Skip to main content

"அதிகாரம் கொண்ட பதவி தருவார்கள் என்று பார்த்தால் புல் கூட முளைக்காத தமிழக பாஜகவுக்கு தலைவராக.." - அண்ணாமலைக்கு நாஞ்சில் சம்பத் பதிலடி!

Published on 28/10/2021 | Edited on 28/10/2021

 

d


பாஜக தலைவர் அண்ணாமலை, திமுக அமைச்சர்களான செந்தில் பாலாஜி மற்றும் சேகர் பாபு தொடர்பாக தொடர்ந்து குற்றச்சாட்டுக்களைக் கூறி வருவதும், அதற்கு அமைச்சர்கள் தரப்பு ஆதாரத்தைக் கேட்டால் வழக்குப் போட்டுக்கொள்ளுங்கள் என்று அண்ணாமலை கூறுவதுமான சம்பவங்கள் கடந்த சில நாட்களாக தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. இவர்கள் இருவரையும், அதிலும் குறிப்பாக செந்தில் பாலாஜியை அண்ணாமலை அதிகம் தாக்குவது ஏன்? அதன் பின்னணி என்ன, தனிப்பட்ட பிரச்சனை இருக்கிறதா? என்பன போன்ற பல்வேறு கேள்விகளைத் திராவிட இயக்கப் பேச்சாளர் நாஞ்சில் சம்பத்திடம் நாம் கேள்விகளாக முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,


பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து திமுக அமைச்சர்கள் தொடர்பாக விமர்சனம் செய்துவருகிறார். குறிப்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி குறித்து கடுமையான விமர்சனத்தை முன்வைக்கிறார். செந்தில் பாலாஜியும் பதில் சவால் விடுகிறார். குற்றச்சாட்டுக்கு ஆதாரத்தைக் காட்டுங்கள் என்று கூறுகிறார். இருவருக்குமான வாக்குவாதத்தை எப்படி பார்க்கிறீர்கள்? 

ஒரு ஜனநாயக நாட்டில் அரசைக் கேள்வி கேட்க ஒரு எதிர்க்கட்சியைச் சேர்ந்த கட்சி தலைவருக்கு உள்ள உரிமையைப் பிறர் கேள்வி கேட்பதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. அவர்களுக்கு அதற்கான உரிமை நிச்சயம் உண்டு. ஆனால், இவர் ஏன் எதிர்க்கிறார் என்றால் அவரால் தாங்க முடியவில்லை. ஏனென்றால், தமிழிசை அவர்கள் இரண்டு மாநிலத்திற்கு ஆளுநராக இருக்கிறார். இங்கே மாநில தலைவராக இருந்த முருகன் மத்திய அமைச்சராக இருக்கிறார். அந்திம காலத்தில் இருந்த இல. கணேசன் தற்போது கவர்னராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால் ஐபிஎஸ் அதிகாரியாக இருந்த நமக்கு ஏதாவது அரசியல் அதிகாரம் கொண்ட பதவி தருவார்கள் என்று பார்த்தால், புல் கூட முளைக்காத தமிழக பாஜகவுக்குத் தலைவராக போட்டுள்ளார்களே, என்ற கோவத்தில் அரசியல் அதிகார பதவியை எப்படியாவது வாங்க வேண்டும் என்ற நோக்கத்தில் அவர் செயல்படுகிறார் என்றுதான் நாம் புரிந்துகொள்ள வேண்டியுள்ளது.   

 

தமிழ்நாட்டில் இவ்வளவு அமைச்சர்கள் இருக்கின்றபோது அண்ணாமலை செந்தில் பாலாஜியை மட்டும் குறி வைத்து தாக்குவது ஏன்?

அதற்கு வலுவான காரணம் இருக்கிறது. திமுகவில் செந்தில் பாலாஜி ஒரு ஆளுமையாக இருக்கிறார். அது அண்ணாமலையை உறுத்துகிறது. அதையும் தாண்டி, கடந்த தேர்தலில் திமுக கோவையில் அடிவாங்கியது, ஈரோட்டில் கூட எதிர்பார்த்த இடங்களில் வெற்றிபெறவில்லை, ஆனால் கரூரில் நூறு சதவீத வெற்றிபெற்றது. இதற்கு காரணம் செந்தில் பாலாஜி. இன்னும் சொல்கிறேன், அண்ணாமலை அரவக்குறிச்சியில் மண்ணைக் கவ்வ வைத்தற்கு மிக முக்கிய காரணம் செந்தில் பாலாஜிதான். அந்தக் கோவத்தில்தான் அவர் இவ்வாறு பேசுகிறார். அவரால் பேச மட்டும்தான் முடியும், எனவே அண்ணாமலை பேச்சை சீரியஸாக எடுத்துக்கொள்ள தேவையில்லை. 

 

அமைச்சர் சேகர்பாபு கூறியதாக ஒரு கருத்தை அண்ணாமலை கூறியதோடு, இந்தியாவில் 17 மாநிலங்களில் நாங்கள்தான் ஆட்சியில் இருக்கிறோம், டெல்லியில் மோடி இருக்கிறார், பாஜக மீது கைவைத்து பாருங்கள், நாங்கள் யார் என்று தெரியும் என்று செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார். அண்ணாமலையின் இந்தக் கருத்தை எப்படி புரிந்துகொள்வது? 

அண்ணாமலையின் கருத்து பைத்தியக்காரத்தனமாக இருக்கிறது, அவர் என்ன வட்டியும் முதலுமாக தர இருக்கிறது. இந்த நாட்டில் பாஜகவுக்கு இன்னும் செல்வாக்கு இருக்கிறது என்று அவர் நினைக்கிறாரா? இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 7 முறை கேஸ் விலை உயர்த்தப்பட்டுள்ளது. தினமும் பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுவருகிறது, அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் தனியார் மயமாக்கப்பட்டுவருகிறது. விமான நிலையம் தனியார்மயமாக்கப்பட்டு வருகிறது, அடுத்து ரயில்வே தனியார் மயத்தை நோக்கிச் செல்ல இருக்கிறது. இந்த நிலையில், இவர்கள் அடுத்தவர்களைப் பார்த்து சவால் விடுகிறார்கள். நாட்டு மக்கள் பாஜகவை பழிவாங்க காத்துக்கிடக்கிறார்கள், அதற்கான நேரத்தை எதிர்பார்த்துள்ளார்கள். 

 

சேகர் பாபுவை பார்த்து இவர் சவால் விடுகிறார். அவர் செய்த சாதனைகளுக்கு அவரை பாராட்டியிருக்க வேண்டாமா? இன்றைக்குத் தமிழ்நாட்டில் அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற நிலையை உருவாக்கி வைத்திருக்கிறாரே, அதற்காக அவரை பாராட்ட வேண்டாமா, தனியார்கள் கோயில் நிலங்களை ஆக்கிரமித்து சுகபோக வாழ்க்கை வாழ்ந்த நிலையில், இவை அனைத்தையும் மீட்டு, இன்றைக்கு அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளாரே, இதெல்லாம் அவருக்குத் தெரியுமா? சேகர்பாபுவை பற்றிப் பேச இவர் யார், இவருக்கு என்ன தகுதி இருக்கிறது, சேகர்பாபுவை பற்றி வாய்திறக்க கூட இவருக்கு உரிமை இல்லை. எனவே தேவையில்லாத கருத்துக்களை அண்ணைமலை குறைத்துக்கொள்வது அவருக்கு நல்லது.

 

 

Next Story

"ஆறு மாத சஸ்பெண்ட் தப்புக்கு தண்டனையா...? கே.டி. ராகவனை அண்ணாமலை எப்போது சேர்த்துக்கொள்ளப் போகிறார்..." - நாஞ்சில் சம்பத்

Published on 29/11/2022 | Edited on 29/11/2022

 

ரகத

 

பாஜகவிலிருந்த திருச்சி சூர்யா சில தினங்களுக்கு முன்பு அக்கட்சியின் சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த டெய்சி என்பவரோடு பேசிய பேச்சுக்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்த விவகாரத்தில் திருச்சி சூர்யாவைக் கட்சியிலிருந்து ஆறு மாதம் நீக்கி அண்ணாமலை அறிக்கை வெளியிட்டு இருந்தார். இதுதொடர்பாக  அறிக்கை வெளியிட்டு இருந்த பாஜக தலைவர் அண்ணாமலை, பாஜக எப்போதும் பெண்களை மதிக்கும் கட்சி என்றும், அவர்களுக்குப் பாதிப்பு என்றால் முதல் ஆளாகக் குரல் கொடுப்போம் என்றும் தெரிவித்து இருந்தார்.

 

இதுதொடர்பாக நாஞ்சில் சம்பத் அவர்களிடம் கேள்வியை முன்வைத்தோம். நம்முடைய கேள்விகளுக்கு அவரின் பதில்கள் வருமாறு, " இவர் என்ன குரல் கொடுக்கப் போகிறார். தப்பு செஞ்சவனுக்கு என்ன தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது. இதை அடுத்தவர்கள் பாராட்டுகிறார்கள் என்று வேறு சொல்கிறீர்கள், யார் எதற்காகப் பாராட்டுகிறார்கள்.

 

சரியான முடிவை அண்ணாமலை என்ன எடுத்துவிட்டார், கே.டி.ராகவனை நாளைக்குக் கட்சியில் சேர்த்துப்பாரா அண்ணாமலை? அவருக்கும் இன்னும் ஆறு மாசம் முடியவில்லையா? அண்ணாமலைக்கு தன்பயம் அதிகம் வந்துவிட்டது. தன்னைத் தவிர வேறு யாரும் கட்சியில் இயங்குவதைக் கூட அவர் விரும்பவில்லை.  பாஜகவில் வேறு யாரும் தன்னைத் தாண்டி வளர்ந்துவிடக்கூடாது என்ற பயமும் அவரை வாட்டி வதைக்கின்றது. காயத்ரி, சூர்யா ஆகிய இருவரும் முருகனுடைய ஆதரவாளர். முருகனுக்கு பாஜக அலுவலகத்தில் தனி அறை போட்டாச்சு. அண்ணாமலைக்கு எப்போது ஆபத்து வரும் என்று சொல்ல முடியாது.

 

இந்தப் பேட்டியை எடுத்துக்கொண்டு நீங்கள் வீடு போய்ச் சேருவதற்குள் அண்ணாமலையில் பதவியைப் பறித்தால் கூட ஆச்சரியமில்லை. அண்ணாமலை தமிழக பாஜக தலைவராகத் தொடர்ந்து நீடிக்க முடியாது என்ற தகவல் பாஜகவில் இருந்தே கசிந்துகொண்டு இருக்கிறது. அண்ணாமலை குறிப்பிட்ட சாதியினருக்கு எதிராகச் செயல்படுகிறாரா என்ற கேள்வி எழுப்புகிறீர்கள், அப்படி என்றால் அவர் மோகன் பகவத்துக்கு எதிராகத்தான் செயல்பட வேண்டும், கேள்வி கேட்க வேண்டும். அதை எல்லாம் அவர் ஒரு போதும் செய்யமாட்டார். தன் பதவியைக் காப்பாற்றிக்கொள்ள வேண்டும் என்று தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.

 

அதன் தொடர்ச்சியாக அவருக்கு வேண்டாத நபர்களுக்கு எதிராக சில வாய்ப்புக்கள் அமையும் போது அவர்களுக்கு எதிராக இத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தேசிய கட்சிகளில் இது ஒன்றும் புதிதல்ல. பல மாநில தலைவர்களைத் தேசிய கட்சிகள் பார்த்துள்ளது. எனவே இந்தப் பதவி என்பது அவருக்கு வேண்டுமானால் புதிதாக இருக்கலாம். எனவே அதை வைத்து சில அரசியல் ஆட்டங்களை ஆடலாம் என்று கூட அவர் முயற்சி எடுக்கலாம். ஆனால் அவருக்கே எதிராகக் கள சூழ்நிலை இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி வருகிறது. எனவே அவரின் அரசியல் விளையாட்டுக்கள் நீண்ட காலம் தொடர வாய்ப்பில்லை. விரைவில் அவர் பதவிப் பறிக்கப்படக் கூட வாய்ப்புகள் அதிகம் உள்ளது. எனவே அவரின் இந்தப் பேச்சுக்களைப் பெரிதுபடுத்தத் தேவையில்லை" என்றார்.

 

 

Next Story

"ஆபாசமா பேசிட்டு அக்கா தம்பியா...? இதுக்கு ஆறு மாசம் சஸ்பெண்ட் ஒருகேடு; இப்படி ஒரு கட்சி இந்தியாவிலேயே இல்லை..." - நாஞ்சில் சம்பத்

Published on 29/11/2022 | Edited on 29/11/2022

 

sdf

 

பாஜகவிலிருந்த திருச்சி சூர்யா சில தினங்களுக்கு முன்பு அக்கட்சியின் சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த டெய்சி என்பவரோடு பேசிய பேச்சுக்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது. இந்த விவகாரத்தில் திருச்சி சூர்யாவைக் கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்த அக்கட்சியைச் சேர்ந்த காயத்ரி ரகுராம்-ஐ கட்சியிலிருந்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை நீக்கினார். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில் இதுதொடர்பாக நாஞ்சில் சம்பத்திடம் கேள்வியை முன்வைத்தோம். நம்முடைய கேள்விக்கு அவரின் அதிரடியான பதில்கள் வருமாறு,

 

பாஜகவில் கடந்த சில நாட்களாக ஆடியோ சர்ச்சை உச்சக்கட்டத்தை அடைந்துள்ளது. இந்த விவகாரத்தில் சிலரை கட்சியின் தலைமை நீக்கியுள்ளது. இதனை எப்படிப் பார்க்கிறீர்கள்? 

