Skip to main content

ஏன் இந்த முடிவு எடுத்தார்கள்? டாஸ்மாக் பணத்தில் அரசு ஊழியர்களுக்குச் சம்பளமா? அதிமுக மீது அதிருப்தியில் இருக்கும் பாமக!

Published on 11/05/2020 | Edited on 11/05/2020

 

pmk


சென்னையைத் தவிர்த்து தமிழகம் முழுவதும் மதுக் கடைகள் திறக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்புகளைச் சந்தித்து வருகிறது எடப்பாடி அரசு. தி.மு.க.வும் அதன் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் தமிழகம் முழுவதும் கறுப்பு உடை அணிந்து எதிர்ப்பு போராட்டத்தை நடத்தினர்.


சித்தரஞ்சன் சாலை வீட்டின் முன்பு தனது மனைவி துர்கா, மகன் உதயநிதியுடன் கண்டன முழக்கங்களை எழுப்பினார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின். அதேபோல தி.மு.க. கூட்டணி கட்சி தலைவர்கள் கி.வீரமணி, வைகோ, திருமாவளவன், காங்கிரஸ் பிரமுகர்கள், கம்யூனிஸ்ட் தலைவர்கள் பலரும் போராட்டத்தை நடத்தினர். இவற்றை முழுமையாகப் படம் பிடித்து முதல்வர் எடப்பாடிக்கு அனுப்பி வைத்தபடி இருந்தது உளவுத்துறை!
 

dmk


நம்மிடம் பேசிய திமுக கூட்டணி கட்சியான மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் ஜவாஹிருல்லா, "கரோனா பரவுதலைத் தடுக்க சமூக விலகல்தான் மிக முக்கியம் என வலியுறுத்துகிறார் முதல்வர் எடப்பாடி. அப்படி வலியுறுத்துபவர் எப்படி மதுக்கடைகளைத் திறக்க முடிவு செய்தார்? மது போதையில் தன் நிலை அறியாத நபர், எப்படித் தனி மனித விலகலைக் கடைப்பிடிப்பான்? மக்களின் பாதுக்காப்பிற்காகப் பணியாற்ற வேண்டிய காவல்துறையினரை, குடிகாரர்களுக்காகப் பணியாற்ற வைப்பது வெட்கக் கேடானது. எடப்பாடி அரசின் இந்த மக்கள் விரோத நடவடிக்கைகள் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்'' என்கிறார் மிக ஆவேசமாக.
 

pmk

 

எதிர்க்கட்சிகள் மட்டுமின்றி, கூட்டணிக் கட்சியான பா.ம.க.வும் டாஸ்மாக் திறப்பில் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்கிறது. பா.ம.க. எம்.பி. டாக்டர் அன்புமணி, "ஏழைகளின் வாழ்வாதாரங்கள் பறிக்கப்பட்டு அடுத்த வேளை சாப்பாட்டுக்கே வழியில்லை எனும் நிலையில், மதுக் கடைகளைத் திறந்தால் மனைவியின் தாலியைப் பறித்து அடகு வைப்பது உள்ளிட்ட குற்றங்கள்தான் பெருகும். தமிழக அரசின் இத்தகைய முடிவு, தவறான நேரத்தில் எடுக்கப்பட்ட தவறான நடவடிக்கை'' என்கிறார்.

மதுக் கடைகளைத் திறக்க அனுமதிக்கப்பட்டதுமே அதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில், அரசின் நிதி நெருக்கடியைச் சுட்டிக்காட்டியது எடப்பாடி அரசு. இதனையடுத்து, அரசு கடைப்பிடிக்கும் நிபந்தனைகளுடன் மேலும் சில நிபந்தனைகளை விதித்து கடைகளைத் திறக்க அனுமதியளித்துள்ளது உயர்நீதிமன்றம்.

எடப்பாடி உற்சகாமானார். இத்தனை நெருக்கடிகளில் டாஸ்மாக்கைத் திறக்க வேண்டிய அவசியம் ஏன் எனத் தமிழக அரசின் நிதித்துறை அதிகாரிகள் தரப்பில் விசாரித்தபோது, "மிக அதிகமான நிதி நெருக்கடியிலும் கடன் சுமையிலும் தொடர்ந்து சிக்கிக்கொண்டிருக்கிறது தமிழக அரசு. அரசின் செலவினங்களில் 40 சதவீதம் சமாளிப்பது டாஸ்மாக் வருவாய்தான். கடந்த நிதியாண்டில் மட்டும் 30,000 கோடியைச் சம்பாதித்துக் கொடுத்துள்ளது டாஸ்மாக்.


