Skip to main content

ஓ.பி.எஸ்.சை சமாதானப்படுத்தவே அதிக நேரம்!!! சாதித்தாரா எடப்பாடி? காத்திருக்கும் சவால்கள்!

Published on 13/10/2020 | Edited on 13/10/2020
ops eps

 

முதல்வர் வேட்பாளரை மையப்படுத்தி அ.தி.மு.க.வில் நடந்துவந்த அதிகார மோதல்கள் முடிவுக்கு வந்து விட்டன. முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிச்சாமியே அறிவிக்கப்பட்டிருக்கிறார். அவரது ஆதரவாளர்கள் உற்சாக பானங்களுடன் தொடர்ச்சியான கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். முதல்வர் வேட்பாளர் போட்டியில் நானும் இருக்கிறேன் என கோதாவில் குதித்திருந்த ஓ.பி.எஸ்., சமீபத்தில் நடந்த கட்சியின் செயற்குழுவில் காரசாரமாக தனது உணர்வுகளை கொட்டியதுடன், வழிகாட்டுக் குழுவை அமையுங்கள்; முதல்வர் வேட்பாளரை அப்புறம் முடிவு செய்துகொள்ளலாம் என போர்க்கொடி உயர்த்தியிருந்தார். இதனை எதிர்த்து எடப்பாடியும் அவரது ஆதரவாளர்களும் மல்லுக்கட்ட, மோதல்கள் வெடித்தன.

 


இரு தரப்பையும் சமாதானப்படுத்த எடப்பாடியையும் பன்னீரையும் சந்தித்து கே.பி.முனுசாமி, வைத்தியலிங்கம் உள்ளிட்ட சீனியர்கள் போராடினார்கள். சென்னையிலிருந்து தேனிக்கு ஓ.பி.எஸ். புறப்படுவதற்கு முன்பு நள்ளிரவில் அவரை சந்தித்த சீனியர்கள், ""வழிகாட்டு குழு அமைக்கணும்ங்கிற உங்கள் கோரிக்கை நியாயமானதுதான். அதேசமயம், நான்காண்டு காலம் முதல்வராக இருக்கும் அவர் (எடப்பாடி), தன்னை முதல்வர் வேட்பாளராக அறிவிக்கச் சொல்வதில் என்ன தவறு இருக்க முடியும்? ஆளானப்பட்ட தி.மு.க.வில் கலைஞருக்கு பிறகு ஸ்டாலின்தான் தி.மு.க.வின் தலைவர்ங்கிறதும் தி.மு.க. ஜெயித்தால் அவர்தான் முதல்வர்ங்கிறதும் எல்லோருக்குமே தெரியும். அப்படியிருந்தும் ஸ்டாலின்தான் முதல்வர் வேட்பாளர் என்கிற ரீதியில்தானே தி.மு.க.வும் அதன் கூட்டணி கட்சிகளும் சொல்கின்றன. அதனால், நம் கட்சியிலும் முதல்வர் வேட்பாளரை முன்னிறுத்துவது தானே சரியாக இருக்க முடியும்? அதை தவிர்த்துவிட்டு தேர்தல் முடிவுகளுக்கு பிறகு முதல்வரை தேர்வு செய்யலாம் என சொன்னால், அது கட்சிக்குத்தானே பலவீனம். அதனால், முதல்வர் வேட்பாளராக எடப்பாடியை அறிவிப்பதற்கு சம்மதியுங்கள்'' என்று வாதிட்டனர்.

 

ops

 

அதற்கு ஒப்புக்கொண்ட ஓ.பி.எஸ்., ""என்னை சமாதானப்படுத்தி ஏற்க வைத்தது போல வழிகாட்டு குழு அமைக்க அவரிடம் சம்மதம் வாங்குங்கள். அதற்குள் ஊருக்குச் சென்று வருகிறேன்'' என சொல்லிவிட்டு மிக இயல்பாகவே தேனிக்கு விரைந்தார். போகும் போதே, எடப்பாடிதான் முதல்வர் வேட்பாளர் என்பதை மனதில் நிறுத்திக்கொண்டார் ஓ.பி.எஸ். என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள்.

 

இதற்கிடையே, ஓ.பி.எஸ். சமாதானமான விசயத்தை எடப்பாடியிடம் விவரித்த கே.பி.முனு சாமி, வைத்தியலிங்கம், சி.வி.சண்முகம், ஜெயக்குமார் ஆகியோர், ஓ.பி.எஸ்.சின் கோரிக்கையான வழிகாட்டு குழு அமைப்பதற்கு எடப்பாடியை சம்மதிக்க வைக்க கடும் பிரயத்தனம் செய்தனர். அப்போது எடப்பாடி, ""குழு அமைக்க சம்மதிக் கிறேன். ஆனால், குழுவில் அவர் சார்பில் யார் யாரை சிபாரிசு செய்கிறார் என்கிற முடிவைப் பொருத்து அதன் பிறகு பேசுவோம்'' என்றிருக்கிறார் எடப்பாடி.

 

dddd

 

இதனையடுத்து திங்கட்கிழமை சென்னை திரும்பினார் ஓ.பி.எஸ். அவரை சந்தித்த சீனியர்கள் நடந்ததை விவரித்திருக்கிறார்கள். டென்ஷனான பன்னீர், ""எனது சாய்ஸ்சை அவர் கேட்கும் போது அவரது சாய்ஸ் யார் என்பதை நானும் கேட்கலாம்தானே'' என்று சொல்ல, வழிகாட்டு குழுவில் இடம் பெறுபவர்களை மையப்படுத்தி சர்ச்சைகள் வெடித்தன. இதனால்தான் முடிவுகளை தீர்மானிப்பதில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவுதாண்டி, புதன் அதிகாலை வரை இழுபறி நீடித்தது.

 

இதுகுறித்து கட்சியின் சீனியர் களுக்கு நெருக்கமானவர்களிடம் பேசிய போது, ""வழிகாட்டு குழுவுக்கு ஓ.பி.எஸ். சார்பில் பண்ருட்டி ராமச்சந்திரன், ஜே.சி.டி.பிரபாகரன், மனோஜ் பாண்டியன், நத்தம் விஸ்வநாதன், மோகன் ஆகியோர் முன்னிறுத்தப்பட்டனர். அதேபோல, எடப்பாடி தரப்பிலிருந்து, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், காமராஜ் ஆகிய 6 பேரை வழிமொழிந் திருந்தார். இருவரின் சிபாரிசுகளும் ஓ.பி.எஸ்.சிடமும், இ.பி.எஸ்.சிடமும் மாற்றிக் கொள்ளப்பட்டன.

 

eps

 

ஓ.பி.எஸ்.சின் சிபாரிசைப் பார்த்த எடப்பாடி, பண்ருட்டி ராமச்சந்திரன், நத்தம் விஸ்வநாதன் இருவரின் பெயரையும் அடித்தார். பண்ருட்டியார் இருப்பது தமக்கு பெரிய தலைவலி என நினைத்து அவரை கட் பண்ணுவதில் சீரியஸ் காட்டினார் எடப்பாடி. அதேபோல, வழிகாட்டுக் குழுவில் திண்டுக்கல் சீனிவாசன் அவசியம் இருக்க வேண்டும். அதனால் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த நத்தம் விஸ்வநாதன் தேவையில்லை. ஒரே மாவட்டத்தில் இரண்டு பேருக்கு வாய்ப்புத் தர முடியாது. இவர்கள் இருவருக்குப் பதிலாக வேறு நபர்களை சொல்லச் சொல்லுங்கள் என கடுமைக் காட்டினார் எடப்பாடி.

 

இதனை வைத்து ஓ.பி.எஸ்.சிடம் சீனியர்கள் விவாதிக்க, ""ஒரே மாவட்டத்தில் இரண்டு பேர் இருக்கக் கூடாதுன்னா, சீனிவாசனை கட் பண்னுங்கள்; நத்தம் இருக்கட்டும். அதேபோல, வேலுமணியை எடுத்து விட்டு அவருக்கு பதிலாக செங்கோட்டையனையோ, தம்பிதுரையையோ (இருவருமே எடப்பாடிக்கு எதிரானவர்கள்) போடுங்கள். அதேசமயம் பன்ருட்டியாரை மாற்ற முடியாது'' என கச்சைக் கட்டியிருக்கிறார் ஓ.பி.எஸ்.

 

ddd

 

இதனை எடப்பாடியிடம் சீனியர்கள் விவரிக்க, ஓ.பி.எஸ்.சின் வாதத்தை எடப்பாடி ஏற்கவில்லை. மேலும், ""கொங்கு வேளாளர்களில் யாருக்கு எந்த பதவி கொடுக்க வேண்டும் என நான் முடிவு செய்து கொள்கிறேன். அதனால், தங்கமணி, வேலுமணி மட்டுமல்ல எனது பட்டியலில் உள்ளவர்களை யாரையும் மாற்ற முடியாது. சி.வி.சண்முகம் இருக்கும்போது பன்ருட்டியாரை கொண்டு வருவது சரி கிடையாது. அவரது பட்டியலை மாற்றச் சொல்லுங்கள்'' என பிடிவாதம் காட்டினார் எடப்பாடி. வழிகாட்டு குழுவில் பண்ருட்டியார் வந்து விடக்கூடாது என்பதற்காகவே தனது பட்டியலில் சி.வி.சண்முகத்தை எடப்பாடி இடம்பெறச் செய்தார். அதுமட்டுமல்லாமல், பண்ருட்டியாரை நீக்கச் சொல்லி சி.வி.சண்முகத்தையே ஓ.பி.எஸ்.சிடம் விவாதிக்க அனுப்பியும் வைத்தார் எடப்பாடி.

 

இப்படி இரு தரப்பிலும் மல்லுக்கட்டு அதிகரித்ததால் இழுபறியும் நீடித்தது. இதனால் ஓ.பி.எஸ்.சை சமாதானப்படுத்தவே அதிக நேரம் எடுத்துக்கொண்டனர் சீனியர்கள். ஒரு கட்டத்தில் ஓ.பி.எஸ். இறங்கிவர, பண்ருட்டி மற்றும் நத்தத்திற்கு பதிலாக முன்னாள் எம்.பி. கோபாலகிருஷ்ணனையும், எம்.எல்.ஏ. மாணிக்கத்தையும் தனது பட்டியலில் இணைத்தார். இரு தரப்பிலும் பட்டியல் ஓ.கே. ஆனது. இதனையடுத்து, வழிகாட்டு குழுவுக்கு என்னென்ன அதிகாரம் என ஓ.பி.எஸ். கேட்க, தனித்து அக்குழுவுக்கென அதிகாரம் தேவையில்லையே என ஆரம்பித்து அது குறித்த விவாதங்கள் 2 மணி நேரம் நடந்தது. ஒரு வழியாக இரு தரப்பிலும் விட்டுக்கொடுத்து சமாதானமானார்கள்.

 

ddd

 

வழிகாட்டுக்குழுவில் இடம்பெறாத சீனியர்களும் முக்கிய நிர்வாகிகளும் அதிருப்தியடைந்திருப்பதால், அவர்களை திருப்திப்படுத்தும் வகையில், இனி அடுத்தடுத்து அமைக்கப்பட விருக்கும் மற்ற குழுக்களில் வாய்ப்பளிக்கலாம். யாரையும் புறக்கணிக்கிற எண்ணமில்லை என்று அதிருப்தியாளர்களிடம் தெரிவிக்கப்பட்டிருக்கிறது''’என்று இழுபறியின் பின்னணிகளை விவரித்தனர்.

 

கடந்த 10 நாட்களாக நடந்த மோதல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில், முதல்வர் வேட்பாளர் எடப்பாடிதான் என்று ஓ.பி.எஸ்.சும், ஓ.பி.எஸ்.சின் கோரிக்கையான வழிகாட்டுகுழுவை எடப்பாடியும் அறிவித்து முடித்தனர். அறிவிக்கப்பட்ட பட்டியலில், அமைச்சர்களை எடப்பாடியும், சமூக பிரதிநிதித்துவம் சார்ந்து ஓ.பி.எஸ்.சும் தங்களது ஆட்களை இடம்பெற செய்திருக்கிறார்கள்.

 

eee

 

அறிவிக்கப்பட்ட முடிவு குறித்து கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமியிடம் கேட்டபோது, ""கட்சிக்கு தேவைப்பட்ட முடிவுகளை உரிய நேரத்தில் எடுத்து சுமுகமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த முடிவுகள் கட்சியின் நலன்சார்ந்து எடுக்கப் பட்டவை. கட்சியை அமைப்பு ரீதியாக ஆரோக்கியமாக செயல்பட வழிகாட்டு குழு அமைக்கப்பட்டிருக்கிறது. தேர்தல் காலங்களிலும், தேவைப்படும் நேரங்களிலும் இந்த குழுவை பயன்படுத்திக் கொள்வோம்'' என்றார்.

 

அ.தி.மு.க.வின் முதல்வர் வேட்பாளராக எடப்பாடி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இத்தகைய முடிவுகள் குறித்து அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமியிடம் கேட்டபோது, ""கலைஞர், ஜெயலலிதா போல ஒரு லீடராக வர வேண்டும் என்பதுதான் எடப்பாடியின் நோக்கம். அந்த நோக்கத்தில் படிப்படியாக முன்னேறி தற்போது முதல்வர் வேட்பாளராக தன்னை அறிவிக்கச் செய்ததில் வெற்றியும் பெற்றுள்ளார். ஆனால், இனிதான் அவருக்கு பெரிய சவால்கள் காத்திருக்கின்றன. குறிப்பாக, தேர்தல் கூட்டணி அமைப்பதிலும், வேட்பாளர்கள் தேர்விலும் அவருக்கு நிறைய சிக்கல் உண்டு. எதிர்ப்பு வாக்குகள் உள்ள கட்சிகளை சேர்ப்பதினால் அ.தி.மு.க.வின் அடிப்படை பலம் தகர்க்கப்படும் ஆபத்து இருக்கிறது. அதனால் கூட்டணி கட்சிகளை தேர்வு செய்வது அவருக்கு பெரிய சிக்கல். அடுத்து, ஓ.பி.எஸ்.சின் தலையீடுகளையும், வழிகாட்டு குழுவின் முடிவுகளையும் மீறி தன்னிச்சையாக வேட்பாளர்கள் தேர்வில் அவர் சாதித்துவிட முடியாது. இந்த தடைகளைத் தாண்டி கட்சியை வெற்றிபெற வைத்து ஆட்சியை மீண்டும் தக்க வைத்துக் கொள்வதுதான் மிகப்பெரிய சவால்'' என்கிறார் அழுத்தமாக.

 


 

Next Story

ட்ரோல் செய்ய வந்த இடத்தில் ட்ரோலில் சிக்கிய அ.தி.மு.க. சரவணன்

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
ADMK Saravanan got trolled where he came to troll

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது.

அதிமுக சார்பாக மதுரையில் டாக்டர் சரவணன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு பரப்புரைகள் தொடங்கப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு அவரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட நிலையில், பிரேமலதா விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் சரவணனை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இந்நிலையில், மதுரையில் நடைபெற்ற பரப்புரை கூட்டத்தில் பேசிய வேட்பாளர் சரவணன், “இங்கிருந்த பாராளுமன்ற உறுப்பினரை சு.வெ என்று சொல்வார்கள். சும்மாவே இருந்தார்; இருக்கப் போறாரு என்று தெரிந்ததால் அவருக்கு அப்படி பெயர் வந்ததா என தெரியல. அவர் ஒரு ட்விட்டர் அரசியல்வாதி. ஆன்லைனில்  மட்டும் தான் இருப்பார். அவருடைய செயல் ஆன்லைனில் மட்டும் தான் இருக்கும். மக்களை சந்தித்ததே கிடையாது. அவர் கதை எழுதிக் கொண்டிருந்தார். இப்பொழுது கதை விட்டுக் கொண்டிருக்கிறார். கடைசியாக மூன்று மாதம் வந்து ஒன்று இரண்டு திட்டங்களை செய்து கொண்டிருக்கிறார். அவர் இவ்வளவு திட்டங்களை சொல்லி இருக்கிறாரே அந்த திட்டங்கள் எல்லாம் நடந்து இருக்கா என்று பார்ப்பதற்காக பைனாகுலரோடு நான் வந்திருக்கிறேன். எங்காவது கடந்த பாராளுமன்ற உறுப்பினர் வெங்கடேசன் செஞ்ச திட்டம் கண்ணுல படுதா என்று பார்க்கிறேன்'' என கூறியவாறே கையில் இருந்த பைனாகுலரில் பார்த்தார். ஆனால் இறுதி வரை சரவணன் பைனாகுலரில் முன்பக்கம் இருந்த லென்ஸ் கவரை திறக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறது.

Next Story

“திருச்சி அதிமுக வேட்பாளர் வெற்றிக்கு ஒற்றுமையுடன் பாடுபட வேண்டும்” - தங்கமணி

Published on 29/03/2024 | Edited on 29/03/2024
 Trichy AIADMK candidate must work together for victory says Thangamani

திருச்சி மாவட்டம் முசிறி தா.பேட்டை ரோட்டில் அமைந்துள்ள தனியார் மண்டபத்தில் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் சந்திரமோகன் அறிமுகம் மற்றும் செயல் வீரர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருச்சி புறநகர் மாவட்டச் செயலாளர் பரஞ்சோதி தலைமை வகித்தார். முன்னாள் எம்எல்ஏக்கள் செல்வராசு, மல்லிகா, இந்திரா காந்தி, பரமேஸ்வரி, முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் அமைச்சர்கள் மோகன், எம்.ஆர். விஜயபாஸ்கர், நாமக்கல் மாவட்டச் செயலாளரும் பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதி பொறுப்பாளருமான தங்கமணி ஆகியோர் அதிமுக வேட்பாளரை ஆதரித்துப் பேசினார்.

அப்போது முன்னாள் அமைச்சர் தங்கமணி பேசியதாவது: பண பலமா? அதிகார பலமா? என்று நிரூபிக்கின்ற இந்த தேர்தலை பொறுத்தவரை நாம் வீடு வீடாகச் சென்று திண்ணைப் பிரச்சாரம் மேற்கொண்டு வாக்குகள் சேகரிக்க வேண்டும் எனவும்,  பூத்துக்கு 500 வாக்குகள் பெற்றால் கூட நாம் வெற்றி பெற முடியும். 15 நாள் உழைப்பு அடுத்த ஐந்து வருடத்திற்கான மக்கள் பலனை தரும். திருச்சி மாவட்டம் அதிமுகவின் கோட்டை என்பதை நாம் மீண்டும் நிரூபிக்க வேண்டும். ஒவ்வொரு வீட்டிற்கும் ஐந்து முறை சென்று கழக தொண்டர்கள் வாக்குகள் சேகரிக்க வேண்டும். இறந்து போனவர்கள், வெளிநாட்டில் இருப்பவர்கள் வாக்குகளை கண்டறிந்து கள்ள வாக்குகளை நாம் தடுக்க வேண்டும். அதிமுக ஆட்சியில் விலைவாசி கட்டுக்குள் இருந்தது. திமுக ஆட்சியில் விலைவாசி மற்றும் அனைத்து கட்டணங்களும் உயர்ந்துள்ளது.

நகை கடன் அனைவருக்கும் தள்ளுபடி என்று கூறிவிட்டு 45 லட்சம் பேரில் 12 லட்சம் பேருக்கு மட்டுமே தள்ளுபடி செய்துள்ளனர். 10 ஆண்டுகளில் தாலிக்கு தங்கம், லேப்டாப், இலவச சைக்கிள், மகளிர் திருமண உதவித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு மக்கள் திட்டங்களை நாம் நிறைவேற்றியுள்ளோம். 2026 ஆம் ஆண்டு எடப்பாடி பழனிசாமி தான் மீண்டும் முதலமைச்சர் என உறுதிமொழி ஏற்போம். உள்ளாட்சி தேர்தலுக்கும், வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கும் இந்த நாடாளுமன்றத் தேர்தல் அடித்தளமாக அமையும். பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி வேட்பாளர் சந்திரமோகனுக்கு இரட்டை இலை சின்னத்தில் பெருவாரியான வாக்குகள் பெற்று வெற்றி பெற செய்ய வேண்டுமாய் கழக தொண்டர்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று பேசினார்.

வேட்பாளர் சந்திரமோகனை அறிமுகப்படுத்தி விஜயபாஸ்கர் பேசியதாவது: தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றியவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. ஏழைகளுக்கு 20 கிலோ அரிசி, தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு லேப்டாப் கொடுத்தார். ஆனால் இந்த திமுக ஆட்சியில் அந்த திட்டத்தை எல்லாம் நீக்கி விட்டனர். நீட் ஒழிக்கிறேன் என்று சொல்லி இப்போது மத்தியில் காங்கிரஸ் ஆட்சி வந்த உடன் நீக்குகிறோம் என்று சொல்லி பொய் பிரச்சாரம் செய்து வாக்கு கேட்டு செல்வார்கள். அந்த பொய் பிரச்சாரத்தை முறியடிக்கும் வகையில் நமது திண்ணை பிரச்சாரம் இருக்க வேண்டும் என செயல் வீரர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினார்.

இதனை அடுத்து வேட்பாளர் சந்திரமோகன் பேசியதாவது:  என்னை எந்த நேரத்திலும் பொதுமக்கள் தொடர்பு கொள்ளலாம். நான் வெற்றி பெற்றவுடன்  இப்பகுதிகளுக்குரிய தேவைகளை கவனத்தில் கொண்டு நிறைவேற்ற பாடுபடுவேன் எனப் பேசினார்.

முன்னதாக முன்னாள் எம்எல்ஏ செல்வராஜ் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கூட்டத்தில் தேமுதிக மாவட்டச் செயலாளர் குமார், புதிய தமிழகம் கட்சி மாவட்டச் செயலாளர் சின்னையன் , வளரும் தமிழகம் கட்சி மாவட்ட செயலாளர் தமிழன் துரைராஜ், எஸ்டிபிஐ கட்சி மாவட்டச் செயலாளர் அசாருதீன் உட்பட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர். நிறைவில் நகரச் செயலாளர் எம்.கே. சுப்ரமணியன் நன்றி கூறினார்.