Skip to main content

EPS மகனைப்போலவே தனது மகனையும் கொண்டுவர முயற்சி! அமைச்சரின் குடும்ப அரசியல்! குட்டி விமானத்தில் ஆட்டம்போடும் மகன்!

Published on 17/09/2020 | Edited on 17/09/2020

 

DDDD

 

அடுத்தடுத்து மாணவர்களின் உயிரைப் பறித்துக் கொண்டிருக்கிறது நீட். அமைச்சரின் மகனான அந்த மாணவரோ ஆஸ்திரேலியாவில் தனது நண்பர்களுடன் கூத்தடித்து கொண்டிருப்பதை இன்ஸ்டாகிராமில் படமாக வெளியிட்டு கொண்டாடிக் கொண்டிருக்கிறார்.

 

22 வயதாகும் இவர், அமைச்சர் வேலுமணியின் மகன். சுகுணா மில்ஸில் வேலை பார்த்து சொந்த வீடும் ஒரு ஏக்கர் நிலமும் கொண்டிருந்த பழனிசாமியின் பேரன். பழனிசாமி தனது மகன்கள் அன்பரசன், வேலுமணி, செந்தில் ஆகியோருடன் எளிமையான நடுத்தர வாழ்வு வாழ்ந்து வந்தார். வேலுமணி நல்ல உயரம். சினிமாவில் நடிக்க விரும்பி, கோடம்பாக்கத்தில் சுற்றிவிட்டு கோவைக்குத் திரும்பியபோது, மில் தொழிலாளியான பழனிசாமி, தனது அண்ணா தொழிற் சங்கம் மூலம் அமைச்சர் தாமோதரனிடம் வேலுமணியை வேலைக்கு சேர்த்துவிட்டார்.

 

வேலுமணியின் விசுவாசத்தால், ஒப்பந்த வேலைகளில் சிலவற்றை மேற்பார்வையிட அனுமதி கொடுத்தார் தாமோதரன். அப்புறம் என்ன அதிரடிப்படை அமாவாசை தான். தனது நண்பரான கே.சி.பி. நிறுவனத்தினர் மூலம் ஒப்பந்ததாரர் ஆனார். முன்னாள் மேயர் செ.ம. வேலுச்சாமி, சசிகலா உறவினர் ராவணன் எல்லாருக்கும் நெருக்கமாகி, எம்.எல்.ஏ. சீட் வாங்கி, 2001ல் அமைச்சர் பதவியும் பெற்றுவிட்டார். திடீரென அமைச்சர் பதவியை ஜெ. பறித்து விட, பின்னர் கோவை வந்த ஜெ.வின் கார் டயரை ஜெயா டி.வி. கேமராமேன் சிபாரிசில் தொட்டுக் கும்பிட்டு, செ.ம.வேலுச்சாமியின் மா.செ. பதவியை வாங்கினார். 2011, 2016 என அமைச்சர் பதவிகளை வகித்தவர், ஜெ மறைவுக்குப் பிறகு, தனது தொண்டா முத்தூர் தொகுதிக்குள் ஆசிரமம் நடத்தும் ஜக்கிக்கு நெருக்கமானார்.

 

மத்திய அரசுடன் நேரடி தொடர்பு வைத்திருக்கும் ஜக்கி, வேலுமணியை தமிழகத்தின் அடுத்த முதல்வர் என்கிற ரேஞ்சுக்கு டெல்லியில் காய் நகர்த்துகிறார். வேலுமணி உயர, அவரது மகனும் உயர்ந்தார். நெதர்லாந்தில் இருந்த செந்தில்தான் வேலுமணி குடும்பத்தில் முதன்முதலில் அந்நிய மண்ணை தொட்டவர். வேலுமணி அமைச்சரான பிறகு அவரையும் இந்தியாவிற்கு வரவழைத்து அவருக்கு தனியாக கோவை மதுக்கரை ஒன்றியத்திற்கு உட்பட்ட திருமலையம்பாளையம், பாலத்துறை, ஆகிய பகுதிகளில் மூன்று பிரமாண்ட கல்குவாரிகளை உருவாக்கி கொடுத்து கேரளாவிற்கு சட்ட விரோதமாக எம்-சேண்ட் மற்றும் கற்களை கொண்டு போகும் தொழிலை ஒப்படைத்தார்.

 

சூயஸ் என்கிற பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நிறுவனம் கோவையில் குடிநீர் விநியோகத்தை மேற்கொள்ள வந்தது. இந்த சூயஸ் நிறுவனம் ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னி நகரில் குடிநீர் விநியோகம் மற்றும் கழிவுநீர் மேலாண்மையை மேற்கொள்கிறது. இதை பார்க்க சென்றதுதான் வேலுமணியின் முதல் வெளிநாட்டு பயணம், முதல்வர் எடப்பாடி வெளிநாட்டிற்கு சென்றபோது வேலுமணி ஆஸ்திரேலியாவிற்கு சென்றார். அவருடன் அவர் மகன் விகாஸும் சென்றிருந்தார். எடப்பாடியின் மகன் மிதுன் எடப்பாடியின் வியாபார நடவடிக்கைகளை ஒருங்கிணைப்பதை பார்த்த வேலுமணி தனது மகன் விகாஸையும் மிதுனைப் போல கொண்டுவர முடிவு செய்தார்.

 

எஞ்சினியரிங் படித்துக் கொண்டே பொள்ளாச்சி ஜெயராமன் மகனுடன் நட்பு வட்டாரத்தில் சுற்றிவந்த விகாஸை கொரோனோ பாதிப்புகள் தமிழகத்தில் அதிகமானபோது, பாதிப்பு அதிகமில்லாத ஆஸ்திரேலியாவுக்கு அனுப்பி வைத்தார் வேலுமணி. சூயஸ் கம்பெனி தயவுடன் ஆஸ்திரேலியாவில் தனது நண்பர்களுடன் கலக்கி கொண்டிருக்கிறார் விகாஸ்.

 

ddd

 

ஆஸ்திரேலியாவில் சுற்றித்திரிவதெற்கென தனியாக குட்டி விமானம் ஒன்று ஏற்பாடு செய்து தரப்பட்டுள்ளது. விமானம் மட்டுமல்ல ஹெலிகாப்டர், ஜீப் என பயணம் செய்து ஸ்விமிங்பூல் பீச், என ஜாலியாக பொழுதை போக்கிக்கொண்டே வேலுமணியின் வியாபார நடவடிக்கைகளையும் கவனித்து கொண்டிருக்கிறார் விகாஸ். ஆஸ்திரேலியாவில் அவர் நடத்தும் களியாட்டாங்கள் இன்ஸ்டாகிராமில் வெளியாகி கோவை உள்பட தமிழகத்தை கலக்கி கொண்டிருக்கின்றன.

 

Ad

 

தனது அண்ணன் அன்பரசனை தொண்டாமுத்தூர் தொகுதி எம்.எல்.ஏ. ஆகவும் தனது தம்பி செந்திலை கிணத்துக்கடவு தொகுதி எம்.எல்.ஏ ஆகவும் தான் சூலூர் தொகுதியிலும் போட்டியிட திட்டமிட்டுள்ள வேலுமணி, தனது மகனை அரசியல்-வணிகத் தொடர்புகளுக்குத் தயார் படுத்துகிறார். தனது இளம்வயது சினிமா கனவை விகாஸை நடிகராக்கி நிறைவேற்றி, உதயநிதி போல அரசியலுக்கு கொண்டுவரவும் திட்டம் உள்ளதாம்.

 

வேலுமணி குடும்பத்தினரின் அபார வளர்ச்சியும், விகாஸின் ஆடம்பரமும் கோவை அ.தி.மு.கவினரை கடுப்பாக்கியுள்ளது. இதுபற்றி கருத்தறிய விகாஸ் வேலுமணியின் இன்ஸ்டா கிராமைத் தொடர்புகொள்ள நுழைய முயன்றோம். விகாஸ் அதை ஒரு தனிப்பட்ட பக்கமாக மாற்றிவிட்டார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை மற்றவர்கள் பார்க்கக்கூடாது என தடுத்துள்ளார். இதுபற்றி வேலுமணியின் கருத்தை அறிய அவரது தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டோம். அவர் நமக்கு பதில் அளிக்கவில்லை.

 

-தாமேதரன் பிரகாஷ், சிவா

 

 

Next Story

மத்திய அமைச்சர் மீது ஆர்.எஸ்.பாரதி புகார்

Published on 20/03/2024 | Edited on 20/03/2024
RS Bharati complains against Union Minister Shoba

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள ஒயிட்ஃபீல்ட் 80 அடி சாலை என்ற இடத்தில் ராமேஸ்வரம் கஃபே என்ற பிரபல உணவகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. கடந்த 1 ஆம் தேதி (01.03.2024) பிற்பகல் 01.05 மணியளவில் திடீரென யாரும் எதிர்பாராத வேளையில் அடுத்தடுத்து இரண்டு முறை மர்மப் பொருள் வெடித்தது. இந்த வெடி விபத்தில் மொத்தம் 10க்கும்  மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். இந்த வெடி விபத்தின் முதற்கட்ட விசாரணையில், இது சிலிண்டர் வெடிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அதே சமயம் வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில், தடயவியல் நிபுணர்கள் குழு தடயங்களைச் சேகரித்து ஆய்வு நடத்தினர். பின்னர் அது திட்டமிடப்பட்ட குண்டு வெடிப்பு என்பது உறுதி செய்யப்பட்டது.இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு (N.I.A.) மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது

இத்தகைய சூழலில் மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேவில் நடந்த வெடிகுண்டு சம்பவம் தமிழகத்தில் இருந்து வந்தவர்களால் தான் நடைபெற்றது” எனத் தெரிவித்திருந்தார். இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. மேலும், மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலஜேயின் இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அமைச்சரின் பேச்சுக்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

RS Bharati complains against Union Minister Shoba

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், அ.தி.மு..க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மத்திய இணை அமைச்சரின் பேச்சுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். நாடாளுமன்றத் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்குள் உள்ளது.  சர்ச்சைக்குரிய மற்றும் பிளவுபடுத்தும் கருத்துக்களை அரசியல் தலைவர்கள் பேசக்கூடாது என ஏற்கெனவே தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், மத்திய இணை அமைச்சரின் பேச்சு கடும் கண்டனங்களைப் பெற்றுள்ள நிலையில், இரு மாநிலங்களுக்கு இடையே கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாகவும், தமிழ்நாட்டு மக்களை இழிவுபடுத்தியதாகவும்  திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மத்திய இணை அமைச்சர் ஷோபா கரந்தலஜே மீது தேர்தல் ஆணையத்தில் புகார் மனு கொடுத்துள்ளார்.

Next Story

பொன்முடி விவகாரம்; ஆளுநர் ஆர்.என். ரவி முதல்வருக்கு பரபரப்பு கடிதம்!

Published on 17/03/2024 | Edited on 17/03/2024
Ponmudi Affair Governor RN Ravi letter to Chief Minister

2006 முதல் 2011 ஆம் ஆண்டு வரையிலான தி.மு.க. ஆட்சியில் கல்வித்துறை மற்றும் கனிம வளத்துறை அமைச்சராக பொன்முடி பதவி வகித்து வந்தார். அப்போது வருமானத்திற்கு அதிகமாக 1.75 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கடந்த 2011 ஆம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர். அந்த வழக்கில் அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மனைவி விசாலாட்சி, மணிவண்ணன் உள்ளிட்ட மூவரும் குற்றம் சாட்டப்பட்டனர். இந்த வழக்கை விசாரித்த எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் மூவரையும் விடுவித்து உத்தரவிட்டிருந்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து 2016 ஆம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்தது. உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட இந்த மேல் முறையீட்டு மனு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது.

அதனைத் தொடர்ந்து கொடுக்கப்பட்ட தண்டனை உத்தரவில், பொன்முடி அவரது மனைவி விசாலாட்சி ஆகியோருக்கு மூன்றாண்டுகள் சிறைத் தண்டனை, தலா 50 லட்சம் அபராதம் விதித்து நீதிபதி ஜெயச்சந்திரன் உத்தரவிட்டார். மேலும் மேல்முறையீடு செய்வதற்காக 30 நாட்களுக்கு தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த தண்டனையை எதிர்த்து முன்னாள் அமைச்சர் பொன்முடி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம் பொன்முடிக்கு வழங்கப்பட்ட மூன்றாண்டு சிறைத் தண்டனைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. முன்னதாக சிறைத் தண்டனை விதிக்கப்பட்டிருந்ததால் பொன்முடியின் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டிருந்தது. இதனால் அவரது தொகுதியான திருக்கோவிலூர் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

Ponmudi Affair Governor RN Ravi letter to Chief Minister

பொன்முடி குற்றவாளி என்ற தீர்ப்பை நிறுத்தி வைத்த உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகல் உச்சநீதிமன்ற இணையதளத்தில் வெளியானது. இதனையடுத்து திருக்கோவிலூர் தொகுதி காலி என்ற அறிவிப்பை சட்டப்பேரவை செயலகம் திரும்பப் பெற்றது. இதனையடுத்து பொன்முடியை அமைச்சராக மீண்டும் நியமிக்க தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த 13 ஆம் தேதி (13.03.2024) கடிதம் எழுதி இருந்தார். அதில், நாளைக்குள் (14.03.2024) பொன்முடிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க கோரிக்கை விடுத்து உச்சநீதிமன்ற தீர்ப்பின் நகலை கடிதத்துடன் இணைத்து பொன்முடியை அமைச்சராகப் பதவியேற்க தனது பரிந்துரையைத் தெரிவித்திருந்தார்.

Ponmudi Affair Governor RN Ravi letter to Chief Minister

இந்த சூழலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி ஏற்கனவே திட்டமிட்டபடி கடந்த 14 ஆம் தேதி (14.03.2024) காலை 06.30 மணிக்கு சென்னையில் இருந்து இண்டிகோ விமானம் மூலம் டெல்லி புறப்பட்டு சென்றார். இந்நிலையில் பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க இயலாது என முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு ஆளுநர் ஆர்.என். ரவி பதில் கடிதம் எழுதியுள்ளார். அதில், “பொன்முடி வழக்கில் உச்சநீதிமன்றம் தண்டனையைத்தான் நிறுத்தி வைத்துள்ளது. அவரை குற்றவாளி இல்லை என்று தீர்ப்பளிக்கவில்லை. திருக்கோவிலூர் தொகுதிக்கு சட்டமன்ற உறுப்பினர் இல்லாமல் இருக்கக் கூடாது என்பதற்காக இந்த தீர்ப்பை வழங்கியிருக்கலாம்” எனத் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.