Skip to main content

கோபி சார்...! காலத்தின் விளையாட்டு!

Published on 16/12/2019 | Edited on 16/12/2019

 

g


சென்னை அமிஞ்சிக்கரை பச்சையப்பா கல்லூரி அருகில் ஹாரிங்டன் சாலையில் அப்போது எங்கள் நக்கீரன் அலுவலகம்  இருந்தது. ஆண்டு 96, 97 ஆக இருக்கலாம். அப்போது எங்கள் அலுவலகத்தில் பிழை திருத்துநராகப் பணியில் வந்து சேர்ந்தார் கோபிகிருஷ்ணன்.

 

குள்ள உருவம். மாநிறம். பெரிய சைஸ் மூக்குக் கண்ணாடி, ஆழ்ந்த அமைதி முகாமிட்ட முகம். ஜிப்பா, ஜோல்னா பை அணிந்திருப்பார். நேருக்கு நேர் பார்த்தால் மனதை வருடும்படி புன்னகைப்பார். பணியில் சேர்ந்த நான்கைந்து நாட்களிலேயே என்னிடம் நட்பாகப் பழக ஆரம்பித்தார் கோபி சார். அப்போதெல்லாம் நான் அதிகமாகத் தேநீர் குடிக்கும் இயல்புள்ளவனாய் இருந்தேன். அவரும் தேநீர்க் காதலர். நானும் அவரும் அடிக்கடி, தெருமுனையில் இருக்கும் நாயர் கடைக்குப் போக ஆரம்பித்தோம். அங்குதான் எங்கள் நட்பு வேர்பிடித்து வளரத் தொடங்கியது. உருவத்துக்கும் சற்றும் பொருந்தா வகையில் மறைவாகச் சென்று பீடி புகைத்து வருவார். பேசப் பேசத்தான் தெரிந்தது, கோபி சார், சிறுகதை எழுத்தாளர் என்பது.

 

அவரது கதைகளைப் படிக்கத் தொடங்கிய நான், வியந்துபோனேன். அத்தனையும் மனதை உலுக்கும் வகையிலான எதார்த்தக் கதைகள். தான் சந்தித்த அனுபவங்களை மட்டுமே சற்றும் கூட்டிக் குறைக்காமல் அபப்டியே அப்பட்டமாக எழுதுவார். அவை அவ்வளவு ஈர்ப்பாக இருந்தன.


வறுமையின் தீவிரப் பிடியில் உழன்றுகொண்டிருந்த கோபி சார், எதிலும் சமரசம் செய்துகொள்ளமாட்டார். உலகியல் நீக்குப் போக்குகளிலில் இருந்து விலகி, எவராயினும் கவலைப்படாமல் தன் போக்கிலேயே செல்வார். நேர்மைப் பண்பு கூட அவரை நோய் போல்தான் தொற்றிக்கொண்டிருந்தது. அவசரத்திற்குச் சிறு தொகையைக் கைமாற்று வாங்கினால் கூட, அதை சம்பள நாளன்று முதலில் உறையைப் பிரித்துக் கொடுத்துவிட்டுதான் நகர்வார். பிறகு கொடுங்கள் என்றாலும் கேட்கமாட்டார். ஆனால் அவர் சூழல் மறுநாளே மீண்டும் கைமாற்றுக்கு அழைத்து வந்துவிடும்.

 

அவர் சந்திக்க நேர்ந்த நிறமிழந்த மனிதர்கள், வாய்த்த மோசமான அனுபவங்கள், வழிமறித்த வாழ்வில் நெருக்கடிகள், அவர் நம்பிய அதீத பொதுமைச் சித்தாந்தம், அதோடு ஒத்துப்போக முடியாத சமுதாயம் என எல்லாமும் சேர்ந்து அவரது மனதைக் கொஞ்சம் இடையூறு செய்ததால், அதற்கான மருத்துவத்தையும் அவர் தொடர்ந்து கொண்டிருந்தார். பட்டதாரியான அவர் பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றிய போதும், அங்கெல்லாம் தகுதிக்குக் குறைவான வேலைகளையே அவர் செய்ய நேர்ந்தது. அதனால் தன் தன்மானத்துக்கு இழுக்கென்று எங்கே, எப்போது உணர்ந்தாலும் அந்த வேலையை அந்த நொடியிலேயே அப்படியே தூக்கி எறிந்துவிட்டுப் போய்விடுகிற இயல்புகொண்டவராக இருந்தார்.


அவருக்கு மனைவி, மகள் என குடும்பம் இருந்தபோதும், குடும்ப அமைப்பு முறையில் அவருக்கு நம்பிக்கை இருந்ததில்லை. அது குறித்தெல்லாம் அவர் வைக்கும் கருத்து, திகைப்பையும் அச்சத்தையும் தரும். அவருக்கென அறிவார்ந்த ஒரு நட்பு வட்டமும் இருந்தது.

 

என் வீட்டில் எல்லோரும் ஊருக்குப் போய்விட்டால், அவரை என் வேளச்சேரி இல்லத்திற்கு அழைத்து வந்துவிடுவேன். சம்மணம் கொட்டி உட்கார்ந்து கொண்டு, ஏகாந்தமாகப் புகைத்துக்கொண்டே இருப்பார். எப்போதாவது குறைந்த அளவில் மது அருந்துவார். மனம் போன போக்கில் உரையாடிக்கொண்டே இருப்போம். குரலுயர்த்தியோ வரம்பு மீறியோ பேசமாட்டார். அவருடன் உரையாடுவது மிகவும் மேம்பட்ட அனுபவம். அவரும் அவ்வாறு உணர்வதாகச் சொல்வார். நள்ளிரவுக்கு மேல் நான் அயர்ந்துவிடுவேன். விழித்துப் பார்க்கும் போதெல்லாம் அதே இடத்தில் அதே கோலத்தில் அசையாது அமர்ந்தபடி எங்கோ பார்த்தபடி புகை மண்டலத்துக் கிடையில் இருப்பார்.

புயல், தூயோன், இடாகினிப் பேய்களும் நடை பிணங்களும் , ஒரு பேட்டியின் விலை முப்பத்தைந்து ரூபாய் என அவர் எழுதிய கதைகள் ஒவ்வொன்றும் அவர் வாழ்வின் அனுபவத் தெறிப்புகள். மனப்பிறழ்வு நோயாளிகளின் உலகத்தை அவருடைய ’உள்ளே இருந்து சில குரல்கள்’ என்ற புதினம், அழுத்தமாகப் படம் பிடித்துக் காட்டியது. அந்தப் புதினம் அப்போது என்னை நிறைய பாதித்தது. அவர் எழுதிய ’டேபிள் டென்னிஸ்’ குறும் புதினம், நான் சந்தித்த முதல் அதிர்ச்சி எழுத்தாகும்.

 

தன் எழுத்தாலும் அன்பான நட்பாலும் அறிவார்ந்த சிந்தனையாலும் என்னைக் கவர்ந்த கோபிகிருஷ்ணன்,
நடைமுறை வாழ்வின் ஒவ்வாமையால், நக்கீரனில் இருந்தும் ஒரு நாள் விடைபெற்றார். போகும் போது வெகு நேரம் என் கைகளைப் பற்றிக்கொண்டு இறுக்கமான மெளனத்தில் இருந்தார். அதன் பின் இரண்டு அஞ்சலட்டைகள் எழுதினார். பின்னர் அவர் பற்றிய செய்திகள் எதுவும் இல்லை.


அவரைப் பார்க்கவும் எனக்கு வாய்க்கவில்லை. 2003-ல் ஒருநாள் அவர் மறைந்த செய்தி சற்றுத் தாமதமாக வந்தது. அன்று இரவு, ஊதுபத்திகளைக் கொளுத்திவைத்துக் கொண்டு ஒரு பித்தனைப் போல் அந்த புகைமண்டலத்தில் வெகுநேரம் உட்கார்ந்திருந்தேன்.


கோபிகிருஷ்ணனின் எழுத்து வன்மையையையும் திறனையும் அறிந்தவர்கள் சிலர்தான். பிரபல எழுத்தாளர்கள் பலராலும் நேசிக்கப்பட்ட கோபிகிருஷ்ணன், புகழ் வெளிச்சத்திற்கு வராமலே போய்ச்சேர்ந்துவிட்டார்.

 

வாழும் போது நூறு ரூபாய்க்கும் இரு நூறு ரூபாய்க்கும் அல்லாடக் கூடியவராக அவரை வாழ்க்கை வைத்திருந்தது. இன்று அவர் எழுதிய சிறுகதைத் தொகுப்பொன்றின் விலை 800 ரூபாய் என்று பார்த்தபோது, காலத்தின் விளையாட்டு புரிந்தது.

 

கோபி சாரின் அந்த மனம் வருடும்  புன்னகை இப்போதும் என் நினைவில் அப்படியே உறைந்து போயிருக்கிறது.

 

Next Story

ஆளுநர் மாளிகை சம்பவம்; கூடுதல் ஆணையர் விளக்கம்

Published on 25/10/2023 | Edited on 25/10/2023

 

Governor's House incident; Additional Commissioner Explanation

 

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகை வாயில் முன்பு பெட்ரோல் குண்டு வீசிய பிரபல ரவுடியை போலீசார் கைது செய்துள்ளனர்.

 

சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்தவர் பிரபல ரவுடியான கருக்கா வினோத். இவர் பாட்டிலில் பெட்ரோல் ஊற்றி அதைப் பற்ற வைத்து ஆளுநர் மாளிகையின் முகப்பு வாயிலில் வீசி இருக்கிறார். அடுத்தடுத்து இரண்டு பாட்டில்களை வீசியதாகக் கூறப்படுகிறது. உடனடியாக அங்கு இருந்த பாதுகாப்பு போலீசார் விரைந்து சென்று கருக்கா வினோத்தை பிடித்து கைது செய்து, கிண்டி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

 

முதற்கட்ட விசாரணையில், கருக்கா வினோத் தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் ஏற்கனவே பெட்ரோல் குண்டு வீசி சிறை சென்றுள்ளார். ஓராண்டாக சிறையில் இருந்த நிலையில், விடுதலை செய்ய ஆளுநர் ஒப்புதல் அளிக்கவில்லை. அதன் காரணமாக ஆத்திரத்தில் தற்போது மீண்டும் ஆளுநர் மாளிகையின் மீது பெட்ரோல் குண்டு வீசியதாக வாக்குமூலத்தில் தெரிவித்துள்ளார். இந்த பெட்ரோல் குண்டு வீச்சுக்கு இதுதான் உண்மை காரணமா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் அவர் மொத்தமாக நான்கு பெட்ரோல் நிரப்பிய பாட்டில்களைக் கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. சரித்திரப் பதிவேடு குற்றவாளியாகவும், ஏ பிளஸ் குற்றவாளியாக கருக்கா வினோத் இருந்துள்ளார்.

 

ஆளுநர் மாளிகை வாசலில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்நிலையில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட இடத்தில் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டு மாதிரிகள் சேகரித்து எடுத்துச் செல்லப்பட்டது.

 

Governor's House incident; Additional Commissioner Explanation

 

தொடர்ந்து சென்னை தெற்கு கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கமளித்தார். ஆளுநர் மாளிகைக்கு முன் வைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்பு மீது பெட்ரோல் குண்டு விழுந்துள்ளது. மது போதையில் தவறுதலாக ரவுடி கருக்கா வினோத் பெட்ரோல் குண்டு வீசியதாகக் கூறியுள்ளார். பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. கைது செய்யப்பட்ட கருக்கா வினோத் மீது ஏற்கனவே 7 வழக்குகள் நிலுவையில் உள்ளதாகத் தெரிவித்தார்.

 

 

Next Story

'வீட்டு கடனை கட்டவில்லை' - நிதிநிறுவன ஊழியர் செய்த செயலால் அதிர்ச்சி

Published on 05/10/2023 | Edited on 05/10/2023

 

'Didn't Pay the Purchased Loan'-Shocked by the Action of the Financial Institution Employee

 

தனியார் நிதி நிறுவன ஊழியர் ஒருவர் 'வீட்டுக் கடனை கட்டவில்லை' என பெரிய எழுத்துக்களில் பெயிண்டில் எழுதி வைத்துவிட்டு சென்ற சம்பவம் தேனியில் நிகழ்ந்துள்ளது.

 

தேனி மாவட்டம் அன்னை இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்த பிரபு என்பவர் கூலித்தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் தன்னுடைய வீட்டை அடைமானம் வைத்து மூன்று லட்ச ரூபாய் கடனாக பெற்றதாகக் கூறப்படுகிறது. கொரோனா காலத்தில் ஏற்பட்ட நெருக்கடி சூழல் காரணமாக ஒன்பது மாதமாக கடன் தவணையைக் கட்ட முடியாமல் இருந்துள்ளார். கடனைத் திருப்பி செலுத்துவதற்கான காலக்கெடு மேலும் 9 மாதங்கள் நீட்டிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து முறையாக வாங்கிய கடனை பிரபு செலுத்தி வந்துள்ளார்.

 

கடந்த செப்டம்பர் மாதமே முழு கடன் தொகையும் கட்டியதாக பிரபு தரப்பில் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து கடன் தொகையை கட்டியதால் வீட்டு பத்திரம் வேண்டும் என கேட்டுள்ளார். அப்பொழுது பிரபுவின் வீட்டிற்கு வந்த தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் கடனை செலுத்தவில்லை எனக்கூறி இரண்டு பேர் இருசக்கர வாகனங்களை எடுத்துச் சென்றுள்ளனர். இதனால் அதிருப்தியடைந்த பிரபு காவல் துறையினருக்கு புகார் கொடுத்து இருசக்கர வாகனங்களை மீட்டுள்ளார்.

 

இதனால் ஆத்திரமடைந்த நிதி நிறுவன ஊழியர்கள் 'போலீசில் புகார் கொடுத்து எங்களை அசிங்கப்படுத்தி விட்டாய். உன்னை சும்மா விடமாட்டோம்' என மிரட்டிவிட்டு சென்றுள்ளனர். இந்நிலையில் நேற்று தனியார் நிதி நிறுவனத்தைச் சேர்ந்த ஊழியர் மகேந்திரபிரபு மது போதையில் பிரபுவின் வீட்டிற்குச் சென்று ஸ்பிரே பெயிண்ட் மூலம் 'வெரிடாஸ்' நிறுவனத்தில் கடன் பெற்ற வீட்டு கடன் கட்டவில்லை' என சுவரில் எழுதியுள்ளார். இது குறித்து வீட்டு உரிமையாளர் பிரபு கேட்டபோது 'அப்படித்தான் செய்வேன்' என்று மிரட்டல் தொனியில் பேசியதாக பிரபு தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.