Skip to main content

"பன்னீர்செல்வத்தின் ஆர்எஸ்எஸ் பின்னணி... எடப்பாடி பழனிசாமியின் சசிகலா எதிர்ப்பு.." - கொதிக்கும் எம்ஜிஆர் வல்லரசு!

Published on 24/12/2021 | Edited on 24/12/2021

 

jkl

 

அதிமுக பொதுக்கூட்டங்களில் யார் இருக்கிறார்களோ இல்லையோ அங்கு யாராவது ஒருவர் எம்ஜிஆர் வேஷம் போட்டிருப்பார்கள். ஆனால், அவர்கள் எம்ஜிஆர் வேஷம் போட்டிருப்பதை நம்மால் எளிதாகக் கண்டுபிடித்துவிட முடியும். ஆனால் அசல் எம்ஜிஆரை போலவே வேஷம் போட்டு கட்சிக்காரர்களை ஆச்சரியப்படுத்துபவர் எம்ஜிஆர் வல்லரசு. அவரிடம், "உங்களைப் பார்த்தால் எம்ஜிஆர் வேஷம் போட்ட மாதிரி தெரியவில்லை, எம்ஜிஆர் நேரில் அமர்ந்திருப்பதைப் போல் எம்ஜிஆர் மாதிரியே இருக்கிறீர்களே, ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு உங்களின் அரசியல் என்னவாக இருக்கிறது. எடப்பாடி பழனிசாமி - பன்னீர்செல்வம் இருவரையும் ஏற்றுக்கொள்கிறீர்களா?” என்ற நம்முடைய தொடர் கேள்விக்கு, அவரின் அதிரடியான பதில் வருமாறு,  

 

"நாங்கள் எல்லாம் எம்ஜிஆரின் தீவிர விஸ்வாசிகள். அப்படித்தான் எப்போதும் இருந்துவருகிறோம். அவரை பார்த்து அரசியலுக்கு நாங்கள் வந்தோம். எனவே அவரின் சாயல் எங்கள் உள்ளத்தில் எப்போதும் இருக்கும். அம்மாவின் மறைவுக்குப் பிறகு நாங்கள் யாரும் இவர்கள் இருவரையும் ஆதரிக்கவில்லை. தீபா அவர்களை ஆதரித்தோம். தமிழ்நாடு முழுவதும் அவரை ஆதரித்து சுற்றுப்பயணம் செய்தோம். எம்ஜிஆர் வல்லரசு என்றால் அனைவருக்கும் தெரியும். நான் உண்மையை மட்டும்தான் கூறுகிறேன். பன்னீர்செல்வத்தை நாங்கள் ஒருபோதும் ஆதரித்தது கிடையாது. அவர் ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தம் உடையவர், பிஜேபியை ஆதரிப்பவர். கை முழுவதும் தாயத்து கட்டுபவர். இதுதான் திராவிட சித்தாந்தமா? எம்.ஜி.ஆர். கோயிலுக்குப் போயிருக்கிறார். தன் மனைவிக்காகப் போயுள்ளார். 

 

