Skip to main content

OPS மகன்கள் இடையே யுத்தம்... தம்பிக்கு அனுபவமில்லை என அண்ணன் ஆதரவாளர்களின் கருத்தால் பரபரப்பு!

Published on 02/07/2020 | Edited on 02/07/2020

 

opr-ops-pradeep

 

அப்பாவைப் போலவோ, அண்ணனைப் போலவோ அரசியலில் ஆர்வம் காட்டாமல் ஆன்மிகமும், ரியல் எஸ்டேட் தொழிலுமே முதன்மையானது என்றிருந்தார் ஓ.பி.எஸ்.சின் இரண்டாவது மகன் ஜெயபிரதீப். இப்போது அண்ணனுக்குப் போட்டியாக தம்பியும் இறங்கியிருப்பதால் தேனி மாவட்ட அ.தி.மு.க.-வில் பரபரப்பு பற்றிக்கொண்டிருக்கிறது.

 

கரோனா நிவாரண உதவிகளை மாவட்டத்திலுள்ள நான்கு தொகுதியில் இருக்கும் அனைத்துத் தரப்பு மக்களுக்கும் வழங்கியதுடன் மட்டுமல்லாமல், கரோனா நிவாரண நிதியாக தனது சொந்தப் பணத்தில் ஒரு கோடியை நிதியாக முதல்வருக்கு அனுப்பி எடப்பாடியிடமே பாராட்டைப் பெற்றிருக்கிறார் ஜெயபிரதீப். இவரின் இந்தத் திடீர் அரசியல் விஜயம் குறித்து மாவட்ட பொறுப்பிலுள்ள சில ர.ரக்கள் நம்மிடம் பேசியபோது, கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு முரசொலியில் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஒரு அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில், திருப்பூரில் ஜெயபிரதீப் வீடு கட்டி ரோபோக்களை வேலைக்கு வைத்திருக்கிறார் என்றும், அதிகார துஷ்பிரயோகம் செய்து அரசு கட்டிடத்தில் கம்பெனி நடத்துகிறார் என்றும் குறிப்பிட்டிருந்தார். அதைக்கண்டு டென்ஷன் அடைந்த ஜெய பிரதீப், "ஸ்டாலின் குற்றச்சாட்டு அப்பட்டமான பொய் என்றும், ரோபோக்கள் எதுவுமில்லை, சொந்தக் கட்டிடத்தில் தான் கம்பெனி செயல்படுகிறது. யாரோ எழுதிக் கொடுத்ததை வைத்து ஆதாரம் இல்லாமல் பேசக்கூடாது'' என்றும் ஆடியோ வாய்ஸ் மூலம் ஸ்டாலினுக்கு பதில் கொடுத்து, அரசியலில் அச்சாரம் போட்டார்.

 

தேனி மாவட்ட அ.தி.மு.க. செயலாளரான சையதுகான், கட்சிக்காரர்களைச் சரிவர மதிப்பது கிடையாது. கட்சியையும் வளர்க்க ஆர்வம் காட்டவில்லை. அதனாலேயே துணை முதல்வர் ஓ.பி.எஸ். நான்கு தொகுதிகளில் உள்ள பெரியகுளம், ஆண்டிபட்டி, உத்தமபாளையம் ஆகிய 3 ஒன்றியங்களை இரண்டாகப் பிரித்து பொறுப்பாளர்களைப் போட்டு கட்சியை வளர்த்து வருகிறார். அதுபோல் தேனி, போடி ஒன்றியத்தையும் இரண்டாகப் பிரித்து பொறுப்பாளர்களை நியமிக்க இருக்கிறார். மாவட்டத்தையும் இரண்டாகப் பிரிக்கப் போகிறார். சையதுகான் ஒரு பகுதிக்கு மாவட்டச் செயலாளராகவும் மற்றொரு பகுதிக்கு இளையமகன் ஜெய பிரதீப்பை மாவட்டச் செயலாளராகவும் போடப்போகிறார் என்ற பேச்சும் அடிபடுகிறது.

 

கட்சியில் பலர் இருக்க, ஜெயபிரதீப்பை முன்னிலைப் படுத்துவதை எதிர்த்து, நாங்களும் ஓ.பி.எஸ்.சிடம் நேரடியாகவே முறையிட்டு இருக்கிறோம்'' என்றனர் ஆதரவாளர்கள்.

 

மேலும், சிறுபான்மைச் சமூகத்தைச் சேர்ந்த சையதுகானை மாவட்ட செயலாளராக போட்டு இருந்தும் கூட, கடந்த எம்.பி. தேர்தலிலும் இடைத் தேர்தலிலும் முஸ்லிம் ஓட்டுகள் விழவில்லை. முத்தலாக் சட்டத்துக்கு ஆதரவாக எம்.பி. ஓ.பி.ஆர் (ரவீந்திரநாத் குமார்) குரல் கொடுத்தார் என்பதற்காக கம்பம் சென்ற ஓ.பி.ஆரை முஸ்லிம்கள் பலர் காரை தடுத்து நிறுத்தித் தாக்கினார்கள். அதுபற்றி மாவட்டம் முறையிட்டும் கூட முஸ்லிம்கள் கண்டுகொள்ளவில்லை. அதனால்தான் மாவட்டச் செயலாளர் பதவியைப் பறிக்க தலைமை முடிவுசெய்து இருப்பதன் மூலம் அந்தப் பதவியை எனக்குத் தர வேண்டும் எனக் கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையன், எடப்பாடி வரைகூட மோதி வருகிறார். ஏற்கனவே துணை முதல்வரை எதிர்த்து மாவட்டத்தில் அரசியல் செய்த ஜக்கையன் இப்ப பதவிக்காக பின்னாடியே ஓடி வருகிறார்.

 

இருந்தாலும் ரவீந்திரநாத் குமார் எம்.பி. ஆக இருப்பதால் தொகுதி மக்கள் மற்றும் கட்சிக்காரர்கள் மத்தியில் நன்கு அறிமுகமானவர். நல்லது கெட்டதில் கலந்து கொண்டு வருகிறார். அப்படிப்பட்ட ஓ.பி.ஆரை மாவட்டச் செயலாளராக போட்டால்தான் கட்சியை வளர்க்க முடியும். அதைத்தான் ஓ.பி.ஆரும் விரும்புகிறார். ஏற்கனவே ஆறு தொகுதிகளைக் கொண்ட பிற மாவட்டங்களை இரண்டாகப் பிரித்துப் பொறுப்பாளர்களை நியமித்து இருக்கிறார்கள். தேனி மாவட்டத்தில் நான்கு தொகுதிகளே இருப்பதால் பிரிக்க வாய்ப்பில்லை. அதனால் ஏற்கனவே இருக்கக் கூடிய மாவட்டச் செயலாளர் சையதுகானை மாற்றிவிட்டு எம்.பி. ஓ.பி.ஆரை மாவட்டச் செயலாளராக நியமிக்க வேண்டுமே தவிர, அரசியல் அனுபவம் இல்லாத அவருடைய தம்பி ஜெயபிரதீப் எல்லாம் போடக் கூடாது’என்கிறார்கள் ஒன்றிய பொறுப்பிலுள்ள ஓ.பி.ஆர் ஆதரவாளர்கள் சிலர்.

 

http://onelink.to/nknapp

 

"ரவீந்திரநாத்குமாருக்கு எம்.பி. சீட் கொடுக்கும் போதே ஜெயபிரதீப் பையும் அரசியலில் இறக்கி பதவி கொடுக்க வேண்டும் என்ற பேச்சு ஏற்கனவே இருந்து வந்தது. இந்த நிலையில்தான் திடீரென அரசியல் களத்தில் குதித்த ஜெயபிரதீப்புக்கு மாவட்டச் செயலாளராக வேண்டும் என்ற ஆசையும் இருந்து வருகிறது. அதுபோல் ரவீந்திரநாத்குமார் எம்.பி.யாக இருந்தாலும் கூட, மாவட்டச் செயலாளராக வரவேண்டும் என்ற ஆசையும் அவருக்கு இருக்கிறது'' என்கிறார்கள்.

 

இப்படி ஒரே பதவிக்கு அண்ணன் தம்பிக்கு இடையே போட்டி வெடித்திருப்பதால் அ.தி.மு.க.-வில் பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது.

 

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

தேனி மக்களவை வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான அறையில் வைத்து சீல்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Theni Lok Sabha voting machines kept in a safe room and sealed!

இந்திய மக்களவைத் தேர்தல் முதல் கட்ட தேர்தலாக தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் நேற்று காலை 7 மணியில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்த நிலையில் வாக்கு பதிவு இயந்திரங்கள் அந்தந்த தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தேனி மக்களவையில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1788 வாக்குப்பதிவு மையங்களில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் காவல் துறையினர் பலத்த பாதுகாப்புடன் சேகரிக்கப்பட்டு தேனி கொடுவிலார்பட்டியில் உள்ள கம்மவர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த (ஸ்டாங் ரூம்) பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கும் பணி நடைபெற்றது.

தேனி மக்களவையில் உள்ள சோழவந்தான், உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், கம்பம், போடிநாயக்கனூர் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் 69.87% வாக்குகள் பதிவாகியுள்ளது. நேற்று மாலை தேர்தல் முடிவ டைந்த நிலையில் வாக்குப்பதிவு மையங்களில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேகரிக்கும் பணி இரவு முழுவதும் நடைபெ ற்றது.

Theni Lok Sabha voting machines kept in a safe room and sealed!

இதனைத் தொடர்ந்து கொடுவார்பட்டியில் உள்ள கம்மவர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஸ்டாங் ரூமில் அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் சீல் வைக்கும் பணி நடைபெற்றது. ஸ்ட்ராங் ரூமில் அனைத்து பகுதிகளும் முழுமையாக மூடப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல்துறையின் நான்கு அடுக்கு பாதுகாப்பில்  பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.  வாக்கு எண்ணிக்கை ஜூன் 04  நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெற இன்னும் 45 நாட்கள் உள்ள நிலையில், பலத்த பாதுகாப்பில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது.