Skip to main content

போயஸ் கார்டன் விஷயத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு சசிகலா அனுப்பிய தகவல்... சசிகலாவின் மனநிலை என்ன... வெளிவந்த தகவல்!

Published on 01/06/2020 | Edited on 01/06/2020

 

jj


ஜெயலலிதாவின் நேரடி வாரிசுகளாக அவரது அண்ணன் மகன் தீபக்கையும் மகள் தீபாவையும் அறிவித்திருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம். இதனால், போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதாவின் வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்றும் அரசின் அவசரச் சட்டம் கேள்விக்குறியாகியிருக்கிறது.
 


வாரிசுகள் அடையாளப் படுத்தப்பட்டிருப்பதால் ஜெ.வின் சொத்துகள் என்னவாகும்? அ.தி.மு.க.வினரின் ’ஆலயமாக’ இருந்த போயஸ்கார்டன் பங்களா தீபா வசமாகிறதா? ஜெ.வுடன் 35 ஆண்டு காலம் அதே பங்களாவில் வசித்த சசிகலாவின் மனநிலை என்ன? என்கிற கேள்விகள் அ.தி.மு.க.வில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கும் நிலையில், சொத்துகளுக்கு சொந்தம் கொண்டாடி ’வளர்ப்பு மகன்’சுதாகரன் வழக்கு போடவிருப்பதாக மன்னார்குடி வட்டாரங்களில் எதிரொலிக்கின்றன.

ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க, நிர்வாகிகளாக தங்களை நியமிக்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார், சசிகலா குடும்பத்துக்கு நெருக்கமானவரும் அ.ம.மு.க.விலிருந்து விலகி மீண்டும் அ.தி.மு.க.வில் ஐக்கியமாகிவிட்ட வழக்கறிஞர் பெங்களூரு புகழேந்தி. இந்த வழக்கில் எதிர்மனுதாரர்களாக ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயராமனின் வாரிசுகளான தீபா, தீபக் இருவரும் இணைந்துகொண்டதோடு ஜெ.வின் சொத்துக்களுக்கும் சொந்தம் கொண்டாடினர்.
 

jj


ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் பங்களாவை நினைவு இல்லமாக மாற்றும் அவசர சட்டத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பிறப்பித்திருந்த நிலையில், இந்த வழக்கில் 27ஆம் தேதி உத்தரவிட்ட சென்னை உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் நீதிபதிகள் கிருபாகரன் மற்றும் அப்துல் குத்தூஸ், "அ.தி.மு.க. உறுப்பினர்கள் என்பதற்காக ஜெயலலிதாவின் சொத்துகளை நிர்வகிக்க மனுதாரர்கள் உரிமை கோர முடியாது. அவர்களது மனு நிராகரிக்கப்படுகிறது. முதல்வரின் இல்லம் மற்றும் அலுவலகமாகவே போயஸ்கார்டன் வீடு பயன்படுத்தப்பட்டுள்ளது. நினைவிடமாக மாற்றுவதற்கு பதில் முதல்வரின் அதிகாரப்பூர்வ இல்லம் மற்றும் அலுவலகமாக மாற்ற அரசு பரிசீலிக்க பரிந்துரைக்கிறோம். நினைவில்லமாக மாற்றுவதில் அரசு உறுதியாக இருந்தால் இல்லத்தின் ஒரு பகுதியை மாற்றலாம். மீதி பகுதியை முதல்வர் இல்லமாக மாற்றலாம். ஜெயலலிதாவுக்கு திருமணமாகாததால், அவரது சகோதரரின் குழந்தைகளான தீபக், தீபா இருவரும் வாரிசுரிமை சட்டப்படி இரண்டாம் நிலை வாரிசுதாரர்களாக அவர்களே இருக்கின்றனர். அவர்களுக்குத்தான் சொத்துக்களை நிர்வகிக்கும் உரிமை உண்டு''  என உத்தரவிட்டனர். (சில நாட்களுக்கு முன்பு அந்தத் தீர்ப்பைத் திருத்தி நேரடி வாரிசாக தீபக்கும், தீபாவும் அறிவிக்கப்பட்டனர்)
 

jj


நீதிமன்ற உத்தரவை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு உடனடியாகத் தெரிவித்திருந்தார் அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய்நாராயண். உத்தரவின் தன்மை குறித்து அவரிடம் விவாதித்த எடப்பாடி, சட்ட அமைச்சர் சி.வி. சண்முகத்தைத் தொடர்பு கொண்டும் ஆலோசித்துள்ளார்.