இவர்களைப் போல் அவர் எப்போதும் இல்லை. சசிகலா அவர்கள் கட்சியை அடுத்த கட்டத்திற்குக் கொண்டு செல்வார் என்று எதிர்பார்த்தால், அவர் கிணற்றில் போட்ட கல் போன்று இருக்கிறார். இவர்கள் இருவரும் பால் போட்டால் நீங்கள் அடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால் நீங்கள் தொடர்ந்து அவுட்டானால் என்ன செய்ய முடியும். மிக நீண்ட மவுனத்தில் அவர்கள் இருக்கிறார்கள். சட்டப் போராட்டத்தில் அவர்கள் எப்போது வெற்றிபெறுவார்கள் என்ற உத்தரவாதம் இருக்கிறதா? எம்.ஜி.ஆர். மன்றங்கள் என்ற ஒன்று முன்பொரு காலத்தில் மிக வலிமையாக இருந்தது. அதை அம்மா அவர்கள் டிஸ்மேன்டில் செய்தார்கள். பார்ட் பார்ட்டாகப் பிரித்தார்கள். அதை தற்போது சரி செய்துவருகிறோம். மன்றங்களைச் சேர்ந்தவர்களை அண்ணன் கே.சி.பி., ஓம்பொடியார், நான் உள்ளிட்டவர்கள் இணைத்துவருகிறோம். கட்சித் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று நாங்கள் முடிவு செய்திருந்தோம். ஆனால் அண்ணன் ஓம்பொடியாருக்கு நடந்த நிகழ்வைப் பார்த்திருப்பீர்கள். அவரை அடித்தது என்பது கடைக்கோடி தொண்டனை, எம்ஜிஆரை அடித்ததற்கு சமம். கடைக்கோடி தொண்டனும் அதிமுக தலைவராகலாம் என்று முதலில் கூறியது யார், எடப்பாடி பழனிசாமி. கொடி பிடிக்கும் தொண்டனும் கோட்டைக்குப் போகலாம் என்று கூறியவர் அவர்தானே. இன்றைக்கு கோட்டைக்கு அல்ல, கட்சி அலுவலகத்துக்குச் செல்லக் கூட அவர்களுக்கு ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது என்று தெரியவில்லை. 

 

கேட்டால் உறுப்பினர் அட்டை வைத்துள்ளீர்களா என்று கேட்கிறார்கள். உங்களிடம் உறுப்பினர் கார்டை வாங்கினால், அவர்கள் உங்களிடம் சரண்டர் என்று அர்த்தம் வந்துவிடாதா? உங்களைத்தான் எதற்கும் தகுதி இல்லாதவர்கள் என்று சொல்கிறார்களே! உங்களின் தலைமையைத்தான் அவர்கள் ஏற்க மறுக்கிறார்களே! உங்களின் வள்ளல்தன்மை தெரிந்துதான் உங்களை சொல்லக் கூடாத வார்த்தைகளை எல்லாம் கூறி ஆர்எஸ்எஸ் அமைப்பில் இருப்பவர்கள் பேசுகிறார்களே! இதை எதிர்த்து இதுவரை யாராவது பேசியிருக்கிறார்களா? இவர்களால் எதையும் செய்ய முடியாது, எதிர்த்து யாரையும் கேள்வி கேட்க முடியாது. எங்களைப் பார்த்து நாய்கள் என்று கூறுகிறார்கள், கடைக்கோடி தொண்டனைப் பார்த்து திண்டுக்கல் சீனிவாசன் நாய் என்று வெளிப்படையாகக் கூறுகிறார். இன்றைக்கு டாஸ் வைத்து நிர்வாகிகளைத் தூக்குகிறார்கள். புதிய நிர்வாகிகள் எல்லாம் சங்கிகளாகத்தான் இருப்பார்கள். நீங்கள் பொருத்திருந்து பாருங்கள், இவர்கள் எல்லாம் எப்போதும் அதிமுகவை கரை சேர்க்கப்போவதில்லை, வெறும் வாய்ச்சவடால் மட்டுமே அவர்களிடம் இருக்கிறது. தொண்டன் அவர்களைப் பார்த்துக்கொள்வான்" என்றார் கொதிப்புடன்.

 

 

Next Story

பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவம்; அதிமுக நிர்வாகி உள்ளிட்ட 4 பேர் கைது!