தமிழகத்தின் நிதியாதாரங்களில் 46 சதவீதம் நேரடி வரிவிதிப்பில் கிடைக்கும். மீதியுள்ள 54 சதவீதம் மத்திய அரசு கொடுக்க வேண்டும். ஆனால், மத்திய அரசு ஏமாற்றிக்கொண்டே இருக்கிறது. நேரடி வரி வருவாயைக் கணக்கிட் டால், தமிழக அரசுக்கு வருமானத்தை அள்ளிக் கொடுப்பது டாஸ்மாக், வணிகவரித்துறை, பத்திரப்பதிவுத் துறை, ஜி.எஸ்.டி., பெட்ரோல்- டீசல் மீதான வரி உள்ளிட்டவைகள்தான் மிக முக்கியமானவை. ஒரு மாதத்தில் 10,000 கோடி வருவாய்க் கிடைத்துக்கொண்டிருந்த நிலையில், ஊரடங்கினால் 10 சதவீத வருவாய்கூட கிடைக்கவில்லை.

தலைமைச்செயலாளர் சண்முகம், நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் இருவரும் கடந்த வாரம் எடப்பாடியைச் சந்தித்தனர். மத்திய அரசிடமிருந்து பேரிடர் கால நிதி, ஜி.எஸ்.டி நிலுவைத் தொகை ஆகியவை வலியுறுத்தியும் வராத நிலையில், அரசு ஊழியர்களுக்கு அடுத்த மாதம் சம்பளம் போடுவதுகூட கடினமாகி விடும். ஓய்வூதியதாரர்களுக்கான தொகை, வாழ்வாதாரம் இழந்துள்ளவர்களுக்கான நிவாரணம் என அனைத்தும் முடங்கும் ஆபத்து இருக்கிறது என வலியுறுத்தியிருக்கிறார்கள்.

இதனைச் சமாளிக்க, உலக வங்கி மற்றும் சர்வதேச நிதியும் உள்ளிட்ட அமைப்புகளில் கடன் பெறுவது தொடர்பாக ஆலோசனை நடந்த நிலையில்தான், மதுபானக்கடைகளைத் திறக்க மத்திய அரசு க்ரீன் சிக்னல் தர, பல மாநிலங்களும் திறந்து வைக்க, அண்டை மாநிலங்களில் குவிந்த தமிழக குடிமகன்கள் அரசுக்கு காரணம் காட்ட எளிதாகிவிட்டனர்.
 

pmk


சண்முகம், கிருஷ்ணன் மற்றும் உள்துறை செயலாளர் பிரபாகர், டி.ஜி.பி. திரிபாதி உள்ளிட்ட உயரதிகாரிகளோடு அவசர ஆலோசனை நடத்தினார் எடப்பாடி. அதில்தான் தமிழகத்திலும் மதுக் கடைகளைத் திறப்பது என்கிற முடிவு எடுக்கப்பட்டது. உரிய நடவடிக்கைகளை டி.ஜி.பி. திரிபாதி எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார் எடப்பாடி. வயதுவாரியாக நேரக் கட்டுப்பாடும் முடிவு செய்யப்பட்டது.
 

http://onelink.to/nknapp


கவர்னரிடமிருந்து அழைப்பு வர, அவருடனான சந்திப்பிலும் நிதி நெருக்கடியைச் சுட்டிக்காட்டினார் சண்முகம். ஆனால், மதுக் கடைகள் திறப்பதில் கவர்னருக்கு உடன்பாடில்லை என்பதனால் சென்னையைத் தவிர்த்தனர் அதிகாரிகள். ஆக, டாஸ்மாக் திறப்பின் பின்னணி இதுதான். கரோனாவைத் தடுப்பதில் அரசு தள்ளாடினாலும், மதுக் கடைகளைத் திறக்கும் முடிவில் தெளிவாக இருந்துள்ளனர் எனச் சுட்டிக்காட்டுகிறார்கள் நிதித்துறையினர். இதற்கிடையே, மதுபான தொழிலதிபர்களில் சிலர் சமீபத்தில் எடப்பாடியிடம் மிக ரகசியமாக விவாதித்துள்ளனர் என்கிற தகவல் உயரதிகாரிகளிடம் அலையடிக்கிறது.


