Skip to main content

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கும் ப.சிதம்பரம் கைதும் – இத்தனை அவசரம் அவசியமா?

Published on 22/08/2019 | Edited on 23/08/2019

2016 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 3 ஆம் தேதி ஜிஎஸ்டி எனப்படும் நாடு முழுவதும் ஒரே விதிப்புக்கு வகைசெய்யும் அரசியல் சட்டத் திருத்தத்தை மாநிலங்களவை ஏற்றது. இதையடுத்து அந்த வரிவித்திப்பு உறுதியாக அமலுக்கு வரும் நிலை உருவாகியது. ஆனால், அந்த வரிவிதிப்பு எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று நாட்டின் பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு விமர்சனம் செய்தவர் ப.சிதம்பரம்.

amit chidambaram

 

 

அதைத்தொடர்ந்து, 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 8 ஆம் தேதி இரவு 8.15 மணிக்கு இந்தியாவில் அதுவரை புழக்கத்தில் இருந்த 1000 ரூபாய், 500 ரூபாய் ஆகியவற்றை செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார்.

இந்த நடவடிக்கையின் மூலம் நாட்டிற்குள்ளும் தீவிரவாதிகள் மத்தியிலும் புழக்கத்தில் இருக்கும் கருப்புப் பணத்தை ஒழிக்கும் என்றும், தீவிரவாதிகளின் நடவடிக்கை ஒழிக்கப்படும் என்றும் மோடி கூறினார்.

ஆனால், எந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் இல்லாமல் மோடி அரசு அறிவித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை நாடு முழுவதும் சாமானிய மக்களை மூன்று மாதங்களுக்கு மேலாக கடுமையாக அலைக்கழித்தது. நூற்றுக்கணக்கானோர் பணத்துக்காக ஏடிஎம் வாசலில் காத்திருந்த நிலையில் உயிரிழந்தனர்.

மோடியின் இந்த நடவடிக்கையை முட்டாள்தனமானது என்று முதன்முதலில் ஆதாரங்களுடன் கூறியவர் ப.சிதம்பரம்தான். பணமதிப்பிழப்பு சம்பந்தமாகவும், அது ஏற்படுத்தும் பாதிப்புகள் குறித்தும் தொடர்ந்து ப.சிதம்பரம் விமர்சனம் செய்து வந்தார்.

ப.சிதம்பரத்தின் இந்த பொருளாதார அறிவு மோடி அரசுக்கு எதிராக, பதில் சொல்ல முடியாத கேள்விகளை தொடர்ந்து எழுப்பிவந்தது. அவருடைய விமர்சனமும் கேள்விகளும் மோடி அரசுக்கு கடுமையான குடைச்சலாக இருந்தன. இந்நிலையில்தான் ப.சிதம்பரத்தை ஏதேனும் வழக்கு வலையில் சிக்க வைத்துவிட்டால் அவரை வாயை மூடச்செய்யலாம் என்று மோடி அரசு திட்டமிட்டது. அதற்கு ஏற்றாற்போல சிக்கியதுதான் ஐஎன்எக்ஸ் மீடியா பணப்பரிமாற்றம்.

இந்த ஐஎன்எக்ஸ் மீடியா 2007 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஸ்டார் தொலைக்காட்சியின் முன்னாள் சிஇஓவும் இந்திய தொலைக்காட்சித் துறையில் புகழ் பெற்றிருந்தவருமான பீட்டர் முகர்ஜி என்பவருடன் இணைந்து, மத்திய மனிதவளத்துறை ஆலோசகரும், ஊடகத்துறையில் செயலாக்கருமாக பொறுப்பு வகித்த இந்திராணி முகர்ஜி என்பவர் இந்த மீடியாவை தொடங்கினார்.
 

indira muherji


இந்த நிறுவனத்திற்கு சொந்தமான 26 சதவீத பங்குகளை விற்க அன்றைய நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை இந்திராணி முகர்ஜி அணுகியதாகவும், அவர் 4.6 கோடி ரூபாய் அளவுக்கு பங்குகளை விற்க அனுமதி கொடுத்ததாகவும் இந்திராணி கூறியதாக கூறப்படுகிறது.

இந்த பரிமாற்றத்திற்கு பிறகு நடந்த வருமான வரிச் சோதனையில் ஐஎன்எக்ஸ் மீடியா 305 கோடி ரூபாய் அளவுக்கு முதலீட்டை ஈர்த்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த விவகாரத்தை சரிக்கட்ட ப.சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரத்தின் கணக்கில் மூன்றரைக் கோடி ரூபாயை செலுத்தியதாக இந்திராணி முகர்ஜி வாக்குமூலம் அளித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

இந்த பரிமாற்றங்களை அடிப்படையாக வைத்தே ப.சிதம்பரம் மீதும் அவருடைய மகன் கார்த்தி சிதம்பரம் மீதும் 2017 ஆம் ஆண்டு மே மாதம் பாஜக அரசு வழக்குப் பதிவு செய்தது.

அதாவது, ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாடுகளில் இருந்து முறைகேடாக 305 கோடி ரூபாய் நிதி பெற்றதாகவும் இதற்கு கார்த்தி சிதம்பரமும், ப.சிதம்பரமும் உடந்தையாக இருந்ததாகவும் சிபிஐ தனது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது.

அப்போதிருந்து இந்த வழக்கு தொடர்பாக கார்த்தி சிதம்பரத்தையும், ப.சிதம்பரத்தை சிபிஐ நெருக்கி வருகிறது. இதற்காக கார்த்தி சிதம்பரத்தின் பாஸ்போர்ட்டுகளையெல்லாம் முடக்கியது சிபிஐ. ஆனாலும், இந்த வழக்கு விசாரணைக்காக சிபிஐயும் அமலாக்கத்துறையும் அழைத்தபோதெல்லாம் ஆஜர் ஆகி பதில் அளித்தார் கார்த்தி சிதம்பரம்.

சுமார் ஒரு ஆண்டு விசாரணைக்கு பின்னரும் இந்த வழக்கில் ஆதாரம் சிக்காத நிலையில் கார்த்தி சிதம்பரத்தின் வெளிநாட்டு உள்நாட்டு கணக்கு வழக்குகளை கவனித்து வந்த பாஸ்கரராமன் என்ற ஆடிட்டரை சிபிஐ கைது செய்தது.

இதையடுத்து தனது மகளைப் பார்க்க உச்சநீதிமன்ற அனுமதியுடன் பிரிட்டன் செல்ல விமானநிலையம் வந்த கார்த்தி சிதம்பரத்தை சிபிஐ கைது செய்தது. 23 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்ட கார்த்தி சிதம்பரம் பின்னர் ஜாமினில் வெளிவந்தார்.

அதைத்தொடர்ந்து ப.சிதம்பரத்தை கைது செய்ய சிபிஐ திட்டமிட்டது. எனவே, தனக்கு முன்ஜாமீன் கோரியும், தன்னை கைதுசெய்ய தடைகோரியும் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ப.சிதம்பரம் மனு தாக்கல்செய்தார். ஆனால், 2018 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25 ஆம் தேதி ப.சிதம்பரத்தை கைதுசெய்ய டெல்லி உயர்நீதிமன்றம் தடைவிதித்தது. முன்ஜாமீன் கோரிய இந்த வழக்கின் விசாரணையில் தீர்ப்பை 2019 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 25 ஆம் தேதி டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி சுனில் கவுர் ஒத்திவைத்தார்.

தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், இரண்டாவது முறையாக மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றிபெற்றது. பெரும்பான்மை பலத்துடன் தான் விரும்பியதை எல்லாம் நிறைவேற்றும் நிலையில் மோடி தலைமையில் அரசு அமைந்தது. அதில் அமித் ஷா உள்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். இதையடுத்து, ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முக்கிய நபராக கருதப்படும் இந்திராணி முகர்ஜி, டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதியிடம் இந்த வழக்கில் அப்ரூவராக மாறுவதாக 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 11 ஆம் தேதி ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார்.

அதாவது, முன்ஜாமீன் கோரி ப.சிதம்பரம் மனுத்தாக்கல் செய்த 2018 ஜூன் மாதத்திலிருந்து, 2019 ஆம் ஆண்டு ஜூலை மாதத்துக்கு இடையில் சுமார் ஒரு ஆண்டு முடியும் நிலையில் இந்திராணி முகர்ஜி அப்ரூவராக மாற ஒப்புதல் அளித்துள்ளார்.

அவர் ஒப்புதல் அளித்தபிறகு, சுமார் 40 நாட்களுக்கு பின்னர், டெல்லி உயர்நீதிமன்றம், ப.சிதம்பரம் முன்ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து மூன்று நாட்களுக்குள் உச்சநீதிமன்றத்தை அணுகலாம் என்றும் நீதிபதி கவுர் கூறினார்.

மூன்று நாட்கள் இருக்கும் நிலையில் உச்சநீதிமன்றத்தில் ப.சிதம்பரம் முன்ஜாமீன் பெற்றுவிடுவார் என்று நினைத்த பாஜக அரசு அவரை எப்படியும் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும் என்று சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகளை முடுக்கி விட்டது.

உயர்நீதிமன்றத் தீர்ப்பு வெளியான உடன் ப.சிதம்பரம் வீட்டுக்கு மட்டும் 4 முறை அதிகாரிகள் படையெடுத்தனர். மிகப்பெரிய பொருளாதார குற்றங்களில் சிக்கிய எத்தனையோ வழக்குகளை நாடு பார்த்திருக்கிறது. அந்தக் குற்றவாளிகள் அனைவரும் அரசு உதவியுடனே வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றதாக அவர்களே கூறியும் இருக்கிறார்கள்.
 

chidambaram arrest

 

 

ஆனால், உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர்களிலு ஒருவரும், நாடாளுமன்ற உறுப்பினரும், நாட்டின் மிக முக்கிய அமைச்சர்களில் ஒருவராக இருந்தவருமான ப.சிதம்பரத்தை கைது செய்வதில் காட்டிய வேகத்தையும், அந்த நடவடிக்கையை மீடியாக்களில் பரப்பி அவர் எங்கோ தலைமறைவாகிவிட்டதைப் போல ஒரு சித்திரத்தை உருவாக்கியதையும் மூத்த அரசியல்வாதிகள் கடுமையாக கண்டித்துள்ளனர்.

 

 

 

Next Story

காங்கிரஸ் ஆட்சியில் ராகுல் செய்யப்போவது என்ன? - ப.சிதம்பரம் பேட்டி

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
'Rahul's five guarantees'-P. Chidambaram interview

வருகின்ற நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீட்டில் திமுக தீவிரம் காட்டி வருகிறது. நேற்று விசிக, மதிமுக உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு கையெழுத்தான நிலையில் இன்று மாலை ஆறு மணிக்கு காங்கிரஸுடன் தொகுதிப்பங்கீடு கையெழுத்தாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

இந்தநிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டி சார்பில் அதன் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களைச் சந்தித்தனர். செய்தியாளர்கள் மத்தியில் பேசிய ப.சிதம்பரம், ''காங்கிரஸ் கட்சியினுடைய முன்னாள் தலைவர் ராகுல் காந்தி ஐந்து வாக்குறுதிகளை தந்திருக்கிறார். ஐந்து கேரண்டி தந்திருக்கிறார். இந்த ஐந்து வாக்குறுதிகளும் தேர்தல் அறிக்கையில்  இடம்பெற இருக்கிறது. அந்த ஐந்து வாக்குறுதிகள் குறித்து நான் இங்கே பேசப் போகிறேன்.