இதுகுறித்து நாம் விசாரித்தபோது, "நீதிமன்றத்தின் உத்தரவுகள் குழப்பமாக இருக்கிறது. நினைவில்லமாக மாற்றலாம் அல்லது மாற்றக்கூடாது என தீர்க்கமாகச் சொல்வதற்குப் பதில், ஒரு பகுதியை நினைவில்லமாகவும், மற்ற பகுதிகளை முதல்வரின் இல்லமாகவும் மாற்றுங்கள் எனச் சொல்லியிருப்பது ஏற்புடையதல்ல. முதல்வர் இல்லமாக, அலுவலகமாக மாற்றினால் ஒரு வேளை ஆட்சி மாறுகிறபோது அப்போதையை ஆட்சியாளர்கள் இந்த பங்களாவை முதல்வர் இல்லமாக பயன்படுத்துவார்களா என்பதற்கு உத்தரவாதம் கிடையாது.

தவிர, ஒரு பகுதியை நினைவில்லமாகவும், மறு பகுதியை முதல்வர் அலுவலகமாகவும் மாற்ற பரிசீலிக்குமாறு அரசுக்கு நீதிபதிகள் பரிந்துரை செய்திருக்கிறார்களே தவிர தீர்ப்பாக சொல்லவில்லை. வாரிசுதாரர்களின் பிடியில் போயஸ் கார்டன் இல்லம் போகாமல் தடுக்க வேறு வழியே இல்லை என்கிற நிலையில் பரிசீலிக்கலாம். எந்தச் சூழலிலும் நினைவில்லமாக மாற்றுவதிலிருந்து பின்வாங்கிவிடக்கூடாது. தற்போதைய நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்யலாம்.

அவசரச் சட்டத்துக்கு கவர்னர் ஒப்புதல் தந்திருப்பதால் அதனைச் சட்டமன்றத்தில் நிறைவேற்றுவதன் மூலம் நமது நிலையில் உறுதியாக இருப்போம். மேல் முறையீட்டிலும், இரண்டாம் நிலை வாரிசுகளுக்குத்தான் சொந்தம் என்பது உறுதியானால், சொத்தின் மதிப்பின்படி அவர்களுக்கு செட்டில் மெண்ட் செய்துவிட்டு, இல்லத்தை அரசுடமையாக்கப் போடப் பட்டுள்ள அரசாணையை நடை முறைப்படுத்தவோ அல்லது அ.தி.மு.க.வின் சொத்தாக மாற்றவோ நடவடிக்கை எடுக்கலாம்.
 

deepa


வாரிசுதாரர்களுக்கு இழப்பீடு வழங்கும் நிலையில், சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவிற்கு விதிக்கப்பட்டுள்ள அபராத தொகை 100 கோடியையும் வாரிசுதாரர்கள்தான் செலுத்த வேண்டியது வரும். அவர்களால் 100 கோடி ரூபாயைக் கட்ட முடியாது. அதனால், சொத்துகளை ஏலம் விட்டுத்தான் அபராத தொகையை நீதிமன்றம் எடுக்கும். போயஸ்கார்டன் இல்லம் ஏலத்திற்கு வராமல் சட்டரீதியான முயற்சிகளையும் கட்சி ரீதியான நடவடிக்கைகளையும் எடுப்பது அவசியம் என பல ஆலோசனைகளைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள்''’ என்கிறார்கள் மூத்த அமைச்சர்களோடு தொடர்புடைய அ.தி.மு.க. சீனியர்கள்.
 


இப்படி ஒரு உத்தரவு வரும் என்பதை அறிந்துதான் அவசரச் சட்டத்திற்கு ஆளுநரின் ஒப்புதலை அவசரம் அவசரமாக எடப்பாடி வாங்கினார் எனவும் சொல்கின்றனர். இந்த நிலையில், ஜெ.வின் வாரிசுதாரர்களை உயர்நீதிமன்றம், அடையாளப்படுத்தியிருப்பதால், சுதாகரனை வைத்து ஒரு விளையாட்டை துவக்க சசிகலா குடும்பத்தினர் ஆலோசிப்பதாகத் தகவல்கள் பரவியுள்ளன.

இது குறித்து சசிகலா உறவுகள் தரப்பில் விசாரித்தபோது, "1991-96 காலகட்டத்தில் சசிகலாவின் அக்காள் வனிதாவின் மூன்றாவது மகன் சுதாகரனுக்கும் நடிகர் திலகம் சிவாஜிகணேசனின் பேத்தி சத்யலட்சுமியை மணமுடிக்க சிவாஜியின் அன்னை இல்லத்தில் திருமண ஓலை எழுதப்பட்டது. ஜெயலலிதா தலைமையில் நடந்த அந்த நிகழ்வில், திருமண ஓலை எழுதப்பட்ட போது, இன்னார் மகன் என சுதாகரனை அய்யர் விளித்தபோது குறுக்கிட்ட ஜெயலலிதா, வனிதா-விவேகானந்தனின் மகன் மட்டுமல்ல; சுதாகரன் என் வளர்ப்பு மகன் என எழுதுமாறு கேட்டுக்கொண்டார். அதன்படி வளர்ப்பு மகனானார் சுதாகரன். அதன்பிறகு, போயஸ்கார்டனில் வனிதா-விவேகானந்தன் உள்ளிட்ட சசிகலா உறவினர்கள் முன்னிலையில் சில சடங்குகள் மூலம் 1995-இல் வளர்ப்பு மகனாக சுதாகரனை சுவீகாரம் செய்து கொண்டார் ஜெயலலிதா. அதன்பிறகு வளர்ப்பு மகனின் திருமணத்தை எந்தளவுக்கு ஆடம்பரமாக ஜெயலலிதா நடத்தினார் என்பது உலகமறியும்.

ஆனால், 1996 தேர்தல் தோல்விக்கு சசிகலா குடும்பம்தான் காரணம் எனச் சொல்லி, சசிகலா குடும்பத்தினரை கார்டனிலிருந்து வெளியேற்றிய நிலையில், 1996, ஆகஸ்டில் சுதாகரன், தனது வளர்ப்பு மகன் இல்லை’என அறிவித்தார். சுதாகரன் மீது கஞ்சா வழக்கெல்லாம்கூட போடப்பட்டது. இதெல்லாம் ஜெயலலிதா தனது இமேஜ் பாதுகாப்புக்காகவும் வேறு சில காரணங்களுக்காகவும் எடுத்த நடவடிக்கை. எல்லோர் குடும்பத்திலும் இருக்கும் தாய்-பிள்ளைக்கான தகராறுதான். அதனால், வளர்ப்பு மகன் என்கிற அஸ்திரத்தைப் பயன்படுத்தி தீபா, தீபக் வகையறாக்களுக்கு ஜெ.வின் சொத்துகள் செல்வதைத் தடுக்க தற்போது திட்டமிடப்படுகிறது. இதற்காக, சட்டரீதியான யோசனைகளைச் சிறையிலுள்ள சசிகலாவிடம் தெரிவிக்க முயற்சித்து வருகின்றனர் அவரது குடும்பத்தினர்'' என்கிறார்கள்.

ஜெயலலிதாவின் சொத்துகளை வளர்ப்பு மகன் சொந்தம் கொண்டாட முடியுமா? என்கிற கேள்வியை மூத்த வழக்கறிஞர்களிடம் நாம் கேட்டபோது, ஒரு பெண் மரணமடைந்து விட்டால் அவருடைய சொத்துகள் வாரிசுரிமைச் சட்டப்படி, அந்தப் பெண்ணின் கணவர் மற்றும் பிள்ளைகள்தான் வாரிசுதாரர்கள். கணவரும் பிள்ளைகளும் இல்லாத சூழலில், அந்தப் பெண்ணின் பெற்றோர்களுக்குப் போய்ச்சேரும். ஜெயலலிதாவை பொறுத்தவரை அவரது பெற்றோர்களும், அவருடன் பிறந்தவர்களும் உயிருடன் இல்லை. தவிர, ஜெயலலிதாவுக்கு திருமணமும் ஆகவில்லை. அந்த வகையில், ஜெயலலிதாவின் சொந்த உடன்பிறப்புகளின் வாரிசுகள் இருந்தால் அவர்கள்தான் சட்டப்படி சொத்துக்களுக்கு உரிமை கொண்டாட முடியும்.

