Skip to main content

"எஸ்.பி.பிக்கும் எனக்கும் ஏற்பட்ட முரண்பாடுகள்!" - பகிராததை பகிரும் கவிப்பேரரசு வைரமுத்து 

Published on 08/10/2020 | Edited on 08/10/2020
vairamuthu with spb concert

 

"என்னைப் பாடாய்ப் படுத்திய எஸ்.பி.பி.!” - கவிப்பேரரசு வைரமுத்து பகிரும் நினைவுகள்

 

கடந்த கட்டுரையில் கவிப்பேரரசு பகிர்ந்த நினைவுகளின் தொடர்ச்சியாக எஸ்.பி.பியுடன் பணியாற்றிய அனுபவங்களை பகிர்கிறார்...

 

"ஒலிப்பதிவு அறைக்குள் அவரும் நானும் அமர்ந்து கொள்வோம். நான் பாடலைச் சொல்லச் சொல்ல, அவர் கால் மேல் கால் போட்டுக் கொண்டு, மடியில் ஒரு நோட்டை வைத்துக் கொண்டு, தனது தாய்மொழியான தெலுங்கில் எழுதிக்கொள்வார். தாய்மொழியின் மீது அவர் வைத்திருந்த மதிப்பின் அடையாளம் அது. நான் மூன்று பக்கத்திற்கு எழுதிவைத்துச் சொல்வதை அவர் ஒரே பக்கத்தில் எழுதிக்கொள்வார். அப்படித்தான் நான் என் முதல் பாடலையும் அவரிடம் சொன்னேன். அப்போது, 'வானம் எனக்கொரு போதிமரம்' என்ற என் வரியைக் கேட்டதும், என்னை நிமிர்ந்து பார்த்துச் சிரித்து ரசித்தார். "வாட் எ பியூட்டிஃபுல் லைன்'’ என்றார். அந்தப் பாடலுக்கான மூன்றாம் பல்லவியாக...

'இரவும் பகலும் யோசிக்கிறேன்
எனையே தினமும் பூசிக்கிறேன்
சாலை மனிதரை வாசிக்கிறேன்
தீயின் சிவப்பை நேசிக்கிறேன்’

 

- என்று எழுதியிருந்தேன். ஆனால், பாட்டுக்கு நேரமில்லை என்பதால் மூன்றாம் சரணம் ஒலிப்பதிவாகவில்லை. எனினும், அந்தச் சரணத்தை ஆஹா போட்டு வெகுவாக ரசித்த எஸ்.பி.பி., மேடைகளில் பாடும் போதெல்லாம் அந்த மூன்றாவது சரணத்தையும் பாடிவிட்டுத்தான் நிம்மதியடைவார். அது அந்தக் கலைஞனின் அதீத ரசனைக்கு அடையாளம்.

 

எஸ்.பி.பி முதலில் நல்ல ரசிகர். பண்பாளர். சொல்லும் சொற்களில் கனியிருக்கக் காய் கவராதவர். இன்சொல்லில் மட்டுமே உரையாடக் கூடியவர். என் வளர்ச்சியில் அவர் குரலுக்குப் பெரும்பங்கு இருக்கிறது என்பதை நக்கீரன் மூலமாக உலகத் தமிழர்களுக்கு நன்றியோடு தெரிவித்துக்கொள்கிறேன்.

 

பதினாறு இந்திய மொழிகளில் பாடிய உலகச் சாதனையாளர் எஸ்.பி.பி. அதனால், பாடல் பதிவு தொடங்குவதற்கு முன்பு, நேரம் கொஞ்சம் கிடைத்தாலும் பிறமொழிகளில் அவர் பாடிய - ரசித்த சமகாலப் பாடல்களின் உயரம் எப்படி என்பதை அவருடன் உரையாடித் தெரிந்துகொள்வேன். தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஏனைய மொழிகளில் பாடிக்கொண்டிருந்த அவர், அவ்வாறு பாடிய பாடல்களின் கற்பனை நயத்தை என்னிடம் ரசனையோடு விவரிப்பார். அதன்மூலம், என் உயரத்தை நானே சரி பார்த்துக் கொள்வேன். அப்படி ஒருமுறை அவர் சொன்ன ஒரு இந்திப் பாடலின் பல்லவி என்னை வியக்க வைத்தது. காதல் தோல்வியடைந்த அந்தக் கதாநாயகி ஜன்னலோரத்தில் நின்றுகொண்டிருக்கிறாள். வெளியே மழை கொட்டிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பாடல் தொடங்குகிறது.

