Skip to main content

கடவுள் தேசத்தின் அழகி... கைத்தட்டக் காத்திருக்கும் இந்தியா!

Published on 28/08/2020 | Edited on 29/08/2020

 

kerala - nimmy koshy -Mrs -United Nations- 2020 - Mrs - india - elegant - 2019

 

கடவுளின் தேசம் என அழைக்கப்படும் கேரளா இயற்கையின் விளைநிலம். பச்சைப் பசேலென்று படர்ந்து அடர்ந்துள்ள காடுகளும், மலைகளும், பாய்ந்தோடும் அருவிகளும், ஜிமிக்கி கம்மல்களும், கறுப்புச் சட்டைகளும் கேரளத்தின் அடையாளத்தைப் பறைசாற்றுகிறது. இனி கேரளத்தின் அடையாளமாக நிம்மி கோஷியும் நம் நினைவு அடுக்குகளில் நிறைந்து இருப்பார். திருமணம் ஆனதும் கணவனுக்கும், குழந்தைகளுக்கும் பணிவிடை செய்து கிடப்பதே விதியென நினைக்காமல், தனக்கான விதியைத் தானே எழுதத் துடிக்கும் பல்லாயிரம் பெண்களில் நிம்மி கோஷியும் ஒருவர். ஐக்கிய நாடுகளில் இருந்து ‘திருமதி அழகிகள்’ கலந்துகொள்ளும் “மிஸ்சஸ் யுனைட்டெட் நேஷன் 2020” அழகிப் போட்டியில் இந்தியாவின் பிரதிநிதியாகக் கலந்துகொள்ள தயாராகி வருகிறார் நிம்மி கோஷி.


மத்திய அரசு அலுவலராக நிம்மியின் அப்பா இருந்ததால், கோயம்புத்தூர், திருச்சி, சென்னை, பெங்களுரு, புதுவை, ஹைதராபாத், பூனே, திருவனந்தபுரம் என எல்லா ஊர்களும் எல்லாப் பண்பாடுகளும் பழக்கம் ஆகிவிட்டதாக பகிர்ந்துள்ளார் நிம்மி. முதுகலைப்பட்டம் முடித்துள்ள நிம்மி கோஷிக்கு, திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளது. ஆசிரியையாகப் பணியாற்றி வரும் நிம்மி, இப்பணியின் மூலம் நல்ல மனிதர்களாக மாணவர்களை உருவாக்கி சமூகத்தின் உண்மையான சொத்துகளாக மாற்ற முடியும் என நம்பிக்கை தெரிவிக்கிறார். திருமணமான பெண்களுக்கு வாய்ப்புகள் அருகி வரும் காலத்தில் பல்வேறு தடைகளைக் கடந்துதான் திருமதிகள் வெற்றி பெறுவதாக நிதர்சனம் பேசுகிறார்.

 

சிறு வயதில் இருந்தே பரதநாட்டியம் மீது தீவிர காதல் கொண்ட நிம்மி, அதை முறையாகக் கற்றுத் தேர்ந்தவர். மேலும், வசதியற்ற மாணவர்களுக்கு இலவசமாக பரதநாட்டிய வகுப்புகளை எடுத்து வருகிறார். கேரளாவில் அடிக்கடி ஏற்படும் வெள்ளம், நிலச்சரிவு போன்ற இடர்பாடுகளின் போது மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். வெற்றியை எப்படி அளவிடுகிறீர்கள் எனக் கேட்ட போது? “நான் வெற்றிகளைப் பொருளாதார அளவீடுகளைக் கொண்டு அளவிடுவதில்லை, மாறாக வாழ்க்கைத் தரத்தை வைத்தே மதிப்பிடுகிறேன்” என்கிறார் நிம்மி. எனது பெற்றோர்கள் எதற்காககவும் என்னை அழவிட்டதில்லை, பிரச்சனைகளை நேர்மையுடனும், துணிச்சலுடனும் எதிர்கொள்ள கற்றுத் தந்துள்ளனர் என்கிறார்.

 

kerala - nimmy koshy -Mrs -United Nations- 2020 - Mrs - india - elegant - 2019

 

ஒரு நாடு நாகரிகமான நாடக இருக்கும் பட்சத்தில் அங்கே பெண்கள் சரி சமமாக மதிக்கப்படுவர். தனக்கான துணையைத் தானே தேர்வு செய்து கொள்ளும் உரிமையைப் பெற்றவர்களாகவும் இருப்பர் எனக் கூறியுள்ள நிம்மி, அழகு என்பதற்கு நமது சமூகம் பல்வேறு தவறான கற்பிதங்களைக் கொண்டுள்ளது என்கிறார். அழகு என்றால் பிறரை வசீகரிப்பது, கவர்ச்சியை வைத்து பல விசயங்களைச் சாதித்துக் கொள்வது என்பதெல்லாம் அழகுக்கான அர்த்தம் அல்ல. பாலைவனத்தில் பூத்த பூக்களும், ஆழ்கடலில் கிடக்கும் விலைமதிப்பற்ற கற்களும் கடைசி வரை யாராலும் கொண்டாடப்படுவதே இல்லை. இதுபோல்தான், பலரின் திறமைகள் பேசப்படாமல் போனதற்குக் காரணமே, இச்சமூகம் அழகின் மீது கொண்டுள்ள தவறான அபிப்பிராயங்களே. என்னைப் பொறுத்தவரை உண்மையான அழகு என்பது, ஒரு மனிதன் தன் வாழ்நாளில் யாராவது ஒருத்தருக்கு ரோல் மாடலாக இருக்க வேண்டும். ஏதாவது ஒரு வகையில் யாருக்காகவாவது பயனுள்ளவராக இருக்க வேண்டும். அதுதான் அழகு. மற்றபடி உடல் அழகு என்பது கூடுதல் சிறப்பாக வேண்டுமானால் இருக்கலாம்.

 

எனது பெற்றோரின் உந்துதலால் சிறு வயதிலிருந்தே கலை நிகழ்சிகளில் கலந்து கொள்வேன், அப்படித் தான் முதன் முதலாக தேசிய அளவிலான ‘மிஸ்சஸ் இந்தியா எர்த் -2019’ அழகிப் போட்டியில் கலந்து கொண்டேன். அதன் இறுதிச் சுற்று வரை முன்னேறினேன். அதில் நான் ‘மிஸ்சஸ் இந்தியா எலகன்ட்” விருதைப் பெற்றேன். இதன்மூலம், எனக்கு “மிஸ்சஸ் இந்தியா யுனைட்டெட் நேஷன் -2020” விருது கிடைத்தது.  இதனால், வருகிற  26 அக்டோபர் 2020 அன்று, ஐக்கிய நாடுகளின் போட்டியாளர்கள் கலந்துகொள்ளும் சர்வதேச “மிஸ்சஸ் யுனைட்டெட் நேஷன் -2020” போட்டியில் இந்தியாவின் சார்பாகப் பங்கேற்க இருக்கிறேன். எனக்கு இது மிகவும் பெருமையான தருணம். மிகவும் தீவிரமாக இதற்காக பணியாற்றி வருகிறேன். இந்தியாவின் சார்பாக நான் மகுடம் சூடப் போகும் அந்த மகத்தான நாளை எண்ணி காத்திருக்கிறேன். இதுவரை நடைபெற்ற யுனைட்டெட் நேஷன் போட்டியில் இரண்டு இந்தியப் பெண்கள் மகுடம் சூடியுள்ளனர் நான் மூன்றாவதாக இருப்பேன் என நம்பிக்கை மிளர சொல்கிறார் நிம்மி.

 

http://onelink.to/nknapp

 

அடுத்த தலைமுறைக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள் எனக் கேள்வி எழுப்பப்பட்டபோது நிம்மி சொன்ன பதில், “வரும் தலைமுறைக்கு இந்த உலகை இன்னும் மேம்பட்ட நிலையில் விட்டுச் செல்ல விரும்புகிறேன்.  மரம் ஒருபோதும் தன் கனிகளை தானே உண்பதில்லை, ஆறு ஒருபோதும் தன் நீரை தானே குடிப்பதில்லை, சூரியன் தனக்காக மட்டுமே ஒளிர்வதில்லை, ஒருவருடன் ஒருவர் இணைந்து வாழ்வதுதான் இயற்கையின் விதி” என்று சொல்லி முடித்தார்.

 

இரண்டு குழந்தைகளின் அம்மா, ஆசிரியை, குடும்பத் தலைவி என்னும் பல பொறுப்புகளுக்கு மத்தியில் சாதிக்கத் துடிக்கும் நிம்மி போன்றோரை நாடே எழுந்து, கைத்தட்டி, உச்சிமுகர்ந்து பாரட்டும் நாள் வெகு தொலைவில் இல்லை!

 

மகுடம் சூட வாழ்த்துகள் நிம்மி சேச்சி....!
 

 

 

Next Story

பா.ஜ.க வேட்பாளரின் நாடகம் அம்பலம்!

Published on 23/04/2024 | Edited on 23/04/2024
BJP candidate's play exposed in kerala

நாட்டின் 18ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. அதன்படி வாக்குப்பதிவானது முதற்கட்டமாக கடந்த ஏப்.19 ஆம் தேதி தொடங்கி, வரும் ஜூன் 1 ஆம் தேதி வரை 7 கட்டமாக நடைபெறவுள்ளது. அதில் பதிவாகும் வாக்கு எண்ணிக்கையானது ஜூன் 4ஆம் தேதி நடைபெற்று அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கின்றன. இதனிடையே, முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்களுக்கு கடந்த ஏப்.19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.

அதே வேளையில், மொத்தம் 20 மக்களவைத் தொகுதிகள் கொண்ட கேரளா மாநிலத்தில், இரண்டாம் கட்டமாக வருகிற ஏப்ரல் 26ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறவிருக்கிறது. இங்கு நடைபெறும் தேர்தலை எதிர்கொள்ள கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், பா.ஜ.க ஆகிய கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரம் இன்று (23-04-24) மாலையுடன் நிறைவடையவுள்ளது.

அந்த வகையில், கேரளா மாநிலம், கொல்லம் மக்களவைத் தொகுதியில் பா.ஜ.க சார்பில் பிரபல மலையாள நடிகர் கிருஷ்ணகுமார் போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் அந்த தொகுதி முழுவதும் கிருஷ்ணகுமார் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். அதன்படி, கொல்லம் மக்களவைத் தொகுதிக்குட்பட்ட குந்த்ரா பகுதியில் உள்ள சந்தையில் இரு தினங்களுக்கு முன்பு அங்குள்ள மக்களிடம் வாக்கு சேகரித்து கொண்டிருந்தார். அப்போது, அங்கு கிருஷ்ணகுமாரின் கண்ணில் கூர்மையான ஆயுதம் பட்டு பலத்த காயம் ஏற்பட்டது.

BJP candidate's play exposed in kerala

இதனையடுத்து, காயமடைந்த அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு கிருஷ்ணகுமாரின் கண்ணில் தையல் போட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையே, எதிர்க்கட்சியினர் தாக்கியதில் கண்ணில் காயம் ஏற்பட்டதாக பா.ஜ.க வேட்பாளர் கிருஷ்ணகுமார் புகார் கூறினார். இது தொடர்பாக கிருஷ்ணகுமார் தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் கூறியதாவது, “கேரளாவின் கொல்லம் குந்த்ராவில் எனது மக்களவைத் தொகுதியில் பிரச்சாரத்தின் போது எனக்கு எதிர்க்கட்சிகளின் தாக்குதலால் கண்ணில் காயம் ஏற்பட்டது. இந்த நேரத்தில் உங்கள் பிரார்த்தனைகள் மற்றும் ஆதரவு எனக்கு எப்போதும் இருக்கிறது. நன்றி” எனத் குறிப்பிட்டு கண்ணில் பிளாஸ்திரியுடன் எடுக்கப்பட்ட புகைப்படத்தை பதிவிட்டார்.

இது தொடர்பாக, குந்திரா போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அதில், கிருஷ்ணகுமார் கலந்துகொண்ட தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட பா.ஜ.க தொண்டர் சனல் என்பவரை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அவர், தவறுதலாக பா.ஜ.க வேட்பாளர் கிருஷ்ணகுமாரின் கண்களை சாவியால் குத்திவிட்டதாக வாக்குமூலம் அளித்தார்.

Next Story

தேர்தல் பணிக்காக ஈரோட்டில் இருந்த போலீசார் கேரளா பயணம்

Published on 22/04/2024 | Edited on 22/04/2024
Police from Erode to Kerala for election duty

18ஆவது நாடாளுமன்றத் தேர்தல், நாடு முழுவதும் களைகட்டி வருகிறது. 7 கட்டங்களாக இந்தத் தேர்தல் நடைபெறும் நிலையில் முதற்கட்ட வாக்குப்பதிவு, கடந்த 19ஆம் தேதி நடைபெற்று முடிந்துள்ளது. இதில் தமிழ்நாடு உள்ளிட்ட 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 இடங்கள் அடங்கும். இதையடுத்து மற்ற மாநிலங்களில் அடுத்தடுத்து வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ஜூன் 4ஆம் தேதி தேர்தலின் முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

இதனால் இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் வட இந்திய மாநிலங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அரசியல் தலைவர்கள் தங்களின் பிரச்சாரத்தைத் தீவிரமாக செய்து வருகின்றனர். அதன்படி கேரள மாநிலத்தில் வரும் 26 ஆம் தேதி பாராளுமன்றத் தேர்தலுக்கான ஓட்டுப் பதிவு நடக்கிறது. இதற்கான பாதுகாப்புப் பணிக்காக பல்வேறு மாநிலங்களில் இருந்து போலீசார் கேரளா செல்லத் தொடங்கியுள்ளனர். அதன்படி ஈரோடு மாவட்டத்திலிருந்த 100 போலீசார், தேர்தல் பாதுகாப்புப் பணிக்காக கேரளா மாநிலம் ஆலப்புழா மற்றும் கோட்டயத்துக்கு இன்று கிளம்பிச் செல்கின்றனர். மேலும், வருகின்ற 26 ஆம் தேதி தேர்தல் முடிந்தவுடன் மீண்டும் ஈரோட்டுக்கு அவர்கள் வருவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.