அதே சமயம், தனிப்பட்ட முறையில் தனது சொத்துகள் குறித்து ஜெயலலிதா உயில் எழுதியிருந்தாலோ அல்லது தனது வாரிசாக ஒரு குழந்தையைத் தத்து எடுத்திருந்தாலோ அதுதான் முதன்மைப்படுத்தப்படும். உயிலில் யாருடைய பெயர் குறிப்பிடப்பட்டுள்ளதோ அவர்களும் தத்து எடுக்கப்பட்ட வாரிசுகளும்தான் சொத்துக்களுக்கான வாரிசுதாரர்கள். எழுதப்பட்ட உயில் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்படாமலிருந்தால் கூட உயிலுக்கு ஆயுள் உண்டு. ஆனால், உயிலை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டால், உயிலின் தன்மை குறித்து சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்க வேண்டிய பொறுப்பு உயிலில் பெயர் குறிப்பிட்டுள்ளவர்களின் பொறுப்பு.

ஜெயலலிதா விவகாரத்தில் உயில் எழுதப்பட்டிருப்பதாக உறுதியான தகவல் எதுவும் இல்லை. அதேசமயம், சுதாகரனை வளர்ப்பு மகனாக ஜெயலலிதா அறிவித்தாரே தவிர, அவரை முறைப்படி தத்து எடுத்துக்கொள்ளவில்லை. ஏனெனில், சுதாகரனை சட்டப்படி தத்து எடுக்க முடியாது என்பதால்தான். அதாவது, ஒரு குழந்தையை தத்து எடுப்பதற்கு சட்டத்தில் பல நிபந்தனைகள் இருக்கின்றன. குறிப்பாக, குழந்தை தத்து எடுப்பு சட்டத்தின்படி, ஒரு பெண், ஒரு ஆண் குழந்தையை தத்து எடுக்கும் போது, அந்தப் பெண்ணுக்கும் குழந்தைக்கும் குறைந்தபட்சம் 21 வயது வித்தியாசம் இருக்க வேண்டும். மேலும், 15 வயதுக்கு குறைவானதாக அந்தக் குழந்தை இருக்க வேண்டும்.

அந்த வகையில், சுதாகரனை வளர்ப்பு மகனாக ஜெயலலிதா அறிவித்த போது அவர் சுமார் 27, 28 வயதுள்ளவராக இருந்திருக்கிறார். அதனால் தான் சுதாகரனை ஜெயலலிதாவால் தத்து எடுக்க முடியாமல் வளர்ப்பு மகன் என அறிவித்தார். ஒரு கட்டத்தில் வளர்ப்பு மகன் இல்லை எனவும் தெரிவித்துள்ளார். ஆக, சுதாகரன் ஜெயலலிதாவின் தத்துப்பிள்ளை கிடையாது என்பதால் சட்ட ரீதியான வாரிசாக அவர் இருக்க முடியாது; சொத்துகளை சொந்தம் கொண்டாட உரிமை கோரவும் முடியாது. சசிகலா தரப்பிலோ அல்லது சுதாகரன் தரப்பிலோ கோர்ட்டில் வழக்கு போட்டாலும் மனு நிராகரிக்கப்படவே வாய்ப்பு இருக்கிறது'' என்கிறார்கள்.
 

 

admk


எந்தக் கோணத்தில் பார்த்தாலும் ஜெயலலிதாவின் அண்ணன் வாரிசுகளுக்கே ஜெ.வின் சொத்துகள் செல்வதற்கு வாய்ப்பு அதிகமிருக்கும் நிலையில், ஜெயலலிதாவிற்கான சொத்துகள் எவ்வளவு என ஆராய்ந்தபோது, கடந்த 2016 சட்டமன்ற தேர்தலில் அவர் போட்டியிட்டபோது அவர் தாக்கல் செய்துள்ள பிரமாணப் பத்திரத்தின்படி, அசையும் அசையா சொத்துக்களின் மொத்த மதிப்பு 188 கோடி ரூபாய்தான். தேர்தல் ஆணையத்தில் ஜெயலலிதா சொல்லியுள்ள கணக்கு இது. ஆனால், அவரின் சொத்துக்களின் மதிப்பு பல ஆயிரம் கோடிகள் இருக்கும் என்றே மதிப்பிடப்படுகிறது. ஏனெனில், சொத்துக்குவிப்பு வழக்கில் நீதிபதி மைக்கேல் டி குன்ஹாவால் அடையாளப் படுத்தப் பட்ட பல்வேறு நிறுவனங்களில் ஜெயலலிதா பங்குதாரராக இருந்துள்ளார். தேர்தல் ஆணையத்தில் இதையெல்லாம் குறிப்பிடவில்லை ஜெயலலிதா.
 

http://onelink.to/nknapp


இப்படிப்பட்ட சூழலில்,போயஸ்கார்டன் இல்லம் தீபா வகையறாக்களுக்குப் போகக்கூடாது என எடப்பாடிக்கு சசிகலா தகவல் அனுப்பியிருப்பதாக அ.தி.மு.க. மேலிடத்தில் சொல்லப்படுகிற நிலையில், என் அத்தை வாழ்ந்த போயஸ்கார்டன் வீட்டில் குடியேறுவேன் என சூளுரைத்திருக்கிறார் தீபா. பல ஆயிரம் கோடி மதிப்பிலான ஜெ.வின் சொத்துகள் அவரது மரணத்தைப் போலவே மர்மமாக இருக்கிறது. சசிகலாவின் விடுதலைக்குப் பிறகு, ஜெ சொத்து குறித்த பரபரப்பு மேலும் அதிகரிக்கும்.



 

Next Story

அ.தி.மு.க தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Edappadi Palaniswami appeals to ADMK volunteers

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24)தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று (19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது. 

இந்த நிலையில், கட்சி வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வேட்பாளர்களின் தனி முகவர்கள் மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தொண்டர்களுக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், “அதிமுக 1972-ஆம் ஆண்டு எம்.ஜி.ஆரால் தொடங்கப்பட்டது. இந்த இயக்கம் கண்ட முதல் வெற்றியே நாடாளுமன்ற மக்களவையின் திண்டுக்கல் தொகுதிக்கு 1973-ல் நடைபெற்ற இடைத் தேர்தல் வெற்றி தான் என்பது நமக்கெல்லாம் நன்கு நினைவில் இருக்கிறது.

இந்த இயக்கத்தின் நாடாளுமன்ற வரலாற்றில் மிக அதிகபட்சமாக, மக்களவை, மாநிலங்களவை உட்பட 49 உறுப்பினர்களை, ஜெயலலிதா காலத்தில் பெற்றிருந்தது. இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சி என்ற அங்கீகாரத்தோடு நாடாளுமன்ற மக்களவையிலும், மாநிலங்கள் அவையிலும் சிறப்புடன் பணியாற்றியதோடு ஜெயலலிதாவை தொடர்ந்து, தமிழக மக்களின் நலனுக்காக முழு அர்ப்பணிப்புடன் பணியாற்றி வரும் இயக்கம் அ.தி.மு.க.

ஒற்றை உறுப்பினராக இருந்த ஆரம்ப காலத்திலும், மூன்றாவது பெரிய கட்சியாக இருந்த நேரத்திலும், அதனைத் தொடர்ந்தும், இந்திய தேசத்தின் ஒற்றுமைக்காகவும், நாட்டின் வளர்ச்சிக்காகவும், தமிழ் நாட்டின் உரிமைகளைப் பாதுகாத்திடவும், ஏழை, எளிய, உழைக்கும் மக்கள் மற்றும் நடுத்தர வருவாய் ஈட்டும் மக்களின் முன்னேற்றத்திற்காகவும் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் குரல் கொடுத்து வரும் அதிமுக அந்த சிறப்பான பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்றிட வேண்டும் என்ற உன்னத குறிக்கோளோடு; அராஜகத்திலும், வன்முறையிலும் கைதேர்ந்த திமுக மற்றும் பா.ஜ.கவின் பல்வேறு முறைகேடுகளையும், தில்லுமுல்லுகளையும் தாண்டி, 19.4.2024 அன்று தமிழகத்தில் சுமூகமான வாக்குப் பதிவு நடைபெறுவதற்கு முழு ஒத்துழைப்பு நல்கி தேர்தல் பணியாற்றிய தலைமைக் கழகச் செயலாளர்கள், மாவட்டக் கழகச் செயலாளர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளிட்ட அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்.

வாக்குப் பதிவு நிறைவு பெற்று, மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சம்பந்தப்பட்ட வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டுவந்து வைக்கப்பட்டுள்ள நிலையில், வருகின்ற 4.6.2024 அன்று வாக்கு எண்ணி முடிவுகள் அறிவிக்கும் வரையிலும் கழக வேட்பாளர்களும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களும், கழகம் மற்றும் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், முகவர்களும் கவனக்குறைவாக இருந்திடாமல், மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை மிகுந்த எச்சரிக்கையுடனும், விழிப்புணர்வுடனும் இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.