Skip to main content

ஜூன் 7 முகூர்த்தம்; தஞ்சையில் சங்கமிக்கும் ஓபிஎஸ் - சசிகலா! 

Published on 30/05/2023 | Edited on 30/05/2023

 

OPS And Sasikala meeting at june 7 in Vaithilingam son marriage

 

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும் அதிமுகவின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா கடந்த 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 ஆம் தேதி காலமானார். அதன்பிறகு அதிமுகவில் ஓ.பி.எஸ். முதல்வராகி, இ.பி.எஸ். முதல்வராகி, சசிகலா ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறைச் சென்று, டி.டி.வி. தினகரன் தனிக் கட்சி துவங்கி பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்தன.  இ.பி.எஸ். முதல்வரானதும் கட்சியின் தலைமை பொறுப்பை ஓ.பி.எஸ்.ஸும், இ.பி.எஸ்.ஸும் பிரித்துக்கொண்டு ஒருங்கிணைப்பாளர் இணை ஒருங்கிணைப்பாளர் என அதிமுக செயல்பட்டு வந்தது. 

 

சிறைத் தண்டனை முடிந்து கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் தேதி சசிகலா விடுதலையானார். அவரது விடுதலையைத் தொடர்ந்து, சசிகலா அதிமுகவை கைப்பற்றப் போகிறார் எனும் பேச்சு எழுந்தது. அவரும் அதிமுகவை கைப்பற்றப் போவதாகவே பேசி வந்தார். தனிக் கட்சி ஆரம்பித்த டி.டி.வி. தினகரன் அதன் மூலம் அதிமுகவை கைப்பற்றப் போவதாகப் பேசி வந்தார். 

 

OPS And Sasikala meeting at june 7 in Vaithilingam son marriage

 

2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்து ஆட்சி இழக்க, அதிமுகவில் ஒற்றைத் தலைமை குரல் வலுவாக ஒலிக்கத் துவங்கியது. இ.பி.எஸ். பல வழிகளில் ஒற்றைத் தலைமையை முன்னிறுத்த ஓ.பி.எஸ். இரட்டை தலைமையை வலியுறுத்தி வந்தார். ஒரு கட்டத்தில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரால் கூட்டப்பட்ட அதிமுக பொதுக்குழு, செயற்குழுவில் ஒற்றைத் தலைமை வலுவாக ஒலிக்க இருந்தபோது நீதிமன்ற படி ஏறினார் ஓபிஎஸ். அதில் இ.பி.எஸ்.க்கு ஆதரவாக நீதிமன்றத் தீர்ப்பு வர, இ.பி.எஸ். அணி உற்சாகத்துடன் ஒற்றைத் தலைமை நகர்வுகளை வேகமாக நகர்த்தியது. அதன்பிறகு இறுதி வரை பல்வேறு வழக்குகளில் இ.பி.எஸ். பக்கம் அதிமுக சென்றடைந்தது. 

 

OPS And Sasikala meeting at june 7 in Vaithilingam son marriage

 

சட்டத்தின் படியும், அதிகாரத்தின் படியும் அதிமுகவின் தலைமையாக இ.பி.எஸ். முடிவாக, தொண்டர்களின்படி தானே அதிமுகவின் தலைமை என நிரூபிக்க கடந்த ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி திருச்சியில் மாநாடு நடத்தினார் ஓ.பி.எஸ். அதற்கு சசிகலா அழைக்கப்படுவார் என ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் எதிர்பார்த்திருக்க ஒ.பி.எஸ்ஸே விழாவின் நாயகனாக இருந்தார். 

 

OPS And Sasikala meeting at june 7 in Vaithilingam son marriage

 

இந்த மாநாட்டை முடித்த சூட்டோடு மே மாதம் 8 ஆம் தேதி டி.டி.வி. தினகரனை ஓ.பி.எஸ். நேரில் சந்தித்தார். இந்தச் சந்திப்பிற்கு முன்பும், சந்திப்பிற்கு பின்பும் தொடர்ந்து ஓ.பி.எஸ். சசிகலாவை சந்திக்க இருப்பதாகச் சொல்லப்பட்டு வந்தது. ஓ.பி.எஸ்.ஸும் பல்வேறு இடங்களில் இதனை உறுதி செய்து வந்தார். அதேபோல், சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த சசிகலாவும் “ஓ.பி.எஸ். சந்திப்பு நடக்கலாம். அனைவரையும் ஒருங்கிணைத்து கொண்டு செல்வதுதான் என் வேலை. 2024 தேர்தலில் மூன்று அணிகளும் ஒன்றிணைந்து தேர்தலை சந்திக்கும். தொண்டர்களின் ஆதரவும், பொதுமக்களின் ஆதரவும் இருந்தால் தான் ஒரு கட்சியின் தலைமை என்று சொல்ல முடியும்” என்று தெரிவித்திருந்தார். 

 

OPS And Sasikala meeting at june 7 in Vaithilingam son marriage

 

சசிகலாவுடனான சந்திப்பு எப்போது என ஓ.பி.எஸ்.ஸின் ஆதரவாளர்கள் ஆர்வமாக எதிர்பார்த்துக் கொண்டிருக்க, ஜூன் 7 ஆம் தேதி தஞ்சாவூரில் நடக்கவிருக்கும் முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மகன் திருமணத்தில் ஓ.பி.எஸ். - சசிகலா சந்திப்பு நிகழும் எனச் சொல்லப்படுகிறது. ஓ.பி.எஸ். தலைமை தாங்கும் இந்தத் திருமணத்திற்கு டி.டி.வி தினகரனை அழைத்துள்ள வைத்திலிங்கம், அடுத்ததாக சசிகலாவை அழைக்க உள்ளதாகச் சொல்லப்படுகிறது. இதன் மூலம், ஜூன் 7 ஆம் தேதி நடைபெறும் வைத்திலிங்கம் மகன் திருமணத்தில் ஓ.பி.எஸ். - சசிகலா சந்திப்பு நிகழும் என ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர். 

 

 

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.