Skip to main content

புதிதாக அமைப்பு தொடங்கும் திட்டம்? -வரலாற்றை புரட்டும் கே.டி.ராஜேந்திரபாலாஜி!

Published on 08/02/2020 | Edited on 08/02/2020

சமீப காலமாக, அதிரடி பேட்டிகளின் மூலம், இந்துக்களின் காவலனாகத் தன்னை வெளிப்படுத்திவரும் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜியிடம் ‘யாருய்யா நீ? எங்கயிருந்த இவ்வளவு நாளா? உன்ன மாதிரி ஒரு ஆளத்தான்யா தேடிக்கிட்டிருந்தோம்..’ என்கிற ரீதியில் தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும் பேசிவருகிறார்களாம். விளம்பரங்களில் ‘வலிமையின் சிகரம்’ என்ற பட்டத்தை வேறு அவருக்குத் தந்து “இந்துக்கள் காலம் காலமாக பேசாமல் இருந்த பல பிரச்சனைகளை, ஒரு அமைச்சராக இருந்தும் இத்தனை துணிச்சலாகப் பொதுவெளியில் பேசுவது நீங்கள் மட்டும்தான்..’ என்று நாகர்கோவில் பகுதியிலிருந்து பாராட்டவும் செய்கிறார்களாம்.  

 

Planning to start a new system? - KD Rajendrapalaji

 

தமிழகத்தில் அதிக அளவில் மீடியாக்களின் கேள்விகளுக்கு சளைக்காமல் பதில் சொல்பவர்களில் கே.டி.ராஜேந்திரபாலாஜியும் ஒருவர். அவரிடம்  ‘அரசியலைக் காட்டிலும் மதங்கள் குறித்துப் பேசுவதிலேயே ஆர்வம் காட்டி வருகின்றீர்களே? பொதுத்தேர்தலுக்கு முன்,  புதிதாக ஒரு அமைப்பு தொடங்கி, தமிழகத்தில் இந்துக்களை ஒருங்கிணைக்கும் திட்டத்தோடு இருப்பதாகப் பேசப்படுகிறதே? சமீபத்திய இந்து ஆதரவுப் பேச்சின் பின்னணியில் அமைப்பு ரீதியாக சிலர் இருக்கிறார்களாமே?’ என்று கேட்க, நம்மிடம் தன் மனதில் இருந்தவற்றை வெளிப்டையாகப் பேசினார்.

“முதலில் ஒன்றைத் தெளிவுபடுத்தி விடுகிறேன். அதிமுக என்பது ஒரு மாபெரும் இயக்கம். அதிலிருந்து ஒருக்காலும் விலகமாட்டேன். வேறு அமைப்பு தொடங்குவேன் என்று பேசுவதெல்லாம் திட்டமிட்டு பரப்பப்படும் வதந்தி. இந்துக்களோ, கிறிஸ்தவர்களோ, இஸ்லாமியர்களோ, அது யாராக இருந்தாலும், அவர்களுக்கு ஒரு பிரச்சனை என்றால், நிச்சயம் குரல் கொடுப்பேன். சரி, மற்ற விஷயங்களுக்கு வருகிறேன். ‘அந்த எஸ்.ஐ. சம்பவத்தை ஒரு கொலை சம்பவமா ஆக்கிட்டாங்க. ஒரு கொலைன்னு அப்படியே முடிச்சிட்டாங்க. நீங்கதான், பிரச்சினையை வெளியே கொண்டுவந்தீங்க’ன்னு என்கிட்ட பலர் கவலையோடு பேசினாங்க. இந்தமாதிரி ஏன் கொலை பண்ணுறாங்க? அவங்களுக்கு என்ன கொள்கை இருக்கு? என்ன நோக்கம் இருக்கு? கொலை பண்ணுறதுக்குன்னு ஒரு காரணத்தைச் சொல்லுவாங்க. அப்பாவி மக்களைக் கொல்லுறத எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்? ரொம்ப பொறுமையா இருக்கேன். தற்கொலை கொலைகளில் கூட,  சாதி, மதம் பார்த்தே செயல்படுது திமுக. யாரை நாம சப்போர்ட் பண்ணலாம், யாருக்காக குரல் கொடுக்கலாம்னு, எல்லாத்துலயும் அந்தக் கட்சிக்கு ஓட்டு கணக்குதான்.

