Skip to main content

உங்க வாரிசுகள் ரொம்ப மோசம்... கடும் அதிருப்தியில் மோடி! கெஞ்சிய இ.பி.எஸ்-ஓ.பி.எஸ்!

Published on 07/08/2021 | Edited on 07/08/2021
ddd

 

ஓ.பி.எஸ்.- இ.பி.எஸ். திடீர் டெல்லிப் பயணத்தின் நோக்கங்கள் ஒவ்வொன்றாக மெல்ல வெளியே வரத் தொடங்கியுள்ளன. இருவரும் பாரதப் பிரதமருடன் நடத்தியது ஒரே ஒரு மீட்டிங். அதைப்பற்றி பாரதப் பிரதமர் மோடிக்கு நெருக்கமான வட்டாரங்கள் இப்பொழுதுதான் வாய் திறக்கத் தொடங்கியுள்ளனர்.

 

டிசம்பர் மாதம் 2016-ஆம் ஆண்டு எடப்பாடியின் வாழ்க்கையில் மிக முக்கியமான சம்பவம் ஒன்று நடந்தது. அது தொடர்பாகத்தான் எடப்பாடி, பிரதமர் மோடியுடன் பேசியுள்ளார் என்கிறது பிரதமர் அலுவலக வட்டாரங்கள்.

 

2016-ஆம் ஆண்டு நவம்பர் 8-ஆம் தேதி மத்திய அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டது. அது கருப்புப் பணத்தை கருவறுக்கும் நடவடிக்கை என்று சொல்லப்பட்டதை நிரூபிக்க வேண்டும் என்பதற்காக, புதிய 2000 ரூபாய் வைத்திருந்தவர்களைத் தேடி வருமானவரித்துறையும், சி.பி.ஐ.யும் களமிறக்கப்பட்டது. அதில் பெங்களூருவில் ஜெயச்சந்திரா என்பவர் சிக்கினார். லட்சக்கணக்கில் புதிய 2000 ரூபாய் வைத்திருந்தார் என சி.பி.ஐ. அவரை கைது செய்தது. கர்நாடகாவின் அரசு அதிகாரிகளுடன் தொடர்பு வைத்திருந்தார் என தமிழர் ஒருவர் சி.பி.ஐ.யால் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து கோடிக்கணக்கான புதிய 2000 ரூபாய் நோட்டுகள் கைப்பற்றப்பட்டன. அவருக்குப் புதிய நோட்டுகளைக் கொடுத்ததாக தமிழகத்தைச் சேர்ந்த தனியார் வங்கியான தனலட்சுமி வங்கி மற்றும் பேங்க் ஆஃப் கர்நாடகா வங்கி அதிகாரிகளும் கைது செய்யப்பட்டார்கள்.

 

ஈரோட்டைச் சேர்ந்த வியாபாரி அவர். ராமலிங்கம் என்கிற கட்டுமான நிறுவனத்தை நடத்தி வருகிறார் என அறியப்பட்ட அவர், கர்நாடகாவில் சாலை போடும் பணியை செய்துவருகிறார் என சொல்லப்படுகிறது. அவர் வேறு யாருமில்லை. எடப்பாடி பழனிசாமியின் மகன் மிதுன் திருமணம் செய்துள்ள திவ்யாவின் இளைய சகோதரியான சரண்யாவை திருமணம் செய்தவர். அவர் பெயர் சந்திரகாந்த் ராமலிங்கம். அதாவது எடப்பாடியின் மகனின் சகலை. அவர் நடத்திவரும் கம்பெனியின் உரிமையாளர் மிதுனின் மாமனாரான ராமலிங்கம்.

