Skip to main content

நக்கீரனில் வெளியான செய்தி; உடனடியாக செயல்பட்ட அரசு நிர்வாகம்! 

Published on 09/06/2023 | Edited on 09/06/2023

 

News published in Nakkheeran; The government administration acted immediately!

 

“தாய், தந்தை யாருமில்லை; மின்சாரம் இல்லை; அடையாள அட்டைகள் ஏதும் இல்லை; அதனால் உதவித் தொகையும் இல்லை. கடும் வெயிலின் தாக்கத்துக்கு இடையே மின்சாரமில்லா வீட்டில் அசைவற்றுக் கிடக்கும் மாற்றுத்திறனாளி சிறுவனை 2 மூதாட்டிகளே தூக்கிச் சுமக்கிறார்கள். அரசாங்கமும், அதிகாரிகளும் சற்று மனமிறங்கினால் மின்சாரமும், உதவித் தொகையும் கிடைக்கும். அதற்கு உதவ வேண்டும்” என்று சமூக ஆர்வலரான நகரம் சிகா.லெனின் நம்மிடம் கூறினார்.

 

தனி ஆளாக அலைந்தால், சான்றுகள் வாங்கி நலத்திட்ட உதவிகளைப் பெற பல மாதங்களாகும். அதனால் நக்கீரன் இணையத்தில் கடந்த புதன்கிழமை இச்செய்தியை வெளியிட்டோம்.

 

“புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம் வடக்கு சரபோஜி தெருவைச் சேர்ந்தவர்கள் செல்வராஜ் - சுந்தராம்பாள் தம்பதி. இவர்களின் மகள் வயிற்றுப் பேரன் தான் மணிகண்டன். பிறந்த சில வருடங்களில் மணிகண்டனின் உடல்நிலை படிப்படியாக பின்னடைவாகி, படுத்த படுக்கையில் கிடக்கும் மாற்றுத் திறனாளியாகிவிட்டான். தற்போது மணிகண்டனின் பெற்றோர் இல்லாத நிலையில், தாத்தா செல்வராஜும் சில ஆண்டுகளுக்கு முன் காலமாக, படுத்த படுக்கையாகக் கிடக்கும் தனது பேரனை, பர்மா காலனியிலுள்ள வீட்டில் சுந்தராம்பாளும் அவரது சகோதரியும்தான் கவனித்து வருகிறார்கள். பாட்டி சுந்தராம்பாள் கூலி வேலைக்குச் சென்றுவர, அவரது சகோதரி இந்த மாற்றுத் திறனாளி பேரனைக் கவனித்துக் கொள்கிறார்.

 

மின்சாரமில்லாத வீட்டிற்குள் வெக்கையில் தவிக்கும் சிறுவனுக்கு இரு மூதாட்டிகளும் மாற்றி மாற்றி விசிறிக்கொண்டே இருக்கிறார்கள். மின் இணைப்பு பெற்றுத் தருவதாக சிலர் அந்த மூதாட்டிகளிடம் பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றியிருக்கிறார்கள். அதேபோல், பேரனுக்கு ஆதார் உள்ளிட்ட அடையாள அட்டைகள் ஏதுமில்லாததால், மாற்றுத் திறனாளிக்கான மாதாந்திர உதவித் தொகையும் கிடைக்க வழியில்லை.

 

News published in Nakkheeran; The government administration acted immediately!

 

“ஆதார் இருந்தாத்தான் மாற்றுத் திறனாளி சான்று கிடைக்குமாம். அந்த சான்று இருந்தாத்தான் உதவித் தொகை கொடுப்பாங்களாம். நாங்க யாருகிட்ட போய் இதெல்லாம் வாங்குறது? நாங்க இருக்கிற வரைக்கும் கூலி வேலையில் எனக்குக் கிடைக்கும் சொற்ப வருமானத்தை வைத்து பேரனைப் பாதுகாப்போம். வெயில் காலத்தில் கரண்டில்லாம ரொம்ப சிரமப்படுறான். காத்தாடிக்கு வழியில்லாததால விசிறிவிட்டுக்கிட்டே தான் இருக்கோம். அதிகாரிங்க மனசு வச்சால் மணிகண்டனுக்காக கரன்ட் கொடுத்து, ஆதார் எடுத்து மாற்றுத் திறனாளி சான்று கொடுத்து, உதவித்தொகை கிடைக்கச் செய்தால் புண்ணியமா போகும். இவனை தூக்கிக்கிட்டு வெளியூருல அலைஞ்சு சான்று வாங்க எங்க உடம்புல சக்தியும் இல்ல. கார்ல போக பணமும் இல்ல” என்றார் பாட்டி சுந்தரம்பாள் கண்ணீரோடு.

 

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம், இந்த மாற்றுத் திறனாளி சிறுவனும் அவனுக்காக 2 மூதாட்டிகளும் படும் வேதனையை நினைத்து சிறப்பு நடவடிக்கை எடுத்தால் நல்லது. அதிகாரிகள் மனது வைப்பார்கள் என்று நம்புவோம் என நக்கீரனில் செய்தி வெளியிட்டிருந்தோம்.

 

செய்தி வெளியான சில நிமிடங்களில் புதுக்கோட்டை கோட்டாட்சியர் முருகேசன் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக தகவல் அனுப்பினார். மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு கவனத்திற்கும் செய்தி சென்றிருந்த நிலையில், சில மணி நேரத்திலேயே நடவடிக்கை எடுக்கத் தொடங்கியதை கிராம நிர்வாக அலுவலர் தனலெட்சுமி உறுதி செய்தார். மாற்றுத் திறனாளிகள் அலுவலகம் முதற்கட்டமாக சக்கர நாற்காலி வழங்கியது.

 

அடுத்த நாள் சிறுவனை ஆலங்குடி அழைத்துச் சென்று ஆதார், மாற்றுத்திறனாளி சான்றுகள் பெற கோட்டாட்சியர் முருகேசன் காத்திருக்க... வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோருடன் சமூக ஆர்வலர் லெனின், சிறுவனையும் அவனது பாட்டியையும் அழைத்துச் சென்றார். சில மணி நேரத்திலேயே கோட்டாட்சியர் மேற்பார்வையில் பயிற்சி துணை ஆட்சியர் ஜெயஸ்ரீ முன்னிலையில் வட்டாட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் கண்காணிப்பில் அத்தனை பணிகளும் முடிவடைந்தது.

 

அடுத்து, சிறுவனின் வீட்டிற்கு கோட்டாட்சியர் கிளம்பிச் சென்று வீட்டைப் பார்த்ததும், “உடனே மின்சார இணைப்பு கொடுக்க வேண்டும், இப்பவே ஆன்லைனில் பதிவு செய்து மின் இணைப்பு பெற வேண்டும்” என்று சொன்னதுடன், இணைய சேவை மையத்திற்கே சென்று ஆன்லைனில் பதிவேற்றம் செய்தார். மூதாட்டி சுந்தராம்பாளின் ஆதாருக்கான செல் நம்பர் மாறியுள்ளதால் ஓ.டி.பி. வராமல் போக, உடனே ஆதாருக்கான செல் நம்பரை மாற்றி நடவடிக்கை எடுத்தார். மின் இணைப்புகளும் கிடைத்துவிட்டது.

 

சுந்தராம்பாளுக்கு மட்டுமின்றி அந்த பர்மா காலனிக்கே பட்டா பெறவும் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த கோட்டாட்சியர் முருகேசன், சிறுவனின் குடும்பத்திற்கான தேவைகள் கிடைத்துவிட்டதா என்பது பற்றி தொடர்ந்து கண்காணித்தும் வருகிறார். ஒவ்வொரு நகர்வுக்கும் லெனின் சலிப்பின்றி செயல்பட்டு வருகிறார். நக்கீரன் இணையச் செய்தி எதிரொலியாக மாற்றுத் திறனாளி சிறுவனுக்கு மறுவாழ்வு கிடைத்திருப்பதை பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

 

 

Next Story

குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து! - கவனம் கொடுக்குமா அரசு?

Published on 04/03/2024 | Edited on 04/03/2024
 Will the government pay attention? children's lives!

புதுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி சாலையில் உள்ளது முத்துப்பட்டினம் என்கிற சின்னக் கிராமம். இங்குள்ள குழந்தைகள் வெகுதூரம் சென்று தொடக்கக் கல்வி கற்க வேண்டும் என்பதால் அதே ஊரில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. தற்போது இந்தப் பள்ளியில் 50க்கும் மேற்பட்ட விவசாய கூலித் தொழிலாளிகளின் குழந்தைகள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளிக்கு 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 2 வகுப்பறைக் கட்டடம் மற்றும் ஒரு வகுப்பறை கட்டடம் உள்ளது. இதில் 2 வகுப்பறைக் கட்டடத்தின் மேற்கூரை காங்கிரீட், சிமெண்ட் பூச்சுகள் கடந்த சில வருடங்களாகவே உடைந்து கொட்டிக் கொண்டிருக்கிறது. இதனால் குழந்தைகளை அந்த வகுப்பறைகளில் வைக்க அச்சப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள் ஆசிரியர்கள்.

உள்பக்கத்தின் மேல் சிமெண்ட் பூச்சுகள் உடைந்து கொட்டி துருப்பிடித்த கம்பிகளும் தொங்கிக் கொண்டிருக்கிறது. மாணவர்கள் இருக்கும் போது கொட்டாமல் இரவில் கொட்டுவதால் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இதுவரை பாதிப்பு இல்லை. இந்தக் கட்டடத்தை இடித்துவிட்டு வேறு கட்டடம் கட்ட வேண்டும் என்று பெற்றோர்கள் தொடர்ந்து வைக்கும் கோரிக்கை ஏனோ அதிகாரிகள் கவனம் பெறவில்லை. 

அதிகாரிகளின் அலட்சியத்தால் தினம் தினம் திக் திக் மனநிலையில் மாணவர்களும் பெற்றோர்களும் உள்ளனர். தலைக்கு மேலே ஆபத்து இருக்கும் போது எப்படி நிம்மதியாக படிக்க முடியும் மாணவர்களால். கவனம் எல்லாம் இடிந்து கொட்டும் மேற்கூரை மேலே தானே இருக்கும். பெற்றோர்களும் கூட கூலி வேலைக்குச் சென்ற இடத்திலும் பள்ளியில் தங்கள் குழந்தைகளின் நிலை பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பார்கள்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் எத்தனையோ அரசுப் பள்ளிகளை அரசு நிதியை எதிர்பார்க்காமல் அந்தந்த ஊர் முன்னாள் மாணவர்கள், பெற்றோர்கள் தங்கள் சொந்தச் செலவில் மாணவர்களின் நலனுக்காக கட்டடம், திறன் வகுப்பறைகள் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து பெருமைப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

மாணவர்களின் உயிர் காக்க அரசோ அல்லது தன்னார்வலர்களோ உடனே ஒரு இரண்டு வகுப்பறைக் கட்டடம் கட்டிக் கொடுக்க முன்வந்தால் நன்றாக இருக்கும் என்கிறார்கள் அந்த கிராம மக்கள். 

Next Story

ஒரு ரோட்டுக்கு 2 டெண்டர்கள்! அதிகாரிகளின் அலட்சியத்தால் வீணாகும் மக்கள் வரிப்பணம்!

Published on 05/02/2024 | Edited on 05/02/2024
2 tenders per road! People's tax money is wasted due to negligence of officials!

ஒரு ரோடு போட ரூ.1 கோடி நிதி ஒதுக்கி அமைச்சர் பூமி பூஜை போட்ட பிறகு அதே ரோட்டில் ரூ.5 லட்சத்திற்கு சிமென்ட் சாலைப் பணிக்கு நிதி ஒதுக்கி பணிகள் தொடங்கியுள்ள அவலம் நடந்து வருகிறது.

புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம் கீரமங்கலம் - பட்டுக்கோட்டை - அறந்தாங்கி சாலையில் இருந்து கீரமங்கலம், செரியலூர் இனாம், செரியலூர் ஜெமின், வேம்பங்குடி மேற்கு ஊராட்சி வரை சென்று கீரமங்கலம் - பேராவூரணி சாலையில் இணையும் சுமார் 3 கி.மீ இணைப்பு கிராமச் சாலை உள்ளது. இந்தச் சாலையை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கிராம மேம்பாட்டுச் சாலை (ஆர்.ஆர்) திட்டத்தில் இணைத்து நெடுஞ்சாலைத்துறையிடம் ஒப்படைத்து திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டது. அதன்பிறகு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு ரூ.1 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்து டெண்டர் விடப்பட்டு கடந்த சில மாதங்களுக்கு முன்பு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதனை அழைத்து வந்து சாலைப் பணிக்கான அடிக்கல் நாட்டு விழாவை நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடத்தினர். மழைக்காலம் என்பதால் சாலைப் பணி தாமதம் செய்யப்பட்டிருந்தது. இன்னும் சில நாட்களில் பணிகள் தொடங்க உள்ளது.

இந்த நிலையில் தான் அறந்தாங்கி ஒன்றியத்தில் உள்ள வேம்பங்குடி கிழக்கு ஊராட்சியில் பேராவூரணி சாலையில் (ஆர்.ஆர்.க்கு ஒப்படைக்கப்பட்ட சாலை) இருந்து சுமார் 200 மீட்டர் நீலத்திற்கு சிமெண்ட் சாலை அமைப்பதற்கான முதல்கட்டப் பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இந்த சாலையில் தான் ஆர்.ஆர். சாலையும் வரப்போகிறது. அதாவது தற்போது அவசர கதியில் போடப்படும் சிமெண்ட் சாலையில் இன்னும் சில நாளில் ஆர்.ஆர். சாலைப் பணிக்காக உடைத்துவிட்டு தார்ச்சாலை போடப் போகிறார்கள். இதனால் மக்கள் வரிப்பணம் ரூ.5 லட்சம் வீணாகப் போகிறது.

2 tenders per road! People's tax money is wasted due to negligence of officials!

ஒரு சாலை நெடுஞ்சாலைக்கு ஒப்படைத்து அந்த சாலை பணிக்காக ஒப்பந்தம் விடப்பட்ட பிறகு ஊராட்சி ஒன்றியம் எப்படி சிமெண்ட் சாலைக்கு நிதி ஒதுக்கி டெண்டர் விட்டது? இப்போது போடப்படும் சிமென்ட் சாலையை தார்ச்சாலை போட வருபவர்கள் உடைத்துவிடுவார்களே என்று அறந்தாங்கி ஒன்றிய அதிகாரிகளிடம் கேட்டால், வேம்பங்குடி கிழக்கு ஊராட்சியில் யூனியனில் இருந்து எந்த வேலையும் நடக்கலயே என்று சொன்ன ஒன்றிய அதிகாரிகள் சிறிது நேரத்திற்கு பிறகு அது அண்ணா மறுமலர்ச்சித் திட்டப் பணியாம் என்றனர். எந்தப் பணியானாலும் அதே சாலைக்கு மற்றொரு டெண்டர் விடப்பட்ட பிறகு அதில் சிமெண்ட் ரோடு வேலை செய்தால் அந்தப் பணம் வீணாகாதா? என்ற நமது கேள்விக்கு ஒன்றிய அதிகாரிகளிடம் இருந்து பதில் இல்லை.

தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை ஆர்.ஆர் திட்டப் பொறியாளர் கவனத்திற்கு கொண்டு சென்ற போது, எங்களிடம் ஒப்படைத்த சாலையில் வேறு யாரும் பணி செய்யக் கூடாது. ஒன்றிய நிதியில் வேலை நடப்பது பற்றி தகவல் கிடைத்ததும் மாவட்ட திட்ட அலுவலர் கவனத்திற்கு கடிதம் அனுப்பிவிட்டோம். இனிமேல் அவர்கள் வேலை செய்யமாட்டார்கள். எங்கள் டெண்டர் படி முழுமையாகத் தான் தார்ச்சாலை போடுவோம் என்றார். ஆனால் இன்று வரை தற்காலிக சிமென்ட் சாலைக்கான பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது.

இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறும் போது, ரொம்ப வருசமா குண்டும் குழியுமா கிடந்த ரோட்டுக்கு இப்ப ஆர்.ஆர்.ல நிதி ஒதுக்கின பிறகு பஞ்சாயத்தில் இருந்து சிமென்ட் ரோடு போடுறாங்க. இவங்க போட்ட ரோட்டை நெடுஞ்சாலைத்துறையினர் இன்னும் சில நாளில் உடைச்சுட்டு தார் ரோடு போடப் போறாங்க. கேட்டா மரம் நிக்கிது தார் ரோடு உடைஞ்சிடும்ன்னு சொல்றாங்க. ஆனா ஆர்.ஆர். ரோட்டுக்காரங்க எங்களுக்கு ஒதுக்குன அளவு ரோடு போடுவோம்னு சொல்றாங்க. இதனால ஒரு ரோடு போட்டு பில் எடுத்ததும் ஒரு வாரத்தில் உடைக்கப் போறாங்க. மக்கள் வரிப்பணத்தை இந்த அதிகாரிகள் எப்படி வீணடிக்கிறாங்கன்னு பாருங்க. சிமென்ட் ரோட்டை வேறு ஒரு தெருவில் கூட போடலாம் என்கின்றனர்.

இதே போல தான் கறம்பக்குடி ஒன்றியத்தில் கருக்காகுறிச்சி தெற்கு தெருவில் ஒரு தனி நபரின் பட்டா இடத்தில் சுமார் 50 மீ பேவர் பிளாக் ரோடு போட வந்த போது நிலஉரிமையாளர் தடுத்து யாருக்குமே பயன்படாமல் என் நிலத்தில் போட வேண்டாம் என்று சொன்ன போது இன்று ரோடு போடுறோம் ஒரு வாரத்தில் பில் எடுத்ததும் நீங்க ரோட்டை உடைச்சுட்டு விவசாயம் பண்ணுங்கனு சொல்லி இருக்கிறார்கள். அதாவது அரசு பணத்தை பில் போட்டு எடுக்கத்தான் டெண்டர்கள் கொடுக்கிறார்களா அதிகாரிகள்? என்ற கேள்வி சில சம்பவங்களில் இருந்து எழுந்துள்ளது.