Skip to main content

பாலம் போட்ட பா.ம.க... பதவி விலகிய வி.பி.சிங்... கொள்ளை ராணி நாடாளுமன்றத்தில் நுழைந்த வரலாறு...

Published on 25/07/2020 | Edited on 25/07/2020

 

Phoolan Devi - UttarPradesh - VP SIngh - PMK - Ramadoss - Bandit Queen - History

பொள்ளாச்சி கொடூரம், காசியின் காமவேட்டை, சிறுமி ஹாசினி துயரம், டெல்லி நிர்பயா கொலை உள்ளிட்ட எந்தச் செய்தியைக் கேட்டாலும் ஒரு பொதுஜன மனநிலை எப்படி இருக்கும்? குழந்தைகளின், பெண்களின் ரத்தம் குடித்த அந்த ஓநாய்களை நடுரோட்டில் நிற்கவைத்துச் சுடவேண்டும் எனக் கொந்தளிக்கும். அது சட்டத்திற்குப் புறம்பானது எனினும் அதுதான் சரியான நீதி என பொதுஜனம் புலம்பித் தவிக்கும். அதைத்தான் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் செய்தார். தன் உடலைத் தின்ற 22 பேரை நடுரோட்டில் வரிசையாக நிற்கவைத்துச் சுட்டார். அவரை பொதுஜனங்கள் ‘துர்கை’யாக வழிபட்டனர். அவர்தான், தலைக்கு விலை வைத்து தேடப்பட்ட கொள்ளை ராணி - பெண் அரசியல்வாதி- வெற்றிகரமான இந்திய எம்.பி…. ‘பூலான் தேவி’.

 

யார் அந்தப் பூலான் தேவி?

 

இந்திய நாட்டில் பெண்ணாகப் பிறந்தாலே பல சவால்களைச் சந்திக்க வேண்டும். அதிலும், தாழ்த்தப்பட்ட சமூகத்தில் பெண்ணாகப் பிறந்தால் சொல்லவா வேண்டும்... இன்னும் குறிப்பாக, உத்திரப்பிரதேசம் போன்ற பின்தங்கிய மாநிலத்தில் வசதியற்ற படகோட்டியின் மகளாக பிறந்தால் எப்படி இருக்கும்? மேற்சொன்ன சிந்தனைகளின் உயிர் உருவமே பூலான் தேவி.

 

1963-இல் உத்திரப்பிரதேசத்தின் கங்கை நதிக்கு உணவாகாமல் தப்பிப் பிறந்த பெண் சிசுக்களில் அவரும் ஒருவர். பெண்ணாகப் பிறந்த ஒரே காரணத்தால், தந்தையால் வெறுக்கப்பட்டவர். 11 வயதில் திருமணத்திற்குத் தயார் செய்யப்பட்ட பூலான், தன்னை விட 20 வயது மூத்தவரைத் திருமணம் செய்துகொள்ள அப்பாவோடு காலமும் கட்டளையிட்டது. அப்போது திருமணமான குழந்தைகள் வயது வரும் வரை தந்தை வீட்டில்தான் இருப்பர். ஆனால், அவர் கணவன் புட்டிலாலோ திருமணம் ஆனதும் வீட்டுக்கு அழைத்துச் சென்று சிறுமி என்றும் பாராமல் பாலியல் துன்புறுத்தல் தருகிறார். மிச்ச நேரங்களில் வீட்டு வேலைகளைச் செய்ய நிர்பந்திக்கப்படுகிறார் பூலான். இதனால் மனமுடைந்த பூலான் கணவனுக்குத் தெரியாமல் தன் தந்தை வீட்டுக்கு வந்துவிடுகிறார்.

