Skip to main content

பாஜக ஒரு மீட்டிங் நடத்திட்டு... முடிந்தால் கருத்தால் சண்டைபோடு, அதைவிட்டுவிட்டு... பியூஸ் மானுஷ்

Published on 26/03/2019 | Edited on 26/03/2019

சமூக செயற்பாட்டாளர் பியூஸ் மனுஷ் ஆஞ்சிநேயரை அவமதித்துவிட்டார் என்பதுபோன்ற போலிச்செய்திகளை ஃபேஸ்புக்கில் பரப்பினர். மேலும் அவரது எண்ணையும் ஃபேஸ்புக்கில் பதிவிட்டனர். இதுகுறித்து அவர் கூறியது.
 

piyush manush


காங்கிரஸ், பாஜக, திமுக, அதிமுக என அனைவரையும் நாம் எதிர்த்திருக்கிறோம், ஆனால் இப்படி ஃபேக் நியூஸ் போட்டு, போட்டு குடும்பத்தை தாக்குவது, இப்போது இன்னும் கீழ்மட்டத்திற்கு சென்று கடவுள் பெயரை வைத்து தாக்க ஆரம்பித்து விட்டார்கள். ஆஞ்சிநேயரைப்பற்றி அவதூறாக நாம் எதுவுமே பேசவில்லை. ஆனால் இவர்கள் இவ்வளவு கீழ்தரமாக இறங்குவார்கள் என நினைத்துக்கூட பார்க்கவில்லை. காலையிலிருந்து 400 ஃபோன் கால்கள் வந்துவிட்டன. அதில் 350 ஃபோன் கால்கள் அவை ஃபேக் நியூஸ் என தெரிந்துகொண்டு மன்னிப்பு கேட்டனர். அது மிகவும் நல்ல விஷயம். நிறையபேர் தாக்கவும் செய்துள்ளனர். 
 

எப்போதும் நம்மைப்பற்றி ஃபேக் நியூஸ் பரப்புவார்கள் ஆனால் இந்தளவிற்கு இல்லை. சமீபத்தில் என்ன ஆச்சுனா, பாஜக ஒரு மீட்டிங் நடத்திட்டு இருந்தாங்க. அப்போது சாமி பாடல்கள், பக்தி பாடல்களெல்லாம் போட்டுட்டு இருந்தாங்க. நாம மதங்களை பயன்படுத்தாமல் ஓட்டுக்களை கேளுங்கள் என எதிர்த்தோம். இந்து மதத்தின் பாதுகாவலர்கள் நீங்கள் கிடையாது, இந்து மதத்தை நீங்கள் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். நீ அதை ஓட்டுக்காக பயன்படுத்தாதீர்கள். இந்து மதம் நீ விளையாடக்கூடிய மைதானம் கிடையாது எனக்கூறினேன். அதற்கு அவர்கள் இது மதமில்லை, கலாச்சாரம் எனக்கூறினர். இது கலாச்சாரம் இல்லை, இது மதம். 
 

ஓட்டுக்காக மதம், ஜாதியை பயன்படுத்தக்கூடாது, நாம் அதில் தெளிவாக இருக்கிறோம். இதுகுறித்து பேசியதுதான் பெரிய ரகளை ஆகிவிட்டது. பறக்கும்படை வந்தவுடனே நாங்கள் அந்தப் பாடல்களையெல்லாம் போடவே இல்லை எனக்கூறிவிட்டனர். நான் புகார் கொடுத்துள்ளேன், நீ ஆஞ்சிநேயர் பாடல் போட்டீர்கள் என்று. ஆமாம் போட்டேன் என்று சொல்லிருக்கலாமே. வழக்குதானே போடுவார்கள், போடட்டும் என கூறவேண்டியதுதானே. அப்போது அவர்கள் உண்மையான பக்தர்கள். புகார் வந்தவுடனேயே நாங்கள் பாட்டே போடவில்லை எனக்கூறுகிறார்கள். இப்போது நான் ஆஞ்சிநேயர் குறித்து அவதூறாக பேசினார்கள் எனக்கூறி, பொய் செய்திகளை பரப்புகிறார்கள். 
 

நாம் பேசிக்கொண்டிருந்தபோதே அந்த ஃபேக் நியூஸை பார்த்துவிட்டு, அவருக்கு யாரோ கால் செய்திருக்கிறார்கள். அதில் அவர் பேசிவிட்டு வந்தார். 
 

கருத்திற்கு கருத்து மூலம் சண்டைபோடு. முடிந்தால் கருத்தால் சண்டைபோடு. அதைவிட்டுவிட்டு ஓடி, ஒளிந்து ஃபேக் ஐடிக்கள் மூலம், ஃபேக் நியூஸ்களைப் போட்டுதான் களத்தில் வெல்ல வேண்டுமென்றால் அதைவிட கேவலம் வேறெதுவுமில்லை. ஃபேக் நியூஸ் பரப்பவேண்டுமென்று எவனோ ஒருவன் மதத்தைக் கொச்சைப்படுத்தியிருக்கிறானே, அவன் எவ்வளவு கொடூரமானவனாக இருப்பான். நான் நித்தியானந்தாவை திட்டுவேன், உடனே அவன் இந்து கடவுளை திட்டுகிறேன் என்கிறான். இந்துக் கடவுள்களுக்கும், நித்தியானந்தாவிற்கும் வித்தியாசம் இல்லையா. 