 

2018-ஆம் ஆண்டு எஸ்.கோபி என்கிற சாலை போடும் நிறுவனத்தின் மீது வருமானவரித்துறை சோதனை நடத்தியது. 200 கோடி பணத்தை ரெய்டுக்குப் பயந்து 14 பி.எம்.டபுள்யு காரில் பதுக்கி வைத்தது இந்த கம்பெனி. 12,000 கோடி ரூபாய்க்கு சென்னையில் புறவழிச் சாலை அமைக்க ஒப்பந்தம் பெற்றிருந்தது. 5000 கோடிக்கு மாநிலம் முழுவதும் சாலை அமைத்துக் கொண்டிருந்தது இந்தக் கம்பெனி. வெங்கடாசலபதி அண்ட் கோ என்கிற கம்பெனிக்கு சப்-காண்ட்ராக்ட் கொடுத்திருந்தது. ஆயிரக்கணக்கான கோடி ரூபாய்க்கு சப்-காண்ட்ராக்ட் பெற்ற வெங்கடாசலதிபதி அண்ட் கோவின் உரிமையாளர், 2016-ஆம் ஆண்டு பெங்களூருவில் கைது செய்யப்பட்ட சந்திரகாந்த் ராமலிங்கம் மற்றும் எடப்பாடியின் மகன் மிதுன் ஆகியோரின் மாமனார் ராமலிங்கம்.

 

இந்த வழக்குகள் பற்றிய கவலை எடப்பாடிக்கு எப்போதும் இருந்தது. அதே 2016-ஆம் ஆண்டு புதிய 2000 ரூபாய் நோட்டுகளை 20 கோடி ரூபாய் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட சேகர் ரெட்டி, அவரிடம் கைப்பற்றப்பட்ட 136 கோடி ரூபாய்க்கும் ஓ.பி.எஸ்.ஸுக்கும் தொடர்பிருந்தது. அதைக்காட்டி மிரட்டித்தான் ஓ.பி.எஸ். பணிய வைக்கப்பட்டார். அதேபோல் எனது உறவினர்களையும் பா.ஜ.க. அரசு வழக்குகளைப் பதிவு செய்து சிறையிலடைக்கிறது என கூவத்தூர் முகாமில் சசிகலாவிடம் வருத்தப்பட்டார் எடப்பாடி. சசிகலாவை விட்டுப் பிரிந்து பா.ஜ.க. வசம் எடப்பாடி சென்றதற்கு, இந்த வழக்குகள் ஒரு முக்கிய காரணம் என்கிறார்கள் அ.தி.மு.க. தலைவர்கள்.

ddd

ஒன்றிய அரசு சார்ந்த இந்த வழக்குகள் முடியவில்லை. தொடர்ந்து தலைவலியாகவே எடப்பாடிக்கு இருந்துவருகிறது. அதில் ஒரு முடிவு ஏற்படுவதை பா.ஜ.க. விரும்பவேயில்லை. அடிக்கடி புண்ணை குத்துவதைப் போல எடப்பாடியை பா.ஜ.க. காயப்படுத்தி வந்தது. இதை பொறுக்க முடியாத எடப்பாடி, பலமுறை மோடியிடமும் நிர்மலா சீதாராமனிடமும் முறையிட்டார். ஆனால் பா.ஜ.க. சட்டமன்றத் தேர்தலில் சொன்ன சசி இணைப்பு உட்பட, சீட் ஒதுக்கீடு என அனைத்திலும் முரண்டுபிடித்தார் எடப்பாடி.

 

தேர்தலில் எடப்பாடி தோற்றதும், மறுபடியும் எடப்பாடிக்கு எதிராக வழக்கை பா.ஜ.க. கையிலெடுத்தது. அத்துடன், எடப்பாடி அமைச்சரவையில் தங்கமணி, வேலுமணி, விஜயபாஸ்கர், வீரமணி ஆகியோர் மீது வருமானவரித்துறை எடுத்த ரெய்டு நடவடிக்கைகளை விரைவுபடுத்தவும் உத்தரவிட்டது. அதேநேரத்தில் தி.மு.க.வுடன் பா.ஜ.க. நெருக்கம் காட்டி கலைஞரின் படத்தை திறக்க ஜனாதிபதியை அனுப்பி வைத்தது. ஜெ.வின் படத்தை திறக்க பிரதமரை அழைத்தும் வரவில்லை. ஜெ.வை ஊழல் குற்றவாளி என மோடி அன்று சொன்னார். இப்போது எடப்பாடி குடும்பம் சார்ந்த ஊழல் வழக்குகளையும் கிளறுகிறார்.

