Skip to main content

மணிப்பூர் விவகாரம்; காரித்துப்பும் உலகநாடுகள் - நக்கீரன் ஆசிரியர்

Published on 29/07/2023 | Edited on 29/07/2023

 

Nakkheeran Gopal Exclusive Interview

 

மணிப்பூர் கலவரம் குறித்து தன்னுடைய கருத்துக்களை நக்கீரன் ஆசிரியர் கோபால் நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் 

 

மணிப்பூர் கலவரம் என்பது ஒரு தேசிய அவமானம். 140 கோடி மக்களும் வெட்கித் தலைகுனிகிறார்கள். இரண்டு பெண்களை நிர்வாணமாக்கி, வெறிநாய்கள் வெறியாட்டம் நிகழ்த்தியுள்ளன. இது சுதந்திர இந்தியாவில் இதுவரை நடந்திராத ஒரு கொடூரம். இந்த ஒரு வீடியோ நம் நாட்டின் முகத்திரையைக் கிழித்துவிட்டது. வீடியோ வந்த பிறகுதான் பிரதமரே முழிக்கிறார். அந்த மாநிலத்தின் முதலமைச்சர் பேட்டி கொடுக்கிறார். பிரதமரும், உள்துறை அமைச்சரும் இந்த விஷயம் தெரிந்தும் காது கேளாதவர்கள் போல் இவ்வளவு நாட்கள் இருந்துள்ளனர். 

 

இந்தக் கலவரம் நடந்தபோது மோடியும், அமித்ஷாவும் கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் இருந்தனர். கலவரம் வந்தால் தடுப்பதும், கலவரம் நடக்காமல் தடுப்பதும் தான் உள்துறையின் வேலை. எப்படி நடந்தது இந்தக் கொடூரம்? "இந்தியா அனைவருக்குமான இல்லம்" என்று மோடி அமெரிக்காவில் பேசினார். ஆனால் ஆளும் பாஜகவினருக்கு மட்டும்தான் இந்தியா இல்லமாக இருக்கிறது. சிறுபான்மையினர் உள்ளிட்ட மற்றவர்களுக்கு இது வதைமுகாம் போல் காட்சியளிக்கிறது. வெளிவந்திருக்கும் வீடியோ என்பது ஒரு சாம்பிள் தான். இதுபோல் மொத்தம் எவ்வளவு பெண்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை.

 

தன்னுடைய மனைவியை தன்னால் காப்பாற்ற முடியவில்லை என்று ஒரு இராணுவ வீரரே கண்ணீர் விட்டிருக்கிறார். காவல்துறையின் உதவியோடுதான் இத்தனை அட்டூழியங்களும் நடைபெற்றிருக்கிறது, அரசாங்கம் ஒரு சார்பாக இருக்கிறது என்று அங்குள்ள பாஜக எம்.எல்.ஏ ஒருவரே தெரிவித்துள்ளார். இதுகுறித்துப் பேசினால் வேங்கைவயல் பிரச்சனையைப் பேசி திசை திருப்புகின்றனர். வேங்கைவயல் பிரச்சனை மன்னிக்க முடியாத குற்றம்தான். அதைவிட 100 மடங்கு பெரிய குற்றம் இப்போது மணிப்பூரில் நடந்து வருகிறது. 

 

அங்கு நடக்கவில்லையா, இங்கு நடக்கவில்லையா என்று பாஜக ஆதரவாளர்கள் தொலைக்காட்சிகளில் பேசி வருகின்றனர். சுதந்திர இந்தியாவில் இதுவரை மணிப்பூர் சம்பவம் போல் எதுவும் நடந்ததில்லை. அடிப்படை மருத்துவம் கூட கிடைக்கவில்லை என்று அங்குள்ள மக்கள் அழுகின்றனர். அதன் பிறகும் பாஜகவுக்கு ஆதரவாகப் பேசுபவர்களை எதைக்கொண்டு அடிப்பது? மணிப்பூரில் உள்ள கனிம வளங்களை பாஜகவுக்கு நெருக்கமாக இருக்கும் தொழிலதிபர்கள் அபகரிக்க முயற்சி செய்ததுதான் இதற்கான தொடக்கப்புள்ளி.

 

கனிம வளங்களைக் கொள்ளையடிப்பதற்கு அங்கிருக்கும் குக்கி இன மக்களை விரட்டியடிக்க வேண்டும் என்று இவர்கள் முடிவு செய்தனர். எதையோ செய்து தொலையுங்கள். ஆனால் அதற்காக அங்குள்ள பெண்களை ஏன் இப்படிக் கொடுமைப்படுத்துகிறீர்கள்? இவ்வளவு கொடூரங்கள் நடக்கும் மணிப்பூரிலும், மத்தியிலும் ஆட்சியில் தொடர்வதற்கு உங்களுக்கு உரிமை இல்லை. எத்தனையோ தேவாலயங்கள், வீடுகள் அங்கு எரிக்கப்பட்டுள்ளன. மாற்று மதத்தைச் சேர்ந்தவர்கள் மீதுதான் அனைத்து தாக்குதலும் நடைபெற்றுள்ளது. கொலையைத் தொழிலாக வைத்திருக்கும் கொலைகாரனை விட மோசமானது இந்த அரசு.

 


 

Next Story

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள்'-தமிழிசை பேட்டி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024

 

nn

'தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள் எதிர்க்கட்சிகள்' என தமிழிசை சௌந்தரராஜன்  தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜகவின் தமிழிசை சௌந்தரராஜன் பேசுகையில், ''பாஜக வெறுப்பு அரசியல் பேசுகிறது என தீவிரமாக பிரச்சாரம் செய்கிறார்கள். மோடி எந்த வெறுப்பையும் சொல்லவில்லை. இன்னும் சொல்லப் போனால் 2016-ல் இருந்து 2020 வரை இதுவரை எந்த பிரதமரும் சிறுபான்மை மக்களுக்கு கொடுக்காத அளவிற்கு சிறுபான்மை மக்களுக்கு மோடி ப்ரோக்ராம் கொடுத்துள்ளார். புதுச்சேரியில் ஆளுநராக இருந்தால் எனக்கு தெரியும். சிறுபான்மை மக்களுக்கு ஸ்கில் டெவலப்மெண்ட், உதவித்தொகை என சிறுபான்மை மக்களை உயர்த்துவதில் இதுவரை எந்த பிரதமரும் பாடுபடாத அளவுக்கு மோடி பாடுபட்டு இருக்கிறார். அதை பொறுத்துக் கொள்ளாமல் இவர்கள் இப்படி பேசுகிறார்கள்.

சிறுபான்மை மக்களுக்கு யார் அதிகம் உதவி செய்திருக்கிறார்கள்; அவர்கள் முன்னேறும் திட்டத்திற்கு யார் அதிகம் பாடுபட்டு இருக்கிறார்கள் என்றால் அது பிரதமர் மோடி தான். இதை பொறுத்துக் கொள்ளாமல் தோல்வி பயத்தில் எதை வேண்டுமானாலும் சொல்வார்கள். தமிழ்நாட்டில் பல வாக்காளர்கள் பெயர்கள் நீக்கப்பட்டிருக்கிறது என்று நாங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆளுங்கட்சி அதற்கு செவிசாய்க்க மாட்டேன் என்கிறார்கள்.இதனால் மாநில தேர்தல் ஆணையம் ஒருதலைபட்சமாக செயல்படுகிறது என்று சொல்ல முடியுமா? அந்தந்த தேர்தல் அதிகாரிகள் முடிவெடுக்கிறார்கள். நாம் என்ன சொல்கிறோமோ அதைத்தான் தேர்தல் அதிகாரிகளும் சொல்ல வேண்டும் என எதிர்பார்ப்பது அரசியலில் அவசியம் கிடையாது.

மணிப்பூர் பிரச்சனை இன்றைய நேற்றைய பிரச்சனை இல்லை. மணிப்பூர் பிரச்சனையில் பல உள் விவகாரங்கள்  இருக்கிறது. இவையெல்லாம் சரி செய்யப்பட வேண்டும் என்பது அனைவரின் ஆசை. யாருக்கும் எங்கும் கலவரம் இருக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. ஆனால் கலவரத்தை அரசியலாக்கும் எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் செயல்படுகின்றன என்பதுதான் எங்களுடைய குற்றச்சாட்டு. அரசு அதிகாரிகள் வீட்டிலேயே சில இடங்களில் போதைப் பொருட்கள் வைப்பதற்கு உதவி செய்திருக்கிறார்கள் என்பது தொடர்பான செய்திகள் பெரும் சோகத்தை தருகிறது. கண்ணகி நகரில் நான் போகும்போது பெண்கள் வைத்த முதல் கோரிக்கை இங்கு உள்ள கஞ்சா பழக்கத்தையும், போதை பழக்கத்தையும் தடுக்க வேண்டும் என்பதுதான். அங்குள்ள இளைஞர்களுக்கு மறுவாழ்வு மையங்கள் கொடுக்கப்பட வேண்டும் என்பது தாய்மார்களின் கோரிக்கையாக உள்ளது'' என்றார்.

Next Story

ரூ.4 கோடி பறிமுதல் விவகாரம்; ஆவணங்கள் சிபிசிஐடியிடம் ஒப்படைப்பு! 

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 6 ஆம் தேதி (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்றதாக சுமார் ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். அப்போது திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது.

இந்தச் சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டிருந்தது. அதேசமயம் இந்தப் பணத்தை நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன், இவரின் நண்பர்களான ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகிய 3 மூவரும் கொடுத்து அனுப்பியதாக தெரிவித்திருந்தனர். இதனடிப்படையில் போலீசார் முருகன், ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பி இருந்தனர். இதனையடுத்து இவர்கள் நேற்று முன்தினம் (23.04.2024) தாம்பரம் காவல் நிலையத்தில் நேரில் ஆஜராகி இருந்தனர்.

அப்போது நயினார் நாகேந்திரன் உறவினர் முருகன் காவல்துறையில் அளித்த வாக்குமூலத்தில், “தனக்கும் கைப்பற்றப்பட்ட பணத்திற்கும் எவ்வித சம்பந்தமமும் இல்லை. நயினார் நாகேந்திரன் உதவியாளர் மணிகண்டன் 3 நபர்கள் பணம் கொண்டு வருகிறார்கள். எனவே இவர்களின் பாதுகாப்பிற்காக இருவரை அனுப்ப கேட்டுக்கொண்டதால் தான் தன்னிடம் வேலை பார்க்கும் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் என இருவரையும் அனுப்பி வைத்தேன். சென்னையில் 4 ஹோட்டல்களை வாடகைக்கு எடுத்து நடத்தி வருகிறேன். அதில் ஆசைத்தம்பி, ஜெய்சங்கர் இருவரும் பணியாற்றி வருகின்றனர்” எனத் தெரிவித்துள்ளார். இந்த வாக்குமூலத்தின் அடிப்படையில் நயினார் நாகேந்திரன், மணிகண்டனுக்கு காவல் துறை சார்பில் சம்மன் அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

சென்னை தியாகராயர் நகரில் நயினார் நாகேந்திரன் இது குறித்து செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “இந்த விவகாரத்தில் முழுக்க முழுக்க என்னை டார்கெட் செய்கின்றனர். இது ஒரு அரசியல் சூழ்ச்சி ஆகும். ரூ.4 கோடியை எங்கேயோ பிடித்துவிட்டு என் பெயரையும் சேர்த்து பயன்படுத்துகின்றனர். தமிழகத்தில் சுமார் 200 கோடிக்கும் மேல் பணம் பறிமுதல் செய்யப்பட்ட நிலையில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்டது குறித்து விசாரிக்கின்றனர். கைப்பற்றப்பட்ட இந்தப் பணத்திற்கும் எனக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. தாம்பரம் காவல் நிலையத்தில் மே 2 ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக உள்ளேன்” எனத் தெரிவித்திருந்தார். இத்தகைய சூழலில் இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி தமிழக போலீஸ் டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தார். 

Rs. 4 crore confiscation issue; Documents handed over to CBCId

இந்நிலையில் தாம்பரம் போலீசார் இந்த வழக்கு தொடர்பான கோப்புகளை எழும்பூரில் உள்ள சிபிசிஐடி அலுவலகத்திற்கு கொண்டு சென்று ஒப்படைத்தனர். அதாவது பணம் எடுத்துச் சென்ற சூட்கேஸ்கள், 7 பைகள், 3 செல்போன்கள், 15 பேரிடம் பெற வாக்குமூலம் தகவல் அடங்கிய ஆவணங்கள், நயினார் ஹோட்டல் அருகே இருந்த சிசிடிவி காட்சிகள், ரயில் டிக்கெட் பெற நயினார் கையொப்பமிட்ட அவசர கோட்டாவிற்கான படிவம் ஆகியவற்றை தாம்பரம் காவல் நிலைய ஆய்வாளர் பாலமுரளி தலைமையிலான போலீசார் இந்த ஆவணங்களை சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைத்தனர். விரைவில்  சிபிசிஐடி போலீசார் விசாரணையை தொடங்குவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.