 

நான் தவறான பலான படங்களையோ அல்லது அதுதொடர்பான ஆடியோவையோ எப்போதும் கேட்பதில்லை. இதில் என்ன பெரிய நடவடிக்கை எடுத்ததாக நீங்கள் கூறுகிறீர்கள் என்று தெரியவில்லை. கட்சியில் தவறு செய்தால் அதிகபட்சம் கட்சியை விட்டு நீக்குவார்கள். அதுதொடர்பாக விசாரிக்க சில சமயம் குழு கூட அமைப்பார்கள். ஆனால் இந்த மாதிரி ஆறு மாதம் நீக்குவது, மூன்று மாசம் நீக்குவது என்பதை நான் ஒருபோதும் கேள்விப்பட்டதில்லை. ஆறு மாசத்துக்கு அப்புறம் கட்சியில் சேர்த்துக்கொள்வார்களா?  இது எல்லாம் ஒரு தண்டனையா என்று எனக்குத் தெரியவில்லை. 

 

இப்போ அக்கா தம்பி ஆகிட்டாங்கன்னு நீங்கள் சொல்றீங்க, இதில் நான் என்ன சொல்ல இருக்கிறது. பாஜகவோட தரம் என்ன என்று தற்போது அனைவருக்கும் தெரிய ஆரம்பித்திருக்கும். இந்த மாதிரி ஒரு கேவலமான கட்சி இந்தியாவில் எங்குமே இருக்காது. தேடப்படும் குற்றவாளிகளை எல்லாம் கூட கட்சியில் இணைத்துக் கொள்கிறார்கள். இவர்கள் மக்களுக்கு சேவை செய்யவா அவர்களை இணைத்துக் கொள்கிறார்கள். இந்த மாதரி ஆட்களை எல்லாம் கட்சியில் இணைத்தால் அவர்கள் என்ன திருக்குறளும், திருவாசகமுமா பேசுவார்கள். 

 

இந்த மாதிரிதான் அநாகரிகமாகப் பேசுவார்கள், அடுத்தவர்களைச் சீண்டுவார்கள்,பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிப்பார்கள். ரோட்டில் போவோர் வருவோரை எல்லாம் கட்சியில் சேர்த்துவிட்டுத் தவறு செய்தவுடன் நாங்கள் நீக்கிவிட்டோம் என்பதெல்லாம் யாரை ஏமாற்ற என்று தெரியவில்லை. இது ரொம்ப நாளைக்கு நடக்காது. மக்கள் முன் எளிதில் அம்பலப்பட்டுப் போவார்கள். பாஜகவின் கொள்கை கோட்பாடு பிடித்திருக்கிறது என்று கூறி இதுவரை யாராவது கட்சியில் சேர்ந்து கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? கோட்பாடு கொள்கை என்று அக்கட்சிக்கு இதுவரை எதாவது இருக்கிறதா, ஏதோ கட்சி நடத்துகிறார்கள், அடாவடி செய்யும் நான்கு பேர் கட்சியில் இணைவார்கள். அவர்கள் கையும் களவுமாக அகப்படும்போது அங்கிருந்து வேறு இடத்திற்கு மாறுவார்கள். 


தற்போது எதற்காக பாஜகவில் இருப்பவர்கள் எல்லாம் அங்கிருந்து வெளியேறுகிறார்கள். கு.க. செல்வம் எதற்காக அங்கிருந்து வெளியேறினார். மதுரை சரவணன் எதற்காகக் கட்சியிலிருந்து பிரிந்து சென்றார். வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்குள் கட்சியிலிருந்து அனைவரும் வெளியேறுவார்கள் என்பது மட்டும் நிஜம். பிரச்சாரத்தின் போது வெறும் நாற்காலிகளைப் பார்த்து எப்படி பரப்புரை செய்வார்களோ அதைப்போல வெறும் கட்சி பெயரை மட்டுமே வைத்துக்கொண்டு இவர்கள் தேர்தலைச் சந்திக்கும் காலம் மிக விரைவில் வரும். வட நாட்டு மக்களை ஏமாற்றுவதைப் போல் தமிழக மக்களை இவர்களை ஏமாற்றலாம் என்று நினைத்தால் அதில் நிச்சயம் இவர்களுக்குத் தோல்விதான் கிடைக்கும்.