Skip to main content

எம்.எல்.ஏ. சீட்! எதிர்க்கும் இளைஞர்கள்! - திமுக சீனியர்கள் அதிர்ச்சி!

Published on 01/03/2021 | Edited on 01/03/2021

 

ddd

 

அறிவாலயத்தில் 17ம் தேதி தொடங்கிய விருப்ப மனு வாங்கும் நிகழ்வின் முதல் 4 நாட்களிலேயே 4,200-க்கும் அதிகமான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. பாதிக்கும் மேற்பட்டோர் அந்தந்த நாட்களிலேயே பூர்த்திசெய்து ஒப்படைத்தனர். ஒவ்வொரு தொகுதியிலும் சீட் கேட்கும் உடன்பிறப்புகளின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், விருப்பமனு தருவதற்கு பிப்ரவரி 28 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது.

 

பலரும் தங்களுக்காக பணம் கட்டுவதுடன் மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி பெயரிலும் பணம் கட்டுகின்றனர். இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதினர் சீட் கேட்கும் ஆர்வமும் எண்ணிக்கையும் இந்தமுறை அதிகரித்திருக்கிறது. தி.மு.க.வின் பொதுச்செயலாளர் துரைமுருகன், எட்டாவது முறையாக மீண்டும் காட்பாடியில் போட்டியிட திட்டமிட்டுள்ளார். அவரது வயதைக் குறிக்கும் வகையில் 83 பேர் அவருக்காக மனு போட தயாராகியுள்ளனர்.

 

அதே நேரத்தில், 83 வயதாகும் அவர் இந்தமுறை போட்டியிடாமல் இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும் என மாவட்ட தி.மு.க.வினர் கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சமீபத்தில் கடிதம் எழுதியிருந்தனர். அத்துடன் 25 இளைஞர்கள் காட்பாடி சீட் கேட்டு விண்ணப்பித்திருப்பதையறிந்து அதிர்ச்சியடைந்த துரைமுருகன் தரப்பு, இளைஞர்களை சமாதானப்படுத்தும் முயற்சியை எடுத்துள்ளது.
 

dmk

 

அதேபோல, நெல்லை கிழக்கு மாவட்டச் செயலாளரும் முன்னாள் சபாநாயகரும் கட்சியின் மூத்த தலைவருமான ஆவுடையப்பன், அம்பாசமுத்திரம் தொகுதியில் களமிறங்க முடிவு செய்துள்ள நிலையில், தி.மு.க.வின் இளம் தொழிலதிபரான அஜய்படையப்ப சேதுபதியும் குறிவைத்திருப்பதை ஐ-பேக் மட்டுமின்றி, மாநில உளவுத்துறையும் கவனித்திருந்தது. இந்த நிலையில், கொளத்தூரில் மு.க.ஸ்டாலினும், ஆயிரம் விளக்கில் உதயநிதியும் போட்டியிட வேண்டும் என பணம் கட்டியுள்ள அஜய்சேதுபதி, அம்பாசமுத்திரத்திற்காக மனு கொடுத்திருக்கிறார். இது, ஆவுடையப்பனுக்கும் அவரது ஆதரவாளர்களுக்கும் கவலையைக் கொடுத்துள்ளது.

 

நெல்லை மாவட்டத்திலுள்ள ராதாபுரம் தொகுதியில் 2016 தேர்தலில் போட்டியிட்டு 98 வாக்குகள் வித்தியாசத்தில் அ.தி.மு.க.வின் இன்பதுரையிடம் தோல்வியடைந்த தி.மு.க.வின் அப்பாவு, இன்பதுரைக்கு எதிராக போட்ட வழக்கு இன்னும் நிலுவையில் இருக்கிறது. மீண்டும் இத்தொகுதியில் போட்டியிட அப்பாவு திட்டமிட்டிருந்தாலும், கடந்த 6 மாதமாக ராதாபுரம் தொகுதியை வலம் வந்து, மக்களுடன் நெருக்கமாக இருக்கும் வீனஸ் வீர அரசும் காய்களை நகர்த்தி, விருப்ப மனுவும் தாக்கல் செய்துவிட்டார்.