முதல் கேரண்டி இன்று வேலையில்லாமை கோரத்தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிறது. அரசு வெளியிடுகின்ற புள்ளி விவரங்களை எல்லாம் யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. மொத்த வேலையில்லாமை எட்டு சதவீதம். பட்டதாரிகள் மத்தியில் வேலையில்லாமை 42 சதவிகிதம். அதற்கு பல உதாரணங்களை சொல்ல முடியும். அதையெல்லாம் இப்பொழுது சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இந்த வேலையில்லாமையை போக்குவதற்கு முதல் வழி, மத்திய அரசில் இருக்கக்கூடிய காலியிடங்களை நிரப்புவது, மத்திய அரசினுடைய நிறுவனங்கள், மத்திய அரசினுடைய கட்டுப்பாட்டில் இருக்கக்கூடிய கல்வி நிலையங்கள், மத்திய பல்கலைக்கழகங்கள், மத்திய அரசினுடைய பொதுத்துறை, மத்திய அரசின் மருத்துவமனைகள் இவைகள் எல்லாம் சேர்த்து பார்த்தால் 30 லட்சம் காலி இடங்கள் இருக்கிறது.

இந்த 30 லட்சம் இடங்களையும் பூர்த்தி செய்யலாம். முதல் கேரண்டி காங்கிரஸ் கட்சியின் தலைமையில் அரசு அமைந்தால் 30 லட்சம் காலி இடங்களையும் பூர்த்தி செய்வோம். இரண்டாவது கேரண்டி அரசு நடத்தக்கூடிய தேர்வுகளில் கேள்வித்தாள் கசிவது என்பது வழக்கமாகிவிட்டது. உத்திரபிரதேசத்தில் மட்டும் கடந்த 10,  15 நாட்களில் இரண்டு கேள்வித்தாள்கள் கசிந்திருக்கிறது. இதற்காக தேர்வை ரத்து செய்தார்கள். எத்தனை செலவு, எவ்வளவு அலைச்சல், எவ்வளவு துன்பம், எவ்வளவு மனச்சோர்வு அந்த குடும்பங்களுக்கு ஏற்பட்டிருக்கும். இதையெல்லாம் தடுக்க முடியும். காங்கிரஸ் தலைமையில் ஆட்சி அமைந்தால் தேர்வுத்தாள் கசிவை தடுப்போம்.

மூன்றாவது கேரண்டியாக ஆன்லைன் டெலிவரி ஊழியர்களுக்கு சட்டப் பாதுகாப்பு சமுதாய பாதுகாப்பு ஏற்படுத்தி தரப்படும்' என தொடர்ந்து பேசி வருகிறார்.

Next Story

பிரதமர் மோடியின் அறிவிப்பு; ப. சிதம்பரம் சரமாரி கேள்வி!

Published on 08/03/2024 | Edited on 08/03/2024
PM Modi's announcement; P. Chidambaram questions

நாடாளுமன்ற மக்களவைப் பொதுத் தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அரசியல் கட்சிகள் சார்பில் தேர்தல் பணிகளை மேற்கொள்வதற்காக பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகின்றன. மேலும், நாடாளுமன்றத் தேர்தலுக்கான பணிகளை அரசியல் கட்சிகள் கடந்த ஒரு மாத காலமாகத் தீவிரப்படுத்தி வருகின்றன. இத்தகைய சூழலில் இந்தியத் தேர்தல் ஆணையமும் மக்களவைத் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து தொடர்ந்து ஆய்வுகளை நடத்தி வருகிறது. விரைவில் தேர்தல் அறிவிக்கப்படலாம் எனவும் கூறப்படுகிறது. கூட்டணிக் கட்சிகளிடையே தொகுதி பங்கீடுகள் பற்றிய பேச்சு வார்த்தையும் நடைபெற்று வருகிறது. ஒரு சில கட்சிகளில் வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டு வருகிறது.

