Skip to main content

குறிகளில்லாத முகங்களில் விழிப்பேன், மனிதம்... மக்கள் கவிஞர். இன்குலாப்

Published on 01/12/2018 | Edited on 02/12/2018
inkulab


 

பேனாவை பொருளாக பயன்படுத்திய அன்றைய கவிஞர்கள் மத்தியில், பேனாவை சமூக அநீதியை கிழிக்கும் கத்தியாக பயன்படுத்தியவர் மக்கள் கவிஞர் இன்குலாப். இந்தி எதிர்ப்பு போராட்டம் உருவாக்கிய கூர்மையான பேனாமுனை கவிஞர் இன்குலாப். 1944ம் ஆண்டு, கீழக்கரையில் பிறந்த இன்குலாப்பின் இயற்பெயர் செ.கா.சீ. சாகுல் அமீது. மதுரை தியாகராஜன் கல்லூரியில் இளங்கலை படித்து, சென்னை புதுக்கல்லூரியில் பணிபுரிந்தார். இந்தி எதிர்ப்பு போரில் தன் நண்பர்களுடன் இணைந்து போராடியவர். தொடக்கத்தில் திமுக ஆதரவாளராக இருந்தாலும், கீழ்வெண்மணி கொடுமைக்கு பிறகு மார்க்சிய சித்தாந்தத்தில் தீவிரமாக இயங்கினார். கடைசிவரை கடவுள் மறுப்பாளராக, பகுத்தறிவுவாளராகவே வாழ்ந்தார்.

 

நம்மால் வலிகளைக்கூட தாங்கிக்கொள்ள முடியும், ஆனால் வலிக்குமோ என்ற அச்சத்தைதான் தாங்க முடியாது, குரல்கொடுக்காதவர்களெல்லாம் அநீதிக்கு துணை போகிறவர்கள் அல்ல, அவர்கள் அச்சமுடையவர்கள், மக்களுக்குளுள்ள அச்ச உணர்வுதான் அவர்கள் போராடுவதைத் தடுக்கிறது என்று கூறுவார். இவர் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவாகவும் இருந்தார். விடுதலை புலிகள் பிரபாகரனை நேரில் சந்தித்து வந்தவர்களில் இவரும் ஒருவர். இறுதி ஈழப்போரில் நடந்த இன அழிப்பைக் கண்டித்து, தமிழக அரசு தனக்களித்த கலைமாமணி விருதையும், ஒரு இலட்சம் ரொக்கத்தையும் திருப்பி அளித்தார். அடிப்படையிலேயே விருதுகளை விரும்பாத அவர், அதன்பிறகு அவர் எந்த விருதுகளையும் ஏற்கவில்லை. அவர் இறந்தபோது அவருக்கு அளித்த சாகித்திய அகாடமி விருதையும் அவரது குடும்பத்தினர் ஏற்க மறுத்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

inkulab




அவரின் கவிதைகளில் சில,
 

ழுதியதெல்லாம்

மொழிபெயர்ப்புத்தான்.

இளைஞர் விழிகளில்

எரியும் சுடர்களையும்,

போராடுவோரின்

நெற்றிச் சுழிப்புகளையும்

இதுவரை கவிதையென்று

மொழிபெயர்த்திருக்கிறேன்!

 

யிர்ப்பின் முதல்

நொடியை

உணர முயல்கிறேன்

மீண்டும்

பொருளில் உணர்வு

தோன்றிய கணம்

ஓடுவரா முட்டையின் முதல்

அசைவு

வித்தின் மண்தேடும்

ஆதி விழைவு

நரைத்து ஒரு முடி உதிர்ந்த

சமயம்

உணர்ந்தேன்

அது

என் மறதியின்

முதல் நொடி

 

ழைப்பவர் மேனியை உயிரோடு கொளுத்தி
வெந்த சாம்பலைப் பூசிய தெய்வங்கள்
சாம்பல் மேட்டில் சாம்பலாய்க் குவிய…
ராஜமகேந்திர சதுர்வேதி மங்கலம்
யாக குண்டம் போல எரிகிறது.

 

சில்லென்று நெருஞ்சிக் காடே!
சிரிக்காதே:
உன் மீது
கால்கள் அல்ல -
களைக் கொத்திகளே இனி நடக்கும்…
எங்களைப்
பிறாண்டிச் சிவந்த உன் நகங்களை நீட்டாதே
ஏனெனில் வெட்டப்படுவது இனிமேல்
நகங்களல்ல
விரல்கள்.

 

போர்விமானம் எம் தலைக்கு மேலெனில்
புகையும் எங்கள் துப்பாக்கி
போர்க்கப்பல் எம் அலைக்கு மேலெனில்
கடலே எதிரிக்குச் சமாதி -இதை
ஏழுகடல்களும் பாடட்டும்……

 

மயம் கடந்து மானுடம் கூடும்
சுவரில்லாத சமவெளிதோரும்
குறிகளில்லாத முகங்களில் விழிப்பேன்
மனிதம் என்றொரு பாடலை இசைப்பேன்

 

னுசங்கடா நாங்க மனுசங்கடா

உன்னப் போல அவனப் போல எட்டுச்சாணு ஒசரமுள்ள

மனுசங்கடா நாங்க மனுசங்கடா

எங்களோட மானம் என்ன தெருவில கிடக்கா - உங்க

இழுப்புக்கெல்லாம் பணியுறதே எங்களின் கணக்கா

உங்களோட முதுகுக்கெல்லாம் இரும்புல தோலா

நாங்க ஊடு புகுந்தா உங்க மானம் கிழிஞ்சு போகாதா

உங்க தலைவன் பொறந்த நாளு போஸ்டர் ஒட்டவும்

உங்க ஊர்வலத்துல தர்ம அடிய வாங்கிக் கட்டவும் - அட

எங்க முதுகு நீங்க ஏறும் ஏணியாகவும் - நாங்க

இருந்தபடியே இருக்கணுமா காலம் பூராவும்

குளப்பாடி கிணத்து தண்ணி புள்ளய சுட்டது

தண்ணியும் தீயாச் சுட்டது - இந்த

ஆண்டைகளின் சட்டம் எந்த மிராசைத் தொட்டது

சதையும் எலும்பும் நீங்க வச்ச தீயில் வேகுது - உங்க

சர்க்காரும் கோர்ட்டும் அதுல எண்ணய ஊத்துது

எதை எதையோ சலுகையின்னு அறிவிக்கிறீங்க நாங்க

எரியும்போது எவன் மசுரப் புடுங்கப் போனீங்க - டேய்

மனுசங்கடா நாங்க மனுசங்கடா

உன்னப் போல அவனப் போல எட்டுச்சாணு ஒசரமுள்ள

மனுசங்கடா நாங்க மனுசங்கடா!


கடைசிவரை தனது கொள்கையில் மாற்றம் கொண்டிராத அவர், சமூக அநீதிகளுக்கு எதிராக தனது படைப்புகளை படைத்தார். இன்று அவரது மறைந்த நாள். அவர்தான் மறைந்தாரே தவிர, அவரது நினைவும், அவரது படைப்புகளும் மறையவில்லை. அதற்கு ஒரு எடுத்துக்காட்டு இன்றுவரை சமூக அநீதிகளுக்கு எதிராக நடக்கும் போராட்டங்களிலெல்லாம் ஒலிக்கும் மனுசங்கடா நாங்க மனுசங்கடா பாடல்...

 

 


 

Next Story

“கவிஞர் தமிழ் ஒளிக்கு சிலை” - முதல்வர் மு.க.ஸ்டாலின்

Published on 19/09/2023 | Edited on 19/09/2023

 

Poet statue for Tamiloil says CM M.K.Stalin

 

கவிஞர் தமிழ்ஒளி கடந்த 1924 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 29 ஆம் தேதி குறிஞ்சிப்பாடியை அடுத்த ஆடூர் என்னும் கிராமத்தில் பிறந்தவர். விசயரங்கம் என்பது தமிழ்ஒளியின் இயற்பெயர் ஆகும். பாரதியாரின் வழித்தோன்றலாகவும்,பாரதிதாசனின் மாணவராகவும் விளங்கி கவிதைகளைப் படைத்தவர். கவிதைகள் மட்டுமல்லாது கதைகள், கட்டுரைகள், இலக்கியத் திறனாய்வுகள், மேடை நாடகங்கள், குழந்தைப் பாடல்கள் எனப் பல இயற்றியவர். தாழ்த்தப்பட்ட மக்களின் இழிநிலை கண்டு, அவர்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகளையும் சமூகத்தில் நிலவும் சாதிய வேறுபாடுகளையும் சாடி கவிதைகள் எழுதியவர்.

 

தமிழ்ஒளியின் கவிதைகள் தனித் தன்மை வாய்ந்தவை. தொடக்கக் காலத்தில் திராவிடர் கழகத்தைச் சார்ந்தவராக இருந்தபோதிலும் பொதுவுடைமைக் கொள்கைகளை உயிர் மூச்சாகக் கொண்டிருந்தவர். உலகத் தொழிலாளர்களின் உரிமை நாளான மே தினத்தை வரவேற்றுப் பாடினார். தமிழ்ஒளியின் சிறுகதைகளில் வரும் பாத்திரங்கள் பெரும்பாலோர், ஒடுக்கப்பட்டவர்கள், தொழிலாளர்கள், போராளிகள் என அடித்தட்டு மக்களாகவே இருந்தார்கள். இடதுசாரி சிந்தனையுள்ள தமது படைப்பாக்கங்களில் கவிஞர் தமிழ்ஒளி சாதியத்தையும் விளிம்புநிலை மக்களின் விடுதலையையும் பாடினார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலும் உறுப்பினராக இருந்தார்.

 

இந்நிலையில் கவிஞர் தமிழ்ஒளி நூற்றாண்டு விழாக் குழுவினர் கவிஞர் தமிழ்ஒளியின் பிறந்த நூற்றாண்டினை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் பல்வேறு கோரிக்கைகள் விடுத்திருந்தனர். இதனையடுத்து கவிஞர் தமிழ்ஒளியின் நூற்றாண்டினை முன்னிட்டு கவிஞர் தமிழ்ஒளிக்கு தஞ்சாவூரிலுள்ள தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் மார்பளவு சிலை அமைக்கப்படும். மேலும் பள்ளி மாணவர்களின் தமிழ் ஆர்வத்தினை ஊக்குவிக்கும் வகையில் 50 இலட்சம் ரூபாய் வங்கியில் வைப்புத் தொகையாக செலுத்தி, கிடைக்கப்பெறும் வட்டித் தொகையிலிருந்து ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சித் துறையின் மூலம் தமிழ் சார்ந்த போட்டிகள் நடத்தி கவிஞர் தமிழ்ஒளி பெயரில் பரிசுகள் வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

 

 

Next Story

பார்வையற்றோருக்கான முதல் கவிதை நூல் வெளியீடு! 

Published on 06/12/2021 | Edited on 06/12/2021

 

The first book of poetry for the blind people

 

திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வாழ்விடமாகவும் கொண்ட மதன் எஸ். ராஜா தன் முதல் நூலான ‘கசடு’  என்ற கவிதைத் தொகுப்பை சாதாரண அச்சில் மட்டுமல்லாது, தமிழ் இலக்கிய உலகில் முதல்முறையாக அதே மேடையில் பார்வைத்திறன் குறைந்தவர்களும் படித்துக் களியுறும் வகையில் பிரெய்லி வடிவிலும் தன் புத்தகத்தை வெளிட்டார்.  

 

டிசம்பர் 4ஆம் தேதியன்று மைலாப்பூர் கவிக்கோ மன்றத்தில் நடைபெற்ற இந்தப் புத்தக வெளியீட்டு விழாவில் பேராசிரியர் மு. முத்துவேலு, முனைவர் தமிழ் மணவாளன், முனைவர் நெல்லை பி. சுப்பையா, நாவலாசிரியர் கரன் கார்க்கி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்புரையும் வாழ்த்துரையும் ஆற்றினார்கள். விழாவில் பல நண்பர்களும் இலக்கிய, பத்திரிகை ஆளுமைகளும் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள். 

 

The first book of poetry for the blind people

 

இந்த வெளியீட்டு விழாவின் முக்கிய அம்சமாக முனைவர் உ. மகேந்திரன், பிரெய்லி வடிவில் புத்தகம் வெளியிட்டது குறித்து, “இப்படிப்பட்ட முயற்சிகள் எங்களைப் போன்ற மனிதர்களுக்கு எத்தனை உற்சாகத்தைக் கொடுக்கிறது. இனிவரும் இலக்கியப் படைப்புகள் எங்களைப் போன்ற மனிதர்களுக்கும் இந்த மாதிரியான வாசிப்பு அனுபவங்கள் கிடைப்பதற்கான வழிவகுக்கும்” என மிகவும் உணர்ச்சிபூர்வமாக உரையாற்றியதும், அவர் மனைவி ஆசிரியர் மு. சோபனா பிரெய்லி வடிவிலான புத்தகத்திலிருந்து சில கவிதைகளைப் படித்தும் மகிழ்ந்தார்.