 

 

Next Story

பிரதமர் மோடிக்கு எதிரான மனு தள்ளுபடி!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
Petition against Prime Minister Modi dismissed

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்ற தேர்தல் நாடு முழுவதும் களைகட்டியுள்ளது. அதன்படி கடந்த 19 ஆம் தேதி (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அதில் முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் கடந்த 26 ஆம் தேத் (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது.

இத்தகைய சூழலில் பிரதமர் மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனுவை வழக்கறிஞர் ஆனந்த் ஜோன்டேல் என்பவர் தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், “உத்திரபிரதேசத்தின் பிலிபிட்டில் கடந்த 9 ஆம் தேதி நடைபெற்ற தேர்தல் பரப்புரையின்போது பிரதமர் மோடி, மதம், கடவுள் மற்றும் வழிபாட்டுத் தலங்களை குறிப்பிட்டு வாக்கு சேகரித்ததுடன், இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசினார். மேலும் பிரதமரின் இத்தகைய பேச்சு மக்கள் பிரதிநித்துவ சட்டத்திற்கு எதிரானது. எனவே பிரதமர்  மோடி தேர்தலில் போட்டியிட 6 ஆண்டுகள் தடை விதிக்கக் வேண்டும். இது குறித்த உத்தரவை தேர்தல் ஆணையத்திற்கு பிறப்பிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. 

Petition against Prime Minister Modi dismissed

இதனையடுத்து இந்த வழக்கு கடந்த 26 ஆம் தேதி (26.04.2024) நீதிபதி சச்சின் தத்தா முன்பு விசாரணைக்கு வர இருந்தது. ஆனால் அன்றைய தினம் நீதிபதி சச்சின் தத்தா விடுப்பு எடுத்ததால் இந்த வழக்கு விசாரணை திங்கட்கிழமைக்கு (29.04.2024) ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு இன்று (29.04.2024) விசாரணைக்கு வந்தது அப்போது, நீதிபதிகள், “இந்த மனு முற்றிலும் தவறாக புரிந்துகொள்ளப்பட்ட மனுவாக தான் கருதுகிறோம்” எனத் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த மனுவை தள்ளுபடி செய்து டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Next Story

முதல்வரிடம் மனு கொடுக்க முயன்ற பாஜக நிர்வாகியால் பரபரப்பு!

Published on 29/04/2024 | Edited on 29/04/2024
A BJP executive who tried to petition the Chief Minister stalin

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி உள்ளது. இதன் ஒரு பகுதியாக முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக தமிழகம் உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கிடையே தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தமிழ்நாடு முழுவதும் இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து திருச்சியில் 22 ஆம் தேதி திருச்சியில் ஆரம்பித்த தேர்தல் பிரச்சாரத்தை ஏப்ரல் 17 ஆம் தேதி சென்னை நிறைவு செய்திருந்தார்.

இத்தகைய சூழலில் கோடைக்காலத்தையொட்டி ஓய்வெடுப்பதற்காக தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று (29.04.2024) கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை சென்றார். அதன் பின்னர் அங்கிருந்து கார் மூலம் கொடைக்கானல் செல்கிறார். கொடைக்கானலில் உள்ள தனியார் ஓட்டலில் முதல்வர் மு.க. ஸ்டாலின் தனது குடும்பத்துடன் 5 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கவுள்ளார். அதன்பின்னர் கொடைக்கானலில் இருந்து மே 4 ஆம் தேதி சென்னை திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது. 

A BJP executive who tried to petition the Chief Minister stalin

இந்நிலையில் மதுரை விமான நிலையத்தில் கஞ்சாவுடன் முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் மனு கொடுக்க வந்த பாஜக ஓபிசி அணியின் செயற்குழு உறுப்பினர் சங்கர பாண்டி என்பவர் வந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட மதுரை காவல் மாநகர காவல்துறையினர் அவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துள்ளதை சுட்டிக்காட்டி கஞ்சாவுடன் மனு கொடுக்க வந்ததால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

அதே சமயம் கொடைக்கானலில் இருந்தே தனது அலுவல் பணிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் மேற்கொள்வார் எனவும் அரசு உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் கொடைக்கானல் வருகையையொட்டி சுற்றுலா பயணிகள், சுற்றுலாத்தலங்களுக்கு எவ்விதக் கட்டுப்பாடுகளும் இல்லை என மாவட்ட நிர்வாகம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகையையொட்டி இன்று முதல் மே 4 ஆம் தேதி வரை கொடைக்கானலில் ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது; சுமார் 1,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.