Skip to main content

"எம்ஜிஆர் வாங்கிய அதிகபட்ச சம்பளம் இவ்வளவுதான்; பணத்தை கையில் கொடுக்க மறுத்த எம்ஜிஆர்..." - ராஜன் பகிர்ந்த சுவாரசியம்

Published on 07/11/2022 | Edited on 07/11/2022

 

ரத

 

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசிய திரைப்பட தயாரிப்பாளர் ராஜன் எம்ஜிஆர் தொடர்பாகப் பேசினார். அவர் பேசியதாவது, "புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் ஒரு மனிதத் தன்மை மிக்க, மனிதநேயம் மிக்க, மனிதாபிமானம் உள்ள மாமனிதராக வாழ்ந்து மறைந்தவர். எம்ஜிஆர் போல் ஒரு மனிதரை இந்த தமிழ்ச் சமூகம் இதற்கு முன் கண்டதில்லை. அவர் ஆரம்பத்தில் திரையுலகிற்கு வந்தபோது அவருக்கு 5 ஆயிரம்தான் சம்பளம். ஒரு படம் வெற்றி பெற்றால் அது ஏழாயிரம், எட்டாயிரம் என்று அவர் சம்பளம் உயரும். இரண்டு படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றால் பத்தாயிரம் என்ற அளவில் அவரின் சம்பளம் உயர்ந்து வந்தது. எம்ஜிஆர் கடைசியாக வாங்கிய சம்பளம் ஒரு லட்சம். அவர் நடித்த படம் நன்றாக ஓடினால் தயாரிப்பாளர் லாபம் அடைவார், இயக்குநர் லாபம் அடைவார், வினியோகஸ்தர் லாபம் அடைவார்கள். ஆனால் இது அனைத்தும் அந்தக் காலம். தற்போது என்ன நடக்கிறது என்று பார்க்க வேண்டும். 

 

ஒரு படம் வெளியாக வேண்டும் என்றால் இவன் முதலில் 5 லட்சம் கொடுக்கிறான். படம் ஓடினால் 10 லட்சம் திருப்பி கேட்கிறான். இயக்குநரின் சாமர்த்தியத்தால் படம் ஹிட் அடித்தால் சம்பளம் 5 கோடி என்கிறான். அடுத்த படம் 50 கோடி என்கிறார்கள். இதை எல்லாம் நாம் இந்தக் காலத்தில் தொடர்ச்சியாகப் பார்த்து வருகிறோம். ஆனால் சினிமா உலகில் எம்ஜிஆர் இறைவனாக வாழ்ந்தார். ஶ்ரீதர் இந்தியாவின் மிகப்பெரிய இயக்குநர். நல்ல படங்களைக் கொடுத்து இந்தியாவின் புகழை உலக அளவுக்கு எடுத்துச் சென்றவர். ஆனால் அவரின் கடைசிக் காலத்தில் நொடித்துப் போனார். கடன் பிரச்சனை என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக்கொண்டு இருந்தார். 

 

எம்ஜிஆருக்கு அவர் ஒரு இயக்குநர் என்பதைத் தாண்டி தனிப்பட்ட பழக்கம் எதுவுமில்லை. ஆனால் அவர் கஷ்டப்பட்டு வருகிறார் என்பதை அறிந்த அவர், தன்னுடைய உதவியாளர் மூலம் அவரை வீட்டுக்கு அழைக்கிறார். அதுவும் காலையில் வரச் சொல்கிறார். ஏனென்றால் அவருடன் சாப்பிட வேண்டும் என்று அனைவரையும் விரும்புவார். வெறுங்கையை மட்டும் கொடுத்து அனுப்பும் ஆள் அவர் அல்ல. அதே போல் அவர் வருகிறார், என்ன காரணம் ஏன் கஷ்டப்படுகிறீர்கள் என்று கேட்கிறார். அவரும் என்ன காரணம் என்று கூற, இப்போது ஒரு படத்தை இயக்குகிறீர்களா என்று கேட்கிறார். அவரும் நிச்சயம் செய்வேன் என்கிறார். அப்படி என்றால் தெலுங்கில் தற்போது நல்ல ஹிட் படம் ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது. அந்த உரிமையை வாங்கிக் கொள்ளுங்கள். நாம் சேர்ந்து அந்தப் படத்தைச் செய்வோம் என்றார்.