 

சுரண்டிய சொந்தங்கள்:

 

கணவனுக்குத் தெரியாமல் வீட்டுக்கு வந்த பூலானை தந்தை ஏற்க மறுக்கிறார். இருப்பினும், ஊர் பெரியவர்களின் அறிவுறுத்தல் படி சிலகாலம் பெரியப்பா கருதயாளின் வீட்டில் தங்கவைக்கப் படுகிறார் பூலான். ஆனால், எல்லாவற்றையும் கேள்வி கேட்டுப் பழகிய பூலான் தனது தந்தையின் நிலத்தை அபகரித்துள்ள பெரியப்பாவிடம் நிலத்தைக் கேட்கிறார். இதனால் ஆத்திரமடைந்த பெரியப்பா கருதயாள், பூலானை வீட்டை விட்டுத் துரத்துகிறார். மீண்டும் வீட்டிற்குச் சென்றால் பெற்றோர் மனம் வருந்துவர் என்பதால் மறுபடியும் கணவன் புட்டிலால் வீட்டிற்குச் செல்கிறார். ஆனால், கணவன் இன்னொரு மனைவியோடு குடும்பம் நடத்துவதைப் பார்த்ததும் கையறு நிலையில், மீண்டும் தன் கூட்டிற்கு வந்தடைகிறது அந்தப் பெண் புறா.

 

Phoolan Devi - UttarPradesh - VP SIngh - PMK - Ramadoss - Bandit Queen - History

 

வீட்டிற்கு வந்த பிறகும் தந்தை நிலத்தை அபகரித்த பெரியப்பாவை எதிர்த்து அவ்வப்போது பேசியும், போராடியும் வந்தார் பூலான். எப்படியாவது தங்கள் நிலத்தை மீட்க வேண்டும் என நினைத்த பூலானின் செயல்பாடுகள் பெரியப்பாவையும் அவர் மகனையும் தூங்க விடாமல் செய்தது. இந்நிலையில், மாமா என்ற உறவு முறையில் வீட்டிற்குள் நுழைந்தது வேறொரு பிரச்சனை. பூலானின் மாமா அடிக்கடி பூலானை பாலியல் சீண்டல்களுக்கு உட்படுத்தினார். பூலானின் வயதான தந்தையால் இதெல்லாம் தட்டிக் கேட்க முடியவில்லை. உடன் பிறந்த நான்கு சகோதரிகளுக்கும் ஒரு சின்ன தம்பிக்கும் இந்தக் கொடுமைகளை எதிர்க்கும் வலு போதுமானதாக இல்லை.

 

மறுமணமும் திருட்டுப் பழியும் :

 

நிலப் பிரச்சனையைக் மீண்டும் மீண்டும் கிளரும் பூலான் மீது பெரியப்பா குடும்பத்தினர் கடும் கோபத்தில் இருந்தனர். அவரைப் பழி தீர்க்க சமயம் பார்த்தனர். இந்நிலையில் கைலாஷ் என்பவருடன் பழக்கம் ஏற்பட பூலான், பூலான் கைலாஷாக மாறினார். திருமணம் முடிந்ததும் இனி கைலாஷ்தான் எல்லாம் என நினைத்தார். சந்தோஷமான எதிர்கால வாழ்க்கையை அடிமனதில் அசைபோடத் தொடங்கினார் பூலான். ஆனால், கையைக் கசக்கிக்கொண்டு நம்பியாரைப் போல கொடூரத்திட்டம் தீட்டியது, விதி. 

 

பூலானின் நெருக்கடிக்கு முடிவுகட்ட நினைத்த பெரியப்பா கருதயாளின் மகன், தன் தங்கக் கடிகாரத்தைத் திருடி விட்டதாக போலீசில் பொய்ப் புகார் கொடுத்தார். ஏன் என்று கேட்க நாதியில்லாத பூலானை போலீஸ் கைது செய்கிறது. ஆம் நீங்கள் யோசித்தது சரிதான், போலீஸும் அவரை பாலியல் தொல்லைக்கு உட்படுத்துகிறது. பிறகு நீதிபதியின் கருணையால் அவர் விடுதலை செய்யப்படுகிறார். விடுதலை செய்யப்பட்டு வீட்டிற்கு வரும் பூலானை, ஊர் மக்கள் அனுமதிக்க மறுக்கின்றனர். வேறுவழி தெரியாத கைலாஷ் தன் கொள்ளைக்கார நண்பர்களுடன் மனைவி பூலானை சில காலம் அனுப்ப முடிவு எடுக்கிறார். நம்பி வந்த கணவனின் கைவிரிப்பு பூலானுக்கு அதிர்ச்சியைத் தருகிறது. கொள்ளையர்களுடன் செல்லும் முடிவில் பூலானுக்குச் சற்றும் உடன்பாடில்லை. ஆனால் அவரின் உடன்பாடுகள் எல்லாம் ஒருபோதும் கேட்கப்பட்டதே இல்லை.