இத்தகைய சூழலில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி எம்.பி ராஜஸ்தானில் பாரத் ஜோடா யாத்திரையின் போது இளைஞர்களுக்கான 5 தேர்தல் வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி வழங்கினார். அதில், ‘காங்கிரஸ் ஆட்சி அமைந்தவுடன் 30 லட்சம் மத்திய அரசின் காலிப் பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும். வினாத்தாள் கசிவுகளுக்கு எதிராக கடுமையான சட்டம் கொண்டு வரப்படும். இந்த சட்டத்தில் சிறைத்தண்டனை விதிக்கப்படும் வகையில் அமையும். கிக் (ஆன்லைன் டெலிவரி) தொழிலாளர்களுக்கான சட்டத்தை மத்திய அரசு இயற்றும். இது ராஜஸ்தான் கிக் தொழிலாளர்கள் சட்டத்தின் அடிப்படையில் இருக்கும். ஒவ்வொரு மாவட்டத்திற்கும் சுமார் 10 கோடிகள் என மொத்தம் 5000 கோடிகள் தொழில் தொடங்க நிதி வழங்கப்படும். பட்டப்படிப்பு மற்றும் டிப்ளமோ முடித்த பிறகு ஒரு லட்சம் ரூபாய் உதவித் தொகையுடன் 1 வருடக் கட்டாய பயிற்சி அளிக்கப்படும்’ எனத் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப. சிதம்பரம், ராகுல் காந்தி அளித்துள்ள வாக்குறுதிகள் குறித்து செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “தேர்வுகளின் போது வினாத்தாள் கசிவை தடுக்கும் வகையில் சட்டம் வலுவாக்கப்படும். ஆன்லைன் டெலிவரி ஊழியர்களுக்கு சட்டப் பாதுகாப்பு மற்றும் சமூக பாதுகாப்பு ஏற்படுத்தி தரப்படும். புத்தொழில் நிறுவனங்களை ஊக்கப்படுத்தும் திட்டங்கள் செயல்படுத்தப்படும். புத்தொழில் நிறுவனங்களுக்கான மூலதன நிதியாக ரூ. 10 ஆயிரம் கோடி உள்ளது. அனைத்து தொகுதிகளிலும் புத்தொழில் நிறுவனங்கள் தொடங்குவதற்கு ஊக்குவிக்கப்படும்.

காங்கிரஸ் கட்சி சார்பில் ராகுல் காந்தி அறிவித்த 5 வாக்குறுதிகளை தேர்தல் பிரச்சாரத்தின் போது முன்வைப்போம். வேலைவாய்ப்பின்மை மற்றும் விலைவாசி உயர்வு பற்றி பிரதமர் மோடி பேசுவதில்லை. 42 சதவீத பட்டதாரிகள் வேலையின்றி தவித்து வருகின்றனர். ஆனால் பொய்யான புள்ளி விவரங்களை அளித்து மத்திய அரசு ஏமாற்றுகிறது. தேர்தல் நெருங்குவதால் சமையல் எரிவாயு விலை குறைக்கப்பட்டுள்ளது. வரும் நாட்களில் இந்த விலையை மேலும் குறைப்பார்கள். தேர்தலுக்குப் பிறகு சமையல் எரிவாயு விலை உயர்த்தப்படாது என பிரதமர் மோடி மக்களுக்கு வாக்குறுதி தர முடியுமா. பிரதமர் மோடி யாரையெல்லாம் கடுமையாக விமர்சிக்கிறாரோ அவர்களுடன் பா.ஜ.க. கூட்டணி வைக்கிறது. தேர்தல் பத்திரங்கள் ஒவ்வொன்றையும் யார் வாங்கினார்கள் என்பதும், யார் பணம் கொடுத்தார்கள் என்பதும் எஸ்.பி.ஐ. வங்கிக்கு தெரியும்” எனத் தெரிவித்தார்.

PM Modi's announcement; P. Chidambaram questions

முன்னதாக மகளிர் தினத்தை ஒட்டி சமையல் கேஸ் சிலிண்டர் விலையை 100 ரூபாய் குறைத்து இன்று மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. பிரதமர் மோடி இதற்கான உத்தரவை பிறப்பித்திருந்தார். சமையல் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு என்பது பல கோடி குடும்பங்களின் நிதிச்சுமையை கணிசமாகக் குறைக்கும் எனத் தெரிவித்துள்ள பிரதமர், சமையல் எரிவாயு மிகவும் மலிவு விலையில் வழங்குவதன் மூலம் குடும்பங்களின், குறிப்பாக பெண்களின் ஆரோக்கியம் உறுதி செய்யப்படும் எனத் தெரிவித்திருந்தார்.