 

Planning to start a new system? - KD Rajendrapalaji

 

நான் எந்த மதத்தையும் எந்தச் சூழ்நிலையிலும் இழிவுபடுத்திப் பேசுவதில்லை. வரலாற்றுப் பதிவுகளை உள்ளது உள்ளபடி சொல்கிறேன். பல்வேறு படையெடுப்புகளில் கோவில்கள் இடிக்கப்பட்டுள்ளன, நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன. ஆனால் இங்கிருந்து மன்னர்கள் போய் பிற வழிபாட்டுத்தலங்களை இடித்தார்கள் என்று எந்த வரலாற்றிலும் இல்லை. இவ்வளவு நடந்தும், எப்போதும் இந்துக்கள் பொறுமையாக இருக்கிறார்கள். தேசப்பற்றுடன், பிற மதத்தினரோடு சகோதரத்துவத்துடன் பழகிவருகிறார்கள். இந்தத் தன்மையை தவறாகப் பயன்படுத்துவதை பொறுத்துக்கொள்ள முடியுமா? இது என் தனிப்பட்ட கருத்து. எந்த மதத்திலும் ஒட்டுமொத்த பேரும் தவறானவர்கள் கிடையாது.  ஒரு சிலர்தான், வன்முறையில் இறங்குகிறார்கள். அவர்களை விமர்சிக்காமல் எப்படி இருக்கமுடியும்? திமுகவோ, அத்தகைய விசயங்களில் எதிர்ப்புத் தெரிவிக்காமல் அவர்களுக்குத் துணை போகிறது. அதனால்தான், திமுக தலைமையைக் கண்டிக்கிறோம்.


தமிழகத்தில் சில எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். கூட்டணி சேர்ந்து, பெருவாரியான மக்களின் வாக்குகளைப் பெற்றுத்தான் அவர்கள் எம்.எல்.ஏ. ஆனார்கள். ஆனால், சட்ட மன்றத்தில் ஒரு தடவைகூட பொதுவான மக்களுக்காக அவர்கள் குரல் கொடுத்ததில்லை. அவர்கள் சார்ந்த மதத்தினருக்காக மட்டுமே பேசிவருகிறார்கள். இது மதம் சார்ந்த அரசியல் கிடையாதா?

 

 

Planning to start a new system? - KD Rajendrapalaji

 

திமுகவும் தி.க.வும் என்ன செய்கிறது? இந்து கோவில்களை விமர்சிக்கிறது. இந்து மதத்தைக் கொச்சைப்படுத்தி பேசுகிறது. ஓட்டுக்காக ஜாதி ரீதியாக, மத ரீதியாகப் பிரித்துப் பார்க்கின்ற திமுகவின் அணுகுமுறைக்கு எதிராக உறுதியாக குரல் கொடுப்பேன். இந்துக்கள் மற்ற மதத்தினர் மீது வைத்திருக்கும் நேசத்தையும், மனிதத்தன்மையோடு நடந்துவரும் நற்பண்புகளையும் எல்லா மக்களும் தெரிந்துகொள்ளும் வகையில், எனது பாணியில் எடுத்துச் சொல்கிறேன். நான் சொல்வதெல்லாம் முழுக்க முழுக்க  உண்மை என்பதால், சிலரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. நான் மதவெறியைத் தூண்டுவதாகச் சொல்வது வேடிக்கையாக இருக்கிறது.

எந்த மதத்திலும் எந்தக் கடவுளும் மனிதனின் உயிரைப் பறிக்கச் சொல்லவில்லை. சிலர்தான், தங்களின் அரசியலுக்காக, சுயநலத்துக்காக, பிற மதத்தினரை பகைமையுடன் பார்க்கின்றனர். ஒரு மத வழக்கங்களை, பழக்கங்களை மட்டும்  கொச்சைப்படுத்தி பேசுபவர்கள் முதலில் பொதுவாக சிந்திக்க கற்றுக்கொள்ள வேண்டும்" என்று கடகடவென பேசிவிட்டு ஓய்ந்தார்.

அனைவருக்கும் பொதுவாக இருக்கவேண்டிய ஒரு அமைச்சரின் இத்தகைய பேச்சும் நிலைப்பாடும் கலவையான கருத்துகளுடனே எதிர்கொள்ளப்படுகிறது.

