Skip to main content

அண்ணா, கலைஞர் உள்ளிட்ட தலைவர்கள் பேச்சை உரக்க கேட்க செய்த ‘மைக் செட்’ மணிகுண்டுவின் நினைவுகள்..! 

Published on 24/07/2021 | Edited on 30/07/2021

 

Mic set Manikandan who offers mic to DMK Leaders

 

தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக திராவிட இயக்கம் தோன்றியபோது கிராமம் கிராமமாகச் சென்று பொதுக்கூட்டங்களை நடத்தி இயக்கத்தை வளர்த்தார்கள். அன்றைய பொதுக் கூட்டங்களுக்குத் துண்டு பிரசுரம் வெளியானால் 25 கி.மீ தூரத்திற்கு அப்பால் இருந்தும் வந்துவிடுவார்கள் பொதுமக்கள். பொதுக்கூட்டங்களில் தலைவர்களின் பேச்சைக் கேட்க அத்தனை ஆர்வம். விடிய விடிய பேசினாலும் இருந்து கேட்பார்கள். (இப்போது பொதுக்கூட்டத்திற்குப் பணமும் குவாட்டரும் கோழிப் பிரியாணியும் கொடுத்து வாகனங்கள் மூலம் கூட்டம் சேர்த்தாலும் சிறிது நேரம்தான்.)

 

அந்த சமயங்களில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், நாவலர், பேராசியர் என பல தலைவர்கள் செல்லாத கிராமங்களும் இல்லை; அவர்களின் பேச்சைக் கேட்காத மக்களும் இல்லை. இந்தத் தலைவர்களில் பலர் பேசிய மைக்கை இன்றுவரை பாதுகாப்பாக வைத்திருக்கிறார் வடகாடு ‘மைக்செட்’ மணிகுண்டு. 

 

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு கிராமத்தைச் சேர்ந்த 74 வயதான ‘மைக்செட்’ மணிகுண்டு, தீவிர திமுககாரர். தனது 16 வயதில் தொடங்கியதுமுதல் இன்றுவரை மைக்செட் கடை வைத்து நடத்திவருகிறார். அண்ணா, கலைஞர், எம்.ஜி.ஆர், நாவலர், பேராசிரியர், எஸ்.எஸ்.ஆர் ஆகியோர் பேசிய மைக்கை, தான் இன்னும் பாதுகாப்பாக வைத்திருப்பதாக கூறியவர் மேலும் நம்மிடம்.. “1963இல் மைக்செட் வாங்கினேன். தொடர்ந்து நாடகங்களுக்கு ஓட்டுவேன். பிறகு எந்த ஊர்ல அரசியல் பொதுக்கூட்டம் நடந்தாலும் என்னை அழைப்பாங்க. அப்படித்தான் வெட்டன் விடுதியில பள்ளிக்கூடம் திறப்பு விழாவுக்கு அண்ணா வந்தார். அப்ப, வேற ஒருத்தர் மைக் செட் கட்டியிருந்தார். அவர், நல்ல மைக் இல்லை; வேற வேணும்னு கேட்டார். அப்பதான் அமெரிக்கா தயாரிப்புல ‘குண்டு மைக்’ ஒன்றை 135 ரூபாய்க்கு வாங்கி வச்சிருந்தேன். 10 அடிக்கு அந்தப் பக்கம் இருந்து பேசினாலும் கினீர்னு கேட்கும். 

 

Mic set Manikandan who offers mic to DMK Leaders

 

அண்ணா பேசுகிறார் என்றதும் அந்த மைக்கை கொண்டு போனேன். அதில் பேசினவர், “மைக் நல்லா இருக்கு”னு பாராட்டினார். அதேபோல, வடகாடு சுற்றியுள்ள கிராமங்கள்ல கலைஞர் பேசினப்பவும், வடகாடு அரச மரத்தடியில எம்.ஜி.ஆர், அப்பறம் நாவலர், பேராசிரியர் எல்லாருக்கும் இதே குண்டு மைக்தான். அதேபோல, வடகாடு முத்துமாரியம்மன் கோயில் திருவிழாவுல முதல்முறையா நாகூர் ஹனிபாவை பாட அழைத்தோம். (அப்ப திமுக - காங்கிரஸ் எதிர் எதிர் முனையா இருந்த காலம்) ‘கோயில் திருவிழாவுல நான் வந்து என்ன பாடுறது’ன்னு கேட்டார். ‘திமுகவுக்காக பாடிய பாடல்களைப் பாடுங்க’ன்னு சொல்லி அழைத்து வந்தோம். 

 

ஒரு இஸ்லாமியர், இந்து கோயில் திருவிழாவுல என்ன பாடப் போறார்னு சுற்றியுள்ள கிராம மக்கள் திரண்டு வந்தாங்க. கார், சைக்கிள் போட இடமில்லை. கட்சிக்காக பாடிய பாடல்களைப் பாடப்பாட கைதட்டல் அதிகமானது. கடைசியில திமுக - காங்கிரஸ் தேர்தல் போட்டி பற்றி பாடி முடிச்சுட்டு, இந்தக் குண்டு மைக்கை உருவி முத்தம் கொடுத்துட்டு என்னையும் பாராட்டிட்டுப் போனார். 

 

அதேபோல ஒரு நாடகத்தில் என் மைக்செட் நல்லா இருந்ததைப் பார்த்து நெடுவாசல்காரங்க அவங்க ஊர் பள்ளிக்கூடம் கட்ட நிதி திரட்ட எஸ்.எஸ்.ஆரை வச்சு நாடகம் நடத்த என்னை மைக்செட் போட அழைச்சாங்க. 6 மைக் வேணும்னு எஸ்.எஸ்.ஆர் சொன்னதால, 6இல் ஒன்று இந்தக் குண்டு மைக் வச்சோம். முதல்ல அவரே வந்து ஹலோ ஹலோனு டெஸ்ட் பண்ணாம கனைச்சுப் பார்த்தார். இந்தக் குண்டு மைக் சத்தம் கூட இருந்ததால இதுதான் எனக்கு வேணும்னு அதில் பேசி நாடகத்தில் நடிச்சவர், அடுத்தமுறை வடகாடு கூட்டத்துக்கு வந்தவர், மேடையில இருந்து என் மைக்கை பார்த்துட்டு அவருக்கு கொண்டு வந்த டீயை, ‘முதல்ல கீழ இருக்கிற மைக்செட் காரருக்கு குடுத்துட்டு வா’ன்னு சொன்னார். 

 

Mic set Manikandan who offers mic to DMK Leaders

 

இப்படி பல பேரோட பாராட்டுகளை வாங்கிக் கொடுத்த இந்தக் குண்டு மைக்கை இப்பவரை வச்சு பாதுகாக்கிறேன். ஆல் ரவுண்ட் மைக்-க்கு இணையான மைக் இந்தக் குண்டு மைக். முன்ன மாதிரி இப்ப யாரு பொதுக் கூட்டத்துல பேசுறாங்க. அவங்க பேசுறதைக் கேட்க யாரு போறாங்க தம்பி. போனாலும் கொஞ்ச நேரம் நின்னுட்டு போயிடுறாங்க. இல்லன்னா செல்ஃபோனைப் பார்த்துட்டு போறாங்க. இப்ப எனக்கு வயசானாலும் மைக் செட் வச்சிருக்கேன். இதைப் பாதுகாப்பதைப் பெருமையாக நினைக்கிறேன்” என்றார்.

 

இதுபோன்ற திமுக முன்னோடிகளால்தான் திமுக வளர்ந்தது. இப்ப அந்த வயதான திமுக தூண்களைக் கண்டுக்காம இருப்பதுதான் வேதனை என்கிறார்கள் மைக் செட் மணிகுண்டு பகுதியினர். 

 

 

Next Story

'வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உத்தரவாதம்'-முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns


18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் களைகட்டி வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அந்த வகையில் ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் பிரதமர் மோடி நேற்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, “காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் தாய்மார்கள் மற்றும் மகள்கள் வைத்திருக்கும் தங்கம் கணக்கீடு செய்யப்பட்டு பங்கீடு செய்யப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. முன்பு காங்கிரஸ் ஆட்சி காலத்தின் போது நாட்டின் உடைமைகளில் இஸ்லாமியர்களுக்கு முன்னுரிமை இருக்கிறது என்று கூறினார்கள். அப்படியென்றால் யாருக்கு உங்கள் வளங்கள் போகப்போகிறது?. நாட்டில் ஊடுருவி வருபவர்களுக்கும், அதிக குழந்தைகளைப் பெற்றெடுப்பவர்களுக்கும், மக்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த செல்வத்தை காங்கிரஸ் கட்சி பங்கிட்டுக் கொடுத்துவிடும்.

அதாவது, காங்கிரஸ் கட்சியினர் இந்தியாவுக்குள் ஊடுருவிய, அதிக குழந்தைகள் பெற்றுக் கொண்டவர்களுக்கு சொத்துகளை வழங்குவோம் என்கிறார்கள். நீங்கள் கடினமாக உழைத்து சேர்த்த சொத்தை அவர்களுக்குக் கொடுக்க ஒப்புக்கொள்ளப் போகிறீர்களா?” எனப் பேசினார். பிரதமரின் இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையானது.

பிரதமர் மோடியின் இத்தகைய வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் அபிஷேக் மனு சிங்வி, சல்மான் குர்ஷித், குர்தீப் சத்பால் ஆகியோர் தேர்தல் ஆணையத்திற்கு நேரில் சென்று புகார் மனு அளித்துள்ளனர். சமூகங்களுக்கு இடையே வெறுப்பை பரப்பும் வகையில் பேசிவரும் பிரதமர் மோடி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

'Hatred and discrimination is Modi's guarantee'- CM Stalin condemns

இந்நிலையில் பிரதமர் மோடியின் பேச்சுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். 'பிரதமர் மோடியின் நச்சு பேச்சு கேவலமானது, மிகவும் வருந்தத்தக்கது. மக்களின் கோபத்திற்கு அஞ்சி மத உணர்வுகளைத் தூண்டி வெறுப்பு பேச்சை நாடி உள்ளார் பிரதமர் மோடி. பிரதமரின் அப்பட்டமான வெறுப்பு பேச்சுக்கு தேர்தல் ஆணையம் நடுநிலைமையைக் கைவிட்டு விட்டது. வெறுப்பும் பாகுபாடும் தான் மோடியின் உண்மையான உத்தரவாதம்' என  தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.

Next Story

'கலைஞரின் பிறந்தநாள் பரிசாக தேர்தல் முடிவு இருக்கும்'-துரை வைகோ நம்பிக்கை

Published on 20/04/2024 | Edited on 20/04/2024
'The result of the election will be an kalaingar's birthday gift' - Durai Vaiko believes

உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான இந்திய நாட்டின் 18-ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக நேற்று (19-04-24) தொடங்கி ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், புதுச்சேரியில் உள்ள ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும் நேற்று(19-04-24) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. பதற்றமான வாக்குச்சாவடிகளில்  பல அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெற்று முடிந்தது.

இந்நிலையில் சென்னை எழும்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்த மதிமுகவின் திருச்சி வேட்பாளர் துரை வைகோ பேசுகையில், ''தமிழகத் தேர்தல் முடிவுகள் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பிறந்தநாள் பரிசாக இருக்கும். தனக்காக பரப்புரை செய்த தமிழக அமைச்சர்கள் மற்றும் தோழமை, கூட்டணி கட்சியினருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள்.

இது ஜனநாயகத்திற்காக, மக்கள் நல அரசியலுக்காக மக்கள் ஆதரவளிக்க வேண்டும் என்பதற்கான தேர்தல். அதேவேளையில் மத அரசியல் புரிந்து மக்களை பிளவுபடுத்தும் ஜாதி, மத அரசியலுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்பதுதான் தேர்தல் பரப்புரையாக இருந்தது. இந்தத் தேர்தலை பொறுத்தவரை புதுவை உட்பட 40 தொகுதிகளிலும் இந்தியா கூட்டணி ஒரு மிகப்பெரிய வெற்றியைப் பெறும். ஜூன் நான்காம் தேதி தேர்தல் முடிவுகள் வரும் பொழுது கலைஞரின் 101 வது பிறந்தநாள் பரிசாக நமது முதல்வர் மு.க.ஸ்டாலினுக்குத் தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புகிறேன்'' என்றார்.