 

Next Story

'தாதுக் கொள்ளையை தமிழக அரசு வேடிக்கைப் பார்ப்பது ஏன்?'-பாமக அன்புமணி கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'Why does the Tamil Nadu government make fun of mineral theft?'-pmk Anbumani asked


'கோவையிலிருந்து கேரளத்திற்கு கனிம வளங்கள் கடத்தப்படுவதை தமிழக அரசு வேடிக்கைப் பார்ப்பது ஏன்?'என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கோவை மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய கூடலூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் இருந்து அண்டை மாநிலமாக கேரளத்திற்கு நூற்றுக்கணக்கான சரக்குந்துகளில் கனிமவளங்கள் கொள்ளையடித்துச் செல்லப்படுகின்றன. இதற்கு எதிராக பொதுமக்கள் போராட்டம் நடத்தியும், கடத்தல்காரர்களை பிடித்துக் கொடுத்தும் அவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்க மறுப்பது கண்டிக்கத்தக்கது.

கூடலூர் நகராட்சிக்கு உட்பட்ட கட்டாஞ்சி மலை அடிவாரத்தில் உள்ள செல்வபுரம் பகுதியில் கடந்த  26 ஆம் தேதி அதிகாலையில் இரு ஜே.சி.பி எந்திரங்கள் மூலம் கனிமவளங்கள் தோண்டி எடுக்கப்பட்டு 7 சரக்குந்துகள் மூலம் கேரளத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இதையறிந்த அப்பகுதி பொதுமக்களும், கட்டாஞ்சி மலை காணுயிர் பாதுகாப்பு சங்கத்தினரும் ஒன்று திரண்டு, கனிம வளங்களை கொள்ளை அடித்துச் சென்ற சரக்குந்துகளை சிறை பிடித்து காவல்துறை, வருவாய்த்துறை, வனத்துறை, கனிம வளத்துறை ஆகியவற்றின் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதனடிப்படையில் காவல்துறையினர் மட்டும் தான் விரைந்து வந்து கடத்தல் சரக்குந்துகளை கைப்பற்றிச் சென்றனர். பிற துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தை இதுவரை திரும்பிக் கூட பார்க்கவில்லை.

அண்மைக்காலங்களில் கூடலூர் பகுதி மணல் உள்ளிட்ட கனிமவளக் கொள்ளை நடப்பது இது முதல் முறையல்ல. தமிழ்நாடு முழுவதும் கடந்த 19 ஆம் தேதி மக்களவைத் தேர்தல்கள் நடைபெற்று கொண்டிருந்த போது கூடலூர் பகுதியிலிருந்து ஏராளமான சரக்குந்துகள் மூலம் கேரளத்திற்கு கனிம வளங்கள் கொள்ளையடித்துச் செல்லப்பட்டன. அதற்கும் முன்பும் பல ஆண்டுகளாக அப்பகுதியிலிருந்து கனிமவளங்கள் கொள்ளையடிக்கப்படுவது தொடர்கிறது. இதுதொடர்பாக எழுந்த புகாரின் அடிப்படையில் கடந்த ஆண்டு வருவாய் மற்றும் கனிமவளத்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பகுதிகளில் ஆய்வு நடத்தினர். அதன்பின் கடந்த சில மாதங்களாக ஓய்ந்திருந்த கனிமவளக் கொள்ளை மீண்டும் தீவிரமடைந்துள்ளது.

மேற்குத் தொடர்ச்சி மலையின் அங்கமான கூடலூர் நகராட்சி மலைதள பாதுகாப்பு அதிகாரம் கொண்ட பகுதியாகும். அங்கு கனிமவளக் கொள்ளை நடப்பது தொடர்பான வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அப்பகுதியில் கனிமவளங்களை தோண்டி எடுக்கவும், கடத்திச் செல்லவும் தடை விதித்தது. அதனடிப்படையில் கோவை மாவட்ட ஆட்சியர்களும் பல்வேறு கட்டங்களில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனிமவளக்கொள்ளை நடத்த தடை விதித்தனர். ஆனாலும், அவற்றைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் அதிகாரிகளின் துணையுடன் கனிமக்கொள்ளை தொடர்கிறது.

கூடலூர் பகுதியில் கனிமவளக் கொள்ளை நடைபெறும் பகுதிகள் அனைத்தும் யானைகளின் வழித் தடமாக திகழ்பவை ஆகும். இந்தப் பகுதியில் கனிமவளக் கொள்ளை நடைபெறாமல் தடுக்க வேண்டியது வருவாய்த்துறை, வனத்துறை, கனிமவளத்துறை ஆகியவற்றின் கூட்டுப் பொறுப்பு ஆகும். ஆனால், இவற்றில் எந்தத் துறையும் கனிமவளக் கொள்ளையை கட்டுப்படுத்துவதில் ஆர்வம் காட்டவில்லை. அதற்கு முதன்மையான காரணம் இந்தத் துறைகளின் உயரதிகாரிகள் ஊழலில் திளைப்பது தான்.

கூடலூர் பகுதியில் மட்டுமின்றி ஒட்டுமொத்த கோவை மாவட்டம் முழுவதும் கனிமவளக் கொள்ளை தடையின்றி நடைபெறுகிறது. பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, மதுக்கரை ஆகிய வட்டங்களிலும், அருகிலுள்ள திருப்பூர் மாவட்டத்தில் உடுமலை, மடத்துக்குளம் வட்டங்களிலும் சட்டவிரோத குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கிருந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும், கேரளத்திற்கும் தினமும் ஆயிரக்கணக்கான சரக்குந்துகளில் கல், மண், மணல், கிராவல் என அனைத்துக் கனிம வளங்களும், கடத்தப்படுகின்றன. கனிமவளக் கொள்ளையை கண்டுகொள்ளாமல் இருப்பதற்காக மட்டும் கொங்கு மண்டலத்தில் பல்வேறு துறை அதிகாரிகளுக்கும், அவர்களுக்கு மேல் அதிகார பதவிகளில் இருப்பவர்களுக்கும் ஆண்டுக்கு ரூ.1000 கோடி வரை கையூட்டு வழங்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளன.

தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் இதே நிலைதான் காணப்படுகிறது. திமுக ஆட்சி நடந்தாலும், அதிமுக ஆட்சி நடந்தாலும் கனிமவளக் கொள்ளை மட்டும் தடைபடுவதே இல்லை. இரு கட்சிகளின் ஆட்சிகளிலும் ஒரே குழுவினர் தான் கனிமக் கொள்ளையை முன்னின்று நடத்துகின்றனர். கனிமவளங்கள் அளவில்லாமல் கொள்ளையடிக்கப்பட்டால் அது சுற்றுச் சூழலுக்கு ஈடு செய்ய முடியாத பாதிப்புகளை ஏற்படுத்தும். கோவை, திருப்பூர் மாவட்டம் உள்பட தமிழ்நாடு முழுவதும் கனிமவளக் கொள்ளையை தடுத்து நிறுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தவறினால், தமிழ்நாடு முழுவதும் மக்களைத் திரட்டி மாபெரும் போராட்டத்தை பா.ம.க. முன்னெடுக்கும் என எச்சரிக்கிறேன்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

“உழவர்களுக்கு எதிரான அரசு வீழும் நாள் வெகுதொலைவில் இல்லை” - அன்புமணி கண்டனம்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
  day when the anti-farmer government will fall is not far says Anbumani

கொள்முதல் நிலைய ஊழலை எதிர்த்ததற்காக கைது செய்வதா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசை கடுமையாக சாடியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “செங்கல்பட்டு மாவட்டம் படாளம் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தொடர்ந்து நடைபெறும் ஊழல்களை தட்டிக் கேட்டதற்காக உழவர் சங்க நிர்வாகிகள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். உழவர்களின் உரிமைக்காகவும், ஊழலுக்கு எதிராகவும் போராடிய அவர்கள் கைது செய்யப்பட்டது கண்டிக்கத்தக்கது.

செங்கல்பட்டு மாவட்டம் ஆலப்பாக்கத்தைச் சேர்ந்த மணி என்பவர் பாலாறு படுகை விவசாயிகள் சங்கத் தலைவராக பொறுப்பு வகித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த பரமசிவம் என்பவரும் அவருடன் இணைந்து உழவர்கள் நலனுக்காக பாடுபட்டு வருகிறார். இவர்கள் இருவரும் கடந்த 24 ஆம் நாள் படாளம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் செய்த குற்றம், அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்  உழவர்களிடமிருந்து மூட்டைக்கு ரூ.60 வரை கையூட்டு பெறப்படுவதையும், அவ்வாறு கையூட்டு வாங்கும் சக்திகளுக்கு காவல்துறையினர் துணை போவதையும் கண்டித்து பல ஆண்டுகளாக குரல் கொடுத்தும், போராட்டம் நடத்தியும் வருவது தான்.

திமுக ஆட்சியில் இருந்தாலும், அதிமுக ஆட்சி நடந்தாலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்  ஊழல் என்பது மட்டும் தீராத வியாதியாக தொடர்கிறது. படாளம், பழையனூர் ஆகிய கிராமங்களில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை விற்கச் செல்லும் உழவர்களிடம் மூட்டைக்கு ரூ.60 வரை கையூட்டு பெறப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அதைத் தொடர்ந்து அந்த நிலையங்களுக்கு கடந்த மார்ச் 19 ஆம் தேதி சென்ற மணி, பரமசிவம் ஆகியோர் உழவர்களிடம் கையூட்டு பெறப்படுவது குறித்து விசாரணை நடத்தினர். ஆனால், அவர்களின் வினாக்களுக்கு விடை அளிக்காத நெல் கொள்முதல் நிலையப் பணியாளர் செல்வம் என்பவர், மணியும், பரமசிவமும் தம்மை மிரட்டியதாக படாளம் காவல்நிலையத்தில் மார்ச் 20&ஆம் தேதி புகார் அளித்தார். அதன் மீது மார்ச் 24&ஆம் தேதி முதல் தகவல் அறிக்கை பதிவு செய்த படாளம் காவல்நிலைய அதிகாரிகள், அதன் பின் ஒரு  மாதத்திற்கும் மேலாகியும் எந்த விசாரணையும் நடத்தவில்லை; எந்த விதமான மேல் நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதற்கிடையே செங்கல்பட்டு மாவட்டத்தில் சட்டம்  ஒழுங்கு சீர் கெட்டதையும், கையூட்டு வாங்கும் அதிகாரிகளுக்கு காவல்துறையினர் துணை நிற்பதையும் கண்டித்து கடந்த 24 ஆம் தேதி செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகம் எதிரில் மணி, பரமசிவம் உள்ளிட்டோர் தலைமையில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதில் பங்கேற்ற மணி, பரமசிவம் ஆகியோரை விசாரணை என்ற பெயரில்  படாளம் காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்ற காவல்துறையினர், இருவர் மீதும் ஒரு மாதத்திற்கு முன் பதிவு செய்த வழக்கில் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். உழவர்களின் உரிமைக்காக போராடிய உழவர் சங்க நிர்வாகிகளை கைது செய்ததை விட கொடிய பழிவாங்கும் நடவடிக்கை இருக்க முடியாது. பழிவாங்கும் போக்கை கைவிட்டு, உழவர் சங்க நிர்வாகிகள் இருவரையும் விடுதலை செய்ய வேண்டும்.

தமிழ்நாட்டின் பெரும்பான்மை சமூகம் உழவர்கள் தான். அவர்களின் வாக்குகளை வாங்கி ஆட்சிக்கு வந்த திமுக அரசு, நன்றி மறந்து உழவர்கள் மீது அடக்குமுறைகளையும், அத்துமீறல்களையும் கட்டவிழ்த்து விட்டு வருகிறது. நிலவுரிமையை பாதுகாப்பதற்காக போராடிய மேல்மா உழவர்களை கைது செய்தும், அவர்களில் 7 பேரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைத்தும் கொடூர முகத்தைக் காட்டிய தமிழக அரசும், காவல்துறையும் இப்போது ஊழலை எதிர்த்து போராடிய உழவர் சங்க நிர்வாகிகளை கைது செய்து அதன் இன்னொரு முகத்தைக் காட்டியிருக்கிறது. தமிழ்நாட்டில் கொலை, கொள்ளை, போதை மருந்து நடமாட்டம் போன்ற குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. அவற்றிற்கு காரணமான  குற்றவாளிகளைக் கைது செய்ய வேண்டிய தமிழக அரசு, அப்பாவி உழவர்களையும், கிளி சோதிடர்களையும், வெயிலின் தாக்கத்தை உணர்த்த சாலையில் ஆம்லேட் போட்ட சமூக ஆர்வலர்களையும் கைது செய்து கொண்டிருக்கிறது. இதிலிருந்தே தமிழ்நாட்டில் நடப்பது யாருக்கான அரசு என்பதை உணர முடியும்.

ஒட்டுமொத்த உலகிற்கும் உணவளிக்கும் கடவுள்களான உழவர்களை மதிக்காத எந்த அரசும் நீடித்தது இல்லை. அதற்கு உலகில் ஏராளமான எடுத்துக்காட்டுகள் உள்ளன. தமிழ்நாட்டில் உழவர்களை மதிக்காத, அவர்களை பழிவாங்கும் திமுக அரசு தமிழ்நாட்டு மக்களால் வீழ்த்தப்படும் நாள் வெகுதொலைவில் இல்லை” எனக் குறிப்பிட்டுள்ளார்.