 

அதுபோலவே ஓ.பி.எஸ்.ஸின் இரு மகன்களான ரவீந்திரநாத் எம்.பி, ஜெய்பிரதீப் ஆகியோரின் வெளிநாட்டுப் பயணம் தொடர்பான சர்ச்சைகள் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்துக்கு நெருக்கடியை ஏற்படுத்தியதால், அது குறித்தும் டெல்லி சந்திப்பின்போது மோடி கடுமை காட்டியிருக்கிறார். அத்துடன் சசிகலா விவகாரம் உட்பட அனைத்தையும் பேசி முடிக்கத்தான் அவசர அவசரமாக டெல்லிக்கு அழைக்கப்பட்டனர் என்கிறது பிரதமர் அலுவலக வட்டாரங்கள்.

ddd

ஒருபக்கம் தி.மு.க. எங்களை ஊழல் குற்றம்சாட்டி தாக்குகிறது. அந்தவேளையில் மத்திய அரசு, அ.தி.மு.க.வினர் மீதான வருமானவரித்துறை வழக்குகளை வேகப்படுத்தி நோட்டீஸ்கள், சம்மன்கள் அனுப்புவது எந்தவிதத்தில் நியாயம் என மோடியிடம் எடப்பாடியும் ஓ.பி.எஸ்.ஸும் தனித்தனியாகக் கெஞ்சிக் கேட்டார்கள். ஓ.பி.எஸ்.ஸின் மகன், எடப்பாடியின் மகன் ஆகிய இருவரின் செயல்பாடுகள் மிகவும் மோசமாக உள்ளது என மோடி அதிருப்தி தெரிவித்தார். தி.மு.க.வின் ரெய்டுகளுக்கு எங்களால் ஒன்றும் செய்யமுடியாது. சசிகலா விவகாரத்தில் நீங்கள், நாங்கள் சொன்னதை கேட்கவில்லை என அதிருப்தியை தெரிவித்தார். பஞ்சாயத்து அமித்ஷா வசம் சென்றது. அமித்ஷாவும் மோடி சொன்னதையே திருப்பிச் சொன்னார். எங்களை ஏன் தாக்குகிறீர்கள்? என எடப்பாடியும் ஓ.பி.எஸ்.ஸும் கூறியதைக் கேட்க, பஞ்சாயத்து தலைவராக நிதியமைச்சர் நிர்மலாவுக்கு உத்தரவிட்டனர் மோடியும் அமித்ஷாவும்.

 

இருவரின் பேச்சைப் பொறுமையாகக் கேட்ட நிர்மலா, "இந்த வழக்குகளில் வருமானவரித்துறை, சி.பி.ஐ., அமலாக்கத்துறை சம்பந்தப்பட்டிருக்கிறது. இந்த வழக்கில் அந்த துறைகள் எடுக்கும் நடவடிக்கைகளை தடுக்க முடியாது என பதில் சொல்லிவிட்டார். நிர்மலா சொன்ன பதில் மோடியும் அமித்ஷாவும் சொன்ன பதில், என்பதைப் புரிந்துகொண்ட ஓ.பி.எஸ்.ஸும் எடப்பாடியும், இனிமேல் நாம் ஒற்றுமையாக இருப்போம். அ.தி.மு.க.வை வலுப்படுத்துவோம், உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க. நம்மிடம் வரவேண்டும். அப்பொழுது பேசிக்கொள்ளலாம்'' என முடிவு செய்து சென்னைக்குத் திரும்பினர்.

