Skip to main content

நியாயத்தின் பக்கம் நிற்கும் நெற்றிக்கண்...

Published on 10/04/2019 | Edited on 10/04/2019

காயங்கள் பட்ட போதும், களம்பல கண்ட போதும், நியாயத்தின் பக்கம் நிற்கும் நெற்றிக்கண் வாழ்க...!

 

poems about nakkheeran gopal

 

                                                       நெற்றிக்கண் வாழ்க!

                                                                                        -கவிவேந்தர் மு.மேத்தா

நக்கீரன் கோபால் என்றால்
நடமாடும் துணிச்சல் அன்றோ!
நக்கீரன் கோபால் என்றால்
நரிகட்குக் குடைச்சல் அன்றோ?


செங்கோட்டை செயிண்ட்ஜார்ஜ் கோட்டை
சீறலாம்; அஞ்ச மாட்டார்!
கங்கையும் கடலும் சேர்ந்து
கலக்கலாம்; கலங்க மாட்டார்!


ஆளுநர்க்கு அல்ல; எங்கள்
அன்னையின் பூமி! மண்ணில்
வாழுநர்க்கே என்று சொல்வார்
வாதத்தில் என்றும் வெல்வார்!


காயங்கள் பட்ட போதும்
களம்பல கண்ட போதும்
நியாயத்தின் பக்கம் நிற்கும்
நெற்றிக்க்கண் வாழ்க! வாழ்க!

 

poems about nakkheeran gopal


 


                                                      என்றென்றும் வாழியவே! 

                                                                                    -ஆரூர் தமிழ்நாடன்

ஞானமெனும் விளக்கெரிய 
நற்குணங்கள் புடைசூழ
ஈனமிகும் உலகத்தின் 
இருள்துடைக்கும் சூரியரே!


கொடைக்கரங்கள் வியர்க்கும்படி
குளிர்மிகுந்த செயல்செய்து
நடைபோடும் திசைக்கெல்லாம்
நறுமணத்தைத் தருபவரே


இதழியல் துறைவியக்க
இளைத்தோரின் கரம்பற்றி
இதயத்தால் உழைக்கின்ற
இனிமைமிகும் காவியமே!
 

ஆன்றோர்கள் கைகூப்ப
அன்பர்கள் மனம்நெகிழ
காண்போர் விழிவிரியக்
கைவீசி நடப்பவரே!
 

இவ்வுலகில் எனக்கும்
இரண்டாம் பிறப்பளித்து
செவ்விய உயிராகிச்
செங்குருதி கலந்தவரே!
 

நெற்றிக்கண்  நெருப்பெடுத்து
நீதியெனும் விளக்கெரித்து
உற்றதுணை போலிந்த
உலகிற்கு வாய்த்தவரே!
 

இதயத்தில் பூப்பூத்து
இசைநூலில் அதைக்கோத்து
விதவிதமாய்ச் சூட்டி
வித்தகரே வணங்குகிறேன்
 

உங்கள் பெருவாழ்வை 
உயிர்நெகிழ வாழ்த்துகிறோம்
எங்கள் நாயகரே!
என்றென்றும் வாழியவே!
 

அண்ணனே! எங்கள் 
அண்ணியார் கரம்பற்றி
இன்னும்பல நூற்றாண்டு
இனிதாக நடையிடுக!
 

அருமைமிகும்  பிள்ளைகள்;
அழகான குடும்பம்;
திருவுடைச் சுற்றங்கள்; 
திளைத்திருக்க நடையிடுக!
 

காலமெனும் தேவதை 
கைகூப்பி வாழ்த்துகிறாள்!
ஞாலத்தின் நல்லிசையே
நாள்தோறும் மகிழ்ந்திடுக!

 

 

poems about nakkheeran gopal


 


                                                    அண்ணா உன்னை வணங்குகிறேன்..!

                                                                                        -மக்கள் கவிஞர் ஜெயபாஸ்கரன்

அண்ணா உன்னை வணங்குகிறேன்-உன்
அறுபதை வியந்து வாழ்த்துகிறேன்.
ஓய்வறியாத உழைப்பாளி- நீ
ஊடக உலகின் போராளி!
 

கொடுக்க நீளும் கைகளை விசி
நடக்க நீளும் உன் கால்கள்!
தொடுக்க வேண்டிய போர்களுக்காக
துடித்து நிமிரும் உன் தோள்கள்!


தெருமுனையிலும் தேநீர்க் கடையிலும்
துலங்கச் சிரிக்கும் உன் பற்கள்!
உரைக்க வேண்டிய நியாயங்களுக்கு
உரத்து வெடிக்கும் உன் சொற்கள்!
 

அடக்கி உன்னை அடைக்க நினைத்தவர்
அடங்கிப் போனது கண்கூடு!
ஒடுக்கி உன்னை ஒழிக்க நினைத்தவர்
ஓய்ந்து போவதே வரலாறு!

 

தடுத்து உன்னைக் கெடுக்க நினைத்தவர்
தொலைந்து போனது கண்கூடு!
வாஞ்சையோடு நீ உறவை நட்பை
வாழ வைப்பதே வரலாறு!
 

