Skip to main content

கூட்டணியில் நீடிக்குமா பா.ம.க? அல்வா தரும் அ.தி.மு.க.! 

Published on 18/01/2021 | Edited on 18/01/2021

 

dddd

 

வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு போராட்டத்தை டாக்டர் ராமதாஸ் உயர்த்திப் பிடித்ததால் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. நீடிக்குமா என்கிற சந்தேகம் வலுத்து வந்த நிலையில், இடஒதுக்கீட்டு கொள்கையின் வடிவத்தை அவர் மாற்றிக்கொண்டதைத் தொடர்ந்து அ.தி.மு.க. அமைச்சர்கள் தங்கமணியையும் வேலுமணியையும் தைலாபுரம் தோட்டத்துக்கு அனுப்பி வைத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தச் சந்திப்பில், ஒதுக்கீடு பிரச்சனைகளை மட்டுமல்ல கூட்டணி பற்றிதான் அதிகம் விவாதித்திருக்கிறார்கள் அமைச்சர்கள். 

 

சந்திப்பு குறித்து அமைச்சர்களுக்கு நெருக்கமான தொடர்பில் நாம் விசாரித்தபோது, “தன்னை சந்தித்த அமைச்சர்களிடம், ‘தனி இடஒதுக்கீடு (20%) போராட்டத்தைக் கையிலெடுத்துவிட்டேன். ஆனால், அது தற்போது சாத்தியமில்லை என உங்கள் தரப்பிலிருந்து சொல்லப்பட்டதை அடுத்து தனி இடஒதுக்கீடு என்பதை உள் இடஒதுக்கீடாக மாற்றிக்கொண்டேன். மிகவும் பிற்படுத்தப்படோருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில் பெரும்பான்மை சதவீதத்தை வன்னியர் சமூகத்தினருக்கு ஒதுக்க வேண்டும். ஒதுக்கினால் அ.தி.மு.க. கூட்டணியை தொடர்வதில் பா.ம.க.வுக்கு எந்தப் பிரச்சனையும் இருக்காது' என ராமதாஸ் வலியுறுத்தியிருக்கிறார்.

 

dddd

 

அதற்கு அமைச்சர் தங்கமணி, "வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு கொடுப்பதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கோ, அ.தி.மு.க. அரசுக்கோ எந்த நெருடலும் இல்லை; ஆட்சேபனையும் இல்லை. ஆனால், தற்போது தேர்தல் நேரமென்பதால், வன்னியர்களுக்கு மட்டும் பெரும்பான்மை சதவீத இடஒதுக்கீட்டை கொடுத்தால், எம்.பி.சி. பட்டியலிலுள்ள மற்ற சாதியினர் கிளர்ச்சி செய்வார்கள். அது தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு எதிராகவும் மாறும். தேர்தல் நேரமாக இல்லையெனில் நிச்சயம் உங்கள் கோரிக்கையை நிறைவேற்றியிருப்பார் முதல்வர். அதனால், கூட்டணியை உறுதிப்படுத்துங்கள். தேர்தல் முடிந்து மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும், இட ஒதுக்கீடு பிரச்சனை சரி செய்யப்படும்'' என தெளிவுபடுத்தியிருக்கிறார். அப்போது பேசிய ராமதாஸ், "உள் இடஒதுக்கீடு கொடுப்பதால் எந்தப் பிரச்சனையும் வராது'' எனச் சொல்ல, குறுக்கிட்டுப் பேசிய அமைச்சர் வேலுமணி, "வன்னியர்களின் இடஒதுக்கீடு தொடர்பாக ஏற்கனவே ஜனார்த்தனன் கமிட்டி சில பரிந்துரைகளைச் செய்திருக்கிறது. இந்த நிலையில், உங்கள் கோரிக்கையை ஏத்துக்கிட்டும் மற்ற சமூகத்தைப் பகைத்துக்கொண்டும் உள் இடஒதுக்கீடு வழங்கினால், வன்னியர் சமூகத்தின் மொத்த ஆதரவும் அவர்களின் வாக்குகளும் அ.தி.மு.க.வுக்கு கிடைக்குமா? அதற்கான உத்தரவாதத்தை பா.ம.க. தருமா? என்கிற கேள்விகள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமல்ல, கட்சியின் சீனியர்கள் அனைவரிடமுமே இருக்கிறது. அதனால் தேர்தல் முடியட்டும், நல்லது நடக்கும்'' என அழுத்தமாக சொல்லியிருக்கிறார். வேலுமணியின் இந்தப் பேச்சுக்கு ராமதாசால் பதில் சொல்ல முடியவில்லை.

