Skip to main content

புதிதாக அமைப்பு தொடங்கும் திட்டம்? -வரலாற்றை புரட்டும் கே.டி.ராஜேந்திரபாலாஜி!

Published on 08/02/2020 | Edited on 08/02/2020

சமீப காலமாக, அதிரடி பேட்டிகளின் மூலம், இந்துக்களின் காவலனாகத் தன்னை வெளிப்படுத்திவரும் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியிடம் ‘யாருய்யா நீ? எங்கயிருந்த இவ்வளவு நாளா? உன்ன மாதிரி ஒரு ஆளத்தான்யா தேடிக்கிட்டிருந்தோம்..’ என்கிற ரீதியில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பேசிவருகிறார்களாம். விளம்பரங்களில் ‘வலிமையின் சிகரம்’ என்ற பட்டத்தை வேறு அவருக்குத் தந்து “இந்துக்கள் காலம் காலமாக பேசாமல் இருந்த பல பிரச்சனைகளை, ஒரு அமைச்சராக இருந்தும் இத்தனை துணிச்சலாகப் பொதுவெளியில் பேசுவது நீங்கள் மட்டும்தான்..’ என்று நாகர்கோவில் பகுதியிலிருந்து பாராட்டவும் செய்கிறார்களாம்.  

 

Planning to start a new system? - KD Rajendrapalaji

 

தமிழகத்தில் அதிக அளவில் மீடியாக்களின் கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் சொல்பவர்களில் கே.டி.ராஜேந்திரபாலாஜியும் ஒருவர். அவரிடம்  ‘அரசியலைக் காட்டிலும் மதங்கள் குறித்துப் பேசுவதிலேயே ஆர்வம் காட்டி வருகின்றீர்களே? பொதுத்தேர்தலுக்கு முன்,  புதிதாக ஒரு அமைப்பு தொடங்கி, தமிழகத்தில் இந்துக்களை ஒருங்கிணைக்கும் திட்டத்தோடு இருப்பதாகப் பேசப்படுகிறதே? சமீபத்திய இந்து ஆதரவுப் பேச்சின் பின்னணியில் அமைப்பு ரீதியாக சிலர் இருக்கிறார்களாமே?’ என்று கேட்க, நம்மிடம் தன் மனதில் இருந்தவற்றை வெளிப்டையாகப் பேசினார்.

“முதலில் ஒன்றைத் தெளிவுபடுத்தி விடுகிறேன். அதிமுக என்பது ஒரு மாபெரும் இயக்கம். அதிலிருந்து ஒருக்காலும் விலகமாட்டேன். வேறு அமைப்பு தொடங்குவேன் என்று பேசுவதெல்லாம் திட்டமிட்டு பரப்பப்படும் வதந்தி. இந்துக்களோ, கிறிஸ்தவர்களோ, இஸ்லாமியர்களோ, அது யாராக இருந்தாலும், அவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால், நிச்சயம் குரல் கொடுப்பேன். சரி, மற்ற விஷயங்களுக்கு வருகிறேன். ‘அந்த எஸ்.ஐ. சம்பவத்தை ஒரு கொலை சம்பவமா ஆக்கிட்டாங்க. ஒரு கொலைன்னு அப்படியே முடிச்சிட்டாங்க. நீங்கதான், பிரச்சினையை வெளியே கொண்டுவந்தீங்க’ன்னு என்கிட்ட பலர் கவலையோடு பேசினாங்க. இந்தமாதிரி ஏன் கொலை பண்ணுறாங்க? அவங்களுக்கு என்ன கொள்கை இருக்கு? என்ன நோக்கம் இருக்கு? கொலை பண்ணுறதுக்குன்னு ஒரு காரணத்தைச் சொல்லுவாங்க. அப்பாவி மக்களைக் கொல்லுறத எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? ரொம்ப பொறுமையா இருக்கேன். தற்கொலை கொலைகளில் கூட,  சாதி, மதம் பார்த்தே செயல்படுது திமுக. யாரை நாம சப்போர்ட் பண்ணலாம், யாருக்காக குரல் கொடுக்கலாம்னு, எல்லாத்துலயும் அந்தக் கட்சிக்கு ஓட்டு கணக்குதான்.