 

அவரும் மிகுந்த சந்தோஷத்தோடு சரி என்று சொல்லிவிட்டு இரண்டு அடி எடுத்து வைத்து ஏதோ யோசனையில் நின்றார். உடனடியாக சுதாரித்த எம்ஜிஆர் அந்தப் படத்தை வாங்கப் பணம் வேண்டுமல்லவா என்று கூறிக்கொண்டே ஒரு லட்சம் பணத்தை அவரிடம் உதவியாளர் மூலம் கொடுக்கிறார்.  இவ்வாறு எத்தனையோ கலைஞர்களை அவர் வாழ வைத்தவர். ஒரு கட்டத்தில் என்.எஸ். கிருஷ்ணன் அவர்கள் வருமானமின்றி பணத்தை இழந்து நொடிந்து போய்விட்டார். அவரைப் பற்றி எம்ஜிஆரே பலமுறை கூறியிருக்கிறார். என்னை எல்லாரும் வள்ளல் என்கிறார்கள், எனக்கு அந்த குணத்தை ஏற்படுத்திக் கொடுத்தவரே இவர்தான் என்று. அந்த அளவுக்கு அவர் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து வந்தார். 

 

இந்த மாதிரி ஒரு சூழ்நிலையில், என்எஸ்கே உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரைப் பார்க்கச் சென்ற எம்ஜிஆர், அவரிடம் நலம் விசாரித்துவிட்டு ஒரு கட்டு பணத்தை எடுத்து அவரின் தலையணைக்குப் பின்புறம் வைத்துவிட்டு வந்துவிடுகிறார். வீடு திரும்பும் வழியில் அவரின் உதவியாளர் அண்ணே, பணத்தை அவர் கையில் கொடுக்காமல் ஏன் நீங்கள் பின்புறம் வைத்துவிட்டு வந்தீர்கள் என்று கேட்கிறார். அதற்கு எம்ஜிஆர், நான் அவரிடம் சம்பளம் வாங்கி நடித்துள்ளேன். அவருக்கு என்னால் பணம் தர என் மனம் இடம் தராது என்றார். எம்ஜிஆர் மாதிரி இன்னொரு மனிதன் இந்த பூமியில் இனி பிறக்கவே முடியாது" என்றார்.
 

 

Next Story

அரசு மரியாதையுடன் ஆர்.எம்.வீரப்பன் உடல் தகனம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
Cremation of RM Veerappan with state honors

எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் (வயது 98) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த இவர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருடன் நெருங்கிப் பழகியவர் ஆவார். தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் உதவியாளராக சேர்ந்து, அதன் பின்னர் கணக்காளராக பணியாற்றிவர். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜானகி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக தனி அணி உருவாகக் காராணமாக இருந்தவர். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன் ஆவார்.

திரைப்படத் தயாரிப்பாளர் ஆகவும் இருந்துள்ளார். அதன்படி எம்.ஜி.ஆர்., நடித்த காவல்காரன், இதயக்கனி, தெய்வத்தாய், நான் ஆணையிட்டால், ரிக்சாக்காரன் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, மூன்று முகம், தங்கமகன், ராணுவ வீரன், பணக்காரன் போன்ற படங்களையும் தயாரித்துள்ளார். மேலும் சிவாஜி நடித்த புதிய வானம், கமல் நடித்த காக்கிச்சட்டை மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த படங்களையும் இவரின் சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்று மாலை சென்னை தி நகரில் உள்ள அவருடைய வீட்டில் உடலானது பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது. அரசியல் பிரமுகர்கள், நடிகர்கள் எனப் பல தரப்பினரும் அவரது உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய நிலையில், நுங்கம்பாக்கம் மின் மயானத்திற்கு அவரது உடல் தற்பொழுது கொண்டுவரப்பட்டுள்ளது. 78 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அவருடைய உடல் தகனம் செய்யப்பட இருக்கிறது.