 

இதனைத் தொடர்ந்து கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை அமைச்சர்கள் எடுத்துள்ளனர். அப்போது, "வட தமிழகத்திலுள்ள 120 தொகுதிகளில் 80 இடங்களில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கிற சக்தி பா.ம.க.வுக்கு மட்டுமே இருக்கிறது. பா.ம.க. இருப்பது கூட்டணிக்கு பலம். அதனால், அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு இரண்டாவது இடமும், 32 சீட்டுகளும் வேண்டும்'' எனச் சொல்லியிருக்கிறார் ராமதாஸ். இதனை ஏற்காத அமைச்சர்கள், "கூட்டணியில் இரண்டாவது இடத்தை பா.ஜ.க. கேட்பதையும், அதனால் பா.ம.க.வுக்கு அதிகபட்சம் 20 சீட்டுகள் ஒதுக்க முடியும்' என்பதையும் தெரிவித்திருக்கிறார்கள். இந்த டீலுக்கு ராமதாஸ் தயக்கம் காட்ட... "இ.பி.எஸ்.சிடமும் ஓ.பி.எஸ்.சிடமும் கலந்து பேசிவிட்டுச் சொல்கிறோம்” என கூறிவிட்டு தைலாபுரம் தோட்டத்தை விட்டு தங்கமணியும் வேலுமணியும் கிளம்பியிருக்கிறார்கள்‘’ என்று சுட்டிக்காட்டுகிறார்கள். 

 

மேலும் “இந்தச் சந்திப்பில் தேர்தல் செலவுகள் குறித்து பேசப்பட்டிருக்கிறது. ஆனால், அதற்கு எந்த உத்தரவாதத்தையும் அமைச்சர்கள் தரப்பில் கொடுக்கப்படவில்லை என்கின்றனர் அ.தி.மு.க. சீனியர்கள். டாக்டர் ராமதாசுடனான பேச்சுவார்த்தையில் நடந்ததை எடப்பாடி பழனிசாமியிடம் அமைச்சர்கள் இருவரும் விவரித்திருக்கிறார்கள். முழுமையாக அதனைக் கேட்டுக்கொண்ட எடப்பாடி பழனிசாமி, "எதார்த்த அரசியலை டாக்டர் அய்யா புரிந்துகொள்ள மறுக்கிறார். முந்தைய தேர்தல்களில் பா.ம.க.வால் அ.தி.மு.க.வுக்கு என்ன லாபம்? பா.ம.க.வால் எத்தனை தொகுதி அ.தி.மு.க. ஜெயித்தது? என்றெல்லாம் அவர் சிந்தித்துப் பார்க்க வேண்டும். கூட்டணி அமைத்து தி.மு.க. தேர்தலை சந்திப்பதால்தான் நாமும் கூட்டணி அமைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. இல்லைன்னா, தனித்தே நாம் போட்டியிட முடியும். பா.ஜ.க.வை இறுதி செய்துவிட்டு பா.ம.க.வை கவனிப்போம்” என கமெண்டடித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி” என்கிறது அ.தி.மு.க. தரப்பு.

