Skip to main content

கூட்டணியில் நீடிக்குமா பா.ம.க? அல்வா தரும் அ.தி.மு.க.! 

Published on 18/01/2021 | Edited on 18/01/2021

 

dddd

 

வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு போராட்டத்தை டாக்டர் ராமதாஸ் உயர்த்திப் பிடித்ததால் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. நீடிக்குமா என்கிற சந்தேகம் வலுத்து வந்த நிலையில், இடஒதுக்கீட்டு கொள்கையின் வடிவத்தை அவர் மாற்றிக்கொண்டதைத் தொடர்ந்து அ.தி.மு.க. அமைச்சர்கள் தங்கமணியையும் வேலுமணியையும் தைலாபுரம் தோட்டத்துக்கு அனுப்பி வைத்தார் எடப்பாடி பழனிசாமி. அந்தச் சந்திப்பில், ஒதுக்கீடு பிரச்சனைகளை மட்டுமல்ல கூட்டணி பற்றிதான் அதிகம் விவாதித்திருக்கிறார்கள் அமைச்சர்கள். 

 

சந்திப்பு குறித்து அமைச்சர்களுக்கு நெருக்கமான தொடர்பில் நாம் விசாரித்தபோது, “தன்னை சந்தித்த அமைச்சர்களிடம், ‘தனி இடஒதுக்கீடு (20%) போராட்டத்தைக் கையிலெடுத்துவிட்டேன். ஆனால், அது தற்போது சாத்தியமில்லை என உங்கள் தரப்பிலிருந்து சொல்லப்பட்டதை அடுத்து தனி இடஒதுக்கீடு என்பதை உள் இடஒதுக்கீடாக மாற்றிக்கொண்டேன். மிகவும் பிற்படுத்தப்படோருக்கான 20 சதவீத இடஒதுக்கீட்டில் பெரும்பான்மை சதவீதத்தை வன்னியர் சமூகத்தினருக்கு ஒதுக்க வேண்டும். ஒதுக்கினால் அ.தி.மு.க. கூட்டணியை தொடர்வதில் பா.ம.க.வுக்கு எந்தப் பிரச்சனையும் இருக்காது' என ராமதாஸ் வலியுறுத்தியிருக்கிறார்.

 

dddd

 

அதற்கு அமைச்சர் தங்கமணி, "வன்னியர்களுக்கு உள் இடஒதுக்கீடு கொடுப்பதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கோ, அ.தி.மு.க. அரசுக்கோ எந்த நெருடலும் இல்லை; ஆட்சேபனையும் இல்லை. ஆனால், தற்போது தேர்தல் நேரமென்பதால், வன்னியர்களுக்கு மட்டும் பெரும்பான்மை சதவீத இடஒதுக்கீட்டை கொடுத்தால், எம்.பி.சி. பட்டியலிலுள்ள மற்ற சாதியினர் கிளர்ச்சி செய்வார்கள். அது தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு எதிராகவும் மாறும். தேர்தல் நேரமாக இல்லையெனில் நிச்சயம் உங்கள் கோரிக்கையை நிறைவேற்றியிருப்பார் முதல்வர். அதனால், கூட்டணியை உறுதிப்படுத்துங்கள். தேர்தல் முடிந்து மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைந்ததும், இட ஒதுக்கீடு பிரச்சனை சரி செய்யப்படும்'' என தெளிவுபடுத்தியிருக்கிறார். அப்போது பேசிய ராமதாஸ், "உள் இடஒதுக்கீடு கொடுப்பதால் எந்தப் பிரச்சனையும் வராது'' எனச் சொல்ல, குறுக்கிட்டுப் பேசிய அமைச்சர் வேலுமணி, "வன்னியர்களின் இடஒதுக்கீடு தொடர்பாக ஏற்கனவே ஜனார்த்தனன் கமிட்டி சில பரிந்துரைகளைச் செய்திருக்கிறது. இந்த நிலையில், உங்கள் கோரிக்கையை ஏத்துக்கிட்டும் மற்ற சமூகத்தைப் பகைத்துக்கொண்டும் உள் இடஒதுக்கீடு வழங்கினால், வன்னியர் சமூகத்தின் மொத்த ஆதரவும் அவர்களின் வாக்குகளும் அ.தி.மு.க.வுக்கு கிடைக்குமா? அதற்கான உத்தரவாதத்தை பா.ம.க. தருமா? என்கிற கேள்விகள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு மட்டுமல்ல, கட்சியின் சீனியர்கள் அனைவரிடமுமே இருக்கிறது. அதனால் தேர்தல் முடியட்டும், நல்லது நடக்கும்'' என அழுத்தமாக சொல்லியிருக்கிறார். வேலுமணியின் இந்தப் பேச்சுக்கு ராமதாசால் பதில் சொல்ல முடியவில்லை.

