Skip to main content

அமலாக்கத்துறை காட்டிய ஆதாரம்! வெலவெலத்த டி.டி.வி. தினகரன்! 

Published on 21/04/2022 | Edited on 21/04/2022

 

 

Proof shown by the Enforcement Department!to T.T.V. Dinakaran!

 

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பிளவால், இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டது. அந்தச் சூழலில் சசிகலா அணிக்கு ஆதரவாக இரட்டை இலை சின்னத்தைப் பெற தேர்தல் அதிகாரிகளுக்கு 2 கோடி ரூபாய் லஞ்சம் கொடுக்க முயன்றதாக டெல்லி குற்றவியல் போலீசாரிடம் புகார் கொடுத்தார் தேர்தல் அதிகாரி. இந்த புகாரின் பேரில் பெங்களூரைச் சேர்ந்த இடைத்தரகர் சுகேஷ் சந்திரசேகரையும், அவர் கொடுத்த வாக்குமூலத்தின்படி டி.டி.வி. தினகரனையும் கைது செய்தது டெல்லி போலீஸ், இரண்டு மாத சிறை வாசத்துக்குப் பிறகு ஜாமீனில் விடுதலையானார் தினகரன்.


கிட்டத்தட்ட 5 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் இந்த வழக்கை அமலாக்கத்துறை கையிலெடுக்க, கடந்த 11-ந் தேதி விசாரணைக்கு தினகரன் ஆஜராக, மீண்டும் பரபரப்பு தொற்றிக்கொண்டிருக்கிறது. இதுகுறித்து டெல்லி வட்டாரங்களில் விசாரித்தபோது, ’’பெண் தொழிலதிபர் ஒருவரிடம் 200 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் சுகேஷ் சந்திரசேகரை கைது செய்தனர் டெல்லி பொருளாதார குற்றவியல் போலீசார். பொருளாதார குற்றம் என்பதால் அமலாக்கத்துறையும் கடந்த 4-ந்தேதி சுகேஷ் மீது வழக்குப்பதிவு செய்திருந்தது. அவரிடம் டெல்லி அமலாக்கத்துறை விசாரணை நடத்தியபோது, இரட்டை இலை சின்னம் தொடர்பான லஞ்ச விவகாரமும் விசாரிக்கப்பட்டிருக்கிறது.


அந்த விசாரணையில், சின்னத்தைப் பெற்றுத்தர 50 கோடி ரூபாய் பேரம் பேசப்பட்டு முன்பணமாக 25 கோடி ரூபாயை தினகரன் கொடுத்தார் என்றும், அதை வைத்தே தேர்தல் அதிகாரிக்கு லஞ்சம் கொடுக்க அணுகியதாக சொல்லியிருக்கிறார் சுகேஷ். இதனையடுத்தே, தினகரனுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்ப, ஆஜரானார் தினகரன். அமலாக்கத்துறையின் சிறப்பு இயக்குநர் பிரசாந்த்குமார் ஐ.ஆர்.எஸ். மேற்பார்வையில் அவர் அமைத்த டீம் தினகரனிடம் விசாரணை நடத்தியிருக்கிறது.


விசாரணையில் அதிகாரிகள் கேட்ட பல கேள்விகளுக்கு தெரியாது என்றே பதில் சொல்லியிருக்கிறார் தினகரன். குறிப்பாக, சுகேஷுக்கும் உங்களுக்கும் நட்பு எப்படி உருவானது என அதிகாரிகள் கேட்க, “அவரை நான் பார்த்தது கூட கிடையாது; நட்பு எப்படி உருவாகும்?” என தினகரன் கெத்தாக பதில் சொல்லியிருக்கிறார்.


அப்போது, “நீங்க சொல்ற பதில்கள் உங்களுக்கே எதிராகப்போகவும் வாய்ப்பிருக்கிறது. அதனால எல்லாத்துக்கும் தெரியாதுன்னு சொல்லாதீங்க. உண்மையைச் சொல்லுங்கள்” என்று அதிகாரிகள் சொன்னபோதும், சுகேஷை தெரியாது என்றே தினகரன் திரும்பத் திரும்பச் சொல்ல, கடுப்பான அதிகாரிகள், 5 ஆண்டுகளுக்கு முன்பு அவர் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தியபோது கொடுத்த வாக்குமூலத்தையும், சில புகைப்படங்களையும் தினகரனிடம் காட்டினார்கள். அதில், ஒரு ஹோட்டலில் சுகேஷும் தினகரனும் சந்தித்த சி.சி.டி.வி. காட்சிகள் இருந்தன.


அதைப் பார்த்த தினகரன் வெலவெலத்துப் போயிருக்கிறார். அதன்பிறகு வாய் திறந்த தினகரன், “அந்த ஹோட்டலில் நான் தங்கியிருந்த போது என்னை சந்தித்த அவர், அரசியல் பிரபலங்களையும் அதிகாரிகளையும் தனக்கு தெரியுமென்றும், இரட்டை இலை சின்னத்தை உங்களுக்கு சாதகமாக பெற்றுத்தர என்னால் முடியுமென்றும், ஆனால் கொஞ்சம் செலவாகும் என்றும் சொன்னார். அதில் எனக்கு விருப்பமில்லையென்பதால் மறுத்து விட்டேன். அப்படியிருக்க அந்த நபர் ஏன் மாற்றி மாற்றி பொய் சொல்கிறார்னு தெரியலை. என்னை மாட்டிவிட அரசியல் சதி நடக்கிறது. நான் நிரபராதி” என கெஞ்சியிருக்கிறார்.


