Skip to main content

மலையேறி ஸ்டண்ட் அடிக்கும் பன்னீர்..! மண்குடிசையில் ரவீந்திரநாத்..!

Published on 15/02/2021 | Edited on 15/02/2021

 

dddd

 

தேனி மாவட்டம் போடி தொகுதிக்குள் வரும் குரங்கனி மலையில் சில வருடங்களுக்கு மலையேற்றப் பயிற்சியின் (டிரெக்கிங்) போது, திடீர் தீவிபத்தால் பலர் கருகி பலியாகினார்கள். அந்தக் கொடூர சம்பவத்திற்குப் பின், குரங்கனி மலைப் பகுயில் உள்ள அணைக்கரைப்பட்டி, முந்தல், சிறைகாடு, சோலையூர், மேலபரவு, முதுவாகுடி உள்ளிட்ட பல்வேறு மலைகிராம மக்களுக்குக் கடும் கட்டுப்பாடுகளை விதித்தது வனத்துறை.

 

அதில் குறிப்பாக, முதுவாகுடிக்குச் செல்லும் 6 கி.மீ. தொலைவு ஜீப் மட்டுமே செல்லக்கூடிய அளவுக்கு இருந்த குண்டும் குழியுமான சாலையை மூடியது வனத்துறை. இதனால் அங்கு வசிக்கும் நாற்பதுக்கும் மேற்பட்ட பழங்குடியின மக்கள் ரொம்பவே அவதிப்பட்டார்கள். இதனால் கொதிப்படைந்த அந்த மக்கள் கடந்த எம்.பி.தேர்தலைப் புறக்கணித்தனர். தேனி சப்-கலெக்டர் வைத்தியநாதன் குரங்கனியிலிருந்து முதுவாகுடிக்கு 6 கி.மீ நடந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தியும் பலனில்லை. மக்களின் குமுறல்களைக் கலெக்டரிடம் அறிக்கையாக கொடுத்து இரண்டு வருடங்களாகப் போகிறது. ஆனால் அந்த மக்களின் நிலையோ முன்பைவிட மோசம் என்ற நிலைக்குப் போய்விட்டது.

 

அதுசரி, இந்த அவலமெல்லாம் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக தொடர்ந்து பத்து வருடம் இருக்கும் நம்ம துணைமுதல்வர் பன்னீர்செல்வத்திற்குத் தெரியாம இருக்குமா? தெரியும்... ஆனா தெரியாது… என்ற ரீதியில்தான் இருந்தார் பன்னீர்.

 

dddd

 

பிப்.08-ஆம் தேதி சசிகலா தமிழகத்திற்குள் வந்த பிறகு நம்ம பொழப்பு கந்தலாகிவிடும் என்ற பயபீதியில் தொகுதிவாசிகள் மீது திடீரென அக்கறை மழை பொழிய ஆரம்பித்துவிட்டனர் பன்னீரும் அவரது மகன்களான எம்.பி.ரவீந்திரநாத்தும் இன்னொரு மகனான பிரதீப்குமாரும்.

 

2011, 2016 தேர்தலின்போது ஓட்டுக் கேட்க முதுவாகுடிக்குச் சென்றதோடு சரி. அதன் பின் அப்படி ஒரு கிராமம் இருப்பதையே மறந்துவிட்டார் பன்னீர். சென்னையிலிருந்து கொண்டு மற்ற அமைச்சர்களுடன் சேர்ந்து சசிகலாவுக்கு எதிராக மல்லுக்கட்டுவதைவிட, முதுவாகுடி மலையேறுவதே மேல் என்ற நினைப்புடன் கடந்த வாரம் தனது மகன் ரவீந்திரநாத், பத்துக்கும் மேற்பட்ட கட்சிக்காரர்கள், சில அரசு அதிகாரிகளை அழைத்துக் கொண்டு முதுவாகுடி மலைகிராமத்திற்கு குரங்கனியிலிருந்து நடந்தே போனார். (வேற வழி, அங்கதான் ரோடே இல்லையே) பன்னீர் குழுவினரைப் பார்த்ததும் பலத்த அதிர்ச்சிக்குள்ளானார்கள் அங்கு தைரியமாக வசிக்கும் பழங்குடியின மக்கள். "நம்புங்க, நான்தாங்க இந்த தொகுதி எம்.எல்.ஏ.'' என மாஸ்க்கிற்குள்ளே சிரித்தபடி முகம் காட்டினார் ஓ.பி.எஸ்.

 

dddd

 

"உங்களுக்கு எல்லா வசதியும் செஞ்சுக் கொடுக்குறேன், புதுசா ரோடு போட ஏற்பாடு பண்றேன், குரங்கனியிலிருந்து டாப்ஸ்டேசன் வரைக்குமான ரோட்ல ஃபேவர்ப்ளாக் பதிக்கிறேன், அதுக்கு இப்பவே பூமி பூஜை போடுறேன்'' என சொல்லிவிட்டு பூமிபூஜையையும் போட்டார் பன்னீர்.

 

என்னதான் பண்ணினாலும் கையில நாலு காசு கொடுத்தா சரியாயிரும் என்ற கணக்குடன், "இந்தாங்க இடிஞ்சுபோன வீட்டைக் கட்டிக்கங்க'' என சிலருக்குக் கொஞ்சம் பணத்தையும் கொடுத்தார். 40 குடும்பங்களுக்கு 61 லட்ச ரூபாய்க்கு நிவாரண உதவிகளையும் வழங்கினார்.

 

அதற்கடுத்ததாக ஓலைக்குடிசைகள், மண் குடிசைகளில் அப்பாவும் மகனும் உட்கார்ந்து மக்களிடம் பாசமழை பொழிந்தார்கள். மறுபடியும் ஓட்டுக் கேட்டு வருவோம் என்பதை மறக்காமல் சொல்லிவிட்டுக் கிளம்பினார்கள்.

 

இன்னொரு பக்கமோ,“பார்த்தீங்கல்ல, எங்க அண்ணனை, இந்த வயசுலயும் மலையேறி உங்களப் பார்க்க வந்துருக்காரு'' என பெருமை பீத்திக்கொண்டார்கள்.

 

ஓ.பி.எஸ்.சின் மலையேற்றம் குறித்து தொகுதியின் மாஜி எம்.எல்.ஏ.லட்சுமணனிடம் பேசியபோது, “எதுக்காக இப்ப வந்துருக்காருன்னு அந்த மக்களுக்கு நல்லாவே தெரியும். 2008-ல் நான் எம்.எல்.ஏ.வாக இருந்தபோது முதல்வர் கலைஞரின் உத்தரவுப்படி ஆரம்ப பள்ளிக்கூடம், முதியவர்களுக்கு உதவித்தொகை என பல வசதிகளைச் செய்து கொடுத்துள்ளோம். அதை அந்த மக்கள் இன்னும் மறக்கவில்லை, பன்னீரின் பாராமுகத்தையும் மறக்கவில்லை'' என்றார்.

 

தேனி யூனியன் சேர்மனும் வடக்கு ஒ.செ.வுமான சக்கரவர்த்தி நம்மிடம் பேசும்போது, “பணத்தால மக்களை விலைக்கு வாங்கிடலாம்னு நினைக்குறாரு பன்னீர். ஆனா வரும் தேர்தலில் அது நடக்காது, அவருக்கு வெற்றி வசப்படாது. இப்போது மலையேறி ஸ்டண்ட் அடிக்கும் பன்னீரும், ‘பி.டி.ஆர். கால்வாயில் மடைகட்டித் தருவேன், அதனால் 25 கிராமங்கள் பயனடையும்’னு சொன்னார். ஆனால் அதற்கு ஒரு செங்கல்லைக் கூட எடுத்து வைக்கல. பன்னீரையும் அவரது மகன் ரவீந்திரநாத்தைப் பத்தியும் இந்தத் தொகுதி மக்கள் நிச்சயம் புறக்கணிப்பார்கள்'' என்றார். தேர்தல் நெருக்கத்தில் என்னென்ன வித்தைகளெல்லாம் காட்டப் போகிறார்களோ பன்னீர் & சன்ஸ்.

 

Next Story

'இபிஎஸ்சிற்கு பயந்துதான் சில முன்னாள் எம்.எல்.ஏக்கள் அப்படி செய்தார்கள்'-டி.டி.வி.தினகரன் ஓபன் டாக்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
NN

தமிழகத்தில் முதல் கட்ட மக்களவைத் தேர்தல் நடந்து முடிந்திருக்கும் நிலையில் வாக்கு எண்ணிக்கை ஜூன் நான்காம் தேதி நடைபெற இருக்கிறது. மற்ற மாநிலங்களில் தேர்தல் பரப்புரைகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக இறங்கி வருகின்றன.