 

"அந்த ஒற்றுமை உணர்வு அ.தி.மு.க. நடத்திய ஆர்ப்பாட்டத்திலும் ஓ.பி.எஸ். சசிகலா பற்றி அளித்த பேட்டியிலும் எதிரொலித்தது' என நடந்ததை சொல்கிறார்கள் அ.தி.மு.க.வினர்.

 

இதற்கிடையே, இனி தி.மு.க.விற்கும் பா.ஜ.க.விற்கும் இடையேதான் போட்டி என தமிழக பா.ஜ.க. அறிவித்திருக்கிறது. இதில் என்ன செய்வது என குழப்பத்தில் அ.தி.மு.க. ஆழ்ந்துள்ளது.

 

 

Next Story

டெல்லி மேயர் தேர்தல் ரத்து; பா.ஜ.க.வுக்கு எதிராக ஆம் ஆத்மி ஆர்ப்பாட்டம்

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 Aam Aadmi struggle for Canceled Delhi Mayoral Election

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19ஆம் தேதி தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 13 மாநிலங்களில் உள்ள 87 மக்களவைத் தொகுதிகளில் இன்று (26.04.2024) 2ஆம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், டெல்லி மேயர் மற்றும் துணை மேயரைத் தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று (26-04-24) நடைபெற இருந்த நிலையில், திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கு ஆம் ஆத்மி கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

டெல்லி மாநிலத்தில் மொத்தம் 250 கவுன்சிலர்கள் உள்ளனர். டெல்லியில் உள்ள மேயரைத் தேர்ந்தெடுக்க 10 எம்.பி.க்கள், 14 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் 250 கவுன்சிலர்கள் 274 வாக்காளர்கள் வாக்களிப்பார்கள். இதில் மேயர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளருக்கு அதிகபட்சமாக 138 வாக்குகள் தேவை. அந்த வகையில், ஆம் ஆத்மி கட்சிக்கு, காங்கிரஸ் கவுன்சிலர்கள் மற்றும் சுயேட்சை கவுன்சிலர்கள் உட்பட 151க்கும் மேற்பட்ட வாக்குகள் கிடைக்கப்பெற இருந்தது. இதனால், டெல்லி மேயர் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி வெற்றி வாய்ப்பு அதிகமாக இருந்தது.

இந்த நிலையில், டெல்லி மேயர் தேர்தலை ஆளுநர் அலுவலகம் ரத்து செய்யப்படவுள்ளதாக டெல்லி மாநகராட்சி அறிவித்துள்ளது. இது குறித்து தெரிவிக்கையில், ‘தலைமை அதிகாரி நியமிக்கப்படாததால் டெல்லி மேயர் தேர்தல் தள்ளி வைக்கப்படுகிறது; எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஆம் ஆத்மி கடும் கண்டனம் தெரிவித்து மேயர் சபையில் போராட்டம் நடத்தி வருகின்றது.

இது குறித்து ஆம் ஆத்மி எம்.பி சஞ்சய் சிங் கூறுகையில், “ பட்டியலின சமூகத்தைத் தடுக்க இவர்கள் சதி செய்கிறார்கள். இந்த முறை, பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்தான் டெல்லி எம்சிடியின் மேயராக வர இருந்தது. ஆனால் தேர்தலை ரத்து செய்ததன் மூலம், அவர் தனது பட்டியலின விரோத மனநிலை மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தை சிதைத்ததற்கு மற்றொரு சான்றைக் கொடுத்துள்ளனர்” எனப் பேசினார். தற்போது மேயர் ஷெல்லி ஓபராயின் பதவிக்காலம் மார்ச் 31-ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் புதிய மேயர் தேர்ந்தெடுக்கப்படும் வரை அவர் பதவியில் நீடிப்பார் என்று கூறப்பட்டுள்ளது. 

Next Story

“இதை செய்ய சொன்னால் இந்தியாவை விட்டு வெளியேறுவோம்” - வாட்ஸ் அப் எச்சரிக்கை!

Published on 26/04/2024 | Edited on 26/04/2024
 WhatsApp warning May have to leave India

உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் உபயோகிக்கும் செயலி தான் வாட்ஸ் அப். இந்த செயலி மூலம், தகவல்களை பரிமாறவும், இணைய சேவை மூலம் எந்தவித கட்டணமுமின்றி வீடியோ கால், ஆடியோ கால் போன்றவற்றை பயன்படுத்தவும் முடியும். மேலும், புகைப்படங்கள், வீடியோக்கள், ஸ்டிக்கர்கள் என அனைத்து விதமான பரிமாற்றங்களையும் இந்த செயலி மூலம் அனுப்பக்கூடிய வசதிகள் உண்டு. இந்த செயலியை உபயோகிக்காத மக்கள் மிகவும் சொற்பமாக தான் இருக்க முடியும் என்றுதான் கூற வேண்டும். 

இதற்கிடையில் வாட்ஸ் அப் பயனர்களின் வசதிகளுக்கு ஏற்றவாறு வாட்ஸ் அப் நிறுவனம் அவ்வப்போது புதிய அப்டேட்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில், இந்த செயலி மூலம் பயனர் ஒருவருக்கு அனுப்பும் செய்திகளை மூன்றாம் நபர்கள் பார்க்க முடியாதவாறு எண்டு டு எண்டு என்கிரிப்ஷன் ( End to End Encryption) முறையை கொண்டு வந்தது. இதனைப் பயன்படுத்தி பயனர்கள், தாங்கள் அனுப்பும் செய்திகளை பாதுகாத்து கொள்ளலாம். இதனால், தனிப்பட்ட ஒருவரின் செய்திகள் பாதுகாக்கப்படும் என்று கூறப்படுகிறது. 

இந்த நிலையில், கடந்த 2021ஆம் ஆண்டு இந்தியாவில் தகவல் தொழில்நுட்ப சட்டங்களில் மத்திய அரசு புதிய மாற்றத்தை கொண்டு வந்தது. மத்திய அரசு கொண்டு வந்த அந்த சட்டத்தில் கூறியதாவது, போலி செய்திகளையும், நாட்டின் பாதுகாப்பு காரணங்களுக்காகவும் தவறான செய்தி பகிர்வுகளை கண்டறிய வேண்டும். இதனால், வாட்ஸ் அப், பேஸ்புக் போன்ற செய்தி பகிர்வு செயலி வாயிலாக பகிரப்படும் அனைத்து செய்திகளும் சேமிக்கப்பட வேண்டும் என்று கூறப்பட்டது.

இதனை எதிர்த்து வாட்ஸ் அப், பேஸ் புக் ஆகிய நிறுவனங்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இது தொடர்பான வழக்கு நேற்று (25-04-24) டெல்லி உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மத்திய அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், ‘வாட்ஸ் அப் எண்டு டு எண்ட் என்கிரிப்ஷன் காரணமாக போலி செய்திகளை கண்டறிவதில் சிக்கல் ஏற்படுகிறது. மேலும், இது போலி செய்திகளால் நாட்டில் நிலவும் அமைதி மற்றும் ஒற்றுமையை சீர்குலைத்துவிடும்’ என வாதிட்டார். 

இதனையடுத்து, வாட்ஸ் அப் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தேஜஸ் காரியா, “இந்த சட்டத்தை அமல்படுத்துவதால் நாங்கள் ஒரு முழுமையான சங்கிலியை வைத்திருக்க வேண்டும். மேலும், மில்லியன் கணக்கான செய்திகளை பல ஆண்டுகளாக சேமிக்க வேண்டும் நிலை உருவாகும். உலகில் எந்த நாட்டிலும் இது போன்ற சட்டங்கள் இல்லை.  இது போன்ற சட்டங்களை கொண்டு வந்து  என்கிரிப்ஷனை எடுக்க சொன்னால் வாட்ஸ்அப் இந்தியாவை விட்டு செல்ல வேண்டி இருக்கும்” எனத் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள், இது தொடர்பான வழக்கை ஒத்திவைத்தனர்.