“அரசியல் சதியை யார் செய்கிறார்கள்?” என அதிகாரிகள் கேட்க, பதில் சொல்லவில்லை தினகரன். அதேபோல, சென்னையை சேர்ந்த மோகன்ராஜ், கோபிநாத் (சமீபத்தில் தற்கொலை செய்துகொண்டவர்) குறித்த பல கேள்விகளுக்கும் தெரியாது என்றே பதில் சொல்லியிருக்கிறார். கூப்பிடும்போது மீண்டும் விசாரணைக்கு வரவேண்டும் என்கிற எச்சரிக்கையுடன் அனுப்பி வைக்கப்பட்டார் தினகரன். ஆனால், இந்த வழக்கு தொடர்பாக தினகரனுக்கும் சுகேஷுக்குமான தொடர்புகள் அனைத்தையும் சேகரித்து வைத்திருக்கிறது அமலாக்கத்துறை. இதில் எந்த சூழலிலும் அவர் தப்பிக்க முடியாது” என்கின்றன டெல்லி தகவல்கள்.

 

Proof shown by the Enforcement Department!to T.T.V. Dinakaran!

 

தினகரனுக்கு எதிரான விவகாரங்கள் இப்படியிருக்க, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் விவகாரம் தொடர்பான வழக்கில் சசிகலாவுக்கு எதிரான தீர்ப்பு வந்துள்ள நிலையில், அவர் முடங்கிவிடுவார் என எதிர்பார்க்கிறார் எடப்பாடி பழனிச்சாமி. ஆனால், “எனது ஆன்மிக பயணத்தை அரசியல் பயணமாக தொடரப் போகிறேன்; இனிதான் என் அரசியலை எடப்பாடி பார்க்கப்போகிறார்” என்று வெளிப்படையாக பேசத் துவங்கியுள்ளார் சசிகலா.


இந்த நிலையில், எடப்பாடியை பலவீனப்படுத்த அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் 30 பேரை வளைக்கும் திட்டத்தை போட்டுள்ளார் சசிகலா. முதல்கட்டமாக பட்டியலின எம்.எல்.ஏ.க்களை வளைக்கும் நடவடிக்கைகள் துவங்கிவிட்டன. இதனையறிந்துள்ள பா.ஜ.க.வின் தேசிய தலைமை, அ.தி.மு.க.வை உடைத்து அதே 30 எம்.எல்.ஏ.க்களை வளைத்து சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி அந்தஸ்தில் உட்கார திட்டமிட்டுள்ளது. இதனை உணர்ந்து பா.ஜ.க.வின் திட்டத்தை முறியடிக்க ரகசியமாக களத்தில் குதித்துள்ளது தி.மு.க.


ஆக... முக்கோண சிக்கலில் அ.தி.மு.க.வின் 30 எம்.எல்.ஏ.க்கள் இருக்கின்றனர்.
 

சார்ந்த செய்திகள்

Next Story

டி.டி.வி. தினகரனின் வேட்புமனு ஒரு மணி நேரம் நிறுத்திவைப்பு!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TTV Dhinakaran nomination is on hold for an hour

தேனி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்களின் வேட்புமனு பரிசீலனை குறித்த கூட்டம் தேனி ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தேர்தல் நடத்தும் அலுவலர் ஷஜீவனா தலைமையில் அனைத்துக் கட்சியினர் கலந்து கொண்டு நடைபெற்றது.

தேனி நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் 43 பேர் வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளனர். இதில் 33வது எண்ணில் வந்த டி.டி.வி. தினகரனின் வேட்பு மனுவிற்கு திமுக, அதிமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் ஆட்சேபனை தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தேர்தல் ஆணையம் இணையதளத்தில் காலை 11.30 மணி வரை டிடிவி தினகரனின் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்படாததால் அதில் உள்ள விவரங்கள் சரி பார்க்க முடியாததால் அவரின் வேட்புமனுவை நிறுத்தி வைக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்தனர். இதனால் அமமுக கட்சியினர் அதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது.

பின்னர் எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை ஏற்று டிடிவி தினகரன் வேட்பு மனு இணைய தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு அதனை சரிபார்க்க எதிர்க்கட்சிகளுக்கு ஒரு மணி நேரம் கால அவகாசம் கொடுக்கப்படுவதாக தேர்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான ஷஜீவனா தெரிவித்தார். இதனால் அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் பரபரப்பு இருந்து வருகிறது.

Next Story

மரத்தடியில் டி.டி.வி. தினகரனுக்காக காத்திருந்த ஓ.பி.எஸ்‌.!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
OPS waiting for tTV Dinakaran on under the tree

தேனி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன், பா.ஜ.க. கூட்டணியில் உள்ள அ.ம.மு.க. வேட்பாளரான டி.டி.வி. தினகரன், அ.தி.மு.க.வில் நாராயணசாமி, நாம் தமிழக கட்சி சார்பில் மதன் மற்றும் சில கூட்டணி வேட்பாளர்களும், சுயேட்சைகளும் தேர்தல் களத்தில் இருந்தாலும் கூட நான்கு முனை போட்டி தான் இருந்து வருகிறது. இந்த நிலையில் தான் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான இறுதி நாளான இன்று (27.03.2024) டி.டி.வி. தினகரன் வேட்பு மனு தாக்கல் செய்ய மதியம் இரண்டு மணிக்கு மேல் வருவதாக இருந்தது. ஏற்கெனவே ஓ.பி.எஸ்.ஸும் அவரது மகனும் எனக்காக இந்த தொகுதியை விட்டுக் கொடுத்து இருக்கிறார்கள் என்று டி.டி.வி. தினகரன் பிரச்சாரத்தின் போது பேசி இருக்கிறார்.

அதை தொடர்ந்து தான் டி.டி.வி. தினகரன் வேட்பு மனு தாக்கல் செய்வதை பார்த்து வாழ்த்து கூற ஓ.பி.எஸ். முடிவு செய்து, தனது தொகுதியான ராமநாதபுரத்தில் இருந்து மதியம் 01.15 மணிக்கு தேனி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அவருடன் பெரியகுளம் ஒன்றிய செயலாளர் செல்லமுத்து, மாவட்ட செயலாளர் சையது கானும் இருந்தனர். ஆனால் ஓபிஎஸ் கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே உள்ள மரத்தடியிலேயே நின்று கொண்டு அவர்கள் இண்டு பேரிடம் பேசிக்கொண்டு இருந்தார்.

அப்போது ஓ.பி.எஸ் வழக்கத்துக்கு மாறாக அதிமுக கரை வேட்டி இல்லாமல் பாடர் கரை போட்ட வேட்டி கட்டி இருந்தார். உடன் வந்த ஒருவர் ஓ.பி.எஸ்.உட்காருவதற்காக கலெக்டர் அலுவலகத்துக்குள் சென்று ஒருசேர் எடுக்க முயன்றார். அப்பொழுது அங்குள்ள அதிகாரிகளும் தேர்தல் விதிமுறை மீறி வெளியே சேர் கொண்டு போக கூடாது என்று கூறிவிட்டனர். அதைத் தொடர்ந்து தான் ஓ.பி.எஸ்.ஸுடன் அவர்கள் இரண்டு பேரும் தொடர்ந்து 02.14 மணி வரை அதாவது ஒரு மணி நேரம் நின்று கொண்டிருந்தனர். ஆனால், தமிழக முதல்வராக இரண்டு முறை ஓ.பி.எஸ். இருந்தும் கூட அதை எல்லாம் மறந்து விட்டு டி.டி.வி. தினகரன் வருகைக்காக கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே உள்ள மரத்தடி நிழலில் சாதாரணமாக நின்று கொண்டிருந்தார்.

OPS waiting for tTV Dinakaran on under the tree

அதைத்தொடர்ந்து தான் டி.டி.வி. தினகரன் பிரச்சார வேனில் 02.15 மணிக்கு கலெக்டர் அலுவலகத்திற்கு வெளியே வந்த டிடிவியை ஓ.பி.எஸ். வரவேற்று சால்வை அணிவித்தார். ஆனால் டிடிவி தினகரன் ஓ.பி.ஆர். உள்பட சிலர் மாவட்ட தேர்தல் அதிகாரியான கலெக்டரிடம் வேட்பு மனுவைத் தாக்கல் செய்துவிட்டு வந்தனர். அதுவரை ஓ.பி.எஸ். மரத்தடியிலேயே நின்று கொண்டிருப்பதை கண்டு அதன் அருகில் மக்கள் உட்காருவதற்காக இரும்புச் சேர் போட்டு இருப்பதை பார்த்த கட்சிக்காரர்கள் சிலர் அதை எடுத்து வந்து போட்டனர். அதில் ஓ.பி.எஸ். உடன் இரண்டு பேரும் உட்கார்ந்து இருந்தனர். அதன் பின் வந்த டி.டி.வி. தினகரனை மீண்டும் வாழ்த்தினார். அப்பொழுது டி.டி.வி. தினகரன் நீங்களும் வாங்கள் பேட்டி கொடுக்கலாம் என்று கூறி அழைத்துச் சென்றார். ஆனால் டி.டி.வி. மட்டும்தான் பேட்டி கொடுத்தாரே தவிர அதன் அருகிலேயே ஓ.பி.எஸ். நின்று கொண்டே இருந்தார் அதன் பின் பிரச்சாரவேனில் டி.டி.வி. தினகரன்  ஏறும் வரை அருகிலேயே நின்று வழி அனுப்பி விட்டு தான் திரும்பி சென்றார்.