 

இதனைத் தொடர்ந்து கூட்டணி குறித்த பேச்சுவார்த்தையை அமைச்சர்கள் எடுத்துள்ளனர். அப்போது, "வட தமிழகத்திலுள்ள 120 தொகுதிகளில் 80 இடங்களில் வெற்றி தோல்வியை தீர்மானிக்கிற சக்தி பா.ம.க.வுக்கு மட்டுமே இருக்கிறது. பா.ம.க. இருப்பது கூட்டணிக்கு பலம். அதனால், அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு இரண்டாவது இடமும், 32 சீட்டுகளும் வேண்டும்'' எனச் சொல்லியிருக்கிறார் ராமதாஸ். இதனை ஏற்காத அமைச்சர்கள், "கூட்டணியில் இரண்டாவது இடத்தை பா.ஜ.க. கேட்பதையும், அதனால் பா.ம.க.வுக்கு அதிகபட்சம் 20 சீட்டுகள் ஒதுக்க முடியும்' என்பதையும் தெரிவித்திருக்கிறார்கள். இந்த டீலுக்கு ராமதாஸ் தயக்கம் காட்ட... "இ.பி.எஸ்.சிடமும் ஓ.பி.எஸ்.சிடமும் கலந்து பேசிவிட்டுச் சொல்கிறோம்” என கூறிவிட்டு தைலாபுரம் தோட்டத்தை விட்டு தங்கமணியும் வேலுமணியும் கிளம்பியிருக்கிறார்கள்‘’ என்று சுட்டிக்காட்டுகிறார்கள். 

 

மேலும் “இந்தச் சந்திப்பில் தேர்தல் செலவுகள் குறித்து பேசப்பட்டிருக்கிறது. ஆனால், அதற்கு எந்த உத்தரவாதத்தையும் அமைச்சர்கள் தரப்பில் கொடுக்கப்படவில்லை என்கின்றனர் அ.தி.மு.க. சீனியர்கள். டாக்டர் ராமதாசுடனான பேச்சுவார்த்தையில் நடந்ததை எடப்பாடி பழனிசாமியிடம் அமைச்சர்கள் இருவரும் விவரித்திருக்கிறார்கள். முழுமையாக அதனைக் கேட்டுக்கொண்ட எடப்பாடி பழனிசாமி, "எதார்த்த அரசியலை டாக்டர் அய்யா புரிந்துகொள்ள மறுக்கிறார். முந்தைய தேர்தல்களில் பா.ம.க.வால் அ.தி.மு.க.வுக்கு என்ன லாபம்? பா.ம.க.வால் எத்தனை தொகுதி அ.தி.மு.க. ஜெயித்தது? என்றெல்லாம் அவர் சிந்தித்துப் பார்க்க வேண்டும். கூட்டணி அமைத்து தி.மு.க. தேர்தலை சந்திப்பதால்தான் நாமும் கூட்டணி அமைக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. இல்லைன்னா, தனித்தே நாம் போட்டியிட முடியும். பா.ஜ.க.வை இறுதி செய்துவிட்டு பா.ம.க.வை கவனிப்போம்” என கமெண்டடித்திருக்கிறார் எடப்பாடி பழனிசாமி” என்கிறது அ.தி.மு.க. தரப்பு.

 

பா.ம.க.வின் மாநில நிர்வாகிகள் சிலரிடம் நாம் பேசியபோது, "தேர்தல் முடிந்ததும் இடஒதுக்கீட்டை நிறைவேற்றுவோம் என்கிற எடப்பாடி பழனிசாமியின் பேச்செல்லாம் வேலைக்கு ஆகாது. பா.ம.க.வுக்கும் வன்னியர்களுக்கும் அவர் அல்வா தருகிறார் என்பது எங்களுக்குத் தெரியும். அதனால், இடஒதுக்கீடு கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும்; இல்லையேல் கூட்டணியில் அய்யா எதிர்பார்ப்பது நடக்க வேண்டும். இரண்டும் இல்லையெனில் அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க. இருக்காது'' என்கிறார்கள் ராமதாசின் உறுதி மீது நம்பிக்கை வைத்தபடி.