Published on 24/04/2024 | Edited on 24/04/2024
Ambedkar statue incident 4 people including ADMK executive 

கடலூர் மாவட்டம் குள்ளஞ்சாவடி அருகே உள்ள அம்பலவாணன் பேட்டை கிராமத்தில் அண்ணல் அம்பேத்கர் சிலை ஒன்று உள்ளது. அந்தப் பகுதிக்கு இன்று (24.04.2024) அதிகாலை இரு சக்கர வாகனத்தில் வந்த மர்மநபர்கள் சிலர் அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டை வீச முயற்சி செய்துள்ளனர். அப்போது மர்மநபர்கள் வீசிய பெட்ரோல் குண்டு அம்பேத்கர் சிலை மீது படாமல் அதற்கு பின்னால் இருந்த பழைய ஊராட்சி மன்ற கட்டடத்தின் மீது பட்டு வெடித்துள்ளது. அதே சமயம் அம்பேத்கர் சிலைக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த 4 இளைஞர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் அம்பலவாணன் பேட்டை, குள்ளஞ்சாவடி பகுதிகளில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த வெற்றி (வயது 21), கிருஷ்ணகுமார் (வயது 21), அதிமுக இளைஞர் பாசறை கிளை கழக செயலளார் சதீஷ் (வயது 29), விஜயராஜ் (வயது 22) ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதே சமயம் அம்பேத்கர் சிலை அருகே குண்டு வீசிய இடத்தை தூய்மைப்படுத்திய விசிகவினர் பால் அபிஷேகம் செய்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

Next Story

'தலைமைக்கு விசுவாசம் இல்லை'-ஆலோசனைக் கூட்டத்தில் அதிருப்தியா?

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
Edappadi Palaniswami expressed displeasure 'no faith'

இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

தமிழகத்தில் தேர்தல் முடிந்திருக்கும் நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் களத்தில் தங்களுக்கு ஏற்பட்ட நிறைகுறைகள் குறித்து ஆலோசனைகளை மேற்கொள்ள தயாராகி வருகின்றன. அந்த வகையில் அதிமுக தலைமை சார்பாக தலைமை அலுவலகத்தில் இன்று சென்னை மண்டலத்தில் உள்ள அதிமுக வேட்பாளர்கள் மற்றும் பொறுப்பாளர்களின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் அதிமுகவில் போட்டியிட்ட சென்னை மற்றும் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர் அதிமுக வேட்பாளர்கள் பங்கேற்றனர். மாவட்டச் செயலாளர்களும் பங்கேற்றனர். களத்தில் வாக்கு சேகரித்தது குறித்தும், எதிர்க்கட்சியினரின் பரப்புரைகள் குறித்தும் அதில் என்னென்ன சவால்கள் இருந்தது என்பது குறித்தும் நிர்வாகிகள் எடப்பாடி பழனிசாமியிடம் கூறியதாக கூறப்படுகிறது.

அதன் பிறகு நிர்வாகிகள் மத்தியில் சுமார் 15 நிமிடங்கள் எடப்பாடி பழனிசாமி பேசியிருக்கிறார். அதில், ''எம்ஜிஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தது போன்று தற்போதுள்ள தலைமைக்கு விசுவாசம் என்பது இல்லாமல் போய்விட்டது. பல நிர்வாகிகள் இது நம்ம கட்சி என்ற எண்ணத்தோடு பணியாற்றவில்லை. கட்சிக்காக கொடுத்த பணத்தை கூட பல நிர்வாகிகள் சுருட்டி விட்டார்கள். கடைசி நிர்வாகி வரை தேர்தலுக்காக கொடுக்கப்பட்ட பணம் போய் சேரவில்லை. அதிமுக நிர்வாகிகளே இப்படி சுயநலமாக இருந்தால் எப்படி? திமுக ஆட்சி வந்த பிறகு சொத்து வரி, குடிநீர் வரி உயர்த்தியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் மின் கட்டணம், பால் கட்டணம் பலவித கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் இதையெல்லாம் நாம் களத்தில் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்கவில்லை. போதுமான அளவுக்கு திருப்தியாக பிரச்சாரம் செய்யவில்லை. நிர்வாகிகளின் செயல்பாடுகளில் எனக்கு பெரிய அளவு திருப்தி இல்லை'' என எடப்பாடி தன்னுடைய அதிருப்தியை சொன்னதாக கூறப்படுகிறது.