ஊடகத் துறையின் பல்கலைக் கழகம்
உனக்குள் ஆயிரம் நூல் உண்டு!
உன்னைப் போல ஊடக உரிமை
உலகிற் களித்தவர் எவருண்டு?
 

அறமும் திறமும் கலந்து வளர்ந்த
ஆல மரம்போல் உயர்ந்தவன் நீ!
எடுக்க எடுக்கக் கொடுக்கும் கடல்போல்
எல்லைகள் இன்றி விரிந்தவன் நீ!


நல்லோர் உனக்குத் துணையாவார்!
நக்கீரன் உறவோர் உடன் வருவார்!-உன்
உன்னதப் பிள்ளைகள் யாவரும் அறிவால்
உன்னையும் கடந்து மேலுயர்வார்!

 

அறம் சூழ்ந்ததுன் வாழ்க்கைத் தரம்!-எம்
அண்ணியார் உமக்குக் கிடைத்த வரம்!-அவர்
அளந்து சொல்லும் ஒவ்வொரு சொல்லும்
அண்ணா உமக்குக் கோடிபெறும்!

 

வாழ்க வாழ்கென வாழ்த்துகிறேன்!-உன்னை
வாஞ்சையோடு நான்  போற்றுகிறேன்!
புயல்களை வீழ்த்தும் பெருமரமே!-உன்
பழங்களில் தமிழகம் நலம்பெறுமே!
 

 

 



 

Next Story

ஆர்.எம். வீரப்பன் உடலுக்கு நக்கீரன் ஆசிரியர் நேரில் அஞ்சலி (படங்கள்)

Published on 09/04/2024 | Edited on 10/04/2024

 

எம்.ஜி.ஆர். கழகத்தின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் (வயது 98) வயது மூப்பு காரணமாக சென்னையில் காலமானார். உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நக்கீரன் ஆசிரியர் முன்னாள் அமைச்சருமான ஆர்.எம். வீரப்பன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினார்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த இவர், தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா ஆகியோருடன் நெருங்கி பழகியவர் ஆவார். தமிழக முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரிடம் உதவியாளராக சேர்ந்து, அதன் பின்னர் கணக்காளராக பணியாற்றிவர். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு ஜானகி ராமச்சந்திரன் தலைமையில் அதிமுக தனி அணி உருவாக காராணமாக இருந்தவர். தமிழகத்தின் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோர் தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர் ஆர்.எம்.வீரப்பன் ஆவார்.

இவர் திரைப்பட தயாரிப்பாளர் ஆகவும் இருந்துள்ளார். அதன்படி எம்.ஜி.ஆர்., நடித்த காவல்காரன், இதயக்கனி, தெய்வத்தாய், நான் ஆணையிட்டால், ரிக்சாக்காரன் உள்ளிட்ட  படங்களையும் தயாரித்துள்ளார். ரஜினிகாந்த் நடித்த பாட்ஷா, மூன்று முகம், தங்கமகன், ராணுவ வீரன், பணக்காரன் போன்ற படங்களையும் தயாரித்துள்ளார். மேலும் சிவாஜி நடித்த புதிய வானம், கமல் நடித்த காக்கிச்சடை மற்றும் சத்யராஜ் உள்ளிட்டோர் நடித்த படங்களையும் இவரின் சத்யா மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

படங்கள் : எஸ்.பி.சுந்தர்

 

Next Story

செய்தியாளர் தாக்கப்பட்ட விவகாரம்; கைது செய்யப்பட்ட 2 பேருக்கு கால் முறிவு!

Published on 27/01/2024 | Edited on 27/01/2024
2 persons arrested in the case of attack on the journalist suffered a broken leg

திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியைச் சேர்ந்தவர் நேசபிரபு. இவர் பிரபல தனியார் தொலைக்காட்சியில் செய்தியாளராகப் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், இவர் வழக்கம்போல் கடந்த 24 ஆம் தேதி செய்தி சேகரித்துவிட்டு வீடு திரும்பியுள்ளார். அப்போது அவரைப் பின்தொடர்ந்து வந்த அடையாளம் தெரியாத சில மர்ம நபர்கள் தாங்கள் வைத்திருந்த ஆயுதத்தால் நேசபிரபுவை சரமாரியாக வெட்டி தப்பி ஓடியுள்ளனர்.

இதில் நேசபிரபு படுகாயமடைந்தார். இவரது அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர், இந்த சம்பவம் குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசாருக்குத் தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, படுகாயமடைந்த நேசபிரபுவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து காமநாயக்கன்பாளையம் போலீஸ் வழக்குப்பதிவு செய்து தாக்குதல் நடத்திய கும்பலைத் தேடி வந்த போலீஸார், 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வந்தனர். 

இந்த நிலையில், கைது செய்யப்பட்ட 2 பேருக்கும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தியபோது தடுக்கி விழுந்து காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து இருவருக்கும் பல்லடம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. சிகிச்சை முடிந்த பிறகு இன்று நீதிபதிகள் முன்பு ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.