Skip to main content

தவறாக கணித்த அமித்ஷா, மோடி... பாஜகவிற்கு செக் வைக்கும் அரசியல் மூவ்... வீழ்த்திய சரத் பவார்!

Published on 02/12/2019 | Edited on 02/12/2019

"அரசியல் சாணக்கியர்' என வர்ணிக்கப்பட்ட அமித்ஷாவின் திட்டங்கள் மகாராஷ்டிராவில் நிர்மூலமாக்கப்பட்டுள்ளன. மோடி- அமித்ஷாவுக்கு எதிராக தேசிய அளவில் எதிர்க் கட்சிகள் ஒன்றிணையாத சூழலில், மகாராஷ்ட்ராவில் ஏற்பட்டுள்ள திருப்பங்கள் அந்த ஒற்றுமையை இனி கொண்டுவரும் என்கிறார்கள் சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸார்.
 

politics


மகாராஷ்ட்ராவில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் இணைந்த கூட்டணியை ஆட்சி அமைக்க விடாமல் தடுக்க ஜனாதிபதி ஆட்சியையும் அதன்பிறகு பா.ஜ.க.வின் ஆட்சியையும் அமல்படுத்தினார் பிரதமர் மோடி. இது, தேசம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகள் தொடர்ந்த வழக்கும், நீதிபதிகள் கொடுத்த உத்தரவும் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தாமலே முதல்வர் தேவேந்திர பட்னாவிஸும், துணைமுதல்வர் அஜித்பவாரும் பதவியை ராஜினாமா செய்தார்கள்.

 

film


இதனால், சட்டமன்ற ஜனநாயகம் மீண்டும் உயிர்ப்பித்தது. சிவசேனா தலைவர் உத்தவ்தாக்கரே தலைமையிலான, மாநிலத்துக்கான மேம்பாட்டு முன்னணி ‘தங்களது கூட்டணி ஆட்சியை அமைத்தது. மகாராஷ்ட்ரா முதல்வராக பதவியேற்றார் உத்தவ்தாக்கரே. இந்த விழாவில் கலந்துகொள்ள தி.மு.க., திரிணாமுல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி, ராஷ்ட்ரிய ஜனதாதளம், தெலுங்கு தேசம், சி.பி.ஐ., சி.பி.எம். உள்ளிட்ட பா.ஜ.க.வுக்கு எதிரான அனைத்துக் கட்சிகளையும் அழைத்திருந்தார் தாக்கரே. ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் அவரை வாழ்த்தியிருக்கின்றன. விழாவில் கலந்துகொள்ள மும்பை சென்றார் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின். மாநில கட்சிகளின் தலைவர்கள் பலரும் விழாவில் பங்கேற்றனர்.
 

politics



இது குறித்து தி.மு.க. எம்.பி. டி.கே.எஸ். இளங்கோவனிடம் பேசியபோது, "மோடி அமித்ஷாவின் அதிகாரமும் திட்டமும் பா.ஜ.க.வின் இறுமாப்பும் மகாராஷ்ட்ராவில் வீழ்த்தப்பட்டிருக்கிறது. எதிர்க்கட்சிகள் ஒன்றிணைவதற்கு உத்தவ்தாக்கரேவின் பதவியேற்பு விழா அச்சாரமாக இருக்கும்'' என்கிறார். சோனியாவும் ராகுல்காந்தியும் தனது பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள வேண்டுமென விரும்பிய தாக்கரே, சோனியாவை தொடர்பு கொண்டு பேசினார். அந்த பேச்சு 20 நிமிடங்கள் நீடித்திருக்கிறது.

அது குறித்து நாம் விசாரித்தபோது, "தனது அமைச்சரவையை பற்றி சோனியாவிடம் விவரித்திருந்தார் தாக்கரே. அப்போது, "பா.ஜ.க.வோடு இணைந்து இதுவரை ஆட்சி செய்தீர்கள். யாரை எதிர்த்து நீங்கள் மக்களிடம் வாக்கு சேகரித்தீர்களோ அவர்களோடு இணைந்து முதன் முதலாக உங்கள் தலைமையில் தற்போது ஆட்சி அமைக்கிறீர்கள். அதனால், பா.ஜ.க. ஆட்சியை போலில்லாமல் சிறந்த ஆட்சியை மக்களுக்கு கொடுங்கள்' என சொல்லியிருக்கிறார் சோனியா. அவரது அட்வைஸை ஏற்றுக்கொண்ட தாக்கரே, கடந்த கால நிகழ்வுகள் குறித்து வருத்தமான குரலில் பேசியதுடன் "ஒரு நல்ல ஆட்சியை மராத்தாவில் நிலை நிறுத்துவேன், பா.ஜ.க.வின் துரோகத்தை மக்களிடம் அம்பலப்படுத்துவதும் எனது கடமை' என்றிருக்கிறார். மேலும், "பா.ஜ.க.வுக்கு எதிரான எதிர்க்கட்சிகளிடம் ஒற்றுமையை ஏற்படுத்துவதும் முக்கிய பொறுப்பாக உணர்கிறேன்' எனவும் சொல்லியுள்ளார் அவர்'' என்கிறார்கள் தங்களின் காங்கிரஸ் மேலிடத்தோடு தொடர்புடைய தமிழக காங்கிரஸ் எம்.பி.க்கள்.