இந்தநிலையில் பாஜக கூட்டணியில் அங்கம் வகிக்கும் அமமுகவின் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் தேனியில் போட்டியிட்ட நிலையில், அங்கு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசுகையில், ''1999 இல் நான் முதன்முதலாக தேர்தலில் நின்றேன். அப்போதெல்லாம் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் இல்லை. 2001 சட்டமன்றத் தேர்தலிலும் கிடையாது. உள்ளாட்சித் தேர்தலிலும் கிடையாது. பாராளுமன்றத் தேர்தலிலும் இல்லை. 2006 சட்டமன்றத் தேர்தலிலும் நான் இங்கு நின்றேன் அப்போதும் தேர்தலில் யாரும் ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் கிடையாது. 2011 க்கு பிறகு ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரம் தமிழக முழுவதும் பரவி விட்டது.

ஆர்.கே.நகரில் போட்டியிட்ட போது கூட நான் ஓட்டுக்கெல்லாம் பணம் கொடுக்கவில்லை. என்னைச் சேர்ந்த சில முன்னாள் எம்எல்ஏக்கள் எடப்பாடி பழனிசாமி ஓட்டுக்கு 6 ஆயிரம், 10 ஆயிரம் கொடுத்ததால் அதற்குப் பயந்து போய் பார்த்த இடத்தில் ஒரு பத்திருவது வீடுகளுக்கு டோக்கன் ஏதோ கொடுத்ததாக தகவல் வந்தது. ஆனால் அதை நான் நிறுத்தி விட்டேன். ஆனால் எல்லாரும் டோக்கன் கொடுத்தார் டோக்கன் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். இங்கே இந்தத் தேர்தலில் யார் டோக்கன் கொடுத்தார்கள் என்று உங்களுக்குத் தெரியும். நான் தேனியில் நிற்பதால் மட்டும் சொல்லவில்லை தேனி மக்களுக்கு என்னை நன்றாகத் தெரியும். ஏற்கெனவே நான் எம்பியாக இருந்த பொழுது மக்கள் கேட்டதெல்லாம் செய்திருக்கிறேன். ஊர் பொதுக் காரியத்திற்கு அரசாங்கத்தின் மூலம் எல்லாம் செய்ய முடியாது. நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் என்னால் முடிந்த அளவுக்கு செய்துள்ளேன். அதேபோல் தனி நபர்களுக்கு உதவி செய்திருக்கிறேன். கட்சி ஜாதி வித்தியாசம் இல்லாமல் உதவி செய்திருக்கிறேன்''என்றார்.

Next Story

தேனி மக்களவை வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பான அறையில் வைத்து சீல்!

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
Theni Lok Sabha voting machines kept in a safe room and sealed!

இந்திய மக்களவைத் தேர்தல் முதல் கட்ட தேர்தலாக தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் நேற்று காலை 7 மணியில் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று முடிவடைந்த நிலையில் வாக்கு பதிவு இயந்திரங்கள் அந்தந்த தொகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டு வருகிறது. அதன் தொடர்ச்சியாக தேனி மக்களவையில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் உள்ள 1788 வாக்குப்பதிவு மையங்களில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் காவல் துறையினர் பலத்த பாதுகாப்புடன் சேகரிக்கப்பட்டு தேனி கொடுவிலார்பட்டியில் உள்ள கம்மவர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த (ஸ்டாங் ரூம்) பாதுகாப்பு அறையில் வைத்து சீல் வைக்கும் பணி நடைபெற்றது.

தேனி மக்களவையில் உள்ள சோழவந்தான், உசிலம்பட்டி, ஆண்டிப்பட்டி, பெரியகுளம், கம்பம், போடிநாயக்கனூர் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் 69.87% வாக்குகள் பதிவாகியுள்ளது. நேற்று மாலை தேர்தல் முடிவ டைந்த நிலையில் வாக்குப்பதிவு மையங்களில் இருந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேகரிக்கும் பணி இரவு முழுவதும் நடைபெ ற்றது.

Theni Lok Sabha voting machines kept in a safe room and sealed!

இதனைத் தொடர்ந்து கொடுவார்பட்டியில் உள்ள கம்மவர் கல்லூரியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஸ்டாங் ரூமில் அரசியல் கட்சி பிரமுகர்களின் முன்னிலையில் சீல் வைக்கும் பணி நடைபெற்றது. ஸ்ட்ராங் ரூமில் அனைத்து பகுதிகளும் முழுமையாக மூடப்பட்டு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு காவல்துறையின் நான்கு அடுக்கு பாதுகாப்பில்  பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.  வாக்கு எண்ணிக்கை ஜூன் 04  நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெற இன்னும் 45 நாட்கள் உள்ள நிலையில், பலத்த பாதுகாப்பில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது.