Skip to main content

புதிய புதிய கருவிகளைக் கண்டுபிடித்து அசத்தும் கிராமத்து மாணவர்! - வேலை கொடுத்து அழகுபார்க்கும் ஐஐடி!

Published on 16/04/2021 | Edited on 17/04/2021

 

PUDUKKOTTAI DISTRICT COLLEGE STUDENT JOB OFFER CHENNAI IIT

 

புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் அருகில் உள்ள மிகச் சிறிய கிராமம் வேம்பங்குடி, மேற்கு கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் அடைக்கலம் மகன் சிவசந்தோஷ். 18 வயதுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளது. 10- ஆம் வகுப்பு வரை பள்ளிப் படிப்பை கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்துமுடித்த போது 'ரோபோ' சார்ந்த படிப்புக்கு ஆசைப்பட்டு திருச்சியில் உள்ள ஒரு தனியார் பாலிடெக்னிக்கில் ஒருங்கிணைந்த மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் (மெக்கட்ரானிக்ஸ்) படிப்பைத் தேர்வு செய்து சேர்ந்தார். முதல் வருடம் முடித்த பிறகு இரண்டு மூன்று ஆண்டுகளை புதுக்கோட்டை  அருகில் உள்ள கைக்குறிச்சியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் தொடர்கிறார். இறுதி ஆண்டு மாணவர்.

 

PUDUKKOTTAI DISTRICT COLLEGE STUDENT JOB OFFER CHENNAI IIT

 

தனது வயது, படிப்பைக் கடந்து சாதிக்க வேண்டும் என்ற உந்துதலின் காரணமாக எளிமையாக, மக்களுக்கும் இந்த நாட்டுக்கும் பயனுள்ளதாக பல அரியவகை கருவிகளை உருவாக்கிச் சாதனை படைத்து பலரது பாராட்டுகளையும் பெற்றதோடு பல நிறுவனங்கள் வேலைக்கும் அழைத்துள்ள நிலையில், தற்போது சென்னை ஐஐடி நிறுவனம் சிவசந்தோஷுக்கு வேலை கொடுக்க முன்வந்துள்ளது.

 

PUDUKKOTTAI DISTRICT COLLEGE STUDENT JOB OFFER CHENNAI IIT

 

இந்த நிலையில், மாணவர் சிவசந்தோஷை அவரது வீட்டில் சந்தித்தோம். அப்போது அவர் நம்மிடம் கூறியதாவது, "சிறு வயதில் இருந்தே ரோபோ மேல அதிக பற்றுண்டு. அதனால தான் ஒருங்கிணைந்த மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் (மெக்கட்ரானிக்ஸ்) தேர்வு செய்தேன். தொடர்ந்து கல்லூரி நேரம் போக மற்ற நேரங்களில் இதே படிப்பை முடித்துள்ள எங்க ஊர் அண்ணன் சீனிவாசனுடன் இணைந்து புதிய கருவிகளை உருவாக்கத் திட்டமிட்டேன். முதலில் பேசும் ரோபோவை உருவாக்கி கரோனா விழிப்புணர்வுக்காகப் பயன்படுத்தி இணையத்தில் வெளியிட்டேன்.

 

பலரது பார்வையும் எங்கள் மீது பட்டது. தொடர்ந்து கரோனா தொடங்கிய போது தானியங்கி உடல் வெப்பநிலை அறிந்து கையை நீட்டினால் கிருமிநாசினி தெளிக்கும் இயந்திரத்தை வடிவமைத்து ஒரு திருமண நிகழ்ச்சியில் வைத்தோம். பார்த்தவர்களைக் கவர்ந்தது. அதே நேரத்தில் செல்ஃபோன் மூலம் இயக்கக் கூடிய நகரும் ரோபோவை உருவாக்கி கரோனா வார்டுகளில் யாருக்கு என்ன தேவையோ அதைக் கொண்டு போய் கொடுக்கும் வகையில் செயல்படுத்தினோம். பிறகு இதை உருவாக்கப் பொருளாதார உதவிகளை எங்கள் ஊர் அண்ணன்கள் பார்த்திபன் மற்றும் சரவணன் செய்துகொடுத்து உற்சாகப்படுத்தினார்கள்.

 

PUDUKKOTTAI DISTRICT COLLEGE STUDENT JOB OFFER CHENNAI IIT

 

அதன்பிறகு, திறந்த வெளியில் கண்ணுக்குத் தெரியாமல் சுற்றும் கிருமிகளை அழிக்கும் 'யுவி லைட்' மூலம், கரோனா உள்ளிட்ட கிருமிகளை அழிக்கும் இயந்திரத்தை உருவாக்கினேன். இதையும் இணையம் மூலம் வெளிப்படுத்திய போது வடமாநிலத்தைச் சேர்ந்த ஆன்லைன் (பொருட்கள் விற்பனை செய்யும்) நிறுவனம் வாங்கிச் சென்று இப்போது பல ஆயிரம் இயந்திரங்களை உருவாக்கி உள்ளது.

 

PUDUKKOTTAI DISTRICT COLLEGE STUDENT JOB OFFER CHENNAI IIT

 

அதன் பிறகு வளிமண்டலத்தில் உள்ள தட்பவெப்ப நிலையை அறிய 2.5 செமீ சதுர அளவில் 18 கிராம் எடை கொண்ட சிறிய கருவியை உருவாக்கி அதன் மூலம் தட்ப வெப்பம் அறிந்து பயிர்சாகுபடி செய்வது குறித்த ஆய்வு செய்துள்ளேன். மேலும், விவசாயிகளுக்குப் பயன்தரக்கூடிய சொட்டு நீர் பாசனத்திற்கான கருவியை (சூரிய ஒளியில் இயங்கும்) உருவாக்கினேன். அதேபோல சூரிய ஒளி மூலமே நேரடியாக தண்ணீரை சூடாக்கும் கருவியைக் கண்டுபிடித்தேன். இதை அறிந்த சென்னை ஐஐடி நிறுவனம் என்னை அழைத்துப் பாராட்டி அந்த இயந்திரத்தை வாங்கிக் கொண்டு எனக்கு வேலை தர முன்வந்துள்ளது.

 

PUDUKKOTTAI DISTRICT COLLEGE STUDENT JOB OFFER CHENNAI IIT

 

இதே போல இன்னும் பல உபகரணங்களை உருவாக்குவதும் கிராமப்புற மாணவர்களுக்கு ரோபோ பற்றிய வகுப்புகள் எடுப்பதுமே என் லட்சியம். இப்பவும் பல கல்லூரி பேராசிரியர்களுக்கு இணையவழியில் ரோபோடிக் வகுப்பு நடத்திக் கொண்டிருக்கிறேன்" இவ்வாறு அந்த மாணவர் கூறினார். 

 

கிராமத்து அரசுப் பள்ளி மாணவர்களின் சாதனைகளை அங்கீகாரம் கொடுத்து உற்சாகப்படுத்தினால், இதுபோல இன்னும் பல ஆய்வாளர்களை உருவாக்க முடியும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்கமுடியாது. 


 

 

Next Story

திருநங்கையால் வளர்க்கப்பட்ட முளைப்பாரிகள்! அம்மன் கோயிலுக்கு தூக்கிச் சென்று வழிபட்ட பெண்கள்!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
women who took sprouts raised by transgender woman to Amman Koil and worshipped them

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகில் உள்ளது கல்லாலங்குடி கிராமம். இங்குள்ள பிரசித்தி பெற்ற முத்துமாரியம்மன் கோயில் திருவிழா சித்திரை மாதத்தில் காப்புக்கட்டுதலுடன் தொடங்கி ஒரு வாரத்திற்கு மேல் நடக்கும். இதில் கல்லாலங்குடி, ஆலங்காடு, பள்ளத்திவிடுதி, சூரன்விடுதி, சிக்கப்பட்டி, சம்புரான்பட்டி, கல்லம்பட்டி, ஊத்தப்பட்டி கிராமங்களைச் சேர்ந்தவர்கள் திருவிழாக்களை கொண்டாடுவார்கள். மேலும் சுற்றியுள்ள பல கிராமமக்களும் திருவிழாவில் கலந்து கொள்வார்கள்.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் பகுதி பெண்கள் இணைந்து சித்ரா பவுர்ணமி குழ அமைத்து முளைப்பாரி எடுக்கத் தொடங்கினர். விநாயகர் கோயிலில் இருந்து குறைவானவர்களே முளைப்பாரி தூக்கி வந்து வழிபட்டனர். இந்த நிலையில் தான் கம்மங்காடு உதயா உள்ளிட்ட சில திருநங்கைகள் வந்து கல்லாலங்குடி முத்துமாரியம்மனுக்கு கிராம மக்கள் எல்லோரும் முளைப்பாரி தூக்க வேண்டும் என்று கூறியதுடன் சித்ரா பவுர்ணமி குழு பெண்களுடன் இணைந்து கடந்த ஆண்டு ஒரே மாதிரியான பாத்திரங்களில் விதைகளை தூவி 9 நாட்கள் விரதமிருந்து நூற்றுக்கணக்கான முளைப்பாரிகளை வளர்த்து பெண்களிடம் கொடுத்து ஊர்வலமாக தூக்கிச் சென்று அம்மனை வழிபட்டனர்.

