Skip to main content

முதல்வர் வழங்கிய பதவி உயர்வு; சலசலப்பில் தலைமைச் செயலகம்! 

Published on 08/12/2023 | Edited on 08/12/2023
Promotion given by the Chief Minister! Head office in chaos!

அரசு பணியிலிருந்து ஓய்வுபெறும் நாளில் பணி நீட்டிப்பும் பதவி உயர்வும் கொடுக்கப்பட்ட விவகாரம், அரசு அதிகாரிகளிடம் கொந்தளிப்பையும் சர்ச்சைகளையும் ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.

தமிழக சட்டப்பேரவையின் செயலாளராக இருப்பவர் சீனிவாசன். கடந்த எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அ.தி.மு.க. ஆட்சியில் சபாநாயகராக இருந்த தனபாலுக்கு மிக நெருக்கமானவர் இந்த சீனிவாசன். இவரை வைத்து சட்டப்பேரவை செயலகத்தில் நடக்கவேண்டிய பல காரியங்களை எடப்பாடி பழனிச்சாமியும் தனபாலும் நடத்திக்கொண்டனர். இதற்காகவே, சிறப்பு செயலாளர் என்ற நிலையிலிருந்த சீனிவாசனை, பேரவையின் செயலாளராக 2018-ல் பதவி உயர்வளித்து அழகுபார்த்தார் எடப்பாடி பழனிச்சாமி.

அப்படிப்பட்ட அ.தி.மு.க. விசுவாசி சீனிவாசன், நவம்பர் 30-ந் தேதி அரசு பணியிலிருந்து ஓய்வு பெறவிருந்த நிலையில், மூன்று ஆண்டுகால பணி நீட்டிப்பும், முதன்மைச் செயலாளராக பதவி உயர்வும் அவருக்கு வழங்கி கௌரவித்திருக்கிறது தி.மு.க. அரசு. சீனிவாசனின் இந்த பணி நீட்டிப்பும் பதவி உயர்வும்தான் தற்போது பலத்த சர்ச்சைகளை உருவாக்கி வருகின்றன.

Promotion given by the Chief Minister! Head office in chaos!

இந்த பணி நியமன சர்ச்சை, கோட்டையிலுள்ள உயரதிகாரிகளான ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மற்றும் அரசு ஊழியர்கள் மத்தியில் எதிர்மறை விமர்சனங்களை உருவாக்கி வரும் நிலையில், இந்த பணி நியமனத்தை ரத்து செய்ய வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் எழுதியுள்ளனர் தமிழ்நாடு தலைமைச் செயலகம் சங்கத்தினர். 

இதுகுறித்து இச்சங்கத்தின் தலைவர் வெங்கடேசனிடம் பேசியபோது, "அரசு பணியிலிருந்து ஓய்வுபெறும் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். உள்ளிட்ட எந்த ஒரு உயர் பொறுப்புகளில் உள்ள அதிகாரிகளாக இருந்தாலும் பணி நீட்டிப்பு வழங்குவதில்லை என்கிற கொள்கையை கடைப்பிடித்து வருகிறது தி.மு.க. அரசு. அப்படிப்பட்ட நிலையில், சட்டப்பேரவை செயலாளர் சீனிவானுக்கு 3 ஆண்டுகால பணி நீட்டிப்பும், பதவி உயர்வும் கொடுத்திருப்பதுதான் எல்லோருக்கும் அதிர்ச்சி.

அரசு ஊழியர்களின் ஓய்வு வயது 60 ஆக கடந்த எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் உயர்த்தப்பட்ட விவகாரத்தில், பலரின் பதவி உயர்வு பாதிக்கப்பட்டது. புதிய பணியிட நியமனங்களும் பாதிக்கப்பட்டன. அப்படிப்பட்ட சூழலில், சீனிவாசனுக்கு கொடுக்கப்பட்டுள்ள இந்த பணி நீட்டிப்பு, சட்டப்பேரவை செயலக ஊழியர்கள் பலரின் பதவி உயர்வு உரிமைகளை பறித்திருக்கிறது.

பேரவையின் செயலாளராக அ.தி.மு.க ஆட்சியில் சீனிவாசன் நியமிக்கப்பட்டபோது, ‘பேரவைத் தலைவர் (தனபால்) விரும்புகிறார் என்பதற்காக பேரவை விதிகளின் முதுகெலும்பை உடைக்க முடியாது. இதுவரை எந்த ஆட்சியிலும் நடந்திராத வகையில் பணி மூப்பு, கல்வித் தகுதி, பணி அனுபவம் ஆகிய அனைத்து நெறிமுறைகளையும் மீறி சீனிவாசன் நியமிக்கப்பட்டிருக்கிறார்’ என்று அன்றைக்கு கண்டித்தவர் இன்றைய முதல்வர் மு.க.ஸ்டாலின். அந்த சீனிவாசனுக்குத் தான் தி.மு.க. ஆட்சியில் தற்போது பணி நீட்டிப்பு வழங்கப்பட்டிருக்கிறது. அதனைத்தான் ஜீரணிக்க முடியமால் கடும் மன உளைச்சல்களுக்கு ஆளாகியிருக்கிறார்கள் அரசு ஊழியர்கள். மேலும், அ.தி.மு.க. ஆட்சியில் சீனிவாசன் இருந்தபோது விதிகளை மீறி சிறப்பு செயலாளர் மற்றும் செயலாளர் பதவி வழங்கப்பட்டதால் அதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு இப்போதும் நிலுவையில் உள்ள நிலையில், சீனிவாசனுக்கு பணி நீட்டிப்பு வழங்கியது ஆரோக்கியமானதல்ல! இந்த பணி நீட்டிப்பை முதல்வர் ரத்து செய்ய வேண்டும்'' என்கிறார் வெங்கடேசன்.

அரசியல் ரீதியாகவும் சீனிவாசனின் பணி நீட்டிப்பு விவகாரம் விமர்சிக்கப்படும் நிலையில், இதுகுறித்து அறிக்கை கொடுத்துள்ள பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், "ஒருவருக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டுமானால், ஓய்வுபெறும் நிலையில் இருப்பவரின் இடத்தை நிரப்ப தகுதியான ஆட்கள் இல்லையெனில் பணி நீட்டிப்பு கொடுத்து நியாயப்படுத்தலாம். ஆனால், சீனிவாசன் அத்தகைய தனிச்சிறப்பு கொண்டவரல்ல! அவரது இடத்தை நிரப்ப தகுதியானவர்கள் பலர் இருக்கிறார்கள். பேரவை செயலாளராக விதிகளுக்குப் புறம்பாக 2018-ல் சீனிவாசன் நியமிக்கப்பட்ட போதே, கூடுதல் செயலாளர் வசந்திமலர், இணைச் செயலாளர் சுப்பிரமணியன் ஆகியோர் சீனிவாசனை விட கூடுதல் தகுதிகளைப் பெற்றவர்களாக இருந்தனர். இவர்களில் ஒருவரைத்தான் பேரவை செயலாளராக நியமித்திருக்கவேண்டும்.

Promotion given by the Chief Minister! Head office in chaos!

அன்றைக்கு பாதிக்கப்பட்ட வசந்திமலர், சீனிவாசன் ஆகியோர் தற்போது சிறப்பு செயலாளர், கூடுதல் செயலாளர் பதவிகளில் இருக்கின்றனர். இவர்களைத்தவிர, இணைச் செயலாளர் நிலையில் உள்ள 7 பேரில் மூத்தவரான (சீனியர்) சாந்தி என்பவரும் பேரவை செயலாளருக்கு தகுதியானவர். ஆனால், அவர்களையெல்லாம் புறந்தள்ளிவிட்டு, சீனிவாசனுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டிருப்பதால் அவரைவிட கூடுதல் தகுதிகளும் பணி மூப்பும் (சீனியாரிட்டி) கொண்ட வசந்திமலர், சுப்பிரமணியன் ஆகியோரின் செயலாளராகும் வாய்ப்பு சட்டவிரோதமாகப் பறிக்கப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய அநீதியாகும்'' என்கிறார்.

அரசியல்ரீதியாகவும் நிர்வாக ரீதியாகவும் சீனிவாசனின் பணி நீட்டிப்பு கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ள நிலையில், கோட்டையில் மேலும் நாம் விசாரித்த போது, "ஆளும் கட்சியினருக்கு சாதகமாக இயங்கினால் அல்லது முக்கிய அமைச்சர்களை கைக்குள் வைத்துக்கொண்டால் அந்த அதிகாரிகளுக்கு பணி நீட்டிப்பு வழங்குவது தொடர்ச்சியாக நடந்து வருகிறது. கடந்த காலங்களில், பேரவை செயலாளராக இருந்த ராஜாராமன், செல்வராஜ், ஜமாலுதீன் ஆகியோருக்கு இப்படித்தான் பணி நீட்டிப்பு வழங்கினர். இதனால் பலர் பாதிக்கப்பட்டதுடன், பணி நீட்டிப்பு என்கிற விவகாரத்தில் ஆளும் கட்சிமீது கறைபடிந்தது.

இத்தகைய கறை, தி.மு.க. ஆட்சியில் படிந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான், ஓய்வு பெறும் அரசு அதிகாரிகள் எந்த நிலையில் இருந்தாலும் அவர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்குவதில்லை என்கிற முடிவை எடுத்திருந்தார் முதல்வர் ஸ்டாலின். ஆனால், அவர் எடுத்த முடிவை அவரே மாற்றிக்கொள்ளும் வகையில் சீனிவாசனுக்காக முக்கிய அமைச்சர் ஒருவரும், ஐ.ஏ.எஸ். அதிகாரிகளும் இயங்கி சாதித்திருக்கிறார்கள்.

அ.தி.மு.க.வை வீழ்த்தி தி.மு.க. ஆட்சி 2021-ல் அமைந்தபோது, அ.தி.மு.க. விசுவாசிகளாக அதுவும் எடப்பாடியின் விசுவாசிகளாக இருந்த அரசு உயரதிகாரிகள் பலரும் மாற்றப்படுவார்கள் என்கிற எதிர்பார்ப்பு தலைமைச் செயலகத்தில் இருந்தது. அந்த வகையில், எடப்பாடி பழனிச்சாமியின் தீவிர விசுவாசியான சீனிவாசனும் உடனடியாக மாற்றப்படுவார் என சட்டப்பேரவை செயலகமே எதிர்பார்த்தது.

ஆனால், எடப்பாடி பழனிச்சாமியின் விசுவாசிகளாக இல்லாதவர்கள் பலர் மாற்றப்பட்டார்களே தவிர, உண்மையான அ.தி.மு.க. விசுவாசிகளான பலர் மாற்றப்படாததுடன் முன்பை விட வலிமையான துறைகளில் உயர் பதவிகளை கைப்பற்றிக்கொண்டார்கள். இல்லையெனில், எடப்பாடி ஆட்சியின் சுகாதாரத் துறையில் நடந்த பல்வேறு முறைகேடுகளுக்கும் ஊழல்களுக்கும் சூத்திரதாரியான, மு.க.ஸ்டாலினால் கண்டிக்கப்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரியான உமாநாத், முதல்வர் ஸ்டாலினின் செயலாளராக நியமனம் பெற்றிருக்கமுடியுமா?

அந்த வகையில், எடப்பாடியின் விசுவாச ஐ.ஏ.எஸ். அதிகாரிகளான பலரும், தி.மு.க. ஆட்சியில் பசையான துறைகளைக் கைப்பற்றிய அதே டெக்னிக்கை பயன்படுத்தி சீனிவாசனும் தனது பதவியை தக்கவைத்துக் கொண்டார். கடந்த இரண்டரை ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில் மிக பவர்ஃபுல் அதிகாரியாக தற்போது வளர்ந்து நிற்கிறார் எடப்பாடி பழனிச்சாமியின் விசுவாசியான சீனிவாசன். இந்த விவகாரம், நேர்மையான நிர்வாகத்தைத் தர நினைக்கும் முதல்வர் ஸ்டாலினின் ஆட்சிக்கு கெட்டபெயரை உருவாக்கும்'' என்கிறார்கள் சட்டப்பேரவை செயலக அதிகாரிகள்.

இந்த நிலையில், சீனிவாசனுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டிருப்பதை எதிர்த்து நீதிமன்றத்தை அணுக ஆலோசித்து வருகின்றனர் பாதிக்கப்பட்ட அரசு அதிகாரிகள்.

Next Story

முதல்வரிடம் மனு கொடுக்க முயன்ற பாஜக நிர்வாகியால் பரபரப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A BJP executive who tried to petition the Chief Minister stalin

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி உள்ளது. இதன் ஒரு பகுதியாக முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கிடையே தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சியில் 22 ஆம் தேதி திருச்சியில் ஆரம்பித்த தேர்தல் பிரச்சாரத்தை ஏப்ரல் 17 ஆம் தேதி சென்னை நிறைவு செய்திருந்தார்.

இத்தகைய சூழலில் கோடைக்காலத்தையொட்டி ஓய்வெடுப்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (29.04.2024) கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்றார். அதன் பின்னர் அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்கிறார். கொடைக்கானலில் உள்ள தனியார் ஓட்டலில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது குடும்பத்துடன் 5 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கவுள்ளார். அதன்பின்னர் கொடைக்கானலில் இருந்து மே 4 ஆம் தேதி சென்னை திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. 

A BJP executive who tried to petition the Chief Minister stalin

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் கஞ்சாவுடன் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் மனு கொடுக்க வந்த பாஜக ஓபிசி அணியின் செயற்குழு உறுப்பினர் சங்கர பாண்டி என்பவர் வந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட மதுரை காவல் மாநகர காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி கஞ்சாவுடன் மனு கொடுக்க வந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதே சமயம் கொடைக்கானலில் இருந்தே தனது அலுவல் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் மேற்கொள்வார் எனவும் அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடைக்கானல் வருகையையொட்டி சுற்றுலா பயணிகள், சுற்றுலாத்தலங்களுக்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி இன்று முதல் மே 4 ஆம் தேதி வரை கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது; சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 

Next Story

கோடை இளவரசியைக் காணச் சென்ற முதல்வர்!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
The Chief Minister is coming to see the summer princess with sentiment

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கோடை இளவரசியான கொடைக்கானல் பகுதியைக் காண தினசரி ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கிறார்கள்.

இந்த ஆண்டு, வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் அரசியல்வாதிகளும், அரசியல் கட்சித் தலைவர்களும் கோடை இளவரசியான கொடைக்கானலை காண வந்து செல்கிறார்கள். இந்த நிலையில், கோடை வெயிலை தணிக்க தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் மாலத்தீவு செல்வதாக இருந்தது. ஆனால், திடீரென அதை ரத்து செய்துவிட்டு கோடை இளவரசி கொடைக்கானலை காண முடிவு செய்தார். அதன் அடிப்படையில், இன்று காலை 29ம்தேதி சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரைக்கு புறப்பட்ட முதல்வர் அங்கிருந்து கார் மூலமாக கொடைக்கானலில் உள்ள பாம்பார்புரத்தில் இருக்கும் தயாரா ஸ்டார் ஹோட்டலில் மே 4ஆம் தேதி வரை தங்க இருக்கிறார். 

முதல்வர் கொடைக்கானல் வருகையை ஒட்டி கொடைக்கானல் மூஞ்சி கல்லிலிருந்து பாம்பார்புரம் வரும் வரை சாலைகள் பேண்டேஜ் ஒர்க் பார்க்கப்பட இருக்கிறது. அதை தொடர்ந்து, இன்று காலை எட்டு மணி முதல் மதியம் ஒரு மணி வரை வத்தலக்குண்டு காட் ரோடு வழியாக கொடைக்கானல் செல்லும் சாலை போக்குவரத்துக்கு தடை செய்யப்பட்டுள்ளது. அதோடு கொடைக்கானல் மலைப்பகுதியில் ட்ரோன்கள், பலூன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரதீப் உத்தரவிட்டுள்ளார். அதுபோல், முதல்வர் பாதுகாப்புக்காக எஸ்.பி தலைமையில் இரண்டு ஏ.டி.எஸ்.பி, 2 டி.எஸ்.பி, ரெண்டு இன்ஸ்பெக்டர், பத்து சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 800க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

The Chief Minister is coming to see the summer princess with sentiment

கடந்த 2019ல் பாராளுமன்றத் தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாகவே முதன் முதலில் கொடைக்கானலுக்கு முதல்வர் ஸ்டாலின் வந்தவர், அங்குள்ள கால்டன் ஹோட்டலில் ஒரு வாரம் தங்கி இருந்து விட்டு சென்றார். அதன் பின், பாராளுமன்றத் தேர்தல் முடிவில் 40க்கு 39 தொகுதிகளை தி.மு.க கைப்பற்றியது. அதேபோல் கடந்த 2021 சட்டமன்றத் தேர்தல் முடிந்தவுடன் வாக்கு எண்ணிக்கைக்கு முன்பாகவே கொடைக்கானல் வந்த முதல்வர் மு.க.ஸ்டாலின், பம்பார்புரம் தமாரா ஸ்டார் ஓட்டலில் தங்கி விட்டு சென்ற பின்பு தான் நூற்றுக்கு மேற்பட்ட சீட்டுகள் வாங்கியதன் பெயரில் முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்றார். அதைத் தொடர்ந்து, மூன்றாவது முறையாக தற்பொழுது பாராளுமன்ற தேர்தல் முடிந்து வாக்கு எண்ணிக்கைக்கு ஒரு மாதம் இருக்கும் சூழ்நிலையில் கொடைக்கானலுக்கு முதல்வர் ஸ்டாலின் வந்துள்ளார். 

பாம்பாராபுரத்தில் தங்கிய தமாரா ஹோட்டலில் ஒரு வாரம் குடும்பத்தாருடன் தங்கி ஓய்வெடுக்க இருப்பதால் அரசியல் கட்சித் தலைவர்கள், கட்சி பொறுப்பாளர்கள், அமைச்சர்கள் யாரையும் முதல்வர் சந்திக்க விரும்பவில்லை. ஆனால், அரசியல் ரீதியாக மந்திரி சபை மாற்றம் மற்றும் துணை முதல்வராக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கொண்டு வருவதற்கான ஆலோசனையும் குடும்பத்தாருடன் பேசி முதல்வர் முடிவெடுக்க இருக்கிறார் என்ற பேச்சும் இருந்து வருகிறது. இப்படி சென்டிமென்ட் மூலம் முதல்வர் ஸ்டாலின் தொடர்ந்து ஒவ்வொரு தேர்தலையும் கொடைக்கானல் வந்து கோடை இளவரசியை ரசித்து விட்டு செல்வது போலத்தான் தற்பொழுதும் கோடை இளவரசியைக் காண கொடைக்கானல் வந்திருக்கிறார். அதைத் தொடர்ந்து, முதல்வர் வருகையையொட்டி, அங்கு போலீஸ் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டு உள்ளது.