Skip to main content

மாறுகிறதா மாஞ்சோலையின் நிறம்! 

Published on 08/11/2023 | Edited on 08/11/2023

 

Mancholai incident

 

குட்டி காஷ்மீர் என்றழைக்கப்படுகிற குளிர் பிரதேசமான மாஞ்சோலை உள்ளிட்ட நான்கு எஸ்டேட் மலைப் பிரதேசங்கள், சீர்கேட்டினை நோக்கிப் பயணப்பட்டுக் கொண்டிருப்பது சர்ச்சையாகியிருக்கிறது.

 

நெல்லை மாவட்டத்தின் மணிமுத்தாறு பகுதியை ஒட்டிய தென்மேற்குத் தொடர்ச்சி மலையின் மேல் சுமார் 4,600 அடிக்கும் மேலான உயரத்திலிருக்கின்றது ரம்மியமான கடுங்குளிர் பகுதியான மாஞ்சோலை. கோடைக் காலங்களில் தரைமட்டத்தில் வெயில் 100 டிகிரிக்கு மேல் வாட்டி வதைக்கிற நேரத்தில் மாஞ்சோலைப் பகுதியில் மைனஸ் டிகிரிக்கும் கீழான குளிரடிப்பதால் தென்மண்டலத்தின் குட்டி காஷ்மீர் என்றழைக்கப்படுகிறது. மலைத் தண்ணீர், மாசுபடாத அக்மார்க் ஆக்சிஜன் காற்று, கண்ணுக்கெட்டிய தொலைவு வரை பச்சைக் கம்பளத்தைப் போர்த்தியதைப் போன்ற தேயிலைத் தோட்டங்கள் என்பதால் கோடையைத் தணிக்க சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் மாஞ்சோலைப் பகுதியை முற்றுகையிடுவதுண்டு.

 

மாஞ்சோலை எஸ்டேட் பகுதிகளைப் பொத்திப் பொத்திப் பாதுகாக்கிற வனத்துறை, சுற்றுலாப் பயணிகளுக்குக் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. சுற்றுச் சூழலை சீர்கெடுக்கிற பொருட்களைக் கொண்டு சென்றால் அபராதம். மாஞ்சோலை செல்லும் சுற்றுலாப் பயணிகள், அங்கே செல்கிற அரசுப் பேருந்துகளில் பயணிக்க முடியாது. சுற்றுலா செல்லும் பயணிகள் வனத்துறையினரிடம் முன்பதிவு செய்து, அவர்களின் சோதனை முடிக்கப்பட்டு, மாஞ்சோலை செல்வதற்கு வனத்துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட வாகனங்களிலேயே காலை 9 மணிக்குப் பயணித்து, மலை சீதோஷ்ணக் காட்சிகளை அனுபவித்துவிட்டு மாலை 5 மணிக்கு அந்த வாகனத்திலேயே தரையிறங்கிவிட வேண்டும். தடையை மீறினாலும், இரவு அங்கு தங்கினாலும் கடுமையான அபராதம் விதிக்கப்படும்.

 

மாஞ்சோலை, குதிரைவெட்டி, காக்காச்சி மற்றும் ஊத்து எஸ்டேட் பகுதிகளில் தேயிலையைப் பறிப்பதற்கும், அவற்றை பிராசஸ் செய்வதற்குமான குத்தகை, வெள்ளைக்காரன் காலத்திலேயே பி.பி.டி.சி. எனப்படுகிற பாம்பே பர்மா டிரேடிங் கம்பெனி வசம் தரப்பட்டுள்ளதால், பி.பி.டி.சி.யே தேயிலைத் தொழிலாளர்களை குடும்பம் குடும்பமாகக் கொண்டுவந்து குடியமர்த்துகிறது. நான்கு எஸ்டேட்களிலும் சுமார் 1200 குடும்பங்களைச் சேர்ந்த மூவாயிரத்திற்குட்பட்ட தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் வசிக்கின்றனர். தோட்டப் பகுதிகளில் வசிக்கிற உள்ளூர்வாசிகளான இவர்களுக்கு கட்டுப்பாடுகளிலிருந்து விதிவிலக்கு.

 

Mancholai incident

 

இந்தச் சூழலில், மாஞ்சோலைப் பகுதியில் அமைந்துள்ள 10 ஆம் வகுப்பு வரையிலான அரசுப் பள்ளியில் பயில்கிற 6 பள்ளி மாணவர்கள், அங்குள்ள சர்ச் ஒன்றின் பாதிரியார் (ஆன்டோ என்று சொல்லப்படுகிறது) தலைமையில், இரவு வேளையில் காரில் குதிரை வெட்டி, காக்காச்சி எஸ்டேட் மலைவனப் பகுதிக்குள் சென்று ஆட்டம் பாட்டத்துடன் குத்தாட்டம் போட்டிருக்கிறார்கள். இது தொடர்ந்து நடந்து வந்த நிலையில், அக்டோபர் 27 அன்றும் குத்தாட்டத்துடன் இரவு முழுக்க வனப்பகுதி அமர்க்களப்பட்டிருக்கிறது. 

 

சம்பவம் எப்படியோ வீடியோவாகி மலைப்பிரதேசத்தைக் கலக்கிவிட்டுத் தரையிறங்கி பரபரப்பாக்கியதுடன், வனத்துறையின் தலைமை வரை போயிருக்கிறது. அதிர்ந்து போன அம்பை கோட்ட வனத்துறை உயரதிகாரிகள், அந்த வீடியோவிலிருக்கும் அனைவரையும் வரவழைத்து விசாரணை நடத்தியதில் குத்தாட்டம் உறுதியானதால், அனைவருக்கும் ஐம்பதாயிரம் ரூபாய் அபராதம் விதிக்க முடிவெடுத்து, தொடர்புடையவர்கள் பள்ளி மாணவர்கள் என்ற காரணத்தால் அவர்களைக் கடுமையாக எச்சரித்த பின்னர் விடுவித்திருக்கிறார்கள். 

 

Mancholai incident
செண்பகப்பிரியா

 

இதுகுறித்து நாம் அம்பை வனக்கோட்டத்தின் முண்டன்துறை புலிகள் காப்பகத்தின் இணை இயக்குநரான செண்பகப்பிரியாவிடம் பேசியதில், “அவர்கள் மாணவர்கள் என்பதால் எச்சரித்து அனுப்பியிருக்கிறோம். நடந்தவை குறித்து விரிவான அறிக்கையை அரசுக்கு அனுப்பியுள்ளோம். மேலும் அங்கு வேறு சம்பவங்கள் ஏதேனும் நடக்கிறதா என்ற விசாரணையும் நடத்தப்பட்டு வருகிறது” என்றார்.

 

தவிர, கடந்த வாரம் நெல்லை மாவட்ட டவுன் பேரூராட்சிகளின் உதவி இயக்குநர், மணிமுத்தாறு பேரூராட்சிக்குட்பட்ட வார்டு பகுதியான மாஞ்சோலை எஸ்டேட் பகுதியை ஆய்வு செய்துவிட்டு தரையிறங்க மாலை 5 மணிக்கும் மேலாகிவிட, வழியோர வனத்துறை சோதனைச் சாவடியில் அவரை வழிமறித்த வனத்துறையினர், மாலை 5 மணி தாண்டிவிட்டதால் அவருக்கு அபராதம் விதித்திருக்கிறார்கள். இதனால் ஆத்திரமான ஏ.டி., “நான் அரசு அதிகாரி. மாஞ்சோலைக்கு ஜாலி டூர் போகவில்லை. அரசு வேலையாகச் சென்றேன். அபராதத் தொகையைக் கட்ட முடியாது” என்றவர், அரசு ஜீப்பை அவர்களிடம் ஒப்படைத்துவிட்டு நடையைக் கட்டியிருக்கிறார். அதற்குள் விஷயம் வனத்துறையின் உயரதிகாரியின் காதுவரை போக, பதறிப்போய் சோதனைச் சாவடியிலுள்ள வனத்துறையினரை ஒரு பிடிபிடிக்க, அரண்டு போனவர்கள், அதிகாரியை சமாதானப்படுத்தி வருத்தம் தெரிவித்து ஜீப்பை அவரிடம் ஒப்படைத்திருக்கிறார்கள்.