 

கோவையின் சூலூர் தொகுதிவாசியான முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமிக்கு உள்ளேயும் வெளியேயும் எதிர்ப்பு கடுமையாக இருக்கிறது. புதியவர்களும் இளைஞர்களும் சூலூரைக் குறிவைப்பதால், இடம் மாறி சிங்காநல்லூரைப் பிடிக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார். ஆனால், சிங்காநல்லூரின் சிட்டிங் எம்.எல்.ஏ.வான இளைஞர் கார்த்திக்கு மக்களிடம் நல்ல பெயர். இவரிடமிருந்து தொகுதியைக் கைப்பற்ற பழனிச்சாமியால் முடியாது என்கின்றனர் அறிவாலயத் தரப்பினர்.

 

அதேபோல, பொள்ளாச்சியைப் பிடிக்க மாவட்டப் பொறுப்பாளர் தென்றல் செல்வராஜ், தொகுதியில் இரண்டுமுறை வேட்பாளராகி தோற்றுப்போன தமிழ்மணி, நகரப் பொறுப்பாளர் டாக்டர் வரதராஜன், வடக்கு ஒ.செ. மருதவேல், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சபரி கார்த்திகேயன் ஆகியோரிடையே பந்தயம் விறுவிறுப்பாகியிருக்கிறது. தமிழ்மணி இரண்டுமுறையும், அவரது தந்தை ராஜு மூன்றுமுறையும் என இத்தொகுதியில் ஒரே குடும்பத்துக்கு 5 முறை வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. மீண்டும் தமிழ்மணிக்கு வாய்ப்பு எனில் கட்சியில் அதிருப்தி அதிகமாகும் என்கிறார்கள்.

 

தென்றல் செல்வராஜுக்கு ஆதரவு இருக்கும் அளவிற்கு, எதிர்ப்பும் இருக்கிறது. டாக்டர் வரதராஜனுக்கு, சாதி, வசதி வாய்ப்புகள் அனைத்தும் சாதகமாக இருந்தாலும், தென்றல் செல்வராஜின் ஆதரவாளர்களின் எதிர்ப்பு அதிகம். சீனியர்களைப் புறந்தள்ளி உதயநிதி மூலம் தொகுதியைக் கைப்பற்றும் பகீரத முயற்சியில் இருக்கிறார் சபரிகார்த்திகேயன். ஆனால், அவரது தாத்தா நெகமம் கந்தசாமி, எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் திமுகவுக்கு கொடுத்த நெருக்கடிகள் இவருக்கு எதிரான சலசலப்பை உண்டாக்குகின்றன.

 

வடக்கு ஒன்றியச் செயலாளர் மருதவேல், அறிவாலயத்தில் கோலோச்சும் ஆர்.எஸ்.பாரதி உள்ளிட்ட சிலரின் தயவால் தொகுதியில் வாய்ப்பு பெற முயற்சித்துள்ளார். ஆனால், கேரளாவிலிருந்து வந்த மருத்துவ கழிவுகளைக் கொட்டச் செய்ததில் அவரது பெயர் மக்களிடம் எதிர்மறையாக உள்ளது. இளைஞரான மன்றாம்பாளையம் மகேந்திரன் சீட் கேட்பது சீனியர்களை அதிர வைக்கிறது.

 

இப்படி தமிழகம் முழுவதும் சீனியர்களை எதிர்க்கும் இளைஞர்கள், சீட் கேட்டு விருப்ப மனுக்கள் மூலமாக அறிவாலயத்தின் கதவுகளைத் தட்டி வருகிறார்கள்.