 

பா.ம.க.வின் மாநில நிர்வாகிகள் சிலரிடம் நாம் பேசியபோது, "தேர்தல் முடிந்ததும் இடஒதுக்கீட்டை நிறைவேற்றுவோம் என்கிற எடப்பாடி பழனிசாமியின் பேச்செல்லாம் வேலைக்கு ஆகாது. பா.ம.க.வுக்கும் வன்னியர்களுக்கும் அவர் அல்வா தருகிறார் என்பது எங்களுக்குத் தெரியும். அதனால், இடஒதுக்கீடு கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும்; இல்லையேல் கூட்டணியில் அய்யா எதிர்பார்ப்பது நடக்க வேண்டும். இரண்டும் இல்லையெனில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இருக்காது'' என்கிறார்கள் ராமதாசின் உறுதி மீது நம்பிக்கை வைத்தபடி.

 

Next Story

புகைப்படம் எடுக்க மறுத்ததால் வாக்களிக்காமல் சென்ற முன்னாள் அதிமுக எம்பி

Published on 19/04/2024 | Edited on 19/04/2024
 Former AIADMK MP abstained from voting after refusing to be photographed

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக இன்று தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்துள்ளது.

திருச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட செம்பட்டு ஆபட் மார்ஷல் பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் திருச்சி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் எம்பியுமான ப.குமார் காலையில் வாக்களிக்க சென்றார். பின்னர் வாக்குச்சாவடி மையத்திற்குள் அவர் வாக்களிப்பதை புகைப்படம் எடுப்பதற்காக பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிருபர்கள் வந்தனர். அப்போது அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் வாக்குச்சாவடி மையத்திற்குள் புகைப்படம் எடுக்க அனுமதி இல்லை என தெரிவித்தனர். இதனால் அவருடன் வந்த மாவட்ட இளைஞரணி செயலாளர் முத்துக்குமார், ஜெயலலிதா பேரவை மாவட்ட தலைவர் கவுன்சிலர் அம்பிகாபதி ஆகியோருக்கும் தேர்தல் அலுவலர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆவேசமடைந்த குமார் 'நான் இந்த தொகுதியில் இரண்டு முறை எம்பியாக இருந்திருக்கிறேன். விஐபிகள் வாக்களிக்கும் போது புகைப்படம் எடுப்பது நடைமுறையில் உள்ளது. கலெக்டரிடம் பேசிவிட்டு பின்னர் வாக்களிக்கிறேன்' என கூறிவிட்டு வாக்குச்சாவடி மையத்தில் இருந்து வெளியேறினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Next Story

அதிமுக பிரமுகர் குவாரியில் கோடிக்கணக்கில் பணம் பறிமுதல்! 

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
ADMK personalities in Quarry Rs 2.85 crore seized

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற உள்ளது. அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகம், புதுச்சேரி உள்ளிட்ட 21 மாநிலங்களில் உள்ள 102 மக்களவைத் தொகுதிகளுக்கு நாளை (19.04.2024) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த வாக்குப்பதிவு காலை 7.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை நடைபெற உள்ளது. அதன்படி முதற்கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள தொகுதிகளில் தேர்தல் பரப்புரை நேற்று (17.04.2024) மாலை 6 மணியுடன் நிறைவு பெற்றது. மேலும் இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

அந்த வகையில் முதற்கட்டமாக தமிழகத்திலும், புதுச்சேரியிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளதால் மக்களவைத் தேர்தலுக்கான பரப்புரை நேற்றுடன் ஓய்ந்தது. அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுப்பதைத் தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக அரசியல் கட்சித் தலைவர்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் வேட்பாளர்களின் வாகனங்களில் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சென்னையை அடுத்துள்ள பல்லாவரத்தில் உள்ள பெருமாள் நகர் பகுதியைச் சேர்ந்தவர் லிங்கராஜ். அதிமுக பிரமுகரான இவர் குவாரிகளை நடத்தி வருகிறார். இத்தகைய சூழலில் லிங்கராஜ் குவாரிகளில் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் வருமான வரித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டு அவரது வீடு மற்றும் குவாரிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு இருந்த ரூ. 2.85 கோடி ரொக்கப்பணத்தை கைப்பற்றி பறிமுதல் செய்தனர். மேலும் வாக்காளர்களுக்கு விநியோகிப்பதற்காக இந்த பணம் பதுக்கி வைக்கப்பட்டதா என்ற கோணத்தில் வருமான வரித்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.