Skip to main content

"அந்த வடநாட்டுப் பாடகர் போல் நடந்துகொள்ளக் கூடாது" - வைரமுத்துவிடம் எஸ்.பி.பி. சொன்ன ரகசியம்!

Published on 08/10/2020 | Edited on 08/10/2020
vairamuthu with spb stage

 

 

"என்னைப் பாடாய்ப் படுத்திய எஸ்.பி.பி.!” - கவிப்பேரரசு வைரமுத்து பகிரும் நினைவுகள்

"எஸ்.பி.பிக்கும் எனக்கும் ஏற்பட்ட முரண்பாடுகள்!" - பகிராததை பகிரும் கவிப்பேரரசு வைரமுத்து 

கடந்த இரண்டு பகுதிகளில்  கவிப்பேரரசு பகிர்ந்த நினைவுகளின் தொடர்ச்சியாக எஸ்.பி.பியின் பண்புகள் குறித்துப் பகிர்கிறார்...

 

"அவர் இரக்கமுள்ள பாடகர். ஒலிப்பதிவுக் கூடத்தில் பாடலைப் பாடி முடித்ததுமே, ஊதியத்துக்காகக் காத்திருக்காமல் வீட்டுக்குக் கிளம்பிவிடுவார். இதைப் பார்த்த நான், ஒருமுறை அவரிடமே, "ஊதியத்தில் நீங்கள் நெகிழ்வாக நடந்துகொள்வீர்களா? கெடுபிடி யாக நடந்துகொள்வீர்களா?' என்று கேட்டேன். எஸ்.பி.பி. சொன்னார், "பணம் வேண் டும்தான். ஆனால் ஒரு கலைஞன் பணம் மட்டுமே தேவை என்று, ஒரு வடநாட்டுப் பாடகர் போல் நடந்துகொள்ளக் கூடாது'' என்றார். "வடநாட்டுப் பாடகர் யார்?' என்றேன். "வாய் தவறிச் சொல்லிவிட்டேன். விட்டுவிடுங்கள்'' என்றார். நான் விடவில்லை. அவர் பாடி முடித்துக் கிளம்பிய போது, அவர் காரில் நான் ஏறி அமர்ந்துகொண்டு, "அந்த வடநாட்டுப் பாடகர் விவகாரம் பற்றி நீங்கள் சொன்னால்தான் காரை விட்டு இறங்குவேன்" என்றேன்.

 

அதன்பின் இறங்கிவந்தவர், அந்தப் பாடகர் ஒரு பாடலைப் பாடப் போனால், ஒலிப்பதிவுக் கூடக் கண்ணாடி வழியே, தன் உதவியாளரைப் பார்ப்பார். அவர், கட்டைவிரலை உயர்த்திக் காட்டினால் பணம் வந்துவிட்டது என்று அர்த்தம். உடனே பாடலைப் பாடிக்கொடுப்பார். கட்டை விரலை அவர் காட்டாவிட்டால் பணக்கட்டு வரவில்லை என்று அர்த்தம். உடனே, தொண்டை சரியில்லை என்று அவர் கிளம்பிவிடுவார்'' என அந்த ரகசியத்தைச் சொன்ன எஸ்.பி.பி, அதன் பின் சொன்னதுதான் உச்சம். "ஒரு ரெக்கார்டிங்கின் போது உதவியாளரை அந்தப் பாடகர் பார்த்தார். உதவியாளர் கட்டைவிரலை உயர்த்தவில்லை. அதனால் தொண்டை சரியில்லை என்று அவர் காரில் ஏறிக் கிளம்பி விட்டாராம். காரில் போகும் போது அவரது உதவியாளர், நீங்கள் ஏன் பாடவில்லை? என்று கேட்க, நீ கட்டை விரலைக் காட்ட வில்லையே என்றா ராம் பாடகர். அதற்கு அந்த உதவியாளர் சொல்லியிருக்கிறார்… சார்! எப்படிக் கட்டை விரலைக் காட்ட முடியும். இது நமது சொந்தப் படம்.'' நாங்கள் அப்போது சிரித்த சிரிப்பில் ஸ்டுடியோ வேப்பமரத்திலிருந்து பறவைகளும் பறந்துவிட்டன.

