Skip to main content

எங்கு தொடங்கி எங்கு வந்திருக்கிறார்... மோடியின் தேர்தல் பயணம்!

Published on 23/05/2019 | Edited on 23/05/2019

நரேந்திர மோடி, கடந்த 2014ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் வெற்றி பெற்று பிரதமராகினார். அதற்கு முன்பாக மோடி குஜராத்தில் 13 வருடங்கள் ஆட்சி செய்திருக்கிறார். 2001ஆம் ஆண்டில் அப்போது பாஜகவில் செல்வாக்கு மிக்கவராக இருந்த எல்.கே.அத்வானி மோடியை குஜராத் மற்றும் ஹிமாச்சல பிரதேச மாநிலங்களில் தேர்தல் பிரச்சாரத்தை கவனித்துக்கொள்ளுமாறு கூறி பொறுப்பாளராக நியமித்தார். 
 

narendra modi

 

 

நரேந்திர மோடியின் செயல்திறன் அவரை கவர்ந்தது. 2001ஆம் ஆண்டு குஜராத்தில் நடந்த பாஜக ஆட்சி பாஜக தலைமைக்கு அதிருப்தியை உண்டாக்க, அந்த ஆண்டில் அக்டோபர் 7ஆம் தேதி  நரேந்திர மோடி முதன் முறையாக குஜராத்தின் இடைக்கால முதலமைச்சராக பாஜகவால் தேர்வு செய்யப்பட்டார். 2002ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி மணிநகர் சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இதுதான் முதன் முறையாக நரேந்திர மோடி தேர்தலில் போட்டியிட்டது, வெற்றி பெற்றது.
 

அடுத்து 22ஆம் தேதி டிசம்பர் 2002ஆம் ஆண்டு நடந்த குஜராத் சட்டமன்ற தேர்தலில் மணிநகரில் போட்டியிட்ட நரேந்திர மோடி வெற்றி பெற்று இரண்டாவது முறையாக குஜராத் முதலமைச்சராக பதவியேற்றார். 2007ஆம் ஆண்டு நடைபெற்ற குஜராத் சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட்ட மோடி வெற்றிபெற்று மூன்றாவது முறையாக குஜராத்தின் முதலமைச்சரானார். இதையடுத்து 2012அம் ஆண்டு குஜராத் சட்டமன்ற தேர்தலிலும் போட்டியிட்டவர் நான்காவது முறையாக முதலமைச்சராகினார். குஜராத்தின் வளர்ச்சி பிம்பம் இந்தியா முழுவதும் மோடியை அறியச் செய்தது. இதனால் பாஜகவால் பிரதமர் வேட்பாளராகத் தேர்வு செய்யப்பட்டார் மோடி. முதல்வர் பதவியை ராஜினாமா செய்து 2014 மக்களவை தேர்தலில் போட்டியிட்டார். 
 

பாஜகவின் பிரதமர் வேட்பாளராக களமிறக்கப்பட்டவர் வாரணாசி மற்றும் வதோதரா ஆகிய மக்களவை தொகுதிகளில் போட்டியிட்டார். வாரணாசியில் மோடியை எதிர்த்து ஆம் ஆத்மியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் போட்டியிட்டார். ஆனால், அவர் படுதோல்வியடைந்தார். 2019 தேர்தலில் வாரணாசியில் வெற்றியை நோக்கி வேகமாக சென்றுகொண்டிருக்கிறார். மீண்டும் பிரதமராக பதிவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

 

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

பிரதமர் மோடிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்!

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Election Commission notice to Prime Minister Modi

ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாரா பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, ''நாட்டின் சொத்தில் இஸ்லாமியர்களுக்கே முதல் அதிகாரம் என்று காங்கிரஸ் ஆட்சியில் சொன்னார்கள். இதனால் இந்துக்களின் சொத்துகள் போகிறது. இந்துக்களின் பணத்தை எடுத்து இஸ்லாமியர்களுக்கு கொடுக்க நினைக்கிறது காங்கிரஸ். இதன் பொருள் அவர்கள் இந்தச் செல்வத்தை அதிக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கும், ஊடுருவல்காரர்களுக்கும் பகிர்ந்தளிப்பார்கள்.

நீங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம் ஊடுருவல்காரர்களுக்கு செல்ல வேண்டுமா? இதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பெண்கள் வைத்திருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அந்தச் செல்வத்தை பங்கீடு செய்வோம் என்று காங்கிரஸின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. மன்மோகன் சிங் தலைமையிலான அரசு, முஸ்லீம்களுக்கு செல்வத்தில் முதல் உரிமை உண்டு என்று கூறியது. இந்த நகர்ப்புற நக்சல் சிந்தனை என் தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் மாங்கல்யத்தைக் கூட விட்டுவைக்காது.." எனச் சர்ச்சையாக பேசினார். இஸ்லாமியர்கள் ஊடுருவல்காரர்கள் என நாட்டின் பிரதமர் மோடி பேசிய பேச்சுக்கு நாடு முழுவதும் பலத்த கண்டனம் எழுந்து வருகிறது.

முன்னதாக பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்திருந்தனர். அந்த மனுவில், ‘சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்நிலையில் தேர்தல் பரப்புரையில் மதத்தை தொடர்புபடுத்தி பேசியதாக பிரதமர் மோடிக்கு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77 கீழ் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதாவது பாஜக தலைவர் ஜேபி நட்டாவிற்கு அனுப்பட்டுள்ள இந்த நோட்டீஸில் வரும் 29 ஆம் தேதி காலை 11 மணிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவிடப்பட்டுளது. அதே போன்று பாஜக அளித்த புகாரில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்திக்கும் தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. மேலும் அரசியல் கட்சிகள் தங்கள் வேட்பாளர்கள், குறிப்பாக நட்சத்திர பேச்சாளர்களின் பேச்சு அதிக பொறுப்புடன் இருக்க வேண்டும். உயர் பதவிகளில் இருப்பவர்களின் பிரச்சார உரைகள் மிகவும் கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.