Skip to main content

மோடி, சீன அதிபர் சந்திப்பின் முழுப் பின்னணி...வெளிவராத அதிர்ச்சி தகவல்! 

Published on 14/10/2019 | Edited on 14/10/2019

"இப்படி ஒவ்வொரு நாட்டுத் தலைவர்களும் வந்தால் தமிழகம் சுத்தமாகிவிடும்' என்று நீதிமன்றம் சொல்லக்கூடிய அளவுக்கு, சென்னை டூ மாமல்லபுரத்தையே புரட்டிப் போட்டிருக்கிறது சீன அதிபர் ஜி ஜின்பெங்- இந்திய பிரதமர் மோடி விசிட். சீன அதிபருக்காக சென்னை விமான நிலையம், அங்கிருந்து கிண்டி ஐ.டி.சி. ஓட்டல் செல்லும் வழி, அதன் தொடர்ச்சியாக மாமல்லபுரம் வழியிலான ஈ.சி.ஆர்., ஓ.எம்.ஆர். சாலைகள் எல்லாம் பளபளக்க, பல்லவர் கால கலைநகரமான மாமல்லபுரம், நேற்றுதான் வடிவமைக்கப் பட்டதுபோல பாலீஷ் செய்யப்பட்டிருந்தது. ஆச்சரியமூட்டும் அலங்காரத்தை சென்னை வாசிகள் வாய்பிளந்து பார்த்தனர். சாக்கடை அடைத்துக்கொண்டால் கார்ப்பரேஷன் ஆட்கள் வர நாட்கணக்கில் ஆகும் மாநகரத்தில், மேம்பாலத்தின் கீழ் உள்ள சிமெண்ட் தூண்களும் அலங்கார விளக்குகளால் ஜொலித்தன. 10 நொடியில் 100 கி.மீ பயணிக்கும் சீன அதிபரின் கார் வியாழனன்றே வந்திறங்க, ஆச்சரியம் கூடியது.

 

meeting



இந்த ஆச்சரியத்துக்கு நடுவே கெடுபிடிகளுக்கும் அடாவடிகளுக்கும் பஞ்சமில்லை. ஓ.எம்.ஆர். சாலையில் போக்குவரத்து முடக்கப்பட்டு, சாஃப்ட்வேர் நிறுவனத்தினர் வீட்டிலிருந்தே வேலை செய்ய பணிக்கப்பட்டனர். சென்னையில் படிக்கும் திபெத் மாணவ-மாணவியர் பாலின வேறுபாடின்றி போலீஸ் கஸ்டடியில் சிக்கித் தவித்தனர். சென்னைப் பல்கலைக்கழக பேராசிரியர் ராமுமணிவண்ணன் வழக்கறிஞர்களோடு நேரில்சென்று போலீசாருடன் வாக்குவாதம் செய்தபிறகு, உத்தரவாதத்துடன் மாணவர்களை விடுவித்தது காவல்துறை. முதல்வரில் தொடங்கி தமிழக அரசின் மொத்த நிர்வாகமும் சீன அதிபர் வருகையில் மட்டுமே முழு கவனம் செலுத்தியது. இப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த வருகைக்கும், இந்தியப் பிரதமருடனான சீன அதிபரின் சந்திப்புக்கும் என்ன காரணம், விவாதப் பொருள் என்ன, மாமல்லபுரத்தைத் தேர்வு செய்தது ஏன் என்பது பற்றி வெளியுறவுத்துறை மூச்சு விடவில்லை.


இது பற்றி விசாரித்தபோது, "இரு வருடங்களுக்கு (2017) முன்பு இந்தியா-சீனா எல்லைப் பகுதியான டோக்லாமில் இரு நாடுகளும் தங்களது ராணுவத்தை குவித்தன. போர் பதட்டம் ஏற்பட்டு, படைகள் விலக்கிக் கொள்ளப்பட்ட நிலையில், 2018-ல் சீனாவில் உள்ள ஹூபெய் நகரில் ஷி ஜின்பெங்கை சந்தித்து எல்லைக்கோடு குறித்து பேச்சு வார்த்தை நடத்தினார் மோடி. அதில் முழுமையான உடன்பாடு எட்டப்படாத நிலையில் இந்தியாவுக்கு வருமாறு ஜின்பெங்கை அழைத்தார் மோடி. அந்த அழைப்பின்படியே இந்தியா வந்துள்ளார் சீன அதிபர். சந்திப்புக்காக மாமல்லபுரத்தை தேர்வு செய்ததும் சீன அதிபர்தான்'' என்கிறார்கள் டெல்லி சோர்ஸ்கள்.

இந்திய-சீன உறவு குறித்து பல வரலாற்று நிகழ்வுகளை ஆய்வு செய்து வரும் தி.மு.க.வின் செய்தித் தொடர்பு செயலாளர் வழக்கறிஞர் கே.எஸ்.ராதாகிருஷ்ணன், "வரலாற்று ரீதியாகப் பார்த்தால் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த போதிதர்மர் சீனாவின் ஆதர்சபுருஷராக இருக்கிறார். கடந்த 1956-ல் சீனாவின் பிரதமராக இருந்த சூஎன்லாய் இரண்டுநாள் பயணமாக தமிழகம் வந்தவர், மாமல்லபுரத்திற்கும் விசிட் அடித்தார். மாமல்லபுரத்திற்கும் புத்தமதத்திற்குமுள்ள தொடர்புகளை குறிப்பு எடுத்துக்கொண்டவர் சூஎன்லாய். அதன் பாதிப்பில் தற்போதைய சீன அதிபரும் மாமல்லபுரத்தை தேர்வு செய்திருக்கலாம்'' என்கிறார்.

"சமீபகாலமாக தமிழகத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து பேசி வரும் பிரதமர் மோடி, அதன் ஒரு முகமாகவே ஜி ஜின்பெங்கின் விருப்பத்தை ஏற்றுக் கொண்டார்'' என்கிறார்கள் டெல்லி தரப்பினர். மேலும் விசாரித்தபோது, ""காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து வழங்கும் 370வது சட்டப்பிரிவை நீக்கிய விவகாரத்தில் சீனாவின் நிலைப்பாடு இந்தியாவுக்கு எதிராக இருந்தது. இந்தியாவுக்கு சீன அதிபர் செல்வது உறுதியானதும், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், அவசரம் அவசரமாக சீனாவுக்கு பறந்தார். இரண்டு நாட்கள் ஜி ஜின்பெங்குடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனையடுத்து, ‘ஐ.நா.பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களின் படியும், இரு நாடுகளுக்குள் ஏற்பட்ட ஒப்பந்தங்களின்படியும் காஷ்மீர் விவகாரம் முறையாக தீர்க்கப்படவேண்டும். சூழலை கடினமாக்கும் ஒரு தரப்பு நடவடிக்கையை சீனா எதிர்க்கிறது’ என இந்தியாவுக்கு மெசேஜ் சொன்னது சீனா. காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தானின் அதிகார உரிமைகளை பாதுகாக்க சீனா ஆதரவு தெரிவிக்கும் என வெளிப்படையாகவே சொன்னார் ஜி ஜின்பெங். இதனை எதிர்த்து பதிலடி தந்தது இந்திய வெளியுறவுத்துறை. இப்படிப்பட்ட சூழலில்தான் சீனா அதிபருடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார் மோடி'' என்கிறார்கள் வரலாற்றுப் பேராசிரியர்கள்.

இந்த பேச்சுவார்த்தையில், இரு நாடுகளுக்கிடையேயுள்ள எல்லைக்கோடு தகராறுகள், வர்த்தகத்திலுள்ள முரண்பாடுகள், காஷ்மீர் விவகாரம் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் விவாதிக்கப்பட்டிருக்கின்றன.
 

Next Story

“பாபாசாகேப் அம்பேத்கரே வலியுறுத்தினாலும் அது நடக்காது” - பிரதமர் மோடி

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
PM Modi says Even if Babasaheb Ambedkar insists it will not happen

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

அந்த வகையில், மொத்தம் 11 மக்களவைத் தொகுதிகள் கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில், முதற்கட்டமாக கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்று முடிந்தது. இதையடுத்து, மீதமுள்ள தொகுதிகளுக்கு ஏப்ரல் 26 மற்றும் மே 7ஆம் தேதி என இரண்டு கட்டமாக தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த மாநிலத்தில், காங்கிரஸ், பா.ஜ.க, பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்ட பல அரசியல் கட்சிகள் போட்டியிடுகின்றன. அதுமட்டுமல்லாமல், வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற நோக்கத்துடன் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், சத்தீஸ்கர் மாநிலம், ஜஞ்கிர் பகுதியில் பா.ஜ.க சார்பில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், “காங்கிரஸ் தலைவர்கள் தங்களை ராமர் என்று கருதி, ராமர் கோயிலில் பிரதிஷ்டை செய்ய அழைப்பை மறுத்தனர். இது சத்தீஸ்கருக்கு அவமரியாதை இல்லையா? இது ராமரின் தாய்வழி வீடு.  காங்கிரஸ் திருப்திப்படுத்தும் அரசியல் செய்து கொண்டே இருக்கிறது, அது அவர்களின் டி.என்.ஏவில் உள்ளது.

திருப்திப்படுத்தும் அரசியலுக்காக பட்டியலினத்தவர்கள், ஏழைகள் மற்றும் பழங்குடிகளின் உரிமைகளைப் பறிக்க அவர்கள் தயங்க மாட்டார்கள். எங்கள் முன்னுரிமை ஏழைகள், இளைஞர்கள், பெண்கள். தேர்தல் நெருங்கும் போதெல்லாம், காங்கிரஸ் தலைவர்கள் பழைய வரிகளையே திரும்பத் திரும்பச் சொல்கிறார்கள். பா.ஜ.க ஆட்சிக்கு வந்து அரசியல் சாசனத்தை முடிவுக்கு கொண்டு வந்து இட ஒதுக்கீட்டை ஒழிக்கும் என்று சொல்கிறார்கள். எவ்வளவு காலம் பொய் சொல்லிக்கொண்டே இருப்பீர்கள்?. 

அரசியலமைப்பை யாராலும் மாற்ற முடியாது. டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர் வந்து அதை வலியுறுத்தினாலும் அது நடக்காது. மோடியின் தலையை உடைப்போம் என்று காங்கிரஸ் கட்சியினர் கூறுகிறார்கள். என் நாட்டின் தாய், சகோதரிகள் என்னுடன் இருக்கும் வரை மோடியை யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. இந்தத் தாய்மார்கள் மற்றும் சகோதரிகள்” என்று கூறினார். 

Next Story

பிரான்ஸ் வீரர்களுக்கு தற்காப்புக்கலைகளை கற்றுக்கொடுக்கும் தமிழக வீரர்கள்

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Tamil Nadu players teaching martial arts to French players

மாமல்லபுரத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் சர்வதேச மஞ்சூரியா குங்ஃபூ தற்காப்புக் கலையின் சார்பில் இந்தோ பிரான்ஸ் தற்காப்புக் கலை சிறப்பு பயிற்சி முகாம் பிரான்ஸில் நடைபெற்று வருகிறது.

பிரான்ஸ் நாட்டின் ஃபெவ்ரி நகரில் மாஸ்டர் ஷி ஷிஃபூ மேத்யூ  தலைமையில் ஏப்ரல் 22 துவங்கி 28 வரை 7 நாட்கள் நடைபெற்று வரும் இந்தச் சிறப்பு பயிற்சி முகாமில் கல்பாக்கம் அணுபுரத்தைச் சேர்ந்த மாஸ்டர் சந்தோஷ், திண்டுக்கல் மாவட்டம் பழனி நாகூரைச் சேர்ந்த யோகா மாஸ்டர் பிரகாஷ் ஆகிய இருவரும், பிரான்ஸ் நாட்டு வீரர்களுக்கு  குங்ஃபூ தற்காப்புக் கலை, தெக்கன் களரி சிலம்பக்கலை, பதஞ்சலி ஹத யோகா, ஆகியவற்றை கற்பித்து வருகின்றார்கள். நேற்று யோகா குறித்து விளக்கம் அளித்து அதை செய்தும் காண்பித்துள்ளார்கள்.