 

 

Next Story

“என்ன எல்லாரும் பளபளன்னு இருக்கீங்க... ஆயிரம் ரூபாய் வந்துடுச்சா” - கதிர் ஆனந்த் பிரச்சாரம்

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
Kathir Anand campaign in Vellore

வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பரதராமி, கல்லப்பாடி, கொண்டசமுத்திரம்,  பி.கே.புரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வேலூர் பாராளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் பிரச்சாரம் மேற்கொண்டார்

அப்போது பேசிய கதிர் ஆனந்த், ட்ரைவர் வண்டி மேல இருக்க ஹெட் லைட் எல்லாம் ஆஃப் பண்ணுப்பா. என் மூஞ்சு தெரியமாட்டுதாம் என்று கூற, உடனடியாக ட்ரைவரும் லைட் ஆஃப் பண்ண, மக்களை பார்த்து இப்போது எனது முகம் தெளிவாக தெரிகிறதா? என்று கேட்டார். அதற்கு மக்களும் தொண்டர்களும் தெரியுது தெரியுது என்று சிரித்துக்கொண்டே கூற தனது பேச்சைத் தொடங்கினார்.

அந்த கலகலப்பு குறையாமல் இருக்க மக்களைப் பார்த்து, என்ன எல்லாரும் பல பளபளன்னு இருக்கீங்க... எல்லாம் ஃபுல்லா மேக்கப் போட்டு வந்து இருக்கீங்களா... ஃபேரன் லவ்லி, ஸ்டிக்கர் பொட்டு எல்லாம் போட்டு ஜம்முன்னு வந்திருக்கீங்களா... என்று கேட்க கூட்டத்தில் இருந்தவர்கள் சிரிக்க ஆரம்பிக்க, அதைவிட உங்க முகத்தை பார்க்கும் போது ஒரு புன்னகை, சந்தோஷம் தெரிகிறது.

நான் வந்தவுடனே சீதாராமன் கிட்ட கேட்டேன், “என்னாங்க எல்லார் மத்திலயும் ஒரு சந்தோஷம் இருக்குதே என்னா காரணம்னு கேட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு எல்லாருக்கும் மாசம் மாசம் ரூ. 1000 பணம் கொடுக்குறாங்களாம். அதான் எல்லாரும் ஹாப்பியா இருக்காங்களாமானு சொன்னாரு...’ என்ன உண்மையா அது? என்று பெண்களை பார்த்து கேட்க, அவர்களும் ஆம் என்று கூச்சலிட்டனர். அப்பொழுது சிலர் இன்னும் எங்களுக்கு வரவில்லை என கூறினர். அதற்கு இந்த தேர்தல் முடிந்தவுடன் அனைவருக்கும் கலைஞர் மகளிர் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று  மக்களிடையே தனது கலகலப்பான பேச்சை தொடர்ந்து பிரச்சாரம் மேற்கொண்டார்.

இருப்பினும், ஃபேரன் லவ்லி போட்டீங்களா? பொட்டு வச்சீங்களா? பளபளன்னு இருக்கீங்க என கதிர் ஆனந்த் கேட்டது பெண்களிடம் முகச்சுழிப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை எதிர்க்கட்சிகள், பெண்களை கொச்சைப்படுத்தி பேசுகிறார் வேட்பாளர். இது மேட்டிமைத்தனம், ஆயிரம் ரூபாய் இல்லை என்றால் பெண்கள் என்ன பொட்டு வைக்கக் கூடாதா? தங்களை அழகுபடுத்திக் கொள்ளக் கூடாதா? எனக் கேள்வி எழுப்பி விமர்சனம் செய்து வருகின்றனர்.

Next Story

கமல்ஹாசனை சந்தித்த டி.ஆர். பாலு

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
TR Balu met Kamal Haasan

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

நேற்று வேட்புமனு தாக்கல் முடிந்த நிலையில், இன்று வேட்புமனு பரிசீலனை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் திமுக கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ள கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், இந்த தேர்தலில் இந்தியா கூட்டணியை ஆதரித்து தமிழகத்தில் பிரச்சாரம் செய்யும் எனக் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார் .

திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள விசிக கட்சியின் தலைவர் திருமாவளவன் நடிகர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து தங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டிருந்தார். தற்போது ஸ்ரீபெரும்புதூர் திமுக நாடாளுமன்ற வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள டி.ஆர்.பாலுவும், அமைச்சர் சேகர்பாபுவும் ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைமை அலுவலகத்திற்குச் சென்றனர். இந்த சந்திப்பில் நடிகர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்க வேண்டும் எனக் கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.