 

அவர் என்னிடம் நிறையப் பகிர்ந்திருக்கிறார். அவற்றில், நெஞ்சில் நிலை நிறுத்தக்கூடிய செய்திகளும் உண்டு. ஒருமுறை கே.வி.மகாதேவனுடன் எஸ்.பி.பி. காரில் போய்க்கொண்டிருந்தாராம். அப்போது காரில் ஒரு பாடல் ஒலிக்க, "யார் பாட்டுப்பா இது? ரொம்ப நல்லா இருக்கே"ன்னு எஸ்.பி.பி.யிடம் மகா தேவன் கேட்டிருக்கிறார். இதைக்கேட்டுத் திகைத்துப் போன அவர், "மாமா, உங்களுக்கு நினைவு இல்லையா? இது நீங்கள் போட்ட பாட்டுதான். எப்படி இதை மறந்தீங்க மாமா''ன்னு எஸ்.பி.பி.கேட்க, மகாதேவனோ, "இப்படி மறக்குறதுதான் நல்லதுப்பா. ஒரு பாட்டை இசையமைத்துப் பாடி முடிச்சதும், அதுக்கும் நமக்கும் சம்பந்தம் இல்லைன்னு ஒதுங்கிடணும். அதுதான் கர்வத்திலிருந்து வெளியேறும் வழி. இல்லைன்னா, கர்வம் நம் தலையில் ஏறி உட்கார்ந்துகொண்டு, நம்மைப் படுத்த ஆரம்பிச்சிடும்''னு சொல்லியிருக்கிறார். இதை என்னிடம் சொன்ன எஸ்.பி.பி., "கே.வி.மகா தேவன் சொன்ன இந்தக் கருத்தைத்தான் நான் தலையில் ஏற்றி வச்சிருக்கேன். அதனால்தான் எனக்குத் தலைக்கனம் வரலை''ன்னு சொன்னார். சொன்ன மாதிரியே, கடைசி வரை எளிமையாக வாழ்ந்துகாட்டிவிட்டுப் போயிருக்கிறார்.

 

அதேபோல் ஒரு நாள் நள்ளிரவு 12 மணிக்கு எஸ்.பி.பி.க்கு போன் வந்திருக்கிறது. எதிர்முனையில் அவர் அதிகம் மதிக்கும் எம்.எஸ்.விஸ்வநாதன். உடனே பதறிப்போய் அவர் என்னவோ ஏதோ என்று திகைக்க, எம்.எஸ்.வி.யோ., "ராஜா! எப்படிடா இந்தப் பாடலை இப்படிப் பாடினே...? கேட்கக் கேட்க அசந்து போறேண்டா. எப்படிடா உனக்கு இப்படி ஒரு திறமை? கொன்னுட்டடா"ன்னு... பாராட்டி நெகிழ்ந்திருக்கிறார். அப்படி நள்ளிரவில் எம்.எஸ்.வி அழைத்துப் பாராட்டிய அந்தப் பாடல்... 'நிழல் நிஜமாகிறது' என்ற படத்தில் இடம்பெற்ற 'கம்பன் ஏமாந்தான்' பாடல். அந்த மகிழ்ச்சியை அந்த நள்ளிரவிலேயே கொண்டாடியிருக்கிறார் எஸ்.பி.பி."

 

  

Next Story

“சில வாரங்கள்; ஐந்தாண்டுகள்” - தேர்தல் குறித்து தனது ஸ்டைலில் வைரமுத்து

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
vairamuthu about election vote

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ள நிலையில், முதற்கட்ட வாக்குப் பதிவு நாளை (19.04.2024) தொடங்குகிறது. இதில் தமிழகம் உள்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகள் அடங்கும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டதையடுத்து நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் ஆணையத்தின் விதிப்படி பிரச்சாரத்தை முடித்துக் கொண்டனர். 

இதனிடையே வாக்குரிமையின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் திரைப் பிரபலங்கள் பேசி வருகின்றனர். ஏற்கனவே விஜய் சேதுபதி, “நமக்காக இல்லைன்னாலும் நம்ம குழந்தைகளோட எதிர்காலத்திற்கும், நம்ம அடுத்த தலைமுறையோட எதிர்காலத்திற்கும் நிச்சயமா ஓட்டு போட வேண்டும். காசு வாங்கிட்டு ஓட்டு போடுவது, காசுக்காக ஓட்டை விற்பது எவ்ளோ பெரிய துரோகமோ, அதை விட பச்சை துரோகம் ஓட்டு போடாமல் இருப்பது” என விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டிருந்தார். பின்பு விஜய் ஆண்டனியும் சமீபத்திய செய்தியாளர்கள் சந்திப்பு அனைத்திலும் அனைவரும் ஓட்டு போட வேண்டும் என வலியுறுத்தி வந்தார். 

இவகளைத் தொடர்ந்து ஜெய் பீம் இயக்குநரும், “வாக்குரிமை என்பது என் உரிமைகளைக் காத்து, உணர்வுகளைப் புரிந்து ஆட்சி செய்கிற ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் சமூகக் கடமை” என அவரது எக்ஸ் வலைதளத்தில் குறிப்பிட்டு இந்தியா கூட்டணிக்கு அனைவரும் வாக்களிக்குமாறு வேண்டுகோள் வைத்தார்.

இந்த வரிசையில் தற்போது வைரமுத்துவும், அவரது எக்ஸ் பக்கத்தில் வாக்குரிமையின் முக்கியத்தும் குறித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “விரலில் வைத்த கருப்புமை நகத்தைவிட்டு வெளியேறச் சில வாரங்கள் ஆகும். பிழையான ஆளைத் தேர்ந்தெடுத்துவிட்டால் அநீதி வெளியேற ஐந்தாண்டுகள் ஆகும். சரியான நெறியான வேட்பாளருக்கு வாக்களியுங்கள். வாக்கு என்பது நீங்கள் செலுத்தும் அதிகாரம்” என குறிப்பிடப்பட்டுள்ளது. 

Next Story

“எறிகணைகள், கிழவியின் கூடையை உடைக்கின்றன” - வைரமுத்து 

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
vairamuthu about israel iran issue

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் இன்னும் நீடித்து கொண்டே இருக்கிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா நகர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படை மூத்த தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கெனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில், தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. ஆனால் ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிரியா, லெபனான் எல்லை பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் ஈரான் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது. ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புதுறை தெரிவித்துள்ளது. இதனிடையே ஈரான் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் வெளியுறவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கவலை தெரிவித்தது. மேலும் உடனடியாக மோதலை நிறுத்தி, வன்முறையை கைவிட்டு அமைதிக்குத் திரும்ப வேண்டும் என அறிக்கை வெளியிட்டுருந்தது. 

vairamuthu about israel iran issue

இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து இஸ்ரேல் - ஈரான் இடையே நடக்கும் தாக்குதல் குறித்து அவரது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது, 

“இஸ்ரேல் மீது ஈரானும்
ஹமாஸ் மீது இஸ்ரேலும்
விசிறியடிக்கும் எறிகணைகள்,
பாப்பாரபட்டியில்
ஈயோட்டிக்கொண்டு
பலாச்சுளை
விற்றுக்கொண்டிருக்கும்
பஞ்சக் கிழவியின்
கூடையை உடைக்கின்றன

உலகப் பொருளாதாரம்
பின்னல் மயமானது

உலகு தாங்காது

நிறுத்துங்கள் போரை
ஐ.நாவால் முடியாது;
அவரவர் நிறுத்தலாம்” என பதிவிட்டுள்ளார். 

ஏற்கெனவே கடந்த ஆண்டு இஸ்ரேல் - காசா தாக்குதல் குறித்து, “யுத்த களத்தில் நம் தமிழ்ப் பாடல் ஒலிக்கட்டும்” எனக் குறிப்பிட்டு 'புத்தம் புது பூமி வேண்டும்...'(திருடா திருடா) என்ற பாடலை மேற்கோள்காட்டி தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.