Skip to main content

மனிதம் செத்தால் யானை சாகும்... யானை செத்தால்...?

Published on 23/01/2021 | Edited on 30/06/2021

 

elephant

 

நீலகிரி மாவட்டம் முதுமலை பொக்காபுரம் பகுதியில் கடந்த மாத இறுதியில் 50 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று முதுகில் காயத்துடன் திரிந்தது. இதைக் கண்ட அப்பகுதி மக்கள் வனத்துறை அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர்.

 

பொதுமக்கள் அளித்த தகவலையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறை அதிகாரிகள் யானைக்குச் சிகிச்சை அளித்தனர். இத்தொடர் சிகிச்சையில் சற்று குணமடைந்த யானை, மசினகுடி பகுதியில் உலவி வந்தது. இந்த நிலையில், கடந்த 19-ஆம் தேதி காது கிழிந்த நிலையில் தீக்காயங்களுடன் அந்த யானையைக் கண்ட வனத்துறை அதிகாரிகள், முதுமலை புலிகள் காப்பகத்திற்குக் கொண்டு சென்று சிகிச்சை அளிப்பதற்காக, மயக்க மருந்து செலுத்தினர். அதில் மயக்கமடைந்த யானை, காப்பகம் கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தது. இதனையடுத்து, யானையின் காதுப்பகுதியில் தீ வைத்தது யார் என்பது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில், இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில், யானையின் மீது தீ வீசிய காட்சியும் அந்த வெப்பத்தைத் தாங்க முடியாமல் யானை அலறி ஓடிய காட்சியும் இணையத்தில் வெளியாகி பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியதோடு, மரித்துப் போய்விட்டதா மனிதம் என்ற கேள்வியையும் எழுப்பியுள்ளது.

 

பல கோடிக்கணக்கான உயிரினங்கள் வாழும் இந்தப் பூமிப்பந்தில், எண்ணிக்கை அளவில் பெருங்கூட்டத்தினைக் கொண்ட ஓர் உயிரினமாக மனித இனம் உள்ளது. உலகின் இயக்கத்திற்கு ஒரு மனிதன் என்ன பங்களிப்பைச் செலுத்துகிறானோ, அதே பங்களிப்பைப் பிற உயிரினங்களும் அளித்து வருகின்றன. அதன் வெளிப்பாடே, இந்தப் பூமி குறித்து ஆறறிவு கொண்ட இனமாக மார்தட்டிக்கொள்ளும் மனித இனம் செய்துள்ள அத்தனை ஆய்வு முடிவுகளும். இந்த உயிரினங்களில் ஏதேனும் ஒன்று இயற்கைத் தனக்குப் பணித்த கட்டளையில் முரண்டு பிடித்தால் மனித இனம் வரையறுத்து வைத்துள்ள அத்தனை முடிவுகளும் பொய்த்துவிடும். இங்குள்ள உயிரினங்களுக்கு இடையேயான பிணைப்பு அவ்வகையானதே. மனிதக் கூட்டத்தைத் தவிர, பிற அனைத்து உயிரினங்களும் இந்த உண்மையைத் தெளிவாக உணர்ந்துள்ளன.

 

தொடர்ந்து மனித இனம் செய்து வரும் இயற்கைக்குப் புறம்பான நகர்வுகளால், இயற்கையின் அருங்கொடையாக உள்ள காடுகளும் கடல்களும் தங்களது அடையாளங்களைத் தொலைத்து வருகின்றன. ஆடம்பர விடுதிகள், கேளிக்கைக் கூடங்கள், மாடமாளிகை வீடுகள் என வனப்பகுதிக்குள் நடைபெற்று வரும் மனிதக் கூட்ட ஆக்கிரமிப்பு, வன விலங்குகளுக்கு அச்சுறுத்தல் தரக்கூடியதாகவும் அவற்றின் வாழ்வாதாரத்தைக் கேள்விக்குள்ளாக்குவதாகவும் உள்ளது. இது போன்ற செயல்களின் நீட்சியாக ஏற்படும் வனவிலங்குகள் ஊருக்குள் புகுதல், வனவிலங்குகள் மற்றும் மனிதர்களுக்கு இடையேயான மோதல் போக்குகள் வாடிக்கையாகியுள்ளன. மனிதத்தைக் கேள்விக்குள்ளாக்கக் கூடிய இந்த மசினகுடி சம்பவமும் அந்த வகையிலான ஒரு சம்பவமாகத்தான் அரங்கேறியுள்ளது.

 

பிற உயிரினங்களுடன் தனக்கு இருக்கும் பிணைப்பை மனித இனம் உணர மறுப்பதும் இப்பூகோளத்தில் மனித இனம் தனித்து வாழ்ந்திட முடியுமென நம்புவதும் பிற உயிரினங்களை விடத் தன்னை மேலாகக் கருதிக்கொள்ளும் 'ஆறறிவு அகந்தையின்' வெளிப்பாடே. இந்தப் பூமியில் ஒரு பட்டாம்பூச்சி செய்யும் வேலை, பட்டாம் பூச்சியால் மட்டுமே செய்யக்கூடியதாகும். அதுபோல, ஒரு யானையால் செய்யப்பட வேண்டிய வேலை யானையால் மட்டுமே செய்யக்கூடியது. இதுவே, இயற்கை அன்னை எழுதிவைத்துள்ள சாசனம். கடந்த சில ஆண்டுகளாக யானைகளின் தொடர் மரணங்கள் குறித்து வரும் செய்திகள் பெரும் வருத்தமளிக்கக்கூடியதாக உள்ளன. நம் இந்தியப் பகுதியில் வாழ்கின்ற ஆசிய இனத்தைச் சேர்ந்த யானை, நாள் ஒன்றுக்கு 56 கிமீ தூரம் வரை பயணிக்கிறது.

 

வழிநெடுக யானை இடும் சாணம் வாயிலாக முளைவிடும் புதிய செடிகள், நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை கணக்கிட முடியாதது. யானை சாணத்தில் இருக்கும் உப்புகளே பட்டம் பூச்சிகளின் பிரதான உணவு. யானைகள் இல்லையென்றால் அதன் சாணம் ஏது? சாணம் இல்லையென்றால் பட்டாம் பூச்சி இனத்தின் இருப்பு ஏது? பட்டாம் பூச்சி இல்லையென்றால் மகரந்தச் சேர்க்கை ஏது? மகரந்தச் சேர்க்கை இல்லையென்றால் காய்கள், பழங்கள் ஏது? காய்கள் பழங்கள் இல்லையென்றால் காடுகள் செழிப்பு ஏது? காடுகள் செழிப்பு இல்லையென்றால் மழைவளம் ஏது? மழைவளம் இல்லையென்றால் நீர்வீழ்ச்சி, ஆறுகள், ஏரிகள், குளங்கள், நிலத்தடி நீர் ஏது? என யானை எனும் ஒற்றை உயிரினத்தை மையப்படுத்தியே உயிரினப்பன்மையத்தின் முக்கியத்துவத்தை உணரலாம்.
 

cnc


பெரிய உயிரினம் யானை மட்டுமல்ல, கடலில் வாழும் நுண்ணுயிரியான 'புரோக்ளோரோகாகஸ்' எனும் சிறு நுண்ணுயிரி தனது வேலையில் முரண்டு பிடித்தால் கூட, மனிதர்களின் சுவாசத்திலேயே பெரிய மாற்றம் ஏற்படும். இந்த அளவிற்கு பிணைப்புச் சங்கிலியால் இணைக்கப்பட்ட கட்டமைப்பினுள் மனித இனம் தொடர்ந்து முரண்டு பிடிப்பது, உலக இயக்கத்திலிருந்து நாம் வெளித்தள்ளப்படவிருக்கும் காலம் வெகுதூரமில்லை என்பதையே உணர்த்துகிறது.

 

elephant

 

கடந்த மாத இறுதியில் காயம்பட்டது முதல் அந்த யானைக்குச் சிகிச்சையளித்து வந்த வனத்துறை அதிகாரி ஒருவர், யானையின் இறப்பைத் தாங்க முடியாமல் கதறியழுத காட்சி காண்போரையும் கண்கலங்கச் செய்கிறது. பற்றி எரியும் தீயுடன் யானை பதறி ஓடிய காட்சி மற்றும் வனத்துறை அதிகாரி கதறி அழுத காட்சியைக் கண்டு நமது மனம் தொந்தரவுக்கு உள்ளாகவில்லை என்றால் நமக்குள் இருக்கும் மனிதத்தின் உயிர்ப்புத்தன்மையை ஒரு முறை சுயபரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டியது கட்டாயம். நாளை ஏதாவது ஓர் உயிரினத்திற்கு எதிராக நாமும் இவ்வாறு திரும்புவதைத் தடுக்க அது உதவும்.