முதல்வர் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ளும் கட்சிகளின் தலைவர்களுக்கு சிறப்பான வரவேற்பு அளிப்பதுடன் அவர்களுடன் தனித்தனியாக கலந்துரையாடவும் ஏற்பாடு செய்தார் தாக்கரே. குறிப்பாக, நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கும் தி.மு.க.வின் தலைவர் ஸ்டாலினின் வருகை மிக முக்கியமானது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.


மேலும், எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையை மோடியும் அமித்ஷாவும் உற்றுக் கவனிக்கத் துவங்கியிருப்பதாகச் சொல்லும் அரசியல் ஆய்வாளர்கள், அறுபது ஆண்டுகால அரசியல் சாணக்கியரான சரத்பவாரின் மூவ்களை மோடியும் அமித்ஷாவும் தவறாக எடை போட்டதும், அஜித் பவாரின் பின்னணி பலத்தை யோசிக்காமல் அதிகம் நம்பியதும் பா.ஜ.க.வின் சறுக்கல்களுக்கு முக்கிய காரணம் என்கிறார்கள்.

ஜனாதிபதி ஆட்சியை கொண்டு வந்ததும், அது நள்ளிரவில் விலக்கிக்கொள்ளப்பட்டதும் அவசரம் அவசரமாக தேவேந்திரபட்னாவிஸை முதல்வராக பதவியேற்க வைத்ததும், தேசியவாத காங்கிரசை உடைக்க நினைத்த முயற்சியும் மோடி, அமித்ஷாவின் வியூகங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தியதுடன் ஒட்டுமொத்த எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வழி வகுத்திருக்கிறது. அத்துடன், அஜித் பவார் மீதான ஊழல் வழக்குகளும் வாபஸ் ஆகியுள்ளன.

இதற்கிடையே, சிவசேனாவின் அடிப்படை கொள்கைகளுக்கு முற்றிலும் மாறுபட்ட காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் கூட்டணி ஆட்சி அமைத்திருக்கும் தாக்கரேவுக்கு ஆட்சியை சுமுகமாக நடத்திச் செல்வது பெரிய சவால்தான். வலிமையான அரசியல் அனுபவம் கொண்ட சரத்பவாரை சமாளித்து ஆட்சியை நகர்த்துவதில் இருக்கிறது தாக்கரேவின் அரசியல். அதனால், தங்களின் ராஜதந்திரம் தோற்றுப் போனதில் அப்செட்டான மோடியும் அமித்ஷாவும், தாக்கரே தலைமையிலான கூட்டணி ஆட்சி முறையின் அடுத்த கட்டத்தை கவனித்து அதற்கேற்ப காய்களை நகர்த்த காத்திருக்கிறார்கள். கர்நாடகாவில் பதுங்கி பாய்ந்தது போல மகாராஷ்ட்ராவுக்கும் காலம் வரும் என காத்திருக்கிறது பா.ஜ.க. தலைமை!


 

 

Next Story

“இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வி பெறும்” - பா.ஜ.க அமைச்சரின் வைரல் பேச்சு

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

7 கட்டங்களாக நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி முதற்கட்ட வாக்குப்பதிவு 102 தொகுதிகளில் முடிந்துள்ளது. 2வது கட்ட வாக்குப்பதிவு, ராஜஸ்தான் உள்ளிட்ட 88 தொகுதிகளில் வரும் ஏப்ரல் 26ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

முன்னதாக, ராஜஸ்தானில் மொத்தமுள்ள 25 மக்களவைத் தொகுதிகளில் 12 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற்றது. அடுத்து உள்ள 13 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை (24-04-24) முடிவடைந்தது.

இந்த நிலையில், இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியடையும் என்று பா.ஜ.க அமைச்சர் ஒருவர் பேசியது தொடர்பான வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வெளியாகி பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

BJP minister's viral speech BJP will lose to India alliance in rajasthan

ராஜஸ்தான் மாநிலத்தில் முதல்வர் பஜன் லால் ஷர்மா தலைமையில் பா.ஜ.க ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வர் பஜன் லால் ஷர்மா அமைச்சரவையில் மருத்துவத் துறை அமைச்சராக கஜேந்திர சிங் பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில், பா.ஜ.க அமைச்சர் கஜேந்திர சிங் தனது ஆதரவாளர்களுடன் பேசியது தொடர்பாக வைரலான வீடியோவில், “முதற்கட்ட தேர்தலில் நாம் மோசமாக செயல்பட்டுள்ளோம். நாகௌர் மக்களவைத் தொகுதியில் இந்தியா கூட்டணியிடம் பா.ஜ.க தோல்வியைத் தழுவும். நமது வாக்காளர்கள் வெளியே வரவில்லை. மற்ற இடங்களையும் இழக்கலாம்” என்று கூறியதாக சொல்லப்படுகிறது. இது பா.ஜ.க தரப்பில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story

“தேர்தல் அறிக்கையை விளக்க வேண்டும்” - பிரதமரை சந்திக்க நேரம் கேட்ட கார்கே

Published on 25/04/2024 | Edited on 25/04/2024
Kharge asked for time to meet PM for Election report should be explained

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று முன்தினம் (19.04.2024) தொடங்கி வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதனையடுத்து, மக்களவைத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 89 தொகுதிகளில் நாளை (26-04-24) நடைபெறவிருக்கிறது. இதற்கான இறுதிக்கட்ட தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிவடைந்தது. இதற்கிடையே, இந்தத் தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. அந்தத் தேர்தல் அறிக்கை மூலம் காங்கிரஸ் பலரின் கவனத்தையும் தங்கள் பக்கம் ஈர்த்துள்ளது.

அதே வேளையில், இந்தத் தேர்தல் அறிக்கையை பிரதமர் மோடி கடுமையாக விமர்சனம் செய்து சர்ச்சையாக பேசியிருந்தார். இது தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜஸ்தானில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்கு கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது. இதற்கு, காங்கிரஸ் உள்பட எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும், பிரதமர் மோடிக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது. 

Kharge asked for time to meet PM for Election report should be explained

இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் அவர், “பிரதமர் பயன்படுத்திய மொழியால் அதிர்ச்சியோ ஆச்சரியமோ இல்லை. முதல் கட்டத் தேர்தலில் பா.ஜ.க.வின் மோசமான செயல்பாட்டைப் பார்த்து நீங்களும், உங்கள் கட்சியைச் சேர்ந்த மற்ற தலைவர்களும் இப்படிப் பேசத் தொடங்குவீர்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. சூழலில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு சில வார்த்தைகளைப் பற்றிக் கொள்வதும், வகுப்புவாத பிளவை உருவாக்குவதும் உங்கள் வழக்கமாகிவிட்டது. . தாழ்த்தப்பட்ட ஏழைகள் மற்றும் அவர்களின் உரிமைகள் பற்றி காங்கிரஸ் பேசி வருகிறது. ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள் மீது உங்களுக்கும் உங்கள் அரசாங்கத்திற்கும், எந்த அக்கறையும் இல்லை என்பதை நாங்கள் அறிவோம்.

உங்கள் அரசாங்கம், கார்ப்பரேட் நிறுவனங்களுக்காக வேலை செய்கிறது. நீங்கள் வரிகளைக் குறைத்தீர்கள், அதே நேரத்தில் சம்பளம் பெறும் வர்க்கம் அதிக வரிகளை செலுத்துகிறது. உணவு மற்றும் உப்புக்கு கூட ஏழைகள் ஜி.எஸ்.டி செலுத்துகிறார்கள். மேலும், பணக்கார கார்ப்பரேட், ஜி.எஸ்.டி பணத்தைத் திரும்பக் கோருகின்றனர். அதனால்தான், பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான சமத்துவமின்மையைப் பற்றி நாங்கள் பேசும்போது, நீங்கள் அதை இந்து மற்றும் இஸ்லாமியர்களுடன் வேண்டுமென்றே சமன் செய்கிறீர்கள். 

எங்களின் தேர்தல் அறிக்கை இந்திய மக்களுக்கானது. அவர்கள் இந்துவாக இருந்தாலும், இஸ்லாமியராகவும் இருந்தாலும், கிறிஸ்தவராக இருந்தாலும், சீக்கியராக இருந்தாலும், ஜெயின் அல்லது பௌத்தராக இருந்தாலும் சரி. சுதந்திரத்திற்கு முந்தைய உங்களின் கூட்டாளிகளான முஸ்லிம் லீக் மற்றும் காலனி ஆதிக்கவாதிகளை நீங்கள் இன்னும் மறக்கவில்லை என்று நினைக்கிறேன்.

எங்களின் தேர்தல் அறிக்கையில் கூட எழுதப்படாத விஷயங்கள் குறித்து உங்கள் ஆலோசகர்களால் உங்களுக்கு தவறான தகவல் கொடுக்கப்படுகிறது. பிரதமராக நீங்கள் பொய்யான அறிக்கைகளை வெளியிட வேண்டாம் என்பதற்காக எங்கள் தேர்தல் அறிக்கையை விளக்குவதற்காக உங்களை நேரில் சந்திக்க இருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.