 

இவ்வளவுக்குமிடையே, மலைமீது இரவுப் பொழுதில் ஒருசிலர் மான் வேட்டையிலும் ஈடுபட்டுள்ளனர். இப்படியாக குத்தாட்டம், கும்மாளம், மான் வேட்டையென நிலைமை கைமீறிப் போனால், குட்டி காஷ்மீரான மாஞ்சோலை நிறமே மாறிப் போய்விடுமென்றும், அதிகாரிகள் கடுமை காட்ட வேண்டுமென்றும் கோரிக்கை வைக்கிறார்கள் மணிமுத்தாறின் முக்கியப் புள்ளிகள்.

 

 

Next Story

பிடிபட்ட 4 கோடி; ஒரே நேரத்தில் அவகாசம் கேட்கும் நயினார் நாகேந்திரன் & இ.டி

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
4 crore caught; ED, Nayanar Nagendran, who asked for time at the same time

உலகின் மிகப்பெரிய ஜனநாயக திருவிழாவான இந்திய நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி முதற்கட்டமாக கடந்த 19.04.2024 அன்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வாக்குப்பதிவு முடிந்தது. வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

முன்னதாக தமிழகத்தில் தேர்தல் பரப்புரைகள் தீவிரமாக சென்று கொண்டிருந்த நேரத்தில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் கடந்த 06.04.2024 அன்று இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ.4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளைப் பறக்கும் படையினர் அதிரடியாகப் பறிமுதல் செய்தனர்.

இதனையடுத்து இந்தப் பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு, இந்தப் பணத்தைக் கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்ததாகத் தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சம்பவத்தில் ரொக்கமாக நான்கு கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக நயினார் நாகேந்திரன் ஆஜராகி பதிலளிக்கும்படி காவல்துறை தரப்பில் சம்மன்  அனுப்பப்பட்டிருந்தது. ஆனால் நயினார் நாகேந்திரன் விசாரணைக்கு ஆஜராகாத நிலையில் விசாரணைக்கு ஆஜராக பத்து நாட்கள் அவகாசம் வேண்டும் என நயினார் நாகேந்திரன் தரப்பில் காவல்துறைக்கு பதில் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் திருநெல்வேலியைச் சேர்ந்த ராகவன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், நெல்லையில் பாஜக சார்பில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் சார்பில் கொண்டு செல்லப்பட்ட நான்கு கோடி ரூபாய் பணம் தாம்பரம் ரயில் நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

அதேபோல் காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸ் சார்பாக வாக்காளர்களுக்கு வழங்குவதற்காக திருநெல்வேலி திமுக கிழக்கு மாவட்ட செயலாளர் அலுவலகத்தில் இருந்து 28 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கிறது. இந்தச் சம்பவங்கள் தொடர்பாக இருவரும் மீதும் பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் அமலாக்க துறையில் புகார் அளித்துள்ளேன். உயர்நீதிமன்றம் அமலாக்கத்துறை இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்' எனத் தெரிவித்திருந்தார். இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், சுந்தர மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்பொழுது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு இருவர் மீதும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று தெரிவித்தார். இந்த வழக்கு அமலாக்க துறையின் பணப் பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் விசாரணைக்கு வருவதற்கான முகாந்திரம் உள்ளதா? என அமலாக்கத்துறை தரப்பிற்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமலாக்கத்துறை வழக்கறிஞர், சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் இந்த வழக்கு வராது. இருப்பினும் மனு தொடர்பாக விரிவான பதிலளிக்க அவகாசம் வேண்டும் எனப் பதில் அளித்தனர். அதனைத் தொடர்ந்து வழக்கை நாளை மறுநாளுக்கு நீதிபதிகள் ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

Next Story

'எனக்கு பல நிறுவனங்கள் இருப்பதால் யார் மேனேஜர் என்றே தெரியாது'-மழுப்பிய நயினார் நாகேந்திரன்

Published on 07/04/2024 | Edited on 07/04/2024
nn

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்து விட்டது. அந்த வகையில் திமுக, அதிமுக, நாம் தமிழர், பாஜக ஆகிய கட்சிகள் தீவிர பரபரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன.

