Skip to main content

வேலுமணி.. இ.பி.எஸ்.. கொடநாடு! 

Published on 20/10/2023 | Edited on 20/10/2023

 

Kodanad issue is the marriage that took place at Velumani Anna's house

 

கொடநாடு கொலை கொள்ளை வழக்கும், முன்னாள் அமைச்சர் வேலுமணியின் அண்ணன் அன்பரசன் வீட்டுத் திருமணமும் அ.தி.மு.க.வின் விவாதப் பொருளாக மாறியிருக்கிறது. கொடநாடு கொலை வழக்கை தற்பொழுது விசாரிக்கும் ஊட்டி நீதிமன்ற நீதிபதி அப்துல் காதர் கண்டிப்புக்குப் பேர்போனவர். மிகவும் நுணுக்கமாகவும் அறிவுப் பூர்வமாகவும் வழக்குகளை வேகமாகக் கையாள்பவர். புதிதாகப் பொறுப்பேற்ற அவரிடம் அரசு வழக்கறிஞர் ஷாஜகான் கொடநாடு வழக்கு பற்றி வழக்கமாகப் பாடும் பல்லவியை முன்வைத்தார்.

 

“நாங்கள் நிறைய எலெக்ட்ரானிக் சாட்சியங்களை ஆராய்ந்து கொண்டிருக்கிறோம். இதுவரை 268 சாட்சிகளை விசாரித்துள்ளோம். எனவே, இந்த வழக்கை மேலும் விசாரிக்க கால அவகாசம் வேண்டும்” எனக் கேட்டார்.

 

இந்த வழக்கமான பல்லவியைக் கேட்டு திருப்தியடையாத நீதிபதி அப்துல்காதர் “எலெக்ட்ரானிக் சாட்சியங்கள் என்றால் என்ன?” என்று கேட்டார். அதற்கு  “செல்போன் ரெக்கார்டுகள்” என பதில் அளித்தார் ஷாஜகான். “யாருடைய செல்போன்?” என கேள்வி வந்தது. “குற்றவாளி கனகராஜுடைய செல்போன்” என ஷாஜகான் சொன்னபொழுது, “அதில் ஏதாவது புதிய விஷயம் இருக்கிறதா?” என நீதிபதி கேட்டார். “குற்றவாளி கனகராஜுடன் எடப்பாடி பழனிச்சாமி உட்பட அமைச்சர்களின் வீடுகள் அமைந்துள்ள கிரீன்வேஸ் சாலையிலிருந்து பலமுறை தொடர்பு கொண்டு பேசியிருக்கிறார்கள். அந்த ஆவணங்கள் தொலைத்தொடர்பு துறையிலிருந்து போலீசுக்குக் கிடைத்திருக்கிறது” என ஷாஜகான் கோர்ட்டில் பதிவு செய்தார்.

 

Kodanad issue is the marriage that took place at Velumani Anna's house

 

கொடநாடு வழக்கில் முக்கிய குற்றவாளியான கனகராஜின் செல்போனுக்கு எடப்பாடியின் பாதுகாவல் அதிகாரியாக இருந்த டி.எஸ்.பி. கனகராஜ், குற்றவாளி கனகராஜ் இறக்கும் தருவாயில் தொடர்புகொண்டு பேசினார் என ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான விசாரணைக்குழு கண்டுபிடித்து பதிவு செய்திருந்தது. அதைத் தொடர்ந்து தற்பொழுது ஆவடி பட்டாலியனில் டி.எஸ்.பி.யாக இருக்கும் அதே கனகராஜை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணைக்குள்ளாக்கினர். இப்பொழுது புதிதாக கிரீன்வேஸ் சாலை டவரிலிருந்து கனகராஜை தொடர்புகொண்டு பேசினார்கள் என புதிய தகவல் எப்படி பெறப்பட்டது? என நாம் போலீஸ் வட்டாரங்களைக் கேட்டோம்.

 

இந்தத் தகவலுக்குக் காரணம், “பழைய பி.எஸ்.என்.எல். அழைப்புக்களின் ரெக்கார்டுகளை ஆராய்வதற்கு ஒரு புதிய மென்பொருளை போலீசார் பயன்படுத்துகிறார்கள். போலீசில் சாட்சியம் அளித்த கனகராஜின் அண்ணன் தனபால் கொடநாட்டைக் கொள்ளையடிக்கும் சதி, மறைந்த முன்னாள் ஜெயலலிதா உயிருக்கே ஆபத்தான நிலையில் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்தபோதே தொடங்கிவிட்டது. இதுகுறித்து கனகராஜிடம் எடப்பாடி, தங்கமணி, வேலுமணி, சேலம் இளங்கோவன் ஆகியோர் பேசியிருக்கிறார்கள். வேலுமணியின் சகோதரர் அன்பரசனின் மனைவி கேரளாவைச் சேர்ந்தவர். அவர் மற்றும் அவரது உறவினர்களின் மூலம் கேரளா முழுவதும் வேலுமணி முதலீடு செய்திருக்கிறார். கனகராஜுக்கு நெருக்கமான கேரளவாசியான சயான் போன்ற அன்பரசனின் நெட்வொர்க்கில் இருந்த கேரள குற்றவாளிகளோடு இருதரப்பு ஒப்பந்தம் போடப்பட்டு, கொடநாடு கொள்ளை அரங்கேறியது. இதற்காக எடப்பாடியும் வேலுமணியும் கனகராஜிடம் நீண்ட நாட்களாக பேசிவந்தார்கள். அப்பொழுது உளவுத்துறை தலைவராக இருந்த சத்தியமூர்த்தி, அன்பரசன், சேலம் இளங்கோவன் ஆகியோர் அமைச்சர்களாக இருந்த எடப்பாடி மற்றும் வேலுமணியிடமிருந்து உத்தரவுகளைப் பெற்று கனகராஜிடம் சொல்லிவந்தார்கள். அந்த பேச்சுக்கள்தான் கிரீன்வேஸ் சாலை செல்போன் டவரிலிருந்து பேசப்பட்ட பேச்சுக்கள் என தனபால் அளித்த சாட்சியங்களில் இருந்து போலீஸ் ஆய்வுசெய்து கண்டுபிடித்திருக்கிறது” என்கிறது சி.பி.சி.ஐ.டி.வட்டாரங்கள்.

 

இந்த விவரங்களை ஊட்டி கோர்ட்டில் மட்டுமல்ல, சென்னை உயர்நீதிமன்றத்திலும் சி.பி.சி.ஐ.டி. தாக்கல் செய்யப்போகும் விசாரணை அறிக்கையிலும் இடம்பெறப் போகிறது. சட்டமன்றத்தில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு பற்றிப் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “சி.பி.சி.ஐ.டி. தாக்கல் செய்யவிருக்கும் அறிக்கையில் கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் பல புதிய விவரங்கள் இடம்பெறும் என மறைமுகமாக சுட்டிக்காட்டியதுடன், இந்த வழக்கில் முக்கியக்குற்றவாளிகள் யாரும் தப்ப முடியாது” என சட்டமன்றத்திலேயே குறிப்பிட்டார்.

 

இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளியான கனகராஜின் சகோதரர் தனபால், ‘இந்த வழக்கைப் பற்றிப் பேசுவதற்கு எடப்பாடி நீதிமன்றம் மூலம் நிரந்தரத் தடை வாங்கிவிட்டார். சி.பி.சி.ஐ.டி. போலீசாரும், ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் இதில் தொடர்புடையவர்கள் என தனபால் கொடுத்த வாக்குமூலத்தில், நான்கு பேரை மட்டுமே விசாரித்திருக்கிறார்கள். எக்ஸ். எம்.எல்.ஏ. வெங்கடாச்சலம், போயஸ் கார்டனில் வேலை செய்த கார்த்திக், அத்திக்காட்டனூர் மோகன், கவுன்சிலர் பிரபாகரன் ஆகிய நாலு பேர்தான் விசாரணைக்கு உள்ளானவர்கள். இதற்கு காரணம், சி.பி.சி.ஐ.டி. டீமில் சந்திரசேகர் என்கிற லோக்கல் டி.எஸ்.பி. இடம் பெற்றிருக்கிறார். அவர் அமைச்சர் வேலுமணிக்கு மிகவும் நெருக்கமானவர். அவர் சி.பி.சி.ஐ.டி. டீம் விசாரிக்கும் உண்மைகளை வேலுமணியிடம் சொல்கிறார்’ என தனபால் தரப்பு குற்றம் சாட்டுகிறது.

 

கொடநாடு வழக்குதான் வேலுமணியையும் எடப்பாடியையும் இணைக்கும் பாலமாக இருக்கிறது. வேலுமணி, எடப்பாடிக்கு எதிராக பல வேலைகளைச் செய்துவருகிறார். அடுத்த அ.தி.மு.க. தலைவர் நான்தான் என வெளிப்படையாகவே பேசிவருகிறார். இதை அ.தி.மு.க.வின் பொருளாளராக இருக்கும் திண்டுக்கல் சீனிவாசன் எடப்பாடியிடம் எடுத்துச் சொல்லியிருக்கிறார். சமீபத்தில் எடப்பாடிக்கும் வேலுமணிக்கும் இடையே பெரிய வாக்குவாதம் நடந்திருக்கிறது. அப்பொழுது அங்கிருந்த உதயகுமாரை வெளியே போகச் சொல்லிவிட்டு, அதன்பிறகு இருவரிடையே நடைபெற்ற அந்த வாக்குவாதத்தில் எடப்பாடிக்கு எதிராக வேலுமணி பா.ஜ.க. தலைவர்களுடன் சேர்ந்து நடத்தும் நகர்வுகள், முதலமைச்சர் ஆவதற்கு வேலுமணி பார்த்த ஜோசியம், ஓ.பி.எஸ்.சுடன் வேலுமணி நடத்திய சந்திப்பு என அனைத்தையும் கேள்வி கேட்டிருக்கிறார் எடப்பாடி. அத்துடன் வேலுமணியைக் கடுமையாக எச்சரித்தும் அனுப்பியிருக்கிறார்.

 

Kodanad issue is the marriage that took place at Velumani Anna's house
வேலுமணியின் சகோதரர் அன்பரசன்

 

இதற்கிடையே தமிழ்நாடு முழுவதும் உள்ள அ.தி.மு.க. கிளைக்கழகச் செயலாளர்கள் முதல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வரை அனைவரையும் ஒன்றுதிரட்டி, வருகிற வாரத்தில் ஐந்து நாட்கள் நீடிக்கும் ஒரு திருமண வைபவத்தை வேலுமணி நடத்துகிறார். வேலுமணியின் சகோதரர் அன்பரசனின் மகன் விவேக்கின் இந்தத் திருமணம், கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள செல்வம் மஹாலில் தொடங்கி, கேரள மாநிலம் ஆனைக்கட்டி பகுதியில் உள்ள அன்பரசனின் பினாமியான ராமச்சந்திரன் என்பவர் நடத்தும் எஸ்.ஆர். ஜங்கிள் ரிசார்ட் வரை நீடிக்கிறது. கேரளாவில் வேலுமணியின் பினாமிகள் ஜங்கிள் ரிசார்ட்டுகளில் சங்கமிக்கிறார்கள்.

 

Kodanad issue is the marriage that took place at Velumani Anna's house

 

திருமணத்திற்கு வரும் அ.தி.மு.க.வினருக்கு ஆடு, கோழி என அனைத்தும் கோவை நகரின் பல பகுதிகளில் இருந்தும் வரவழைக்கப்பட்டு விருந்தளிக்கப்படுகிறது. வேலுமணியின் விஸ்வரூபம் என்று வர்ணிக்கப்படும் இந்தத் திருமணம் 91 - 96 காலகட்டத்தில் ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் சுதாகரன் திருமணத்தைவிட ஆடம்பரத்தில் பெரிய திருமணமாக இருக்கும் என்று பேசப்படுகிறது. தொழிலதிபர்கள், அரசியல்வாதிகள், அதிகாரிகள் என அனைவரும் சங்கமிக்கும் இந்தத் திருமணத்தில் எடப்பாடியும் பங்கேற்கிறார் என்பதுதான் கொடநாடு கொலை கொள்ளை வழக்கில் எடப்பாடிக்கும் வேலுமணிக்கும் உள்ள தவிர்க்க முடியாத லிங்க், வேலுமணிக்கு சிக்கலை ஏற்படுத்தும்.

 

இந்த திருமணத்தை கொடநாடு வழக்கை விசாரிக்கும் சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் மிக உன்னிப்பாகக் கவனித்து வருகிறார்கள் என்பதுதான் உச்சபட்ச பரபரப்பாகும்.

 

 

Next Story

'எப்படி கேமராக்கள் செயலிழக்கும்?'-அதிமுக ஜெயக்குமார் கேள்வி

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
'How can the cameras fail?'- AIADMK Jayakumar asked

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட தேர்தல் தமிழகத்தில் முடிந்திருக்கும் நிலையில் அடுத்தடுத்த கட்டங்களாக பல மாநிலங்களில் தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நீலகிரியில் வாக்கு பெட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்கள் நேற்று திடீரென 20 நிமிடங்கள் செயலிழந்து பின்னர் சரியானது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி கேமராக்கள் செயலிழந்ததாக நீலகிரி மாவட்ட ஆட்சியர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ''சிசிடிவி கேமரா ஃபெயிலியர் ஆகிவிட்டது என்று சொல்கிறார்கள். இதெல்லாம் எலக்சன் கமிஷனுடைய பிரைமரி டியூட்டி. எப்படி சிசிடிவி கேமரா பெயிலியர் ஆகும். ஸ்ட்ராங் ரூமுக்கு உள்ளேயும் வெளியேயும் பொதுவாக சிசிடிவி கேமரா இருக்கும். ஆனால் எப்படி கேமராக்கள் செயலிழந்து. அதற்கான தனியாக யுபிஎஸ் வைத்து பவர் சப்ளை கொடுக்கவில்லையா? இதெல்லாம் எலக்சன் கமிஷன் செய்திருக்க வேண்டும்.

சாதாரணமாக தொழில்நுட்ப பிரச்சனை என்று சொல்லிவிட்டு போகக்கூடாது. அப்படிக் கடந்து செல்லக்கூடாது. ஜனநாயகத்தினுடைய திருவிழா நடத்தப்பட்டு அதன்படி முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கக்கூடிய இடம் அது. அப்படி இருக்கும் பொழுது அந்தப் பகுதியில் இந்த மாதிரி ஒரு சூழ்நிலை ஏற்பட்டுள்ளது என்று சொல்வது உண்மையிலேயே யாருமே ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். தேர்தல் ஆணையம் இதுபோன்ற தவறுகளுக்கு இடம் கொடுக்காமல் விழித்திருந்து முழுமையான பணியை செய்ய வேண்டும். அடுத்தது வாக்குகளை எண்ணப்  போகிறார்கள் அதில் என்ன செய்யப் போகிறார்கள் என்று தெரியவில்லை. அதிலும் சொதப்பாமல் இருந்தால் நல்லது''என்றார்.

Next Story

'அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது'-அமைச்சர் ரகுபதி குற்றச்சாட்டு

Published on 28/04/2024 | Edited on 28/04/2024
nn


தமிழ்நாடு முழுவதும் சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்து வரும் நிலையில் அதிமுக, திமுக என அனைத்துக் கட்சிகளும் ஆங்காங்கே தண்ணீர் பந்தல்கள் அமைத்து தாகம் தணித்து வருகின்றனர். அதேபோல், புதுக்கோட்டை திமுக அலுவலகத்தில் திமுக மருத்துவ அணி சார்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை கோடைகால தண்ணீர் பந்தலை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, மருத்துவ பணி மாவட்ட செயலாளர் முத்து கருப்பன் ஆகியோர் திறந்து வைத்து பொதுமக்களுக்கு குளிர்பானங்களை வழங்கினார்கள்.

அதன் பிறகு சட்டத்துறை அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களை சந்தித்த பேசும்போது, ''குஜராத் என்பது போதைப் பொருட்களின் நடமாட்டத்திற்கான மாநிலம். அங்குள்ள துறைமுகத்திற்கு தான் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவிற்கு போதைப் பொருட்கள் வருகிறது. பிறகு பல மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. குஜராத்தில் போதைப் பொருட்களின் நடமாட்டம் அதிகமாக உள்ளது என்பது அதிசயமான செயல் அல்ல.

மத்திய அரசின் நிதி ஒதுக்கீடு யானை பசிக்கு சோலப் பொறி போல என எங்கள் தலைவர் கூறியுள்ளார். அது எந்த அளவு பத்தும் என்பதை நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். இருந்த போதிலும் எங்களுக்கு தேவையான நிதியை தரச் சொல்லி வலியுறுத்துவோம். விஜயபாஸ்கர் அதிமுக ஆட்சி காலத்தில் குடிநீர் பிரச்சினைகளில் தீர்வு காணாமல் கோட்டை விட்டுவிட்டார். புதுக்கோட்டைக்கு வரும் காவிரி நீரை வழிமறித்து அவரது கல்லூரிக்கும், அவரது வயலுக்கும் காவிரி நீரை கொண்டு செல்கிறார். வயலுக்கு காவிரித் தண்ணீரை பயன்படுத்தக்கூடிய ஒரே நபர் விஜயபாஸ்கர் மட்டும்தான். இன்னும் ஒரு மணி நேரத்திற்குள் அங்கு சென்றால் அதை பார்க்கலாம். அது குறித்து நடவடிக்கை எடுக்க சென்றால் போராட்டம் நடத்துவார்கள். அவராலே பாதி தண்ணீர் புதுக்கோட்டைக்கு வராமல் போகிறது.ஆனால் இதை அனுமதிக்க முடியாது. விரைவில் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் அந்த பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்'' என்றார்.

இந்த பேட்டி தொலைக்காட்சிகளில் வெளியான நிலையில், அமைச்சர் ரகுபதி போகிற போக்கில் ஏதேதோ பேசி விட்டு போகிறார். பல வருடமாக குடிநீர் திருட்டு நடப்பதாக இருந்தால் இவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு கூட ஏன் தடுக்கவில்லை, நடவடிக்கை எடுக்கவில்லை. ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் கூட ஒரு வீட்டிற்கு வரும் தண்ணீரை மோட்டார் வைத்து உறிஞ்சினால் உடனே நடவடிக்கை எடுத்து மோட்டாரை பறிமுதல் செய்து அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் எங்கள் முன்னாள் அமைச்சர் காவிரி கூட்டுக் குடிநீரை தங்கள் கல்லூரிக்கும், தோட்டத்திற்கும் எடுக்கிறார் என்றால் இத்தனை ஆண்டுகளாக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை. அப்படி இருந்தால் நடவடிக்கை எடுக்க வேண்டியது தானே? தண்ணீர் திருட்டு நடந்தால் அதிகாரிகளை அனுப்பி நடவடிக்கை எடுக்க என்ன தயக்கம்? ஆதாரமற்ற குற்றச்சாட்டை கூறியுள்ளார் என்கின்றனர் அதிமுகவினர்.