Skip to main content

போஸ்டரை பார்த்து ரசித்த எடப்பாடி... கே.சி.பழனிசாமி 

Published on 13/06/2019 | Edited on 13/06/2019

 

அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும், பொதுச்செயலாளர் தேந்தெடுக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தவுடன் ஜூன் 12ஆம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. இதில் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டவர்களுக்கு சில அறிவுரைகள் மட்டும் வழங்கப்பட்டு, கூட்டம் நிறைவடைந்தது. கூட்டத்திற்கு பிறகு பேசிய அமைச்சர்கள் சிலர், தற்போதுள்ள இரட்டை தலைமையின் கீழ் செயல்பட அனைவரும் ஒப்புக்கொண்டனர் என்று தெரிவித்தனர். 

 

admk - ops - eps


 
பொதுச்செயலாளர் பதவியை தவிர்த்தது செல்லாது, மேலும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற விதிகளும் அதிமுக பைலாவின்படி பொருந்தாது என்று டெல்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தவர் அதிமுக முன்னாள் எம்பி கே.சி.பழனிசாமி. நக்கீரன் இணையதளத்திடம் சில கருத்துக்களை அவர் பகிர்ந்து கொண்டார்.
 

''ராஜன் செல்லப்பா, குன்னம் ராஜேந்திரன் ஒற்றைத் தலைமை வேண்டும் என்று கூறியதற்கு, ‘பொதுச்செயலாளர் பதவியை ஏற்க வாருங்கள் எடப்பாடியாரே...’  என  போஸ்டர்கள் ஒட்டியதற்கு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். ஆனால் அதனை ரசித்தார்கள். நடவடிக்கை எடுக்காததைப் பார்க்கும்போது, பொதுச்செயலாளர் பதவியை கொண்டுவர முயற்சிகள் நடந்திருக்கலாம். 
 

தர்மயுத்தம் நடத்தியதாக கூறிய ஓ.பி.எஸ்., ஈ.பி.எஸ். உடன் இணைந்த பிறகு தேனியில் பேசியபோது, பிரதமர் சொல்லித்தான் சேருகிறேன் என்று கூறியிருந்தார். ஜூன் 11ஆம் தேதி தங்கமணி, வேலுமணி டெல்லியில் அமித்ஷாவை சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பு ஓ.பன்னீர்செல்வத்தை பாஜக பாதுகாத்துவிட்டதாக தோன்றுகிறது. 
 

ஜூன் 12ஆம் தேதி நடந்த கூட்டத்தில் கலந்துகொண்ட 250 பேரை தவிர அதிமுகவில் இருக்கும் ஒவ்வொரு தொண்டனும் பொதுச்செயலாளர் வேண்டும் என்று நினைக்கிறார்கள். பாஜகவை விட்டு தனியாக இயங்க வேண்டும். அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்து வெளியே வர வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறார்கள். 
 

தற்போதுள்ள இரட்டை தலைமையின் கீழ் செயல்பட அனைவரும் ஒப்புக்கொண்டனர் என்று இவர்கள் எடுத்திருக்கக்கூடிய முடிவு இன்னும் ஒரு சில மாதங்கள் ஓடும். அவ்வளவுதான். திமுக கொடுத்த நம்பிக்கையில்லா தீர்மானம் உள்ளது. அதற்கான ஓட்டெடுப்பு வரும். ஆகையால் இப்போதிலிருந்தே சில பணிகளை செய்துகொண்டு வருகிறார்கள். பொதுச்செயலாளர் பதவி வேணும், வேண்டாம் என்ற வாதம், பிரதிவாதத்தை வைத்துக்கொண்டே வருகிறார்கள். ஒரு காலக்கட்டத்தில் வேண்டும் என்பவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். அதனால் வைத்துக்கொள்வோம் என்று முடிவு எடுப்பார்கள். பொதுச்செயலாளர் பதவி வேண்டாம் என்று இவர்கள் நினைத்திருந்தால், முடிவு செய்திருந்தால், ஒற்றைத் தலைமை வேண்டும் என்று கோரியவர்கள் மீதும், போஸ்டர்கள் ஒட்டியவர்கள் மீதும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். 
 

தமிழ்நாட்டு நலன்களுக்கு எதிராக உள்ள பாஜகவை விட்டு தள்ளி நிற்க வேண்டும், பொதுச்செயலாளர் பதவி அதிமுகவில் இருக்க வேண்டும் என்றுதானே சொன்னேன். பாஜகவால்தான் தோற்றோம் என்று அமைச்சர் சிவி சண்முகம் சொன்னார், பாஸ்கர் சொன்னார், மேலும் பலர் சொன்னார்கள். நான் சொன்னதைத்தானே அவர்களும் சொன்னார்கள். என் மீது நடவடிக்கை எடுத்தார்களே? ஏன் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. 

 

kcpalanisami



விருத்தாசலம் கலைச்செல்வன், அறந்தாங்கி இரத்தினசபாபதி, கள்ளக்குறிச்சி பிரபு ஆகியோர் ஒற்றைத் தலைமைதான் வேண்டும் என்கின்றனர். அதில் பிரபு, ஒற்றைத் தலைமை வேண்டும். அதுவும் சசிகலாதான் தலைமை ஏற்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். 
 

சசிகலா இன்றைய நிலைமையில் தண்டனை குற்றவாளி. சிறையில் உள்ளார். அவரது தண்டனைக்காலம் இன்னும் ஒன்றரை ஆண்டு காலத்திற்கு உள்ளது. அப்படி இருக்கும்போது அவர் எப்படி இந்த இயக்கத்திற்கு தலைமை ஏற்க முடியும். தண்டனை பெற்ற குற்றவாளிகள் அதிமுகவில் அடிப்படை உறுப்பினர்களாக இருக்கவே தகுதியற்றவர்கள். அப்படிப் பார்க்கும்போது சசிகலா தலைமை பொறுப்புக்கு வருவது சாத்தியமில்லாதது''. 

 

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.