Skip to main content

“ஸ்கூல் யூனிபார்மோட கூட்டிட்டு போவாங்க...” - சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்த அதிமுக கவுன்சிலர்!

Published on 11/03/2023 | Edited on 11/03/2023

 

Pramakudi child issue five arrested include admk member

 

"சின்னப்புள்ளை வேணும்னு கேட்டு அடம் பிடிச்சு அனுபவிச்சவன் பணம் கொடுக்காமல் எப்படி ஏமாத்தலாம்? இதெல்லாம் அந்த பெரிய மனுசனுக்கு அழகா?' என தன்னுடைய ஆதங்கத்தை பாலியல் புரோக்கரான பெண்மணி ஒருவர், இன்னொருவரிடம் கொட்டித் தீர்த்திருக்கின்றார். இது ஆடியோவாக ராமநாதபுரம் மாவட்ட போலீஸாருக்கு செல்ல, ஆடியோவின் நூல்பிடித்து பரமக்குடியில் உள்ள வி.ஐ.பி.க்களை அதிரடியாக கைது செய்து போக்சோ சட்டத்தின் கீழ் சிறைக்கு அனுப்பியுள்ளது காவல்துறை.

 

பரமக்குடி நகராட்சியின் 3-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் வைகைநகர் சிகாமணி, மறத்தமிழர் சேனை எனும் அமைப்பின் மாநிலத் தலைவரான புதுமலர் பிரபாகரன், களஞ்சியம் ரெடிமேட்ஸ் ராஜாமுகமது ஆகியோர் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சிறுமியை கட்டாயப்படுத்தி, சிறுமியுடன் பலமுறை பாலியல் வல்லுறவு கொண்டதாகவும் அதற்கு உதவியாக புரோக்கராகச் செயல்பட்ட புதுநகர் கயல்விழி மற்றும் அன்னலட்சுமி ஆகிய இரு பெண்கள் உள்ளிட்ட ஐந்து நபர்களும் பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தாரால் குற்ற எண்: 05/23, 363, 366 (A), 376 (3) IPC and 5(1), r/w 6,16 r/w 17 of Pocso act-ன் கீழ் கடந்த வெள்ளிக்கிழமையன்று கைது செய்யப்பட்டனர்.

 

th

 

சிறுமி விவகாரத்தில் போலீஸாருக்கு பொது மக்கள் பாராட்டு தெரிவிக்க, "சிக்கியது இவர்கள் மட்டுமே! சிக்காத பல வி.வி.ஐ.பி.க்கள் இன்னும் இருக்கின்றனர். அவர்களையும் கைதுசெய்து இது போல் பாதிக்கப்பட்ட பல சிறுமிகளைக் காப்பாற்ற போலீஸார் நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என கோரிக்கை வைத்திருக்கின்றனர் சமூக ஆர்வலர்கள் சிலர்.


வெளிநாட்டிற்கு பெண்கள் வேலைக்குத் தேவைப்படுகிறார்கள் என சகஜமாக ஆரம்பிக்கும் அந்த ஆடியோவில், “ஏம்பா! இந்த புதுமலர் பிரபாகரன் இருக்கான்லே! சின்ன புள்ளைதான் வேணும்னு அடம்பிடிச்சு அன்னைக்கு அந்த புள்ளையை கூட்டிட்டு பார்த்திபனூரிலிருந்து மானாமதுரை போகும் பாதையில் இருக்கின்ற அந்த மஹாலுக்கு கூட்டிட்டுப் போனான். வேலையை முடிச்சதும் பணத்தைத் தரல! இதெல்லாம் எந்த ஊர் நியாயம்? ஒரு பெரிய மனுசனுக்கு இதெல்லாம் அழகா?” என தற்பொழுது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட கயல்விழி இன்னொருவரிடம் பேசிய ஆடியோ தான் எங்களுக்குத் துருப்புச் சீட்டாக மாறியது. அதனைக் கொண்டு சி.டி.ஆர். போட்டுப்பார்க்கையில் ஊரிலுள்ள அத்தனை வி.ஐ.பி.க்களும் கயல்விழியோடு தொடர்பிலிருப்பது தெரியவந்தது.


கயல்விழியை போலீஸ் காவலில் விசாரிக்கையில் அனைத்தையும் ஒப்புக் கொண்டார். அவருடைய இலக்கு வறுமையில் வாடும் நிறமான 15 வயதிற்குட்பட்ட சிறுமிகள் மட்டுமே! இதற்காக தன்னுடைய கூட்டாளியான அன்னலட்சுமியை துணைக்குக் கொண்டு அவருடைய சமூகத்து ஆட்களிடம் நெருக்கமாகப் பழகி அங்குள்ள சிறுமிகளை அவ்வப்போது திருவிழா, பொருட்காட்சி, கோவில், சினிமா என உடன் அழைத்துச் சென்றிருக்கிறார்.

 

Pramakudi child issue five arrested include admk member

 

சிறுமிகளுடன் திரியும் கயல்விழியை அணுகும் பெரிய மனிதர்கள் ரேட் பேசி விடுவார்கள். வாடிக்கையாளர்களிடம் ஒரு மணி நேரத்திற்கு பத்து ஆயிரம் என கணக்கிட்டு வாங்கும் கயல்விழி, சிறுமிகளுடன் நைச்சியமாக பேசுவார். இதில் கிடைக்கும் பணம் தன்னுடைய குடும்ப வறுமையை போக்கும் என்கின்ற நம்பிக்கையிலும், ஏற்கனவே நம்மை அழைத்துக் கொண்டு நிறைய செலவு செய்திருக்கும் கயல்விழிக்கு பிரதி உபகாரமாகவும், தவறு எனத் தெரியாமலும் சிறுமிகள் சம்மதித்த நிலையில், அந்த பெரிய மனிதர்களுக்கு சிறுமிகளை சப்ளை செய்வார் கயல்விழி. இப்படித்தான் இதே ஊரில் ஒன்பதாம் வகுப்பு படிக்கும் சிறுமி இந்த தொழிலுக்குள் தள்ளப்பட்டிருக்கின்றாள் என்றார் பரமக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர்.

 

பாதிக்கப்பட்ட அந்த சிறுமியோ தான் படித்துக் கொண்டிருக்கும் அந்த பள்ளிக்கு கடந்த 2022, டிசம்பர் 26 தொடங்கி 2023, பிப்ரவரி 21 வரை மூன்று மாதங்களாகச் செல்லவில்லை என்பது போலீஸாரின் விசாரணையில் தெளிவானது. "கஷ்டப்படுற குடும்பம்! எனக்கு அன்னலட்சுமி என்ற உமா அக்கா சொந்தக்காரங்க. புது நகரில் இருக்கின்ற ஏந சிட்டி லேண்ட் புரமோட்டர்ஸ் வேலை பார்த்து வந்தாங்க. அவங்க மூலமாகத்தான் அது போல் அங்க ஏற்கனவே வேலை பார்த்துவந்த கயல்விழி அக்காவும் பழக்கமானாங்க. எங்கே வெளியில் போனாலும் என்னைக் கூட்டிட்டுப் போவாங்க. செலவும் நல்லா செய்வாங்க. ஒரு நாள் என்னிடம், என்னுடைய சொந்தக்காரங்க இருக்காங்க. அவங்களை பார்த்துக்கிட்டன்னா கைநிறைய பணம் கிடைக்கும். வீட்டு பிரச்சனையும் தீரும் என ஆசை காட்டி ஸ்கூல் யூனிபார்மோடு பார்த்திபனூர் பக்கமிருக்கின்ற மஹாலுக்குக் கூட்டிட்டுப் போனாங்க. அங்க ஏற்கனவே அந்த அக்காவோட முதலாளி அ.தி.மு.க. கவுன்சிலர் சிகாமணி இருந்தாரு. தெரிஞ்ச முகம்தானே என நினைக்கையில் அந்த சம்பவம் நடந்துச்சு.. எவ்வளவோ மறுத்தும் வலுக்கட்டாயமாக அவர் நடந்துகொண்டார். அதன்பின் அவரோட ப்ரண்டான களஞ்சியம் ரெடிமேட் ராஜாமுகமது என தொடர்ச்சியாக வந்தாங்க. நாளடைவில் நான் வேண்டாமென்றாலும் இரு அக்காக்களும் சேர்ந்து வற்புறுத்தி என்னைய அந்த மஹாலுக்கு கூட்டிட்டுப் போவாங்க. போகலைன்னா அடிதான். வலி பொறுக்கமுடியாமல், அரை மயக்கத்திலே எல்லாம் நடக்கும். அடச்சீய் இந்த மனுசனா..? என கேட்குமளவிற்கு எனக்கு தினசரி சித்ரவதைகள். டெய்லி ஸ்கூலுக்குப் போறது மாதிரி யூனிபார்ம், ஸ்கூல் பையுடன் ஸ்கூலுக்குக் கிளம்புவேன். இடையில் என்னை மறித்து கூட்டிட்டுப் போவாங்க இருவரும். இதில் புதுமலர் பிரபாகரன் போலீஸில் சொல்லிவிடுவேன் என அடிக்கடி வந்து என்னை சித்ரவதை செய்து சென்று விடுவார். "நீ பெரிய ஆளாக இருக்கலாம்? அதற்காக ஓசியில் அனுப்ப முடியுமா?' கயல்விழி அக்காவிற்கும் புதுமலர் பிரபாகரனுக்கும் சண்டையே வந்திருக்கின்றது. என்னை சித்ரவதை செய்து பாலியல் வல்லுறவு செய்ததில் கரைவேஷ்டிகளுடன் போலீஸ்காரர்களும் அடக்கம்'' என்றிருக்கின்றது பாதிக்கப்பட்ட சிறுமியின் வாக்குமூலம்.