அதே சமயம் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கும் வகையில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ள அமைச்சர்கள் மற்றும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் வாகனங்களை தேர்தல் பறக்கும் படையினர் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.

இத்தகைய சூழலில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து திருநெல்வேலிக்கு செல்லும் ரயிலில் தாம்பரம் ரயில் நிலையத்தில் இருந்து நேற்று (06.04.2024) இரவு உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்ல முயன்ற ரூ. 4 கோடி மதிப்பிலான ரொக்கம் பறக்கும் படையினரால் பறிமுதல் செய்யப்பட்டது. 6 பைகளில் கட்டுக்கட்டாக இருந்த 500 ரூபாய் நோட்டுகளை பறக்கும் படையினர் அதிரடியாக பறிமுதல் செய்தனர்.

இதையடுத்து பணத்தை எடுத்து வந்த புரசைவாக்கம் தனியார் விடுதி மேலாளரும் பாஜக உறுப்பினருமான சதீஷ், அவரின் சகோதரர் நவீன் மற்றும் லாரி ஓட்டுநர் பெருமாள் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர். நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் ஏசி பெட்டி ஏ-1 26, 27, 28 ஆகிய இருக்கைகளில் நயினார் நாகேந்திரன் கோட்டாவில் அவர்கள் பயணித்தது தெரியவந்தது. திருநெல்வேலி மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனுக்கு இந்த பணத்தை கொண்டு செல்ல முயன்றதாக மூவரும் பகீர் வாக்குமூலம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி இருந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், கைது செய்யப்பட்ட மூவர் மீதும் தேர்தல் பறக்கும் படை அளித்த புகாரின் பேரில் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

nn

இதற்கிடையே இந்த சம்பவம் தொடர்பாக நயினார் நாகேந்திரனுக்கு சொந்தமான இடங்களில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நெல்லையில் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனின் நெருங்கிய ஆதரவாளர் கணேஷ்மணி என்பவர் வீட்டில் இரண்டு லட்சம் ரூபாய் பணம் சிக்கியுள்ளது. வாக்காளர்களுக்கு கொடுக்கப்படுவதற்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 100 வேட்டிகள், 44 நைட்டிகள் உள்ளிட்ட பரிசு பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் மது பாட்டில்களும் சிக்கியதாக பறக்கும் படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

நயினார் நாகேந்திரன் தங்கும் ஹோட்டல் அறையிலும் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னை புரசைவாக்கம் ப்ளூ டைமண்ட் ஹோட்டலில் அவர் தங்கும் அறையிலும் சோதனையானது நடைபெற்று வருகிறது. நாகேந்திரனுக்கு தொடர்புடைய வண்ணாரப்பேட்டையில் உள்ள லட்சுமி காயத்ரி ஹோட்டல் உரிமையாளர் குணசேகரன் வீட்டிலும் 3.72 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கணக்கில் வராத பணம் மட்டுமின்றி ஏராளமான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

தொடர்ச்சியாக நயினார் நாகேந்திரனுக்கு தொடர்புடைய இடங்களில் பணம் பறிமுதல் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் திமுகவும் இதுகுறித்து தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளது. இதனால் தேர்தலில் போட்டியிட நயினார் நாகேந்திரனுக்கு சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்த நயினார் நாகேந்திரன், 'எனக்கு வேண்டியவர்கள் நிறைய பேர் இருக்காங்க. அவங்க அவரவர்கள் தொழிலுக்காக பணத்தை வைத்திருப்பார்கள். எனக்கு தொடர்புடைய இடங்களில் பணம் பறிமுதல் செய்யப்படவில்லை. எனக்கு பல நிறுவனங்கள் இருப்பதால் யார் மேனஜர் என்றே தெரியாது' என பதிலளித்துள்ளார்.