'இன்று பூமியில் இரண்டு மழை
விண்ணிலிருந்து ஒரு மழை - என்
கண்ணிலிருந்து ஒரு மழை'

 

- என்று எழுதியிருந்தார் அந்தப் பாடலாசிரியர். அதைக் கேட்டு, ஆஹா என்று என்னையும் ரசிக்க வைத்தார். இதுபோன்ற அவருடனான உரையாடல்கள், உரையாடுபவர்களையும் தரமுயர்த்தக் கூடியதாகும். பாடலில் இடம்பெறும் ஒற்றெழுத்துக்கள் தொடர்பாக மெல்லிய முரண்பாடுகள் எனக்கும் அவருக்கும் முளைத்ததுண்டு. அவர் மீதிருந்த மதிப்பின் காரணமாகத் திருத்தங்களை ஒலிபெருக்கியில் சொல்லாமல் காதோடு சொல்லவேண்டும் என்று நினைப்பேன். 'ரோஜா' படத்தில், ஏ.ஆர்.ரகுமானுக்கு அவர் முதன் முதலாகப் பாடிய பாடல் 'காதல் ரோஜாவே, எங்கே நீ எங்கே?' அந்தப் பாடலில், "கண்ணுக்குள் நீதான்... கண்ணீரில் நீதான்... கண்மூடிப் பார்த்தால்... நெஞ்சுக்குள் நீதான்...'’ என்பதில் கண்மூடிப் பார்த்தாலில் "ப்'’ அவருக்கு வரவில்லை. நான், ஒலிப்பதிவு அறைக்குள் சென்று அவர் காதருகே 'ப்' வரவில்லை. 'ப'வின் மீது 'ப்'பைப் போட்டுப் பாடுங்கள் என்றேன். அதற்கு அவர் மெதுவாக... இ"ப்'ப வரும் என்று சொன்னார். பிறகுதான் உச்சரிப்பு சரியாக வந்தது.

 

இப்படி அவரது உச்சரிப்பில் தவறு வந்துவிடக்கூடாது என்று நான் அதிக கவனம் கொள்வேன். ஏனெனில், களிப்பூட்டுவது மட்டுமே கலையின் வேலையன்று. அது கற்றுக்கொடுக்கவும் வேண்டும். உச்சரிப்பைக் கற்றுக் கொடுப்பதில் பாடல்கள்தான் பாமரர்களின் பள்ளிக் கூடங்கள். பாடலில் ஒற்றுப்பிழை நேர்ந்தால், அதுதான் சரி என்று மொழிப்பிழை நியாயப் படுத்தப்பட்டுவிடும். அதனால்தான் பாடகர்களின் தமிழ் உச்சரிப்பில் நான் பிடிவாதமாக இருக்கிறேன். இந்த வகையில், கடந்த அரை நூற்றாண்டாகத் தமிழர்களுக்குத் தமிழ் சொல்லிக் கொடுக்கும் ஆசானாகவும் திகழ்ந்தவர் எஸ்.பி.பி. எந்த மொழியில் பாடினா லும், அதைத் தனது தாய்மொழி போல் உச்சரிக்கும் ஆற்றலை வளர்த்துக்கொண்டவர் அவர். 

 

 

Next Story

“சில வாரங்கள்; ஐந்தாண்டுகள்” - தேர்தல் குறித்து தனது ஸ்டைலில் வைரமுத்து

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
vairamuthu about election vote

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெறவுள்ள நிலையில், முதற்கட்ட வாக்குப் பதிவு நாளை (19.04.2024) தொடங்குகிறது. இதில் தமிழகம் உள்பட 21 மாநிலங்களில் மொத்தம் 102 மக்களவைத் தொகுதிகள் அடங்கும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டதையடுத்து நேற்று மாலை 6 மணியுடன் தேர்தல் ஆணையத்தின் விதிப்படி பிரச்சாரத்தை முடித்துக் கொண்டனர். 

இதனிடையே வாக்குரிமையின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கும் வகையில் திரைப் பிரபலங்கள் பேசி வருகின்றனர். ஏற்கனவே விஜய் சேதுபதி, “நமக்காக இல்லைன்னாலும் நம்ம குழந்தைகளோட எதிர்காலத்திற்கும், நம்ம அடுத்த தலைமுறையோட எதிர்காலத்திற்கும் நிச்சயமா ஓட்டு போட வேண்டும். காசு வாங்கிட்டு ஓட்டு போடுவது, காசுக்காக ஓட்டை விற்பது எவ்ளோ பெரிய துரோகமோ, அதை விட பச்சை துரோகம் ஓட்டு போடாமல் இருப்பது” என விழிப்புணர்வு வீடியோவை வெளியிட்டிருந்தார். பின்பு விஜய் ஆண்டனியும் சமீபத்திய செய்தியாளர்கள் சந்திப்பு அனைத்திலும் அனைவரும் ஓட்டு போட வேண்டும் என வலியுறுத்தி வந்தார். 

இவகளைத் தொடர்ந்து ஜெய் பீம் இயக்குநரும், “வாக்குரிமை என்பது என் உரிமைகளைக் காத்து, உணர்வுகளைப் புரிந்து ஆட்சி செய்கிற ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கும் சமூகக் கடமை” என அவரது எக்ஸ் வலைதளத்தில் குறிப்பிட்டு இந்தியா கூட்டணிக்கு அனைவரும் வாக்களிக்குமாறு வேண்டுகோள் வைத்தார்.