 

Planning to start a new system? - KD Rajendrapalaji

 

நான் எந்த மதத்தையும் எந்தச் சூழ்நிலையிலும் இழிவுபடுத்திப் பேசுவதில்லை. வரலாற்றுப் பதிவுகளை உள்ளது உள்ளபடி சொல்கிறேன். பல்வேறு படையெடுப்புகளில் கோவில்கள் இடிக்கப்பட்டுள்ளன, நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. ஆனால் இங்கிருந்து மன்னர்கள் போய் பிற வழிபாட்டுத்தலங்களை இடித்தார்கள் என்று எந்த வரலாற்றிலும் இல்லை. இவ்வளவு நடந்தும், எப்போதும் இந்துக்கள் பொறுமையாக இருக்கிறார்கள். தேசப்பற்றுடன், பிற மதத்தினரோடு சகோதரத்துவத்துடன் பழகிவருகிறார்கள். இந்தத் தன்மையை தவறாகப் பயன்படுத்துவதை பொறுத்துக்கொள்ள முடியுமா? இது என் தனிப்பட்ட கருத்து. எந்த மதத்திலும் ஒட்டுமொத்த பேரும் தவறானவர்கள் கிடையாது.  ஒரு சிலர்தான், வன்முறையில் இறங்குகிறார்கள். அவர்களை விமர்சிக்காமல் எப்படி இருக்கமுடியும்? திமுகவோ, அத்தகைய விசயங்களில் எதிர்ப்புத் தெரிவிக்காமல் அவர்களுக்குத் துணை போகிறது. அதனால்தான், திமுக தலைமையைக் கண்டிக்கிறோம்.


தமிழகத்தில் சில எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். கூட்டணி சேர்ந்து, பெருவாரியான மக்களின் வாக்குகளைப் பெற்றுத்தான் அவர்கள் எம்.எல்.ஏ. ஆனார்கள். ஆனால், சட்ட மன்றத்தில் ஒரு தடவைகூட பொதுவான மக்களுக்காக அவர்கள் குரல் கொடுத்ததில்லை. அவர்கள் சார்ந்த மதத்தினருக்காக மட்டுமே பேசிவருகிறார்கள். இது மதம் சார்ந்த அரசியல் கிடையாதா?

 

 

Planning to start a new system? - KD Rajendrapalaji

 

திமுகவும் தி.க.வும் என்ன செய்கிறது? இந்து கோவில்களை விமர்சிக்கிறது. இந்து மதத்தைக் கொச்சைப்படுத்தி பேசுகிறது. ஓட்டுக்காக ஜாதி ரீதியாக, மத ரீதியாகப் பிரித்துப் பார்க்கின்ற திமுகவின் அணுகுமுறைக்கு எதிராக உறுதியாக குரல் கொடுப்பேன். இந்துக்கள் மற்ற மதத்தினர் மீது வைத்திருக்கும் நேசத்தையும், மனிதத்தன்மையோடு நடந்துவரும் நற்பண்புகளையும் எல்லா மக்களும் தெரிந்துகொள்ளும் வகையில், எனது பாணியில் எடுத்துச் சொல்கிறேன். நான் சொல்வதெல்லாம் முழுக்க முழுக்க  உண்மை என்பதால், சிலரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. நான் மதவெறியைத் தூண்டுவதாகச் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது.

எந்த மதத்திலும் எந்தக் கடவுளும் மனிதனின் உயிரைப் பறிக்கச் சொல்லவில்லை. சிலர்தான், தங்களின் அரசியலுக்காக, சுயநலத்துக்காக, பிற மதத்தினரை பகைமையுடன் பார்க்கின்றனர். ஒரு மத வழக்கங்களை, பழக்கங்களை மட்டும்  கொச்சைப்படுத்தி பேசுபவர்கள் முதலில் பொதுவாக சிந்திக்க கற்றுக்கொள்ள வேண்டும்" என்று கடகடவென பேசிவிட்டு ஓய்ந்தார்.

அனைவருக்கும் பொதுவாக இருக்கவேண்டிய ஒரு அமைச்சரின் இத்தகைய பேச்சும் நிலைப்பாடும் கலவையான கருத்துகளுடனே எதிர்கொள்ளப்படுகிறது.

 

 

 


 

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.

Next Story

அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் இ.பி.எஸ் திடீர் ஆலோசனை (படங்கள்)

Published on 23/04/2024 | Edited on 23/04/2024

 

இந்திய நாட்டின் 18 வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றுவரும் நிலையில், முதற்கட்டமாக தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40   தொகுதிகளுக்கும் கடந்த 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.  இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அக்கட்சியினருடன் திடீரென ஆலோசனை நடத்தியுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி சென்னை மற்றும் புறநகர் பகுதியைச் சேர்ந்த அதிமுக மாவட்டச் செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஒன்பது மாவட்டச் செயலாளர்கள் மற்றும் வட சென்னை, தென் சென்னை  உள்ளிட்ட தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர்களும், தொகுதி பொறுப்பாளர்களும் கலந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.  நடைபெற்ற வாக்குப்பதிவில் வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது என்பது குறித்தும் தொகுதி நிலவரம் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.