Next Story

ஆர்.எம்.வீரப்பனுடனான அனுபவங்கள் - ரஜினி, கமல் உருக்கம்

Published on 10/04/2024 | Edited on 10/04/2024
rajini kamal about rm veerappan

எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் (வயது 98) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த இவர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருடன் நெருங்கி பழகியவர் ஆவார். தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் உதவியாளராக சேர்ந்து, அதன் பின்னர் கணக்காளராகப் பணியாற்றியவர். எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு ஜானகி ராமச்சந்திரன் தலைமையில், அதிமுக தனி அணி உருவாகக் காரணமாக இருந்தவர். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன் ஆவார்.

இவர் திரைப்பட தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார். அதன்படி எம்.ஜி.ஆர்., நடித்த காவல்காரன், இதயக்கனி, தெய்வத்தாய், நான் ஆணையிட்டால், ரிக்சாக்கரான் உள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, மூன்று முகம், தங்கமகன், ராணுவ வீரன், பணக்காரன் போன்ற படங்களையும் தயாரித்துள்ளார். மேலும் சிவாஜி நடித்த புதிய வானம், கமல் நடித்த காக்கிச்சட்டை மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த படங்களையும் இவரின் சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இவரது மறைவு அரசியல் மற்றும் சினிமா வட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ரஜினி, கமல், நக்கீரன் ஆசிரியர், இளையராஜா, பாரதிராஜா, சிவக்குமார் உள்ளிட்டோர் வீரப்பன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர். பின்பு செய்தியாளர்களிடம் வீரப்பன் பற்றிய அனுபவங்களை பகிர்ந்தனர். 

ரஜினி பேசுகையில், “ஒரு முழு வாழ்க்கையை வாழ்ந்து நம்மை விட்டு பிரிந்திருக்கிறார். எம்.ஜி.ஆரின் தனிப்பட்ட வாழ்க்கையிலும், அரசியல் வாழ்க்கையிலும், சினிமா வாழ்க்கையிலும் வலது கையாக இருந்தவர்.  அவரால் உருவாக்கப்பட்ட பல சிஷியர்கள் மத்திய, மாநில அமைச்சர்களாகி, பேரும், புகழுடன் இன்றும் வலம் வந்துகொண்டிருக்கின்றனர். ஆர்.எம் வீரப்பன் எப்போதும் பணத்திற்கு பின்னால் போனவர் இல்லை. அண்ணா சொன்ன கடமை, கண்ணியம், கட்டுப்பாடு ஆகியவற்றைக் கடைபிடித்து வாழ்ந்தவர். எனக்கும் வீரப்பனுக்கும் இடையேயான நட்பு மிக ஆழமானது, உணர்ச்சிகரமானது, புனிதமானது. அவர் இப்போது இல்லை என்பது என்னால் வாழ்நாளில் மறக்க முடியாதது” என்றார். 

கமல் பேசுகையில், “ஆர்.எம் வீரப்பனை சிறுவயதில் கலையுலகத்திலும் பின்பு அரசியல் உலகத்திற்கு அவர் சென்ற போதும், உயர்ந்த ஒரு உருவமாகத் தான் பார்த்து கொண்டிருந்தேன். பின்பு எம்.ஜி.ஆர் நடித்த அதே கம்பெனியில் நானும் வேலை செய்வேன் என நினைத்தது கிடையாது. அவருடைய பயணங்களில் அவருக்கு ஏற்பட்ட அனுபவமும் ஞானமும் எனக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது என்றால், அது மிகையாகாது. திரையுலகத்திலும், அரசியலிலும் அவர் மூதறிஞர். எம்.ஜி.ஆரின் வலது கையாக திகழ்ந்தவர். அந்த நிலை மாறாமல் என்றும் அவர் நினைவாக இருந்து வாழ்ந்து மறைந்தவர்” என்றார். ரஜினி, கமல் இருவரும் உருக்கமுடன் பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது.