Skip to main content

நடிகர்களாக மாறும் அரசியல்வாதிகள்! - 'TEA KADAI' அரசியல் எடுபடுமா?

Published on 01/03/2021 | Edited on 01/03/2021

 

ddd

 

இந்தமுறை தேர்தல் பிரச்சாரத்தில் டீக்கடை அரசியல் பிரதான இடத்தைப் பிடித்து வருகிறது. எடப்பாடி தனது பிரச்சாரத்தின் போது திருப்பூர் பகுதியில் உள்ள ஒரு டீக்கடையில் உட்கார்ந்து, டீ குடித்து மக்களைக் கவரும் முயற்சியில் இறங்கினார். ஏற்கனவே அடுத்த ஆட்சி நாங்களே என்று பிரச்சாரம் செய்து வரும் ஸ்டாலின், டீக்கடைகளுக்குச் சென்று டீ குடிப்பதும், ஏழை குழந்தையைக் கொஞ்சித் தூக்கி முத்தமிடுவதுமாக அதிரடி கிளப்பிவருகிறார். இவர்கள் மட்டுமல்லாது, தி.மு.க., அ.தி.மு.க.வில் இருக்கும் முன்னாள் இந்நாள் அமைச்சர்களும் தேர்தல் நெருங்க நெருங்க, திடீர் திடீரென டீக்கடை அரசியலைக் கையில் எடுத்து, லோக்கல் அரசியல் புள்ளிகளோடு தெருத்தெருவாக வலம் வரத்தொடங்கிவிட்டார்கள்.

 

இது குறித்து பொதுமக்கள் என்ன நினைக்கிறார்கள்? என்று அவர்களின் மன நிலையை அறிய முயன்றோம். அப்போது....

 

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகிலுள்ள எம். குன்னத்தூர் டீக்கடை ஒன்றில் நாம் சந்தித்த அஜித்குமார், "வழக்கமா கார் கண்ணாடியை உயர்த்திக்கொண்டு போகிறவர்கள் இப்போது டீ கடைக்கு வந்து உட்காருவது என்பது ஓட்டுக்களைப் பெறுவதற்காகத்தான். தேர்தல் முடிந்த பிறகு இவர்கள் பதவிக்கு வந்து விட்டால் அவர்களை சந்திப்பது மிகவும் கடினம்'' என்கிறார் புன்னகையோடு.

 

இன்னொரு கடையில் நாம் சந்தித்த சங்கரோ, "இந்த தேர்தல் கால மேஜிக்கை எல்லாம் நாங்க வேடிக்கை பார்த்துக்கிட்டுதான் இருக்கோம். இதெல்லாம் சும்மா டிராமா'' என்றபடி சிரிக்கிறார்.

 

டீக்கடைக்காரரான முருகன் நம்மிடம், "தேர்தல் நேரத்தில் அரசியல்வாதிகள் டீக்கடையை நோக்கி வருவாங்க. நலம் விசாரிப்பாங்க. கை கொடுப்பாங்க. தோளில் கை போடுவாங்க. இதையெல்லாம் பார்க்கும் எங்களைப் போன்ற ஏழை எளிய மக்கள், முகம் மலர்ந்து பூரித்துப் போவோம். அந்த மயக்கத்தில் அவர்களுக்கு ஓட்டும் போடுவோம். அவர்கள் பதவிக்கு வந்த பிறகு பொது நலப் பிரச்சனைகளுக்காக தேடிப்போனாக் கூட வீட்டில் இருந்துகொண்டே இல்லைன்னு சொல்லச் சொல்வாங்க. என்ன பண்றது. தெரிஞ்சேதான் ஏமாறுறோம்'' என்கிறார் சிந்தனையோடு.

 

ஓய்வுபெற்ற ஆசிரியர் காசிராஜன் நம்மிடம், "காலங்காலமாக ஓட்டு கேட்டு வரும்போது கும்பிடு போடுவதோடு, மக்கள் காலில் விழுந்தும் அரசியல்வாதிகள் ஓட்டுகேட்கறாங்க. வெற்றி பெற்ற பிறகு, அதே மக்களைக் கேவலமாப் பார்க்கறாங்க. அதே நேரத்தில் கீழ் மட்டத்தில் உள்ள ஊராட்சி மன்றத் தலைவர்கள் ஒன்றிய கவுன்சிலர்களுக்கே ஏகப்பட்ட பணிச்சுமை இருக்கும் போது, அதைவிட எம்.பி., எம்.எல்.ஏ., அமைச்சர்களுக்கு கூடுதல் பணிச்சுமை இருக்குமேன்னு நம்மையே நாம் சமாதானப்படுத்திக்க வேண்டியிருக்கு. ஆனால் இவங்க எல்லாம், மக்கள் அளிக்கும் மனுக்களுக்கு உடனுக்குடன் தீர்வு கண்டால் அதுவே போதும்'' என்கிறார் நிதானமாக.

 

"பதவியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் சாதாரணமான நாட்களில் டீக்கடை ஃபார்முலாவை செய்து காட்டினால்தான் எங்களைப் போன்ற சாதாரண மக்கள் அவங்களை நம்புவார்கள். வெற்றிபெற்ற பிறகோ அல்லது தோல்வி அடைந்த பிறகோ மக்களைத் தேடி டீ கடைகளுக்கு அடிக்கடி அவங்க வந்தால்... மக்களின் நம்பிக்கையைப் பெறமுடி யும்'' இது சங்கரின் தீர்க்கமான கருத்து.

 

cnc

 

சட்டப் பஞ்சாயத்து இயக்க பிரமுகர் ராமநத்தம் கோவிந்தசாமியையும் நாம் சந்தித்தோம். அவர் நம்மிடம், "காய்கறிகள் மளிகைச் சாமான்கள் எல்லாம் தினசரி விலை ஏறிக்கொண்டே போகுது. அதைக் கட்டுப்படுத்தவோ குறைக்கவோ ஆட்சியாளர்களும் நினைக்கலை. ஆளத் துடிக்கும் அரசியல்வாதிகளும் அதைக் கண்டிக்கத் துடிக்கலை. விவசாயிகளைக் காப்பாற்ற யாரும் முன்வரலை. ஆனால் இப்ப இருக்கும் அரசியல்வாதிகள் எல்லோருமே சினிமா நடிகர்களைப் போல் நடிக்க ஆரம்பிச்சிட்டாங்க. தங்களோட கட்சி முன்னோடிகளைக் கூட மேடை ஏத்தறது இல்லை. ஒவ்வொரு கட்சியும் தேர்தலுக்காகக் கோடி கோடியாக பணத்தை வாரி இறைக்குது. கொரோனாவால் வருமானமின்றி தவிக்கும் மக்களுக்கு ஒரு சிலரைத் தவிர மத்தவங்களால உதவ முடியலை'' என்றார் காட்டமாகவே.

 

பெயர் சொல்ல விரும்பாத அந்த இளைஞர் "12-ஆம் தேதி ஸ்டாலினின் பிரச்சாரக் கூட்டம் விருத்தாசலத்தில் நடந்தது. அந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக கிராமப்புறங்களில் இருந்து டாட்டா ஏ.சி வாகனங்கள் மூலம் மக்களை கொண்டு வந்து குவிச்சாங்க. அப்படி வாகனங்களில் வந்த பெண்கள் தங்களுக்கு சாப்பாடு வாங்கிக் கொடுக்கலைன்னும் வேலையை விட்டுவிட்டு வந்த தங்களுக்கு பணமும் தரலைன்னும் பகிரங்கமாக குற்றம் சாட்டினாங்க. அதெல்லாம் சமூக ஊடகங்கள்ல வீடியோ காட்சிகளா பரவிக்கிட்டு இருக்கு. இந்த நிலவரம் அந்தக் கட்சியின் தலைமையோட கவனத்துக்குப் போனதாகத் தெரியலை'’என்கிறார்.

 

தேர்தல் நேரத்தில் நடிகர்களாக மாறும் அரசியல்வாதிகளை மக்கள் இனம் கண்டு வைத்திருக்கிறார்கள் என்பதைப் பரவலாகவே நம்மால் பார்க்க முடிகிறது.

 

 

 

Next Story

“தனி ஒருவனாக குரல் கொடுத்தேன்” - விஷால் பகிர்வு

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
vishal political speech latest in rathnam promotion event

விஷால் - ஹரி கூட்டணியில் மூன்றாவது படமாக உருவாகியுள்ள படம் ரத்னம். இப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் தயாரிக்க பிரியா பவானி ஷங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். கௌதம் மேனன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படம் ஏப்ரல் 26ஆம் தேதி உலகெங்கும் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாகவுள்ளது. இதனால் தற்போது புரொமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. 

ad

அந்த வகையில் திருச்சியை அடுத்த சிறுகனூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில்  இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த விழாவில் விஷால், ஹரி உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவ, மாணவிகள் மத்தியில் உரையாற்றினர். பின்னர் விஷால் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், “ரத்னம் திரைப்படம் தமிழ் மட்டும் அல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகவுள்ளது. 'சென்ட்ரல் போர்டு ஆப் பிலிம் சர்டிபிகேஷன்' மும்பையில் என்னிடம் லஞ்சம் கேட்டார்கள். அதனை எதிர்த்து தனி ஒருவனாக குரல் கொடுத்தேன். அதன் பிறகு, சிபிஐ நடவடிக்கை எடுத்தார்கள்.

சமூகத்தில் நடக்கும் தவறுகளுக்கு மாணவர்கள் குரல் கொடுக்க வேண்டும். நீங்கள் குரல் கொடுக்கவில்லை என்றால் மற்றவர்கள் உங்களை தவறாக பயன்படுத்திக் கொள்ள வாய்ப்புள்ளது. விஜய் மட்டுமல்ல யார் வேண்டுமானாலும், அரசியலுக்கு வரலாம். அரசியல் என்பது பொழுதுபோக்கு அல்ல. நான் அரசியலுக்கு வரக்கூடாது என வேண்டிக் கொள்ளுங்கள். அரசியல்வாதிகள் நடிகர்களாக மாறினால் நடிகர்களாகிய நாங்கள் அரசியல்வாதிகளாக மாறுவோம் . 'வேட்பாளர்கள் வாக்குக்கு பணம் கொடுத்தது மக்களுடைய பணம் தான். ஒரு சட்டமன்ற உறுப்பினருக்கு ஒரு லட்சம் அல்லது இரண்டு லட்சம் ரூபாய் தான் சம்பளம் என நினைக்கிறேன். பிறகு எப்படி இவர்களால் வாக்குக்கு இவ்வளவு பணம் என கொடுக்க முடிகிறது. இதன் பிறகு மக்களை ஏமாற்ற முடியாது” என்றார். 

Next Story

'இதெல்லாம் இல்லாததால் தான் நான் அரசியலுக்கு வருகிறேன்'-விஷால் பேட்டி

Published on 14/04/2024 | Edited on 14/04/2024
'It is because of the lack of all this that I am coming to politics' - Vishal interview

நடிகர் விஷால் திரைப்படங்களில் நடித்துக் கொண்டே, அறக்கட்டளையின் மூலம் மக்களுக்குப் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார். கடந்த 2017 ஆம் அண்டு ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் யாரும் எதிர்பாராத விதமாக சுயேட்சை வேட்பாளராக மனுத் தாக்கல் செய்தார். ஆனால் கடைசி நேரத்தில் அவரது மனு நிராகரிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சமீபத்தில் புது அரசியல் கட்சி விஷால் தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியானது. மேலும் 2026 சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடப்போவதாகக் கூறப்பட்டது. ஆனால் அதனை திட்டவட்டமாக மறுத்த விஷால், வரும் காலகட்டத்தில் இயற்கை வேறு ஏதேனும் முடிவு எடுக்க வைத்தால், அப்போது மக்களுக்காக மக்களின் ஒருவனாக குரல் கொடுக்க தயங்க மாட்டேன் என்று பேசியிருந்தார்.

இந்தநிலையில் நடிகர் விஷால் புதிய கட்சி தொடங்கப்போவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய விஷால், 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன் புதிய கட்சியைத் தொடங்குவதாக அறிவித்துள்ளார். 2026 ஆம் ஆண்டு வேட்பாளர் பட்டியலில் என் பெயரும் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த நடிகர் விஷால் பேசுகையில், ''அரசியலுக்கு வருகிறேன் என்று நான் ஏன் ஓப்பனாக சொல்கிறேன் என்றால் நான் எதையுமே மூடி மறைத்தது கிடையாது. எதற்கு விஷால் அரசியலுக்கு வரவேண்டும். நிறைய பேர் இருக்காங்களே. இவர் வந்து என்ன செய்யப் போகிறார் என்று கேட்பார்கள்.

மக்களுக்கு எந்த ஒரு குறையும் இல்லை. விவசாயிகளுக்கு எந்த குறையும் இல்லை. கிராமத்தில் குடிநீர் பிரச்சனை  இல்லை. ரோடு நல்லா போட்டிருக்கிறார்கள், தூர்வாரி இருக்கிறார்கள், மெட்ரோ இருப்பதால் டிராபிக் நெரிசல் இல்லாமல் நல்லாவே இருக்கிறது, சாலை எல்லாமே கரெக்டா இருக்கும்போது இவன் அரசியல் எதுக்கு தேவையில்லாமல் வரான் என்று கேள்வி எழுப்புவார்கள். ஆனால் இதெல்லாம் இல்லாததால் தான் நான் அரசியலுக்கு வருகிறேன். அதுதான் உண்மை. அதுதான் என்னுடைய பதில். நல்லவேளை விஜயகாந்த் சார் மாதிரி என்கிட்ட கல்யாண மண்டபம் இல்லை. இல்லைன்னா இதை நான் சொன்னதனால் இடிச்சு தள்ளியிருப்பாங்க. டைம் வரும்போது சொல்கிறேன்'' என்றார்.