 

கொள்ளைக் காதல் :

 

கைலாஷோடு இருந்த போதே பூலானின் மீது ஆசை கொண்டிருந்தான் கொள்ளை நண்பன் பாபு குஜ்ஜர். இந்நிலையில் கைலாஷ், பூலானை அவனோடு அனுப்பி வைக்க, பாபுவின் கொரூர மனம் விழித்துக்கொண்டது. உத்தரப் பிரதேசத்தில் உள்ள சம்பல் பள்ளத்தாக்கைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த அந்தக் கொள்ளைக் கும்பலின் தலைவன்தான், பாபு குஜ்ஜர். பாபு குஜ்ஜருக்கு அடுத்த இடத்தில் இருந்தவன் விக்ரம் மல்லா. பூலானை பாலியல் வன்புணர்வு செய்து கொன்று வீசிவிட திட்டமிட்டு, காய் நகர்த்தினான் பாபு. ஆனால் இந்தத் திட்டம் அறிந்து பாபு குஜ்ஜரோடு சண்டையிட்டான் விக்ரம் மல்லா. சண்டையில் பாபு கொல்லப்பட்டான். விளைவு, விக்ரம் மல்லா கொள்ளைக் கும்பலின் தலைவன் ஆனான்.

 

சாதி பார்க்காமல் கொள்ளையடித்தனர். ஆனால், கொள்ளையர்களுக்குள் சாதி பார்த்தனர். கொல்லப்பட்ட பாபு குஜ்ஜர் உயர்சாதியாகக் கருதப்பட்ட தாக்கூர் இனத்தைச் சேர்ந்தவர். கொலை செய்த விக்ரம் தாழ்த்தப்பட்ட மல்லா இனத்தைச் சேர்ந்தவர். அவ்வளவு தான், கூட்டத்தின் ஒரு பகுதி விக்ரமைக் கொலை செய்யும் சந்தர்ப்பத்திற்குச் சமயம் பார்த்தது. இந்நிலையில், விக்ரம் மல்லா- பூலான் தேவியைத் திருமணம் செய்து கொள்கிறான். அதுவரை தனக்கு யாரும் வழங்காத சுயமரியாதையை விக்ரம் அளித்தது பூலானுக்குப் பிடித்திருந்தது. குதிரை ஏற்றம், துப்பாக்கிச் சுடுதல் என சகல வித்தைகளையும் கற்று தேர்ந்த கொள்ளை ராணியாக உருவெடுத்தார், பூலான்.  

 

புயலில் சிக்கிய பூச்செடி:

 

பூலான் இந்தக் கொள்ளை வாழ்க்கையை விரும்பித் தேர்ந்தெடுக்கவில்லை. ஆனால், அவருக்கு இப்போது இதுதான் ஒரே பாதுகாப்பு. கொள்ளைக் கூட்டத் தலைவன் விக்ரம் மல்லாவின் மனைவியாகக் கொஞ்சம் நிமிர்ந்து அமர்ந்தார், பூலான் தேவி. அவரைக் கண்டு அனைவரும் மரியாதை தந்தனர். ஆண்கள் அவரை மதித்தனர். சில காலம் நீடித்தது இந்தச் சுயமரியாதை வாழ்க்கை. ஆனால், மீண்டும் கையைக் கசிக்கிக்கொண்டு புதுத் திட்டத்தோடு வந்து நின்றது விதி. 

 

Phoolan Devi - UttarPradesh - VP SIngh - PMK - Ramadoss - Bandit Queen - History

 

1980 ஆகஸ்ட் 13-இல் கொள்ளைக் கூட்டத் தலைவன் விக்ரம் மல்லா கொல்லப்பட்டான். பூலானை, உயர்சாதி கூட்டத்தைச் சேர்ந்த கொள்ளையர்கள் ‘பேமாய்’ என்னும் கிராமத்திற்குக் கடத்திச் சென்றனர். மீண்டும் பாலியல் துன்புறுத்தல்கள், அடி, உதை, அவமானம். கிட்டத்தட்ட 3 வாரங்கள் தொடர் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டார் பூலான். ‘பேமாய்’ கிராமத்தில் உள்ள வேறு சில உயர்சாதி கழுகுகளும் அவரின் உடலைச் சுற்றி வட்டமிட்டன. தனக்கு இழைக்கப்பட்ட அத்தனை அநீதிகளையும் தாங்கிக்கொண்ட பூலான், தனக்கான நீதியைத் தானே எழுதத் துணிந்தார். இப்போது, அவர்களைப் பழி தீர்ப்பது மட்டும்தான் பூலானின் ஒற்றை நோக்கம். வாய்ப்பு வசப்பட்டது, தாழ்த்தப்பட்ட மக்கள் சிலர் உதவ அங்கிருந்து தப்பினார் பூலான்.

 

பதவி விலகிய வி.பி.சிங்:

 

உடலும் மனமும் வலுவிழந்த நிலையில், வெந்ததைத் தின்று விதிவந்தால் சாகலாம் என நினைக்கும் சராசரிப் பெண் அல்ல பூலான் தேவி. தப்பித்த சில நாட்களிலேயே விக்ரம் மல்லாவின் ஆதரவாளர்களை ஒருங்கிணைக்கிறார். 14 ஃபிப்ரவரி 1981,  தன் உடலைக் கொத்திய கழுகுகளையும், கடித்துக் குதறிய ஓநாய்களையும் பழி தீர்க்கும் வெறியோடு ‘பேமாய்’ கிராமத்தில் தடம் பதித்தார். அவ்வளவாக அந்த உருவங்கள் அவருக்கு நியாபகம் இல்லை, விசாரித்ததில் அகப்பட்ட 22 ஆண்களை வரிசையாக நிற்கவைத்தார். தோட்டாக்கள் சீறித் தெறித்தது. இந்தியாவே கொந்தளித்தது. காரணம் கொலை செய்யப்பட்ட 22 பேரும் பெரும்பான்மை சாதியைச் சேர்ந்த ஆண்கள். சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டதாய் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. விளைவு, அன்றைய உத்திரப்பிரதேச முதல்வர் வி.பி.சிங் பதவி விலகினார்.

 

பூலானின் தலைக்கு 2 லட்சம் விலை வைத்துத் தேடியது அரசு. சில காலம் மத்திய பிரதேச மற்றும் உத்திரப்பிரதேச அரசுகளுக்குப் போக்கு காட்டிக் கொண்டிருந்த பூலானுக்கு தாழ்த்தப்பட்ட மக்கள் பெரும் ஆதரவாகத் துணை நின்றனர். தங்களைக் காக்கவந்த “துர்கா தேவி” என பூலானை வணங்கினர். வட மாநிலங்கள் முழுதும் அரசுக்குப் பெரும் தலைவலியாக இருக்கும் பூலானை சரணடையவைக்க அரசுத்தரப்பில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டது. தொடர் போராட்டங்களால் சற்று உடல் நலிவுற்று இருந்தார் பூலான். இந்நிலையில், போலீஸ் தேடுதலால் அங்கும் இங்கும் ஓட முடியாத நிலையில் இருந்த பூலான் அரசின் சமரச போக்கைப் பயன்படுத்தி சரண் அடைந்து நிம்மதியான வாழ்க்கைக்குத் திரும்ப நினைத்தார். “யானை படுத்தாலும் குதிரை மட்டம்” என்பதுபோல சரணடைவதற்குச் சில நிபந்தனைகளை விதித்தார் பூலான்.

 

வெளிவந்த பெண் சிங்கம்:

 

‘கை விலங்கு போடக் கூடாது’, ‘தனக்கோ தன் கூட்டத்தினருக்கோ தூக்குத் தண்டனை வழங்கக்கூடாது’, ‘தனி நீதிமன்ற விசாரணை அமைக்க வேண்டும்’, ‘8 ஆண்டுகள் மட்டுமே சிறைத் தண்டனை கொடுக்க வேண்டும்’, ‘எனக்கு உத்திரப்பிரதேச போலீசாரின் மீது நம்பிக்கை இல்லை, அதனால் நான் மத்தியப் பிரதேசத்தில் சரணடைய அனுமதியளிக்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட அவரின் பல்வேறு நிபந்தனைகள் அரசால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

 

Phoolan Devi - UttarPradesh - VP SIngh - PMK - Ramadoss - Bandit Queen - History

 

1983-இல் மத்தியப்பிரதேச முதல்வர் அர்ஜுன் சிங் முன்னிலையில் பூலான் தேவி சரணடைய மேடை அமைக்கப்பட்டது. மேடையில் தேசப்பிதா காந்தியின் புகைப்படமும், கடவுள் துர்க்கா தேவியின் புகைப்படமும் இருக்கிறது. பூலான் சரணடையும் நிகழ்ச்சியைக் காண அனைத்துப் பத்திரிகையாளர்களும் பொதுமக்களும் முண்டியடித்துக் கொண்டிருந்தனர். காரணம், பூலானின் பெயர் அறிமுகமான அளவுக்கு அவரின் உருவம் அறிமுகம் இல்லாமல் இருந்தது.

 

தலையைச் சுற்றி சிவப்புத் துணி, காக்கி உடை, இடுப்பில் பெல்ட், முதுகில் பெரிய துப்பாக்கி எனக் காட்சியளித்தார் பூலான். வட மாநிலங்களையே தன் செய்கையால் கொலை நடுங்கச் செய்த 26 வயதே ஆன பூலானின் உயரம் 4 அடி 11 அங்குலம் மட்டுமே. பூலானும் அவரின் படையும் துப்பாக்கியைக் கைவிட்டு முதல்வர் அர்ஜுன் சிங் முன்னிலையில் சரணடைந்தனர்.   

 

பாலம் போட்ட பா.ம.க.:

 

எத்தனை முறை விதியின் வசத்தால் வீழ்ந்தாலும், பூலான் ஒருபோதும் விதிக்கு அஞ்சியதில்லை. ஒவ்வொரு வீழ்ச்சிக்குப் பிறகும் புதிய அத்தியாயத்தைத் தேடியே அவரின் சிறகுகள் விரியும். இந்த முறையும் அப்படித்தான் பூலானின் விடுதலை தாமதிக்கப்பட மத்திய, மாநில அரசுகளின் ஆட்சி மாற்றம் போன்ற பல காரணங்கள் சொல்லப்பட்டது. இந்நிலையில், வேறொரு விஷயமாக அடிக்கடி சிறைக்கு வந்து போன உமத் சிங் என்பவர் பூலானைச் சந்திக்கிறார். பூலானின் வலி நிறைந்த வாழ்வில் பங்கேற்கிறார் உமத் சிங். அவரின் ஆறுதல் வார்த்தைகள் பூலானின் கடந்த கால காயங்களுக்கு களிம்பு தடவியது.

 

கொள்ளை ராணியாகச் சிறை சென்ற பூலானை அம்பேத்கரின் புத்தகங்கள் கொள்கைவாதியாக வெளியேற்றியது. ஆம், 11 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்குப் பிறகு 37 ஆவது வயதில் (1994 ஃபிப்ரவரி 19) விடுதலை செய்யப்பட்டார் பூலான் தேவி. அப்போது உத்திரப்பிரதேசத்தில் ஆட்சியில் இருந்த முதல்வர் முலாயம்சிங், பூலானின் மீது இருந்த 40-க்கும் மேற்பட்ட வழக்குகளைத் தள்ளுபடி செய்தார். இதனால் சுதந்திரப் பறவையாக வெளியில் வந்தார் பூலான் தேவி. கலவரங்கள் அற்ற சாதாரண வாழ்கையை அமைத்துத் தர விரும்புவதாகச் சொன்ன உமத் சிங்கோடு பூலானின் திருமணம் எளிய முறையில் நடந்துமுடிந்தது.

 

Phoolan Devi - UttarPradesh - VP SIngh - PMK - Ramadoss - Bandit Queen - History

 

விடுதலைக்குப் பிறகு அவரின் முதல் அரசியல் நிகழ்ச்சிக்கு மேடை அமைத்தது தமிழகம். 1994  ஆம் ஆண்டு, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தலைமையில் நடைபெற்ற “மது ஒழிப்பு, ஆபாசப் படம் தடை மற்றும் மகளிர் இயக்கம்” குறித்த மாநாட்டில் பங்கேற்றார், பூலான் தேவி. துப்பாக்கிகளுக்கும் துரோகங்களுக்கும் நடுவே வாழ்ந்தவரை அரசியல் மேடைக்கு அழைத்து வர பாலமாய் இருந்தது பா.ம.க. இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த அதிரடிகள் அவர் வாழ்வில் அரங்கேறியது. முலாயம் சிங் தலைமையிலான சமாஜ்வாதி கட்சியில் தன்னை இணைத்துக் கொண்டு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆதரவான அரசியலில் தீவிரமாகக் களம் இறங்குகிறார் பூலான்.

 

பூலான்தேவி., எம்.பி!

சமாஜ்வாதி கட்சி சார்பில் இரண்டு முறை உத்தரப்பிரதேசத்தின் மிர்சாபூர் தொகுதி சார்பாக போட்டியிட வாய்ப்பு கிடைத்தது. 1996 –இல் மக்களவை சார்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார் பூலான்தேவி. காடுகளிலும் மேடுகளிலும் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள ஓடித்திரிந்த பூலானின் கால்கள் நாடாளுமன்றத்தில் அடியெடுத்து வைத்தது. காலமெல்லாம் நசுக்கப்பட்ட பூலான் நாடாளுமன்றத்தில் பெருங்குரலெடுத்து பேசினார். தன் தொகுதி மக்ககளின் பல்வேறு பிரச்சனைகளைத் தீர்த்து வைத்தார். விளைவு அடுத்து நடைபெற்ற 1999 நாடாளுமன்றத் தேர்தலில் 2 லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று வலுவான ஆளுமையாக உருவெடுத்தார்.

 

Phoolan MP

 

வாழ்வின் அத்தனை அசவுகரியங்களையும் சகித்துக் கொண்டு வாழத் தயாரானவரை இந்த உலகம் இறுதி வரை வாழவிடாமலேயே செய்தது. அதேசமயம் தனக்கு இழைக்கப்பட்ட அத்தனை அநியாயங்களுக்கு எதிராகவும் சோர்ந்துவிடாமல் போராடிக் கொண்டிருந்த பெண் சிங்கத்தை 5 தோட்டாக்கள் சரித்தது. 2001 ஜூலை 25 அன்று வீட்டு வாசலில் கார் ஏற வந்த பூலானை முகமூடியிட்ட மூன்று மர்ம நபர்கள் சுட்டு வீழ்த்தினர். சம்பவ இடத்திலேயே பூலான் பலியானார். விரைவில் கொலையாளிகள் கண்டுபிடிக்கப்பட்டனர். விசாரணையில், பேமாய் கிராமத்தில் கொலை செய்யப்பட்ட 22 பேரின் மரணத்திற்காக பழி தீர்த்தாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தனர் கொலையாளிகள்.

 

பாட்சாவாக இருக்கும்வரை பூலானை நெருங்க பயந்த கூட்டம், மாணிக்கமானதும் மண்ணில் வீழ்த்தி பகைமுடித்தது.

 

இன்று பூலான் நினைவு நாள்!