமுடியுமா?” என்று கேட்டார்.

 

Puthukottai college student Jayalakashmi's Lesson

 

அசந்து போன கிராமாலயா நிர்வாகிகள் 'உன் ஒருவருக்கு கிடைப்பதை ஊருக்கே பகிர்ந்து கொடுக்கும் பறந்த மனதை பாராட்டுகிறோம்' என்று சொன்னதோடு ஊருக்கே கழிவறைகள் கட்ட ஒத்துக் கொண்டனர். தொடர்ந்து ஒவ்வொரு வீடாக சென்று கழிவறைகளின் அவசியம் குறித்து மாணவியும் கிராமாலாயா நிர்வாகிகளும் எடுத்துக் கூறி 126 கழிவறைகளை கட்டியுள்ளனர். ஆனால், மாணவியின் கனவான நாசா போகும் திட்டம் கரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்டுவிட்டது.

 

கிராமத்து மாணவியின் இந்த கழிவறைத் திட்டம் அறிந்து பலரும் பாராட்டி வந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்த தற்போதைய முதல்வரும் அப்போதைய எதிர்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் மாணவிக்கு நினைவுப் பரிசு வழங்கி பாராட்டினார். அதே போல சுற்றுப் பயணம் வந்த திமுக மகளிரணி மாநிலச் செயலாளர் கனிமொழி எம்.பி., மாணவி ஜெயலெட்சுமியின் ஆதனக்கோட்டை கிராமத்தில் உள்ள வீட்டிற்குச் சென்று பழங்கள், புத்தகங்கள், சால்வை வழங்கி பாராட்டியதுடன் அவருக்கு எப்படி இந்த திட்டம் தோன்றியது என்றெல்லாம் கேட்டறிந்து பாராட்டியதுடன் மாணவியின் வீட்டிற்குள் சென்று சிறிது நேரம் உரையாற்றினார். தொடர்ந்து குடும்பத்தினருடன் இணைந்து மாணவி வீட்டு வாசலில் மரக்கன்று நட்டார். 

 

Puthukottai college student Jayalakashmi's Lesson

 

அப்போது  மாணவி ஜெயலெட்சுமி நம்மிடம், “கனிமொழி எம்.பி, திடீர்னு வீட்டுக்கு வந்தாங்க. 2 கலைஞர் புத்தகம், 2 அப்துல் கலாம் புத்தகங்கள் கொடுத்தாங்க. அப்பறம் கழிவறை கட்டும் யோசனை எப்படி வந்ததுன்னு கேட்டு பாராட்டினாங்க. அவங்க வந்தது நினைவாக மரக்கன்று நட்டோம். ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது” என்றார்.

 

இப்படி ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொருவராலும் பாராட்டப்பட்டு வந்த மாணவி ஜெயலெட்சுமி, தற்போது இளங்கலை வரலாறு கல்லூரி படிப்பை தொடங்கியுள்ளார். இந்நிலையில், மாணவி ஜெயலெட்சுமிக்கு மேலும் ஓர் அங்கீகாரமாக மகாராஷ்ட்ரா மாநில தமிழ் புத்தகத்தில் அவரின் சாதனை இடம் பெற்றுள்ளது. 

 

Puthukottai college student Jayalakashmi's Lesson

 

மகாராஷ்ட்ரா மாநில பள்ளிகளில் ‘தமிழ் பாலபாரதி’ என தமிழ் விருப்ப பாடமாக உள்ளது. அதில் ஏழாம் வகுப்பு மாணவர்களுக்கான பாடத்தில் மாணவி ஜெயலெட்சுமியின் சாதனை ‘கனவு மெய்ப்படும்’ எனும் தலைப்பில் இடம் பெற்றுள்ளது. மாணவி ஜெயலெட்சுமி பற்றிய பாடத்தை ரெ.சிவா என்பவர் எழுதியுள்ளார். தமிழ் மாணவியின் சாதனையை வேற்று மாநிலத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் படிப்பதைக் கண்டு அப்பகுதி மக்கள் மட்டுமின்றி தமிழ்நாட்டு மக்கள் ஏராளமானோர் பெருமையாக நினைக்கின்றனர்.  

 

இது குறித்து மாணவி ஜெயலெட்சுமி நம்மிடம், “என் கனவு மெய்ப்படத் தொடங்கியிருக்கிறது அண்ணா. நாசா போக நினைத்தேன் கரோனா தடை போட்டது. அதனால் மனமுடையவில்லை அந்த நேரம் தான் கிராமாலாயா என்னை தேடி வந்து உதவி செய்தது. கிராமாலாயாவின் உதவி எனக்கு மட்டுமின்றி என் கிராமத்தில் உள்ள 126 வீடுகளுக்கும் கிடைக்க செய்தேன். ஒரு பெண்ணின் வலியும் வேதனையும் எனக்கு தெரியும். அதனால் தான் கழிவறையை கேட்டு பெற்றேன். இன்று எங்கள் கிராம பெண்களிடம் அந்த வேதனை இல்லை என்பதால் மகிழ்ச்சியாக உள்ளது. இதெல்லாம் ஒரு பாடமாக நம் குழந்தைகள் படிக்கிறார்கள் என்னும் போது பெருமையாக உள்ளது. இதற்காக உதவிய அனைவருக்கும் நன்றி. நம்மால் முடியும்; சாதிப்போம் என்ற எண்ணம் இருந்தால் போதும், எந்த தடைகளையும் உடைக்கலாம் அண்ணா” என்றார்.

 

 

Next Story

பட்டப்பகலில் நடந்த படுகொலை; சி.சி.டி.வி கேமராவில் பதிவான பகீர் காட்சி!

Published on 18/03/2024 | Edited on 18/03/2024
Incident in maharashtra hotel and scene recorded on CCTV camera

மகாராஷ்டிரா மாநிலம், புனே - சோலாப்பூர் நெடுஞ்சாலை பகுதியில் பிரபலமான தனியார் ஹோட்டல் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த ஹோட்டலில், நேற்று (17-03-24) மதியம் 4 பேர் கொண்ட நண்பர்கள் டேபிளில் சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது, திடீரென ஹோட்டலில் துப்பாக்கிகளுடன் நுழைந்த இரண்டு மர்ம நபர்கள், டேபிளில் அமர்ந்திருந்த ஒரு நபரை நோக்கி சுட்டனர். தலையில் குண்டு பாய்ந்த அவர், கீழே விழுந்து மயங்கி விழுந்தார். இதனையடுத்து, அங்கு அமர்ந்திருந்த மற்ற நபர்கள் அங்கிருந்து பதறி அடித்து ஓடினர். 

இந்த சம்பவம் அரங்கேறிய சிறிது நேரத்திலேயே, மேலும் 6 பேர் கொண்ட கும்பல் ஹோட்டலில் நுழைந்து, துப்பாக்கி குண்டு பாய்ந்து உயிருக்கு போராடிய நபரை அரிவாளால் சரமாரியாக வெட்டி சாய்த்தனர். அதன் பின்னர், அனைவரும் அங்கிருந்து தப்பி ஓடினர். இதில், பலத்த காயமடைந்த நபர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக, ஹோட்டல் நிர்வாகம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார், உயிரிழந்த நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில், கொலை செய்யப்பட்ட நபர், அவினாஷ் என்பதும், அவர் ரியல் எஸ்டேட் இடைத்தரகர் என்பதும் தெரியவந்தது.

மேலும், தொழில் போட்டி காரணமாக இந்த கொலை நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஹோட்டலில், நடந்த இந்த கொடூர படுகொலை, அங்கு பொறுத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி கேமராக்களில் பதிவாகியிருக்கிறது. அந்த சி.சி.டி.வி காட்சிகளை வைத்து கொலை செய்த நபர்களை பிடிக்க போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். 

Next Story

“பா.ஜ.க.வினால் இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் உள்ளது” - முதல்வர் மு.க.ஸ்டாலின்

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
BJP is the biggest threat to India Chief Minister MK Stalin

காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி எம்.பி. இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை கடந்த ஜனவரி 16 ஆம் தேதி மணிப்பூரில் துவங்கினார். இந்த யாத்திரை மேற்கு வங்கம், உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் வழியாக நடைபெற்றது. இதனையடுத்து மும்பை தாதரில் உள்ள அம்பேத்கர் நினைவிடமான சைத்ய பூமியில் இன்று (17.03.2024) நிறைவு செய்யப்பட்டது. இதற்காக பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த நிறைவு விழாவில் காங்கிரஸ் கட்சியின் அழைப்பின் பேரில் இந்தியா கூட்டணியில் உள்ள கட்சித் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். அதன்படி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் இந்த நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டார்.

இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையை வெற்றிகரமாக நிறைவு செய்த ராகுல் காந்திக்கு எனது வாழ்த்துகள். மும்பையை அடைந்துள்ள இந்தியா கூட்டணி விரைவில் டெல்லியை அடையும். நாடாளுமன்ற மக்களவை எம்.பி. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டாலும், அவர் உச்சநீதிமன்றம் வரை சென்று வென்றார். மக்களை பிரித்தாளும் பா.ஜ.க.வை விரைவில் ஆட்சியில் இருந்து அகற்றுவோம். பா.ஜ.க.வின் பிரித்தாளும் சூழ்ச்சி, பொய் பிரச்சாரம் ஆகியவற்றை இந்தியா கூட்டணி விரைவில் முறியடிக்கும்.

இந்தியா கூட்டணியால் அச்சமடைந்துள்ள பிரதமர் மோடி, இந்த கூட்டணிக்கு எதிராக அவதூறு பிரச்சாரம் செய்தார். தேர்தல் பத்திரங்கள் மூலம் பா.ஜ.க.வின் ஊழல் முகம் அம்பலமாகியுள்ளது. தேர்தல் பத்திரங்கள் மூலம் மட்டும் பா.ஜ.க. ரூ. 8 ஆயிரத்து 250 கோடியை குவித்துள்ளது. இந்தியா கூட்டணியின் ஒரே இலக்கு பா.ஜ.க.வை தோற்கடிப்பது தான். பா.ஜ.க.வினால் இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல் உள்ளது” எனத் தெரிவித்தார்.

முன்னதாக ராகுல் காந்தி, காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே மற்றும் இந்தியா கூட்டணியின் மற்ற தலைவர்கள் மும்பை சிவாஜி பூங்காவில் உள்ள பாலாசாகேப் தாக்கரேவுக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். மேலும் சத்ரபதி சிவாஜியின் நினைவிடத்திலும் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “உத்தரப் பிரதேசத்தில் மார்ச் 20 முதல் வேட்புமனு தாக்கல் செய்யும் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது, இதன் காரணமாக நான் பாரத் ஜோடோ நியாய யாத்திரையின் நிறைவு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள முடியாது” என்று கூறப்பட்டுள்ளது.