அதே போல இந்த ஆண்டு கடந்த 10 நாட்களுக்கு முன்பு வந்த திருநங்கை உதயா பவுர்ணமி விழாக்குழு மூலம் முளைப்பாரி தூக்குவோரின் பெயர்களை முன்பதிவு செய்து, கோயிலுக்கு அருகில் உள்ள ஒரு சமுதாயக்கூடத்தில் வைத்து சுமார் 400 முளைப்பாரிகளை ஒரே மாதிரியான அலுமினிய பாத்திரத்தில் ஒரே மாதிரியான விதைகளை தூவி, விரதமிருந்து விதை தூவிய பாத்திரத்திற்கு காலை, மாலை என இரு நேரமும் தண்ணீர் தெளித்து, பவுர்ணமி குழுவினர் உதவியுடன் வளர்த்து வந்தார். அனைத்து பாத்திரங்களிலும் ஒரே மாதிரியாக பயிர்கள் வளர்ந்திருந்தது.

செவ்வாய் கிழமை முளைப்பாரித் திருவிழாவிற்கு முன்பதிவு செய்த பெண்கள் ஒரே மாதிரியான சேலையில் வந்தனர். இந்த அழகைக்கான ஆயிரக்கணக்கானோர் வந்திருந்தனர். வளர்ந்திருந்த முளைப்பாரிகளை அலங்கரித்து வைத்து ஒரு குடத்தில் அம்மன் சிலை வைத்து பூ அலங்காரம் செய்து வைத்திருந்த நிலையில் கோயில் பூசாரியிடம் அலங்காரத்தில் இருந்த அம்பாள் குடத்தையும் முளைப்பாரிகளை பெண்கள் தலையிலும் தூக்கி வைத்த உதயா அருளாட்டத்துடன் பூசணிக்காய் உடைக்க முத்துமாரியம்மன் கோயிலில் இருந்து தாரை தப்பட்டை முழக்கத்துடன் புறப்பட்ட ஊர்வலம் சுமார் 5 கி மீ தூரத்திற்கு பல பகுதிகளுக்கும் சென்று மீண்டும் முத்துமாரியம்மன் கோயில் வளாகம் வந்தடைந்தது.

women who took sprouts raised by transgender woman to Amman Koil and worshipped them

அனைத்து முளைப்பாரிகளும் கோயில் வளாகத்தில் இறக்கி வைக்கப்பட்டுள்ள நிலையில் இன்று புதன் கிழமை மாலை 4 மணிக்கு மீண்டும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்து முளைப்பாரியை ஊர்வலமாக தூக்கிச் சென்று அருகில் உள்ள குளத்தில் விடுகின்றனர். ஒவ்வொரு கிராமத்திலும் முளைப்பாரி திருவிழா என்றால் அவரவர் வீடுகளில் நமண்சட்டிகளில் அல்லது வெவ்வேறு பாத்திரங்களில் மண் நிரப்பி நவதானிய விதை தூவி பயிர் வளர்த்து திருவிழா நாளில் தூக்கி வந்து ஊரின் ஓரிடத்தி்ல் ஒன்று கூடி மண்ணடித்திடலைச் சுற்றி வந்து குளங்களில் விட்டுச் செல்வது வழக்கமாக இருக்கும்.

ஆனால் கல்லாலங்குடி முத்துமாரியம்மனுக்கு திருநங்கை விரதமிருந்து ஒரே இடத்தில் நூற்றுக்கணக்கான முளைப்பாரிகளை வளர்த்து கிராம மக்களை அழைத்து தூக்கச் செய்து அம்மனை வழிபடச் செய்கிறார் என்பது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. முளைப்பாரியை சிறப்பாக செய்திருந்த திருநங்கை உதயாவிற்கு விழாக்குழு சார்பில் மரியாதை செய்தனர்.

Next Story

வாழைமரம் தோரணங்களோடு தயாரான மாதிரி வாக்குப் பதிவு மையம்!

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
Voting registration center ready with banana trees

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடுமுழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி(நாளை) தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் பரபரப்புரை பரபரப்புகள் அடங்கியுள்ள நிலையில் ஆங்காங்கே வாக்குச் சாவடிகள் தயாராகிவிட்டது. மாதிரி வாக்குச் சாவடி என்று ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் சில வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.

Voting registration center ready with banana trees

புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள வாக்குச் சாவடியில் ஒரு வாக்குச் சாவடியைத் தேர்வு செய்து மாதிரி வாக்குச் சாவடியாக அமைக்கப்பட்டுள்ளது. வாக்குப் சாவடிக்கு முன்பு வாழை மரம், தோரணங்கள் கட்டி வாசலில் வண்ணக் கோலமிட்டு பூ, பழம் தாம்பூலம் தட்டுடன் இனிப்பு வழங்கி வாக்குப் பதிவுக்கு வரும் வாக்காளர்களை வரவேற்று வாக்குப் பதிவுக்கு அனுப்பும் வண்ணம், வாக்குப் பதிவு மையத்திற்குள் விழா கூடம் போல அலங்காரம் செய்யப்பட்டுள்ளது.

ஏற்பாடுகளை கீரமங்கலம் பேரூராட்சி செயல் அலுவலர் இளவரசி மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் செய்துள்ளனர்.