 

 

 


 

Next Story

'மோடியா? ராகுலா?'-செல்லூர் ராஜு சொன்ன அசத்தல் பதில்!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Modi? Rahul?-Sellur Raju's wacky answer

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெற உள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்று முடிந்தது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது 'மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சி வருமா? அல்லது ராகுல் காந்தி தலைமையிலான ஆட்சி வருமா?' எனக் கேள்வி எழுப்பினர். அதற்குப் பதிலளித்த அவர், ''எங்களைப் பொறுத்தவரை யார் மத்தியில் ஆட்சிக்கு வந்தாலும் சரி, தமிழகத்துக்கு நல்லது செய்யக்கூடிய யார் வந்தாலும் வரவேற்போம். அது ராகுலாக இருந்தாலும் சரி, மோடியாக இருந்தாலும் சரி, எங்கள் தமிழகத்திற்கு பாதகமற்ற முறையில் யார் ஆட்சி செய்தாலும் அதை அதிமுக வரவேற்கும் என எங்கள் பொதுச்செயலாளரே சொல்லிவிட்டார்.

கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் திமுக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்ட 39 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாதிரி எங்களுடைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்க மாட்டார்கள். இந்தியா மதச்சார்பற்ற நாடு. இங்கு ஒவ்வொரு மதத்தையும் குறி வைத்து மோடி போன்ற பெரிய பதவியில் இருப்பவர்கள் பேசுவது சரியில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை எல்லாரையும் தூக்கி கொண்டாடுகிறார்கள் மக்கள். மக்களுடைய மனநிலை மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு.

நீங்க பாருங்க எந்தக் கட்சியுமே சொல்லவில்லை நீர் மோர் பந்தல் அமையுங்கள் என எந்த கட்சியின் தலைவராவது அறிவித்துள்ளார்களா? எங்கள் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மட்டுமே தொண்டர்களுக்கு உத்தரவிட்டுள்ளார். உடனடியாக தங்களுடைய தொண்டர்கள் அதை நிறைவேற்றுவார்கள் என்ற அடிப்படையில்தான் அவர் சொல்லியுள்ளார். எல்லா கட்சிகளும் தேர்தலைக் கருத்தில் கொண்டுதான் இயங்குகின்றதே ஒழிய பொதுநோக்கத்துடன் எந்த அரசியல் இயக்கங்களும் இயங்கவில்லை. அதிமுக மட்டும் தான் மக்கள் சேவையே மகேசன் சேவை என்ற அடிப்படையில் செயல்பட்டு வருகிறது'' என்றார்.

Next Story

முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் நீதிமன்றத்தில் ஆஜர்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Former Minister C. Vijayabaskar appears in court
கோப்புப்படம்

விராலிமலை சட்டமன்றத் தொகுதி உறுப்பினராக உள்ள முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் கடந்த அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த காலகட்டத்திலேயே ஊழல்கள், முறைகேடுகள் எனப் பல்வேறு குற்றச்சாட்டுகளில் சிக்கினார். இதனால் 2017 ஆம் ஆண்டு அமைச்சராக இருந்தபோதே அவருடைய வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் 89 கோடி ரூபாய் பணப் பட்டுவாடா உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் வருமான வரித்துறையினர், அமலாக்கத்துறையினர், கனிமவளத் துறையினர் எனப் பல்வேறு துறையினர் சோதனை நடத்தினர்.

அமைச்சராக இருந்த 2021 அக்டோபர் 18 ஆம் தேதி 2016 முதல் 2021 வரை காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக 27 கோடி ரூபாய் அசையும் மற்றும் அசையா சொத்துகளை வாங்கிக் குவித்ததாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் சி. விஜயபாஸ்கர் மீது வழக்குப் பதிவு செய்தனர். வீடு உள்ளிட்ட அவருக்கு தொடர்புடைய 56 இடங்களில் சோதனை நடத்தினர். சோதனையில் 23.85 லட்சம் ரூபாய் ரொக்கம், 4.87 கிலோ தங்கம், 136 கனரக வாகன சான்றிதழ்கள், பல்வேறு ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

அதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் அவருடைய மனைவியும் வருமானத்திற்கு அதிகமாக 35.29 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் 216 பக்க குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்தனர். 800க்கும் மேற்பட்ட ஆவணங்கள் அந்த குற்றப்பத்திரிகையில் இணைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இந்த வழக்கு தொடர்பாக விஜயபாஸ்கரும், அவரது மனைவி ரம்யாவும் இன்று (25.04.2024) நேரில் ஆஜராகியுள்ளனர். இதனையடுத்து நீதிமன்றம் இந்த வழக்கை ஜூன் 12ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளது.