Skip to main content

"அரசியல்வாதி என்பதையும் தாண்டி கலைஞர் ஒரு இலக்கியவாதி" - கவிஞர் சல்மா!

Published on 03/06/2023 | Edited on 03/06/2023

 

 kavignar salma - Kalaignar 100

 

கலைஞரின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு கலைஞர் செய்த சாதனைகள் குறித்தும் பல்வேறு திட்டங்கள் குறித்தும் கவிஞர் சல்மா தனது அனுபவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

 

அவர் பேசியதாவது, "தான் ஒரு அரசியல்வாதி என்பதையும் தாண்டி கலைஞர் ஒரு நல்ல எழுத்தாளராகவும் இலக்கியவாதியாகவும் இருந்தார். அரசியல் காரணமாக பல்வேறு பணிச்சுமை இருந்தாலும் இதற்கான நேரத்தை ஒதுக்கி தன்னுடைய படிப்பு திறனையும் செயல்பாடுகளையும் கொண்டு திரைப்படங்கள் வாயிலாக தான் ஏற்றிருக்கும் கருத்துகளையும் சித்தாந்தங்களையும் தமிழ்நாட்டில் உள்ள கடைக்கோடி மக்களிடம் கொண்டு சென்றவர். தன்னுடைய இலக்கியத்தை படைப்புகள் மூலம் கொண்டு சென்று தான் ஒரு சிறந்த இலக்கியவாதி என்றும் நிரூபித்தவர்.

 

மேலும், அரசியல் மாற்றத்தை உருவாக்கும் விதமாக பெண்களுக்குச் சொத்துரிமை, திருநங்கைகளுக்கு நல வாரியம் அமைத்தல் போன்ற செயல்களைச் செய்து இந்தியாவையே திரும்பிப் பார்க்க வைத்தவர். சமத்துவபுரம் போன்ற திட்டங்களை உருவாக்கி மக்களிடையே சாதி மத வேறுபாடுகளைப் போக்கியது மட்டுமல்லாமல் தமிழ்நாட்டைத் தாண்டி எந்த மாநிலத்திலும் கொண்டு வர இயலாத இத்திட்டத்தை முதல் முதலில் கலைஞர் தான் கொண்டு வந்தார். இது போன்ற செயல்களால் தமிழ்நாடு தனித்துவமான மாநிலமாக இருக்கிறது.

 

தன்னுடைய கனவுத் திட்டமான அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற திட்டமும், தமிழை வழக்காடு மொழியாக மாற்ற வேண்டும் என்ற திட்டமும், சேது சமுத்திர திட்டத்தையும் செயல்படுத்த முடியவில்லை என்ற எண்ணம் கலைஞரின் மனதில் என்றும் வருத்தத்தைத் தந்திருக்கும். மேலும், தமிழ்நாட்டுடைய வளர்ச்சிக்கு முக்கியப் பங்காக இந்த சேது சமுத்திர திட்டம் இருக்கும் என்ற நம்பிக்கையோடு தொடங்கிய  நேரத்தில் ராமேஸ்வரத்தில் ராமர் பாலம் இருப்பதாக பொய்யான வதந்தியைப் பரப்பி அந்த திட்டத்தை பாதியில் நிறுத்தியது தான் கலைஞருக்கு நெஞ்சில் தைத்த முள்ளாக இருந்திருக்கும்.

 

யாரும் எதிர்பார்க்காத சூழலில்தான் ஐ.டி துறையை தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்து மிகப்பெரிய அரசியல் மாற்றத்தை உருவாக்கினார். அப்படிப்பட்டவருக்கு இந்த நவீன தொழில்நுட்பம் தற்போது கிடைத்திருந்தால், தன்னுடைய கொள்கைகளையும் செயல்பாடுகளையும் கொண்டு செல்ல மிகப்பெரிய அளவில் இந்த சமூக ஊடகத்தை பயன்படுத்தியிருப்பார். ஏனென்றால், இன்றைய சூழ்நிலையில் அவதூறைப் பரப்புவதற்கும் நாகரீகமற்ற கருத்துகளைப் பகிர்வதற்கும் தான் சமூக ஊடகத்தை பயன்படுத்தி வருகின்றனர். ஆனால்,கலைஞர் சமூக ஊடகத்தை ஆக்கப்பூர்வமான செயல்களைச் செய்வதற்கு பயன்படுத்தியிருப்பார். அவரைப் பின்பற்றி பலரும் அவரைப் போன்ற நாகரீகமான கருத்துகளைப் பகிர்வதற்கு கலைஞர் முக்கியப் பங்காக இருந்திருப்பார். தன்னுடைய கருத்துகள் மூலமாகவோ சமூகநீதி கொள்கைகளைப் பகிர்வதன் மூலமாகவோ தற்போது இருக்கின்ற வெறுப்பரசியலுக்குத் தக்க பதில் அளித்திருப்பார்" என்று கூறினார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“கலைஞர் சொன்னதுபோல் திராவிட சகாப்தம் தொடரும்” - முதல்வர் மு.க. ஸ்டாலின்

Published on 26/11/2023 | Edited on 26/11/2023

 

The Dravidian era will continue as the kalaignar said CM MK Stalin

 

திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் தமிழக அரசு சார்பிலும் திமுக சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது தொடர்பாகப் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

 

அந்த வகையில், தமிழக அரசு சார்பில் கலைஞர் தனது ஆட்சிக் காலங்களில் தமிழ்நாட்டு மக்களின் மேம்பாட்டிற்காக நிறுவிய நிறுவனங்களின் சாதனைகளைப் போற்றும் வகையில் ‘நிறுவனங்களின் நாயகர் கலைஞர்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் மற்றும் மலர் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று (25.11.2023) தொடங்கியது. இந்த கருத்தரங்கை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும், நிறுவனங்களின் நாயகர் கலைஞர் நூற்றாண்டு விழாக் குழுத் தலைவருமான கே.என். நேரு தொடங்கி வைத்தார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்புரையாற்றி விழா மலரை வெளியிட்டார். 

 

மேலும் இந்தக் கருத்தரங்கின் ஒரு பகுதியாக ‘நிறுவனங்களின் நாயகர் கலைஞர்’ என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சியும் இடம் பெற்றுள்ளது. இந்த அரங்கில் கலைஞர் உருவாக்கிய நிறுவனங்கள், அவற்றின் செயல்பாடுகள் மற்றும் சாதனைகள் தொடர்பாக சிறப்பான புகைப்படங்கள் மற்றும் மாதிரி வடிவங்கள் இடம் பெற்றிருந்தன. இந்நிகழ்வில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று சிறப்பு புகைப்படக் கண்காட்சியின் ஒவ்வொரு அரங்கினையும் பார்வையிட்டார். பின்னர் கருத்தரங்கினைப் பார்வையிட்டு கலைஞர் தனது ஆட்சிக் காலத்தில் உருவாக்கிய நிறுவனங்கள் மற்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சி குறித்த குறும்படத்தினைப் பார்வையிட்டார்.

 

The Dravidian era will continue as the kalaignar said CM MK Stalin

 

இந்நிலையில், இது குறித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “தொலைநோக்குச் சிந்தனையோடு கலைஞர் உருவாக்கிய 41 நிறுவனங்களும் மக்களுக்கு எத்தகைய பயனை அளிக்கிறது என்பது தமிழ்நாட்டு மக்களாகிய நீங்கள் நன்கு அறிந்ததே. கலைஞர் சொன்னதுபோல் திராவிட சகாப்தம் தொடரும்” எனக் குறிப்பிட்டு இது தொடர்பான காணொளி ஒன்றையும் அந்தப் பதிவில் இணைத்துள்ளார். அதே சமயம் இந்த சிறப்பு புகைப்படக் கண்காட்சி தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறும் எனத் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

 

 

Next Story

‘நிறுவனங்களின் நாயகர் கலைஞர்’ - கருத்தரங்கம் தொடக்கம்

Published on 25/11/2023 | Edited on 25/11/2023

 

Hero of Organizations for kalaignar Seminar begins

 

திமுகவின் முன்னாள் தலைவரும் தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா கடந்த ஜூன் மாதம் 3 ஆம் தேதி முதல் தமிழக அரசு சார்பிலும் திமுக சார்பிலும் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இது தொடர்பாகப் பல்வேறு முன்னெடுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

 

அந்த வகையில், தமிழக அரசு சார்பில் ‘நிறுவனங்களின் நாயகர் கலைஞர்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் மற்றும் மலர் வெளியீட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் இன்று (25.11.2023) மாலை 4:00 மணிக்கு தொடங்க உள்ளது. இந்த கருத்தரங்கை நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சரும், நிறுவனங்களின் நாயகர் கலைஞர் நூற்றாண்டு விழாக் குழுத் தலைவருமான கே.என். நேரு தொடங்கி வைக்க உள்ளார். இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சிறப்புரையாற்றி விழா மலரை வெளியிட உள்ளார்.

 

மேலும் இந்தக் கருத்தரங்கின் ஒரு பகுதியாக ‘நிறுவனங்களின் நாயகர் கலைஞர்’ என்ற தலைப்பில் புகைப்படக் கண்காட்சியும் நடைபெற உள்ளது. இந்த விழாவில் அமைச்சர்கள் எஸ். ரகுபதி, தா.மோ. அன்பரசன், மா. சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்ள உள்ளனர்.