Skip to main content

"அச்சத்தில் அதிமுக.. பிடி கொடுக்காத புதிய தமிழகம்..!"

Published on 05/10/2019 | Edited on 05/10/2019

2016- தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் பதிவான வாக்குகளில் கடைசி 3 சுற்றுக்களையும் தபால் வாக்குகளையும் மறுபடியும் எண்ண வேண்டும் என உயர்நீதிமன்ற நீதியரசர் ஜெயச்சந்திரன் உத்தரவிட்டதுமே, அதிமுகவுக்கு உதறல் ஆரம்பித்துவிட்டது. அக்.04-ந்தேதி நடந்த மறுவாக்கு எண்ணிக்கையை எப்படியாவது தடுத்து நிறுத்திட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் முறையிட்டார் அந்த தொகுதியின் அதிமுக எம்.எல்.ஏவான இன்பதுரை.

 

nanguneri,vikkiravandi byelection... admk



3 தொகுதிகளில் வெற்றி-ஸ்டாலின்...

ஆனால், வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்க மறுத்த உச்சநீதிமன்றம், முடிவுகளை வெளியிட தடை விதித்துள்ளது. வழக்கின் அடுத்த விசாரணை அக்.23-ந்தேதிக்கு ஒத்தி வைத்திருக்கிறது. இது ஓரளவுக்கு ஆளுங்கட்சிக்கு நிம்மதி. இருந்தாலும், 23-ந்தேதி இடைத் தேர்தல் முடிவுகள் வரும்போது திமுக கூட்டணிக்கு 3 எம்எல்ஏக்கள் கிடைப்பார்கள் என்று ராதாபுரத்தையும் சேர்த்தே திமுக தலைவர் ஸ்டாலின் கூறியிருக்கிறார். இது திமுகவினருக்கு உற்சாகத்தையும், அதிமுக தலைமைக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

nanguneri,vikkiravandi byelection... admk

 

21-ந்தேதி நடக்கும் இடைத் தேர்தலில் எப்படியாவது விக்ரவாண்டியிலும், நாங்குநேரியிலும் ஜெயிக்க வேண்டும் என்ற படபடப்பு அதிமுகவிடம் தொற்றிக் கொண்டது. அதனால் தான் பிஜேபியை ஒதுக்கியே வைத்திருந்த அதிமுக, இப்போது இறங்கி வந்து, பிஜேபி தலைவர்களை  நேரில் சந்தித்து ஆதரவு கோரியது. அதுவரைக்கு வீராப்பு காட்டிய பிஜேபியும், "பக்கத்து இலை வரைக்கு வந்த பாயாசம் இப்போது நம்ம இலைக்கும் வந்துவிட்டது என அக மகிழ்ந்து இடைத் தேர்தலில் அதிமுக கூட்டணி மகத்தான வெற்றி பெறும்" என அறிவித்திருக்கிறது.


பிடிகொடுக்காத கிருஷ்ணசாமி...

nanguneri,vikkiravandi byelection... admk



அதேபோல் "பட்டியல் வெளியேற்றம், தேவேந்திர குல வேளாளர் அரசாணை என்ற கோரிக்கையை முன்வைத்து, அதிமுகவிடம் முறுக்கிக் கொண்ட புதிய தமிழகத்தையும் அதிமுக கடைசிவரை கண்டு கொள்ளவில்லை. கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமியிடம் அதிமுகபேச முயன்றபோது அவர் பிடிகொடுக்கவில்லை."


ஜான்பாண்டியனுடன் அமைச்சர்கள் பேச்சு....

 

nanguneri,vikkiravandi byelection... admk



பிஜேபிகிட்டயே ஆதரவு கேட்கும்போது அவர்கிட்டயும் பேசி வைப்போம் என தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான்பாண்டியனை நெல்லையில் உள்ள அவரது வீட்டில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, காமராஜ், சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜூ, ராஜலட்சுமி ஆகியோர் சந்தித்தனர். ஆனால், அவரும் "7 சாதிகளை  ஒருங்கிணைத்து தேவேந்திரகுல வேளாளர் என அரசாணை வெளியிடுங்கள் ஆதரவு தருகிறேன்" என்று கூறியிருக்கிறார்.. இதனால் முதல்வரிடம் கலந்து பேசிவிட்டு சொல்கிறோம் என அமைச்சர்கள் திரும்பிவிட்டனர்.

ஏற்கனவே வேலூரில் 8 ஆயிரம் வாக்குகளில் அதிமுக தோற்றது. நாங்குநேரியில் 12 ஆயிரத்துக்கும் அதிகமான தேவேந்திர குல வேளாளர் சமூக ஓட்டுக்கள் உள்ளன. இந்த இடைத் தேர்தலில் அவர்களை புறக்கணித்தால், இடைத் தேர்தல் மட்டுமின்றி, அடுத்துவரும் உள்ளாட்சி தேர்தலில்(ஒருவேளை தேர்தல் நடந்தால்) சறுக்கலை சந்திக்க நேரிடுமோ? என்ற அச்சம் அதிமுகவிடம் எழுந்திருக்கிறது.

இதனிடையே, நாங்குநேரி தொகுதியில் மட்டுமின்றி தேவேந்திரகுல சமூகத்தினர் வசிக்கும் விருதுநகர், நெல்லை மாவட்டங்களில் பல்வேறு ஊர்களிலும் கறுப்புகொடி ஏற்றி அரசுக்கு எதிர்ப்பை பதிவு செய்துவருகின்றனர்.

 


 

Next Story

குடிநீர் தட்டுப்பாடு; அணையில் இருந்து தண்ணீர் திறக்ககோரி முன்னாள் அமைச்சர் மனு!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
M.R vijayabaskar  demanding release of water from Amaravathi Dam

கரூர் ஆண்டாங்கோவில் கிழக்கு உள்ளிட்ட ஊராட்சிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட வேண்டும். கரூர் மக்களுக்கு குடிநீர் தொடர்ந்து  புறக்கணிக்கப்படுகிறது. என மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மனு அளித்தார்.

கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகவத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணனிடம் முன்னாள் அமைச்சரும், அதிமுக மாவட்டச் செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்றத்தலைவர் சாந்தி ஆகியோர் மனு அளித்தனர்.  

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “கரூர்  மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆண்டாங்கோவில் கிழக்கு, ஆண்டாங்கோவில் மேற்கு, கருப்பம்பாளையம், பள்ளாபாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி  ஆகிய ஊராட்சிகளில் உள்ள அனைத்து பகுதிகளிலும் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு  ஏற்பட்டுள்ளது.

இப்பகுதி மக்களின் குடிநீர் தேவையை அமராவதி ஆற்று நீரே பூர்த்தி செய்கிறது. அமராவதி  அணையில் இருந்து தண்ணீர் திறக்கும் போது கடைமடை வரை செல்லாமல் தாராபுரம் பகுதியிலேயே தண்ணீர் நின்று விடுகிறது. இதனால் மேற்சொன்ன பகுதிகளில் மிக கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

தற்போது ஏற்பட்டுள்ள வறட்சி காரணமாக அனைத்து குடிநீர் கிணறுகளிலும் குடிநீர் வற்றிவிட்டது. எனவே அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்தோம். டி.ஆர்.ஓ ஆட்சியரிடம் பேசி விட்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.   மேலும் ஆண்டாங்கோவில் ஊராட்சி மன்றத் தலைவர் சாந்தி அளித்துள்ள மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சிக்குட்பட்ட பெரியார் நகர் மற்றும் 18 குக்கிராமங்களுக்கு அமராவதி ஆற்றிலிருந்து குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது அமராவதி ஆற்றில் நீர் மட்டம் வெகுவாக குறைந்து விட்ட நிலையில் பெரியார் நகர்  தடுப்பணையிலும் நீர்மட்டம் இல்லை. இந்த நிலையில் அமராவதி ஆற்றில் எவ்வித அனுமதியும் இன்றி குடிநீர் கிணறு அமைத்து தனியார் லாரிகள் மூலம் குடிநீர் எடுத்து விற்பனை செய்து வருகின்றனர். இதனால் ஊராட்சியின் கிணறுகள் அனைத்தும் நீரின்றி வறண்டு வருகிறது. எனவே மேற்படி  தனி நபர்கள் அமராவதி ஆற்றிலிருந்து அனுமதியின்றி நீர் எடுப்பதையும் தடை செய்ய வேண்டும்” என்றார்.

மேலும் அவர் அளித்துள்ள மற்றொரு மனுவில், ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணிகளை நேற்று தொடங்கிய நிலையில் பணிகளைத் தடுத்து விட்டனர். இதற்கான அனுமதியைக் கடந்த மார்ச் 28ம் தேதி ரத்து செய்துவிட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி செயலாளருக்கு நேற்று முன்தினம்(22.4.2024) வாட்ஸ்அப்பில் தகவல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக நீதிமன்றத்தை அணுக உள்ளோம் என்றார்.

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.