 

Next Story

ஓடும் பேருந்தில் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்ட நடத்துநர்; அன்புமனி கண்டனம்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Anbumani condemns conductor being thrown with his seat in   moving govt bus

ஓடும் பேருந்தில், நடத்துநர் இருக்கையுடன் தூக்கி வீசப்பட்டதற்கு பா.ம.க தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திருச்சி திருவரங்கத்தில் இருந்து கே.கே.நகருக்கு சென்று கொண்டிருந்த அரசு நகரப் பேருந்து, வளைவு ஒன்றில் திரும்பும் போது, நடத்துநர் அமர்ந்திருந்த இருக்கை கழன்று வெளியில் விழுந்துள்ளது. இருக்கையுடன் நடத்துநரும் வெளியில் தூக்கி வீசப் பட்டுள்ளார். நல்வாய்ப்பாக பேருந்துக்கு பின்னால் வேறு வாகனங்கள் வரவில்லை என்பதால், நடத்துனர்  லேசான காயங்களுடன் உயிர்த் தப்பியுள்ளார். காயமடைந்த ஓட்டுநர் விரைவில் நலம் பெற எனது விருப்பங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னை அமைந்தகரை பகுதியில் கடந்த பிப்ரவரி  6-ஆம்  தேதி  மாநகரப் பேருந்தின் தளம் உடைந்து  ஏற்பட்ட ஓட்டை வழியாக பெண் பயணி ஒருவர் சாலையில் விழுந்து காயமடைந்தார்.  அதனால் ஏற்பட்ட அதிர்ச்சி விலகும் முன்பாகவே  திருச்சியில்  பேருந்தின் இருக்கை கழன்று  நடத்துநர்  தூக்கி வீசப்பட்டுள்ளார்.  பேருந்தின் டயர் தனியாக கழன்று ஓடுவது, பேருந்தின் மேற்கூறை  தனியாக கழன்று காற்றில் பறப்பது போன்ற நிகழ்வுகளும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. தினமும் 2 கோடி மக்கள் பயணிக்கும் அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளை  திமுக அரசு எவ்வளவு மோசமாக பராமரிக்கிறது என்பதற்கு இதை விட மோசமான எடுத்துக் காட்டு இருக்க முடியாது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகங்களில் உள்ள 20,926 பேருந்துகளில் 1500 பேருந்துகள் 15 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன என்பதை  தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கரே  ஒப்புக் கொண்டிருக்கிறார்.  15 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகளை இயக்குவதே சட்ட விரோதம் ஆகும். இதைத் தவிர 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட  பேருந்துகள்  12 ஆண்டுகளுக்கும் மேலாக இயக்கப்பட்டு வருகின்றன.  திமுக  ஆட்சிக்கு வந்த பிறகு விரல் விட்டு எண்ணக் கூடிய அளவில் தான் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன.

புதிய பேருந்துகள் வாங்கப்படாததால், காலாவதியான பேருந்துகள் அதிக எண்ணிக்கையில் இயக்கப்படுவதும்,   அவற்றை பராமரிப்பதற்கும், உதிரி பாகங்கள் வாங்குவதற்கும் கூட போதிய நிதி ஒதுக்கப்படாததுதான்  இத்தகைய அவல நிலை  ஏற்படுவதற்கு காரணம் ஆகும்.  இத்தகைய அவல நிலைக்கு திமுக தலைமையிலான திராவிட மாடல் அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்.

அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கான மகிழுந்துகள் அவர்கள் விரும்பும் நேரத்தில் மாற்றப்படுகிறது. முதலமைச்சரின் வாகன அணிவகுப்பில் வரும் மகிழுந்துகள்  கருப்பு வண்ணத்தில் இருக்க வேண்டும் என்பதற்காக, ஏற்கெனவே வாங்கப்பட்டு சில மாதங்கள் மட்டுமே ஆன மகிழுந்துகள்  ஓரங்கட்டப்பட்டு, கோடிக்கணக்கில் செலவு செய்து 6 புதிய மகிழுந்துகள்  வாங்கப்படுகின்றன. ஆனால், பொதுமக்கள் பணம் கொடுத்து பயணம் செய்யும்  பேருந்துகள் மட்டும்  15 ஆண்டுகளைக் கடந்து இயக்கப்படுகின்றன. இது என்ன கொடுமை?

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகங்களில் உள்ள 6 ஆண்டுகளைக் கடந்த பேருந்துகள் அனைத்தும் உடனடியாக மாற்றப்பட்டு அவற்றிற்கு மாற்றாக புதிய பேருந்துகள் வாங்கி இயக்கப்பட வேண்டும்.  பழைய பேருந்துகளைப் பராமரிக்கவும்,  உதிரி பாகங்கள் வாங்கவும் அரசு போக்குவரத்துக் கழகங்களுக்கு அரசு  போதிய நிதி ஒதுக்கீடு  செய்ய வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.