 

பரமக்குடியின் அ.தி.மு.க. அவைத் தலைவரும், 3-வது வார்டு கவுன்சிலருமான சிகாமணி, சிறுமி பாலியல் வல்லுறவு விவகாரத்தில் கைது செய்யப்பட்டது குறித்து மாநில அ.தி.மு.க. தலைமைக்கு தகவல் கூறியுள்ளனர் உள்ளூர் அ.தி.மு.க.வினர். ஆனால் கட்சி இது குறித்து ராமநாதபுரம் மாவட்டத் தலைமையிடம் விளக்கம் கேட்க, எந்தவொரு விளக்கத்தையும் கொடுக்கவில்லை மாவட்டத் தலைமை. "எதற்காக சிகாமணியைக் காப்பாற்ற வேண்டும்? இதில் இவர்களும் இருக்கலாமோ?' என சொந்தக் கட்சியினரே கிசுகிசுத்து வருகின்றனர்.

 

இதேவேளையில் சிறுமி பாலியல் வழக்கு மட்டுமில்லாது தன்னுடைய சமூக அமைப்பினைக் காட்டி செங்கல் சூளையினரை மிரட்டி மாமூல் வசூலிப்பில் ஈடுபட்டதும், பரமக்குடி பேராசிரியர் ஒருவரை மிரட்டி ரூ. 2 லட்சம் வாங்கியதும் காவல்துறைக்கு புகாரான வேளையில் புதுமலர் பிரபாகரனை குண்டர் தடுப்புக் காவலில் வைக்க காவல்துறையினர் முயற்சித்து வருவது குறிப்பிடத்தக்கது.


சிறுமியை பள்ளிக்குச் செல்ல உத்தரவிட்டும், சிறுமிக்கு முறையான மருத்துவ ஆலோசனைகளும் கொடுக்கப்பட வேண்டுமென உத்தரவிட்ட மாவட்ட காவல்துறை சப்தமில்லாமல், வழக்கில் சிக்காத வி.வி.ஐ.பி.க்களைத் தேடத்தொடங்கியுள்ளதால் மாவட்டம் கலகலத்துள்ளது.

 

 

Next Story

நீர் மோர் பந்தல் திறப்பதில் கோஷ்டி பூசல்;  மாறி மாறி புகாரளிக்கும் அதிமுக!

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Group fight in opening of Neer Mor Pandal; AIADMK reports alternately

அண்மையில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கலந்துகொண்ட எடப்பாடி பழனிசாமி, கோடைகாலம் என்பதால் வெப்பத்தை தணிப்பதற்காக நீர் மோர் பந்தல் அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார். அதன்படி அதிமுகவினர் பல இடங்களிலும் நீர் மோர் பந்தல்களை அமைத்து வருகின்றனர். இந்நிலையில் கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பதில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் போக்கு  காரணமாக மாறி மாறி புகார் கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கடலூர் மாவட்டம் திருப்பாதிரிபுலியூர், மஞ்சக்குப்பம் மற்றும் முதுநகர் பகுதிகளில் அதிமுக மாநில எம்ஜிஆர் இளைஞரணி துணைச் செயலாளர் கார்த்திகேயன் தலைமையில் அவருடைய ஆதரவாளர்கள் நீர் மோர் பந்தல் திறக்க ஏற்பாடு செய்துள்ளனர். இந்நிலையில் முன்னாள் தொழில்துறை அமைச்சரும், அதிமுக மாவட்ட செயலாளருமான எம்.சி.சம்பத், அனுமதியின்றி நீர்மோர் பந்தல் அமைக்க அனுமதி தந்தால் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என காவல்துறையில் வாய்மொழி புகார் அளித்ததாகவும், அதிமுக சார்பில் மாவட்டச் செயலாளர்கள் யாரை பரிந்துரை செய்கிறார்களோ அவர்கள் தான் நீர் மோர் பந்தலை திறக்க வேண்டும் எனவும் கூறப்பட்டது.

இந்நிலையில் அனுமதியின்றி நீர் மோர் பந்தல் அமைப்பதற்காக செய்யப்பட்ட அனைத்து ஏற்பாடுகளையும் காவல்துறையினர் அப்புறப்படுத்தினர். அதேநேரம் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதிகோரி அதிமுக மாநில எம்ஜிஆர் அணி இளைஞரணி செயலாளர் கார்த்திகேயன் அவருடைய ஆதரவாளர்களுடன் கடலூர் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார். நீர் மோர் பந்தல் அமைக்க அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி எங்களை அறிவுறுத்தி உள்ளார். அதன்படி நாங்கள் அதை செய்து வருகிறோம் என அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மனு கொடுக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அதிமுக மாவட்ட அவைத்தலைவர் குமார் தலைமையில் கடலூர் மாநகராட்சிக்குட்பட்ட பல பகுதிகளில் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி கேட்டு மனு அளிக்கப்பட்டுள்ளது. அந்த மனுவில், அதிமுகவின் மாவட்டச் செயலாளர் எம்.சி.சம்பத் யாரை அனுமதிக்கிறாரோ அவர்களுக்கு மட்டும்தான் நீர் மோர் பந்தல் அமைக்க அனுமதி அளிக்க வேண்டும். இல்லை என்றால் சட்ட ஒழுங்கு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளனர்.

இப்படி கடலூரில் நீர் மோர் பந்தல் அமைப்பு தொடர்பாக அதிமுகவினர் இரு கோஷ்டியாக மாறி மாறி மனு அளித்துள்ளது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.