இந்த வரிசையில் தற்போது வைரமுத்துவும், அவரது எக்ஸ் பக்கத்தில் வாக்குரிமையின் முக்கியத்தும் குறித்து பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், “விரலில் வைத்த கருப்புமை நகத்தைவிட்டு வெளியேறச் சில வாரங்கள் ஆகும். பிழையான ஆளைத் தேர்ந்தெடுத்துவிட்டால் அநீதி வெளியேற ஐந்தாண்டுகள் ஆகும். சரியான நெறியான வேட்பாளருக்கு வாக்களியுங்கள். வாக்கு என்பது நீங்கள் செலுத்தும் அதிகாரம்” என குறிப்பிடப்பட்டுள்ளது. 

Next Story

“எறிகணைகள், கிழவியின் கூடையை உடைக்கின்றன” - வைரமுத்து 

Published on 15/04/2024 | Edited on 15/04/2024
vairamuthu about israel iran issue

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பினர் இடையே நடைபெற்று வரும் போர் இன்னும் நீடித்து கொண்டே இருக்கிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் தேதி காசாவிலிருந்து ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதலில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேலும் 240 பேரை ஹமாஸ் அமைப்பினர் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், இஸ்ரேல் அதிதீவிரமான தாக்குதலை தற்போது வரை நடத்தி வருகிறது. ஹமாஸ் அமைப்பை மையமாகக் கொண்டு காசா நகர் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 30 ஆயிரம் பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டபோது, பிணைக் கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த இஸ்ரேலியர்கள் சிலர் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள பிணைக் கைதிகளில் 31 பேர் உயிரிழந்துள்ளதாக ஹமாஸ் அமைப்பு தெரிவித்திருந்தது.

இந்தப் போரில் அதிகளவில் பெண்களும், குழந்தைகளுமே உயிரிழந்துள்ளதாக ஐ.நா கவலை தெரிவித்துள்ளது. இதுவரை 30,000க்கும் அதிகமானோர் பலியாகி உள்ளதாகவும், 60,000க்கும் மேற்பட்டோர்  படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், போர் நிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வர, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

இதனிடையே, சிரியா தலைநகர் டமாஸ்கஸ் நகரில் உள்ள ஈரானின் தூதரகம் மீது இஸ்ரேல் படைகள் கடந்த வாரம் அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்தத் தாக்குதலில், புரட்சிப்படை மூத்த தளபதி உள்பட 13 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து இந்த நிலையில் இஸ்ரேல் மீது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. 200 க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் ராக்கெட்டுகளை ஏவி வான்வெளி தாக்குதலை நடத்தியிருக்கிறது. ஏற்கெனவே இஸ்ரேலிய சரக்கு கப்பலை ஈரான் சிறைபிடித்திருந்த நிலையில், தற்போது ஈரான் வான்வெளி தாக்குதலை தொடங்கியுள்ளது. ஆனால் ஈரான் தாக்குதலால் இஸ்ரேலியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சிரியா, லெபனான் எல்லை பகுதியில் வசிக்கும் இஸ்ரேல் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் மத்திய கிழக்கில் போர் பதற்றம் நிலவி வருகிறது.

இந்த நிலையில் ஈரான் தாக்குதலுக்கு எதிராக இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியுள்ளது. ஈரானின் ட்ரோன்களை இடைமறித்து அழித்து வருவதாக அமெரிக்க பாதுகாப்புதுறை தெரிவித்துள்ளது. இதனிடையே ஈரான் தாக்குதலை தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் வெள்ளை மாளிகையில் வெளியுறவுத்துறை பாதுகாப்பு அதிகாரிகளுடன் அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கவலை தெரிவித்தது. மேலும் உடனடியாக மோதலை நிறுத்தி, வன்முறையை கைவிட்டு அமைதிக்குத் திரும்ப வேண்டும் என அறிக்கை வெளியிட்டுருந்தது. 

vairamuthu about israel iran issue

இந்த நிலையில் கவிஞர் வைரமுத்து இஸ்ரேல் - ஈரான் இடையே நடக்கும் தாக்குதல் குறித்து அவரது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டிருப்பதாவது, 

“இஸ்ரேல் மீது ஈரானும்
ஹமாஸ் மீது இஸ்ரேலும்
விசிறியடிக்கும் எறிகணைகள்,
பாப்பாரபட்டியில்
ஈயோட்டிக்கொண்டு
பலாச்சுளை
விற்றுக்கொண்டிருக்கும்
பஞ்சக் கிழவியின்
கூடையை உடைக்கின்றன

உலகப் பொருளாதாரம்
பின்னல் மயமானது

உலகு தாங்காது

நிறுத்துங்கள் போரை
ஐ.நாவால் முடியாது;
அவரவர் நிறுத்தலாம்” என பதிவிட்டுள்ளார். 

ஏற்கெனவே கடந்த ஆண்டு இஸ்ரேல் - காசா தாக்குதல் குறித்து, “யுத்த களத்தில் நம் தமிழ்ப் பாடல் ஒலிக்கட்டும்” எனக் குறிப்பிட்டு 'புத்தம் புது பூமி வேண்டும்...'(திருடா திருடா) என்ற பாடலை மேற்கோள்காட்டி தனது எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவை பகிர்ந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.