Skip to main content

கிருஸ்துவர்களுக்கு போப் போல இந்துக்களுக்கு நித்தியானந்தா இருக்க ஆசைபடுகிறார் - பழ.கருப்பையா பேச்சு!

Published on 09/01/2020 | Edited on 09/01/2020

நித்தியானந்தா விவகாரம் தொடர்பாக தேசிய அளவில் சர்ச்சை நிலவி வரும் சூழலில்,  தனி நாட்டை உருவாக்கி உள்ளதாகவும், அதற்கு கைலாசா என்று பெயர் வைத்துள்ளதாகவும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் இதுதொடர்பாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையாவிடம் பல்வேறு கேள்விகளை முன் வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு, 

சுவாமி நித்தியானந்தா  கைலாசா என்ற புது நாட்டை உருவாக்கி உள்ளதாக கூறுகிறார். அவர் மீது வழக்கெல்லாம் நடைபெற்று வருகின்றது. தன்னுடைய நாட்டிற்கு இந்து மதத்தினர் வருகை தர வேண்டும் என்று கூறுகிறார். இதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

சாமியார் என்பவர் யார். மதிய சாப்பாட்டிற்கு என்ன செய்ய போகிறோம் என்று தெரியாதவர் தான் துறவி, அதற்கு வழியில்லாதவர் தான் உண்மையான சாமியார். இவர்கள் எல்லாம் சாமியாரா? புத்தர் ஒரு உண்மையான சாமியார். தன்னுடைய இரண்டு கைகளை நீட்டி நிற்பார். என்ன கொடுக்கிறார்களோ அதை மறுக்காமல் வாங்குவார். அவர்தான் உண்மையான துறவி. அதற்கு பிறகுதான் துறவு இந்தியாவில் பெருமை பெற்றது. இப்போது அவர்களுக்கெல்லாம் எங்கிருந்து இவ்வளவு பணம் வருகின்றது. எப்படி இவர்கள் ராஜபோகமாக வாழ்கிறார்கள். அதுவும் சில பேர் பஞ்சாயத்துக்கெல்லாம் செல்கிறார்கள். போலிஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இவர்கள் கட்டிக்கொள்வது மட்டும்தான் தோல் ஆடையே தவிர இவர்களிடம் எந்த ஒழுக்கமும் இல்லை. இந்த கோயமுத்தூரில் இருக்கிறாரே ஜக்கி வாசுதேவ் என்ற ஒருவர், அவரிடம் என்ன கொஞ்ச பணமா இருக்கிறது. அதாவது அவர் அனைத்திற்கு ஆசைபடு என்று கூறுகிறார். ஆசையே துன்பத்திற்கு காரணம் என்று புத்தர் கூறியதற்கு மாறாக அனைத்திற்கும் ஆசைபடு என்கிறார். எல்லாம் விதி, அவரை நம்பியும் ஒரு கூட்டம் இருக்கிறது. ஊழல் மந்திரிகளுக்கெல்லாம் இவர் ஆதரவு தெரிவிக்கிறார். சிஏஏ சட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கிறார். பணம் வைத்திருப்பவரெல்லாம் ஒரு சாமியா?

சனாதன தர்மத்தை நிலை நிறுத்துவதற்காகத்தான் நாங்கள் வந்துள்ளதாக ஜக்கி வாசுதேவ், நித்தியானந்தா ஆகியோர் கூறுவதை பற்றி என்ன நினைக்கிறீர்கள்? கைலாசா நாட்டை பற்றி உங்களின் கருத்தென்ன? 

நான் இந்துவே இல்லை என்று சொல்கிறேன், அப்புறம் என்ன சனாதன தர்மம். எங்களை மேல்நிலையில் உள்ளவர்கள் அடிமைப் படுத்துவதற்காக கொண்டு வரப்பட்டவைகளாகத்தான் நாங்கள் அதனை கருதுகிறோம். கைலாசா நாட்டை பற்றி கருத்து கேட்கிறீர்கள். பெண்களை திரட்டி வைத்துக்கொண்டு பல வேலைகளை அவர் செய்து வருகிறார். அவர் ஒரு புதிய வேலைகளை செய்ய பார்க்கிறார். அதாவது கிருஸ்துவர்களுக்கு ரோமாபுரியில் தலைவர் இருப்பதை போல், இந்துக்களுக்கு எல்லாம் தன்னை தலைவராக முன்னிறுத்த பார்க்கிறார். அதை சங்கராச்சாரியார்கள் ஏற்றுக்கொள்வார்களா? இவரை சூத்திரன் என்று ஒதுக்கிவிட்டு போய்விட மாட்டார்களா? இவரை யார் ஏற்றுக்கொள்வார்கள் என்று நித்தியானந்தா நினைக்கிறார் என்று தெரியவில்லை. அவர் என்ன நினைக்கிறார் என்றால் கிருஸ்துவர்களுக்கு இருக்கின்ற மாதிரி நான்தான் போப் என்று சொல்ல ஆசைப்படுகிறார். ஆனால் சங்கர மடத்தில் இருப்பவர்கள் இவரை தொட கூட மட்டார்கள். இதுதான் நிஜமான நிலை. ஆகவே அவரின் எண்ணம் எப்போதும் நிறைவேற போவதில்லை. 


 

Next Story

சட்டம் போட்ட பாஜக; எதிர்க்காத காங்கிரஸ் - பழ. கருப்பையா

Published on 05/07/2023 | Edited on 05/07/2023

 

Pala Karuppiah interview

 

பொது சிவில் சட்டம் மற்றும் பல்வேறு அரசியல் நிகழ்வுகள் குறித்து தன்னுடைய கருத்துக்களைப் மூத்த அரசியல்வாதியான பழ. கருப்பையா பகிர்ந்து கொள்கிறார்.

 

மோடி அரசாங்கத்தில் சிறுபான்மையினர் பாதுகாப்பாக இருக்கிறார்கள் என்று சொல்வது, ஓநாயின் பாதுகாப்பில் ஆட்டுக்குட்டி இருக்கிறது என்று சொல்வது போன்றது. உலகின் பல கோடி மக்களை ஈர்த்த நபிகள் நாயகம் குறித்து பாஜகவைச் சேர்ந்த பெண் ஒருவர் அசிங்கமாகப் பேசினார். இந்தியாவில் சிறுபான்மையினரின் நிலை குறித்து ஒபாமா பேசியது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது. மற்ற நாடுகள் இவ்வாறு பேசினால் இவர்கள் அடக்கி விடுவார்கள். அமெரிக்கா பேசினால் வாயை மூடிக்கொண்டுதான் இருக்க வேண்டும். 

 

இந்த நாட்டில் இரண்டு சட்டங்கள் இருந்தால் எப்படி ஆள முடியும் என்று மோடி கேட்கிறார். சிவில் சட்டம் என்பது மதத்துக்கு மதம் வேறுபட்டு தான் இருக்கும். அனைவரையும் ஒன்றாக்க வேண்டும் என்கிற எண்ணம் இல்லாமல், அனைவரையும் பிரிக்கும் வேலையை இவர்கள் செய்கிறார்கள். இந்தியா என்பது ஒரு தொகுப்பு நாடு. இங்கு பல்வேறு இனங்கள், மதங்கள் இருக்கின்றன. ஒவ்வொருவரும் ஒவ்வொரு நடைமுறையை கடைப்பிடிப்பார்கள். ஒரு மதத்தை மட்டுமே கொண்ட நாடுகளில் ஒரு சிவில் சட்டம் இருக்கும். இந்தியா போன்ற பல மதங்கள் கொண்ட நாடுகளில் அது சாத்தியமல்ல. 

 

இந்த நாட்டில் என்றும் பொது சிவில் சட்டம் வர முடியாது. பொது சிவில் சட்டம் என்றால் ஜீவனாம்சம் உள்ளிட்ட விஷயங்களில் இந்துக்களின் முறைக்கு இஸ்லாமியர்கள் மாற வேண்டுமா? அல்லது இஸ்லாமியர்களின் முறைக்கு இந்துக்கள் மாற வேண்டுமா? இவர்கள் சிறுபான்மையினரை நசுக்குகின்றனர். நம்முடைய நாட்டில் அரசாங்கத்திற்கு மதம் இல்லை என்கிற நிலையை காந்தி வழியில் வந்த காங்கிரஸ் கொண்டு வந்தது. ஆனால் இவர்கள் அரசாங்கத்திற்கு ஒரு மதச்சாயம் பூச முயல்கின்றனர். இது ஒரு மோசமான சட்டம். ஒபாமா போன்றவர்கள் பேசினால் தான் இவர்கள் உணர்வார்கள்.

 

மோடி நிச்சயம் வீழ்த்தப்பட வேண்டும். இது ஒரு பாசிச அரசு. டெல்லியில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் அதிகாரத்தில் கை வைக்கும் அவசர சட்டத்தை பாஜக கொண்டு வருகிறது. இந்த விஷயத்தில் தன்னுடைய முடிவை இன்னும் அறிவிக்காமல் இருக்கிறது காங்கிரஸ் கட்சி. இந்த சட்டத்தை காங்கிரஸ் எதிர்க்க வேண்டும். இல்லையென்றால் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை எப்படி ஏற்படும்? நாளை டெல்லியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தாலும் இதே சட்டம் தான் தொடரும். இந்த விஷயத்தில் காங்கிரஸ் கட்சி நடந்துகொள்ளும் முறை சரியல்ல.

 

 

Next Story

அவர் இழிவுபடுத்தாத ஆளே இல்லை; ஆளுநரை கடுமையாக விமர்சித்த பழ.கருப்பையா

Published on 04/07/2023 | Edited on 04/07/2023

 

 Pala Karuppiah Interview

 

தற்கால அரசியல் நிகழ்வுகள் குறித்து தன்னுடைய கருத்துகளை நம் முன் மூத்த அரசியல்வாதியான பழ.கருப்பையா எடுத்து வைக்கிறார்.

 

தமிழக ஆளுநர் மிகவும் தவறான ஒரு காரியத்தை செய்துவிட்டார். குற்றம் சாட்டப்பட்டுள்ள ஒரு அமைச்சர் அந்தப் பதவியில் தொடராமல் இருக்கலாம் என்று யோசனை சொல்வதற்கு ஆளுநருக்கு உரிமை உண்டு. ஆனால் அவரால் முடிவெடுக்க முடியாது. இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜியை வைத்திருக்க வேண்டிய அவசியம் என்ன? அவருக்கு பதிலாக வேறு ஒரு யோக்கியனே இல்லையா? அவர் மீது குற்றச்சாட்டுகளை வைத்தவரே இப்போதைய முதலமைச்சர் தான். 

 

வாங்கிய லஞ்சத்தை திருப்பிக் கொடுத்துவிட்டார் என்று செந்தில் பாலாஜியை உயர்நீதிமன்றம் விடுதலை செய்தது. அதன்பிறகு உச்சநீதிமன்றம் உள்ளே நுழைந்து இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அமலாக்கத்துறை மீது எந்தத் தவறும் இல்லை. திமுகவின் கூட்டணிக் கட்சிகள் வெட்கமில்லாமல் செந்தில் பாலாஜியை ஆதரிக்கின்றன. நீங்கள் மோடி எதிர்ப்பு இயக்கமா அல்லது ஊழல் பாதுகாப்பு இயக்கமா? முன்யோசனை இல்லாமல் ஒரு விஷயத்தை செய்பவரை அரை லூசு என்பார்கள். அப்படியான ஒரு காரியத்தை ஆளுநர் செய்துள்ளார்.

 

தனக்கு என்ன அதிகாரம் இருக்கிறது என்பது கூடத் தெரியாமல் ஒரு அமைச்சரை அவர் நீக்கம் செய்தது கேவலமான விஷயம். சனாதனம் பேசியே தமிழ்நாட்டு மக்களிடம் இந்த ஆளுநர் பாஜகவை ஒழித்துக் கட்டிவிட்டார். இதுபோல் பேசினால் பாஜக வளரும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் அது கவிழும். சவாரி செய்வதற்கு அதிமுக என்கிற குதிரை மட்டும் பாஜகவுக்கு கிடைக்காமல் இருந்திருந்தால், தமிழ்நாட்டு அரசியலில் ஒன்றுமே இல்லாதவர்களாக அவர்கள் இன்று இருந்திருப்பார்கள். 

 

தாங்கள் செய்த ஊழல் காரணமாக, பிடிக்கவில்லை என்றாலும் பாஜக கூட்டணியில் அதிமுக இருக்கிறது. பாஜக எதற்கும் வெட்கப்படக்கூடிய கட்சி அல்ல. அது ஒரு பாசிச கட்சி. மத்தியில் ஆட்சி மாறும் வரை ரவி தான் இங்கு ஆளுநராக இருப்பார். திருவள்ளுவர் முதல் வள்ளலார் வரை இந்த ஆளுநர் இழிவுபடுத்தாத ஆளே இல்லை. இங்கு ஆட்சிக்கு வரமுடியாவிட்டாலும் முடிந்த அளவுக்கு தொந்தரவு கொடுக்கலாம் என்றுதான் பார்ப்பார்கள். கூட்டணி தொடர வேண்டும் என்பதற்காக செந்தில் பாலாஜிக்கு திமுக கூட்டணி கட்சிகள் ஆதரவு தருவது சரியல்ல.