 

 

 

Next Story

கூட்டமாக படையெடுத்து வந்த யானைகள்; அச்சத்தில் கிராம மக்கள்!

Published on 12/04/2024 | Edited on 12/04/2024
Coimbatore Thondamuthur elephant issue

மேற்குத்தொடர்ச்சி வனப்பகுதியில் கோடைக் காலத்தையொட்டி கடும் வறட்சியான சூழல் நிலவுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. மேலும் உணவு மற்றும் குடிநீரைத் தேடி வனவிலங்குகள் கிராமங்களை நோக்கி படையெடுக்கும் நிகழ்வுகள் அரங்கேறி வருகின்றன. இத்தகைய சூழலில் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூரில் கடந்த 8 ஆம் தேதி குடிநீர் தேடி பெண் யானை ஒன்று அப்பகுதிக்கு வந்துள்ளது. அச்சமயத்தில் அங்குள்ள குழியில், இந்த பெண் யானை தவறி விழுந்துள்ளது. இதனால் உடல்நலம் குன்றிய பெண் யானை உயிருக்குப் போராடி வந்தது.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் பின்னர் மருத்துவ குழுவினருடன் அப்பகுதிக்கு சென்ற வனத்துறையினர் உடல்நலம் குன்றிய பெண் யானைக்கு சிகிச்சை அளித்தனர். மேலும் யானைக்கு உணவாக பசுந்தீவனம் மற்றும் குளுக்கோஸ் ஆகியவை கொடுக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி என்ற இடத்தில் உடல்நலக்குறைவால் நடக்க முடியாமல் படுத்த 45 வயது மதிக்கத்தக்க பெண் யானைக்கு வனத்துறையினர் நேற்று (11.04.2024) சிகிச்சை அளித்தனர். மேலும் பெண் யானையின் குட்டி பாதிக்கப்பட்ட யானையின் பக்கத்திலேயே பரிதவித்து நின்று கொண்டிருந்தது பார்ப்போர் மனதையும் கலங்க செய்தது.

இந்நிலையில், கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள தீனம் பாளையத்தில் ஒரே நேரத்தில் 15 காட்டு யானைகள் கிராமத்திற்குள் நுழைந்தன. இதனால் அப்பகுதி கிராம மக்கள் அச்சம் அடைந்தனர். இந்த காட்டுயானைகள் அங்குள்ள விவசாய நிலம் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் சுற்றி வந்தன. இதனைக் கண்காணித்து வந்த வனத்துறையினர் 15 காட்டு யானைகளையும் வனப்பகுதிக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் இனையத்தில் பரவி வைரலாகி வருகிறது. 

Next Story

பெண் யானைக்கு உடல்நலக் குறைவு; பரிதவிக்கும் குட்டி!

Published on 11/04/2024 | Edited on 11/04/2024
Female elephant ill health Poor kid

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள கடம்பூர் மேற்குத்தொடர்ச்சி வனப்பகுதியில் கோடைக் காலத்தையொட்டி கடும் வறட்சியான சூழல் நிலவுகிறது. இதனால் கடந்த சில நாட்களாக காட்டு யானைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. இத்தகைய சூழலில் கடந்த 8 ஆம் தேதி குடிநீர் தேடி பெண் யானை ஒன்று அப்பகுதிக்கு வந்துள்ளது. அச்சமயத்தில் அங்குள்ள குழியில், இந்த பெண் யானை தவறி விழுந்துள்ளது. இதனால் உடல்நலம் குன்றிய பெண் யானை உயிருக்குப் போராடி வந்தது.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் இது குறித்து வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன் பின்னர் மருத்துவ குழுவினருடன் அப்பகுதிக்கு சென்ற வனத்துறையினர் உடல்நலம் குன்றிய பெண் யானைக்கு சிகிச்சை அளித்தனர். மேலும் யானைக்கு உணவாக பசுந்தீவனம் மற்றும் குளுக்கோஸ் ஆகியவை கொடுக்கப்பட்டன.

இந்நிலையில் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி என்ற உடல்நலக்குறைவால் நடக்க முடியாமல் படுத்த 45 வயது மதிக்கத்தக்க பெண் யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் பெண் யானையின் குட்டி பாதிக்கப்பட்ட யானையின் பக்கத்திலேயே பரிதவித்து நின்று கொண்டுள்ளது பார்ப்போர் மனதையும் கலங்க செய்கிறது.